​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 17 December 2011

300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர். எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக 
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே 

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

Thursday 10 November 2011

சித்தன் அருள் - 58


நாடி பார்க்க வருகிறவர்கள் எல்லோரும் பொறுமையாக இருப்பதில்லை. எல்லோரையும் ஒதுக்கி விட்டு தனக்குத்தான் முதலில் நாடி படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

இன்னும் சிலர் ‘நான் அரசு உயர் அதிகாரி. எனக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று நாடியையும் பார்த்துவிட்டு அடுத்து இன்னொருவருக்கும் நாடி பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டுச் செல்வார்கள்.

‘நான் போலீஸ் துறையைச் சேர்ந்தவன். என்னைப் போன்றவர்களுக்கு உடனே ‘நாடி’ பார்க்க வேண்டும்’ என்று அன்புக் கட்ளை இடுபவர்களும் உண்டு.

செல்வாக்கைப் பயன்படுத்தி முதலில் வந்து கேட்கும் நபர்களுக்கும், பொறுத்திருந்து நாடி பார்க்கும் நபர்களுக்கும் வித்தியாசம் உண்டு. அகத்தியர் அருள் இருந்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இல்லையெனில் அந்த செல்வாக்குக்கு எந்தவித பலனும் இல்லாமல் போய்விடும்.

அவரவர்கள் செய்த கர்ம வினைக்கு ஏற்ப அகத்தியர் அருள்வாக்கு தருகிறாரே தவிர செல்வாக்குக்காக அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

இப்படித்தான் ஒரு நாள் மிகப் பிரபலமான நபர் ஒருவர் கட்டாயச் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு ஐம்பத்திரணடு வயதுடைய நபர் ஒருவர் நாடி பார்க்க என்னிடம் வந்தார்.

‘சார், என் மனைவி சமீபத்தில் இறந்து போனாள். வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இரண்டு பேர் இருக்கிறார்கள். மூத்த பெண்ணை ஒருவருக்கு கட்டிக் கொடுத்து விட்டேன். அவள் இப்பொழுது ஆறு மாத கர்ப்பிணி. இது முதல் பிரசவம் என்பதால் நான் தான் பார்த்தாக வேண்டும்….’ என்று விஷயத்துக்கு வராமல் பேசினார்.

இடைமறித்த நான், ‘சரி, இதற்கும் இப்போது நீங்கள் நாடி பார்க்க வந்துள்ளதற்கும் என்ன தொடர்பு? நான் என்ன செய் வேண்டும்?’

‘எனக்கு இரண்டாம் தாரம் இருக்கிறதா? என்பதை அகத்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்.’

‘வயதுக்கு வந்த இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். வயதும் ஐம்பத்திரண்டுக்கு மேல் இருக்கும். இந்த சமயத்தில் மூத்த பெண் தலைப் பிரசவத்திற்கு வரப் போகிறாள். எதற்காக இவருக்கு இரண்டாம் தாரம் மீது ஆசை?’ என்று என் மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

இருந்தாலும் இதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. விருப்பு, வெறுப்பின்றி நாடியைப் படிக்க வேண்டும் என்பதால் அகத்தியர் நாடியை புரட்டினேன்.

எத்தனை முறை புரட்டினாலும் அகத்தியர் எந்த வாக்கும் தரவே இல்லை. ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. சில மணி நேரம் காத்திருந்து பின்பு படிப்போம் என்று முடிவெடுத்தேன்.

இதற்கிடையில் அவரோடு பேச்சு கொடுத்தேன்.

ஊரில் நிலபுலன்கள் நிறைய இருப்பதாகவும் திடீரென்று மனைவி இறந்து விட்டதால் வயதுக்கு வந்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்க முடியாதபடி தடை வந்துவிட்டதாகவும் சொன்னார்.

‘தான் இரண்டாவது மணம் செய்து கொண்டால், தன் மூத்த மகளுக்கு பிரசவம் பார்க்க முடியும். அடுத்தடுத்து உள்ள பெண்களுக்கு நல்ல இடமாக திருமணம் செய்து வைக்கவும் முடியும்’ என்று அடிக்கடி புலம்பியவர், திடீரென்று எனக்கு இரண்டாம் தார வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்தக் குழந்தைகளுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று வேண்டா வெறுப்பாக முகத்தைத் தூக்கிக் கொண்டு பேசினார்.

இடையில் இறந்து போன தன் மனைவியை நினைத்து கண்ணீர் விடவும் செய்தார். இதை நினைத்து நானே வியந்து போனேன்.

‘சம்பந்திக்கு உங்கள் நிலை தெரியுமே, அவரிடம் நீங்கள் வேண்டினால் உங்கள் மகளுக்கு மாமியாரே பிரசவம் பார்க்கலாமே’ என்று ஆதங்கமாக கேட்டேன்.

‘இல்லை சார், சம்பிரதாய முறைப்படி நான் தான் என் மகளுக்கு பிரசவம் பார்க்கணும். இதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாதுங்க. அதற்காகத்தான் ரெண்டாம் கல்யாணம் அவசியமாகத் தோணுது’ என்றார் அவர்.

மீண்டும் அகத்தியர் நாடியைப் படித்த வோது ‘சட்டென்று ஏகட்டும். திருவிடைமருதூர் நோக்கி. அங்கு சென்று சிவன் கோவிலில் ஒன்பது நாட்களுக்கு மோட்ச தீபம் ஒன்றை உடனே ஏற்றுக என்று அகத்தியர் உத்தரவிட்டார். வேறு எந்த பதிலும் சொல்லவே இல்லை.

இதைக் கேட்டதும் வந்தவருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாலும் அகத்தியர் இதே பதிலைத்தான் சொன்னதால் அவர் வெறுத்துப் போனார்.

‘இரண்டாம் தாரத்தைப் பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையா?’ என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டார்.

‘இல்லை’ என்று உதட்டைப் பிதுக்கினேன்.

‘அகத்தியர் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். முதலில் சொன்னதை செய்து விட்டு மீண்டும் வரட்டும். மேற் கொண்டு உரைக்கிறேன்’ என்று சட்டென்று மூஞ்சியில் அடித்தது போல் அகத்தியர் சொன்னது எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது.

அகத்தியர் பெரும்பாலும் சட்டென்று கோபமாக சொல்ல மாட்டார். ஆனால் இன்றைக்கு சொன்னது ஒருவித கலக்கத்தை உண்டு பண்ணியது.

இதறகுள் வந்தவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. என்னங்க நாடி படிக்கிறீங்க, கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. அங்கே போ, இங்கே போ’ன்னு சொல்றீங்க. என்னங்க இது? எனக்கு ஒரு சந்தேகம். இதை நீங்களே சொல்றீங்களா? இல்லை அகத்தியரே இப்படிச் சொல்றாரா?’ என்று நையாண்டி வேறு செய்தார் அவர்.

முதலில் ஒண்ணும் தெரியாத பூனை மாதிரி இருந்தவர் இப்படி பேசியதும் எனக்கு அதிர்ச்சியாயிற்று. இன்னும் என்ன சொல்லணும்னு நினைக்கிறாரோ அதையெல்லாம் சொல்லட்டும். பின்பு அகத்தியரிடம் இவரைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

‘நான் எதுக்குங்க மோட்ச தீபம் ஏத்தணும்?’ என்று ஒன்றும் தெரியாதபடி கேட்பார்.

‘முன்னோர் தோஷம் எதுவும் இருக்கும். அதற்காகச் சொல்லியிருப்பார்’ என்றேன்.

‘இதெல்லாம் சும்மா கதைங்க. எங்க அப்பா, தாத்தா எல்லோரும் ஏகப்பட்ட கோவிலுக்கு தானம் பண்ணியிருக்காங்க. நிறைய கும்பாபிஷேகம் செய்திருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு எந்த பாவமும் பண்ணல்லீங்க.’

‘உங்க வீட்டில் அகால மரணம் ஏதாவது நடந்திருக்கும். அதற்காகவும் கூட அகத்தியர் சொல்லியிருக்கலாம்.’

‘அப்படியேதும் நடக்கலைங்க. எனக்கு நிச்சயமாகத் தெரியும்’ என்றார்.

‘சரி ரொம்ப நல்லது. எதுக்கும் இதைப் பற்றி அகத்தியர் கிட்டே மறுபடியும் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றேன்.

சில நிமிடங்களில் மறுபடியும் நாடியைப் பிரித்தேன்.

‘இவன் அகத்தியனையே சோதிக்கிறானடா. இவன் சொன்னது அத்தனையும் பொய். இவனது தாத்தா பாட்டியெல்லாம் அகால மரணம் அடைந்தவர்கள். வீட்டுக் கிணற்றிலே குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இவனது தந்தையோ ஜாதிப் பிரச்சினை காரணமாக எதிரிகளால் நடு ரோட்டிலே வெட்டிக் கொல்லப்பட்டவன். இவனுக்கோ இவனுடைய தந்தை, தாத்தாவுக்கோ எந்தவித சொத்தும் கிடையாது. நிலமும் கிடையாது. ஏன் இதை அகத்தியனிடம் மறைக்க வேண்டும்?’ என்று அகத்தியர் சொன்னதை நான் சொல்லச் சொல்ல வந்தவரின் முகம் பேயறைந்தாற் போல் ஆகிவிட்டது. மவுனமாக தலை குனிந்தார்.

நான் மேற்கொண்டு சப்தம் போட்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘இப்போது கூட இவன் வீட்டில் ஓர் அகால மரணம் நடந்தது. இல்லையென்று அகத்தியனிடம் மறுக்க முடியுமா?’ எனக் கேட்டார்.

குனிந்தவர் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தார். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
‘இன்னவன் இரண்டாம் தாரத்திற்கு அலைவதே ஊரை ஏமாற்றத்தானே. இல்லையெனில் புற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இவனது மனைவிக்கு போதிய சிகிச்சை அளிக்காமல் அவளுக்கு விஷ ஊசியை போட்டுக் கொன்றவன் தானே இவன்.

‘இரண்டாம் தாரமாக இவன் மணம் முடிக்க ஆசைப்படுபவள் இவன் வீட்டிலிருக்கும் வேலைக்காரியைத்தான். அவளுக்கும் இவனுக்கும் ஏற்கனவே பல மாதங்களாக நெருங்கிய தொர்புண்டு. இப்போது அந்த வேலைக்காரி இரண்டு மாத கர்ப்பம். இது உண்மையா? இல்லையா? என்று அவனே சொல்லட்டும்’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு முடித்தார்.

இதைக் கேட்டது தான் தாமதம் அந்த மனிதர் நடுநடுங்கிப் போய் விட்டார்.

சட்டென்று என் காலில் விழுந்தார்.

சார் இதை வெளியிலே யாருகிட்டேயும் சொல்லாதீங்க சார். அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை. என் மனைவி கேன்சர் நோயாலே கஷ்டப்பட்டதைப் பார்த்து, அவ பிழைக்க மாட்டாள் என்று நினைத்து நான்தான் அவளை விஷ ஊசி போட்டுக் கொன்றேன்.

அதே சமயம் எனக்கும், என் மனைவிக்காக உதவி செய்ய வந்த வேலைக்காரிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த என் மனைவி தன்னை கொன்று விட்டு அவளை மணந்து கொள்ளும்படி சொன்னாள்.

அவள் எதை வைத்து இதைச் சொன்னாளோ தெரியாது. நான் கொன்று விட்டேன்.

வேலைக்காரியை எனது இரண்டாவது மனைவியாக்க நான் விரும்பினாலும், என் மகள்கள் அந்த வேலைக்காரியை சித்தியாக ஏற்க முன்வரவில்லை.

அகத்தியர் அருள்வாக்கை வைத்து என் மகள்களை பணிய வைக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். இதுதான் உண்மை’ என்று துயரத்தோடு சொன்னார்.
‘எப்படியோ ஒரு நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கொன்றதால் அந்த ஆத்மா சாந்தியடையவில்லை. மோட்ச தீபம் ஏற்றி விட்டு வா என்று அப்போது சொன்னதிற்கு அர்த்தம் இது தானடா’ என்ற அகத்தியர், ‘நீ நினைக்கிற மாதிரி உன்னை கணவனாக ஏற்க அந்த வேலைக்காரி முன்வர மாட்டாள். காரணம் நீ மனம் மாறினால் இவளையும் கொன்று விட்டு, வேறொரு பெண்ணை நாடிச் சென்றாலும் செல்வாய் என்று ஊரைவிட்டே ஓடிக் கொண்டிருக்கிறாள்’ என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.

மனைவியை விட்டுவிட்டு வேலைக்காரியை கை பிடிக்கலாம் என்ற பேராசை அவருக்கு இருந்தது. இப்பொழுது இரண்டையும் இழந்து விட்டார்.

மனைவியின் ஆத்மா சாந்தி அடைய அகத்தியர் சொன்னபடி மோட்ச தீபத்தை ஏற்றியவர், தற்போது மனைவி பெயரால் முதியோர் இல்லமொன்றைத் துவக்கி ஏழைகளுக்கு சமுதாயத தொண்டாற்றி வருகிறார். இரண்டாம் திருமண எண்ணத்தை அறவே மறந்து போனார்.

அவரை, பொதிகை மலை உச்சிக்கு சென்றால் சாமியார் கோலத்தில் காணலாம்.

சித்தன் அருள் - 57

என்னிடம் நாடி பார்க்க வருகிறவர்களில் கடன் தொல்லைக்கு ஆளானவர்களும் உண்டு. அதுவும் ஆயிரம், லட்ச ரூபாய் கடன் அல்ல. கோடிக்கணக்கில் கடனுக்கு ஆளானவர்களும் வருவது உண்டு.

பெரிய வட்டிக்கு கடன் வாங்கி அந்த வட்டியைக் கூட கொடுக்க முடியாமல் திண்டாடுபவர்கள், இருக்கிற சொத்துக்களை விற்று நொந்து போய்க் கொண்டிருப்பவர்கள் என்று பலதரப்பட்ட கடனாளிகள் வருவதுண்டு.

யாரும் கடன் வாங்குவதற்கு முன்போ அல்லது தொழில் ஆரம்பிப்பதற்கு முன்போ அகத்தியரிடம் நாடி படித்து உத்தரவு கேட்பதில்லை. கடன் உச்ச அளவுக்குப் போன பின்பு நேரிடையாக, அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அலறிப் புடைத்துக் கொண்டு வருவது போல் கடன் கழுத்தை நெறிக்கும் போது அவசர அவசரமாக வருவார்கள்.

அதோடு –

தாங்கள் ஆண்டாண்டு காலமாகப்பட்ட கடனை அரை நொடியில், தீர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது எப்படி சாத்தியம் ஆகும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது இல்லை. ஏதாவது அதிசயம் நடந்து கடன்கள் தீர்ந்து விட வேண்டும் என்றே பலரும் வருகிறார்கள். அகத்தியர் குபேரன் அல்ல, பணம் அள்ளிக் கொடுக்க. தெய்வமும் அல்ல. கர்மவினை போவதற்கும் கடவுளை அடைவதற்கும், சோர்ந்து போன இதயங்களுக்கு உற்சாகத்தையும், வழிகளையும் காட்டுவது மட்டுமே அகத்தியரது வேலை. அதுவும் அகத்தியர் சொன்ன பிரார்த்தனைகளை முறையாக நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே. இதுதான் நடைமுறை உண்மை.

அன்றைக்கும் அப்படித்தான்….

சேலம் பக்கத்திலிருந்து மிகப்பெரிய கோடீஸ்வரியாக இருந்த ஒரு பெண்மணி அகத்தியர் அருள்வாக்கு வேண்டி என்னிடம் வந்தார். அவரது முகத்திலே பணக்கார ‘களை’ இருந்தது சற்று அளவுக்கு மீறி பெருத்த கனமான சரீரம்.

கழுத்தில், காதில், கைகளில் தங்கமும் வைரமுமாய் ஜொலித்தது. அனைத்திலும் நல்ல உயர் ரக வைரக்கற்களை காண முடிந்தது. முகத்தில் ‘காலணா’ அளவுக்கு குங்குமப் பொட்டு. சிறிது நரைத்த முடிகள் இங்கும் அங்குமாகத் தென்பட்டது. நடந்து வந்ததில் மூச்சு இரைத்ததால் ஆரோக்கியமான உடம்பு இல்லை என்று தெரிந்தது. இதையும் தாண்டி அந்தப் பெண்மணியின் கண்களில் ஒரு கவலை ரேகை படர்ந்திருந்தது.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்தப் பெண்மணி ‘எங்களுக்கு நிறைய கடன் இருக்கு. வாழ்ந்த குடும்பம். சொந்தக்காரங்க ஏதாவது ‘செய்வினை’ செய்திருப்பாங்களோ? என்ற பயம் உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு ‘கடன்’ இருக்கு. இதற்கு வட்டி கட்டவே முடியலீங்க. அகத்தியரைக் கேட்டு கடன் தீர வழி சொல்லுங்க’ என்றார் அந்தப் பெண்மணி.

’நீங்க மட்டும் தனியாக வெளியூரிலிருந்து வந்திருக்கீங்களா?’

‘இல்லை. எங்க வீட்டுக்காரரும் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ‘நாடி’ மீது நம்பிக்கை இல்லை. வெளியிலே கார்ல உட்கார்ந்திருக்கிறார் என்றார் சற்று பயந்தபடி.

‘அதனாலென்ன, இது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. பயப்படாதீங்க. நான் அகத்தியருக்கு ஏஜெண்டு அல்ல. உங்கள் நிலைமை உணர்நது பணம் பறிக்கும் பாவத்தையும் செய்ய மாட்டேன். அகத்தியரும் நல்ல வழியைத்தான் உங்களுக்குக் காட்டுவார். தைரியமாக அவரையும் இங்கு வரச் சொல்லுங்க’ என்றேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் வேண்டா வெறுப்பாக அந்த அம்மாளின் கணவர் என் அறைக்குள் நுழைந்தார்.

வந்தவர் நேராக என்னிடம் கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. அந்த அம்மாவைச் சாடினார். மிகவும் கடுமையான வார்த்தைகளைச் சொன்னவர், ‘எதற்காக என்னை இங்கு வரச் சொன்னாய். உனக்கு வேண்டியிருந்தால் நீயே நாடியைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே’, என எரிந்தும் விழுந்தார்.

பாவம் அந்த அம்மாள் நொந்து போனார். என்னைப் பார்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பரிதாபமாக பார்த்தார். அந்த பெண்மணியின் தர்ம சங்கடமான சூழ்நிலையைப்புரிந்து கொண்டேன். ஏண்டா அவசரப்பட்டு நாம் அவர் கணவரை வரவழைத்தோம் என்று கூடத் தோன்றிற்று.

வேறு எதுவும் பேசாமல் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘உடன்பிறந்த சகோதரனை ஏமாற்றி அவனிடம் கட்டாயப்படுத்தி கைப்பற்றிய சொத்துக்களால் சகோதரனது குடும்பத்தினர் அத்தனை பேர்களும், ஆண்டு ரெண்டுக்கு முன்பு இதே நாளில் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்கள் இட்ட சாபம் தான் இத்தனை கடனாளியாக மாற்றியது. எப்படி வந்ததோ அப்படியே போயிற்று. இதுதான் உண்மை’ என்று அகத்தியர் சொன்ன அடுத்த விநாடி –

‘சட்டென்று இருப்பிடம் நோக்கிச் செல்க. விடிவதற்குள் செல்வது நல்லது. மற்றவற்றை பின்பு யாம் உரைப்போம்’ என்று மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி. நிறைய விஷயங்களைச் சொல்லி, கோடிக்கணக்கான ரூபாய் கடனை அடைக்க உடனடியாக வழி காட்டுவார் என்று அகத்தியர் நாடியை நம்பி வந்திருக்கிறார்கள்.

ஆனால்….

உடனே வீட்டுக்குக் கிளம்புங்க. விடியற்காலைக்குள் குறிப்பாக 4.55 மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்று அகத்தியர் ஆணையிட்டது மிகப் பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்க வேண்டும்.

‘வேறு எதுவும் சொல்லலீங்களா?’ மிகவும் பரிதாபமாக அந்த அம்மாள் என்னைப் பார்த்துக் கேட்டார்.

‘இல்லையம்மா. தாமதிக்காமல் போங்கள். நாளைக் காலையில் வீட்டில் இருக்க வேண்டும். அவ்வளவுதான். வேறொன்றும் சொல்லவில்லை’ என்றேன்.

மிகுந்த வருத்தத்தோடு அந்த அம்மாள் எழுந்து சென்றாள். கூடவே புறப்பட்ட அவர் கணவன், ‘பார்த்தீயா, நான் தான் அப்பவே சொன்னேனே இதையெல்லாம் நம்பாதே என்று. இப்பவாவது தெரிஞ்சுக்கோ, இதெல்லாம் சுத்த ஏமாற்றுப் பிழைப்பு’ என்று சொல்லிக் கொண்டு போனதும் என் காதில் விழுந்தது.

ஒரு விதத்தில் இந்த வார்த்தைகள் என் மனதை பாதிக்கத் தான் செய்தது. நாடி படித்து அவர்களிடம் பணம் வாங்கித்தான் பிழைக்க வேண்டும் என்ற நிலை இறைவன் புண்ணியத்தால் எனக்கு இல்லை என்றாலும் எதற்காக இந்த கேவலமான பேச்சுக்களைக் கேட்க வேண்டும்? ஒருவேளை இது என் கர்மவினைப் பயனோ?’ என்று நொந்துதான் போனேன்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு வந்த முதல் தொலைபேசி இந்த அம்மாளுடையதுதான்.’

‘என்னம்மா’

‘ஐயா, என் யைபன் தூக்கு போட்டு விட்டான் ஐயா’ என்று கதறினாள்.

அந்த அம்மாள் அழுது ஓய்ந்ததும் நான் நிதானமாகக் கேட்டேன். ‘எப்போ தூக்கு போட்டு கிட்டார்.’

‘இன்னிக்கு காலையிலே.’

‘எத்தனை மணிக்கு’

‘நாங்க வீட்டுக்குள்ளே நுழைந்த போது, காலையிலே நாலு அம்பத்தைந்து மணிக்கு’

‘இப்போ எப்படி இருக்கார்?’

‘ஆம்புலன்ஸ்லே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க. ஏங்க. என் பையன் பிழைச்சுடுவான் இல்லையா?’ என்று கெஞ்சிக் கேட்டார் அந்த தாயார்.

‘கவலைப்படாதீங்க. உங்க பையன் நிச்சயம் பிழைச்சுடுவான்’ என்று தைரியம் ஊட்டினேன்.

‘நீங்க சொன்னா அகத்தியர் சொன்ன மாதிரி’ என்றார் அந்தப் பெண்மணி.

எனக்கு இந்த வார்த்தை மிகவும் அதிகமாகவே தென்பட்டது. அகத்தியர் எங்கே நான் எங்கே. ஏதோ ஒரு தைரியத்திற்கு சொல்லப் போய் இப்படி பெரிய வார்த்தைகளைச் சொல்வது நல்லதல்ல என்று தோன்றிற்று.

உண்மையிலே என் மனதில் ஒரு பயம் ஏற்பட்டது.

தூக்குப் போட்டுக் கொண்ட அந்த பெண்மணியின் மகனை இப்போது ஆ1பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். அவன் உயிர் தப்ப வேண்டுமே என்ற கவலை தான் எனக்கு! இதில் ஏதாவது ஒன்று மாறிவிட்டால் யாருக்கும் அகத்தியர் மீதும் நம்பிக்கை இருக்காது.

இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் அந்த அம்மாளிடமிருந்து டெலிபோன் வந்தது.

‘என் மகன் பிழைச்சுட்டான்’ என்று சந்தோஷமாக பேசினாள். இதைக் கேட்ட பிறகு தான் எனக்கே நிம்மதி வந்தது. அகத்தியருக்கு என் நன்றியை சொல்லிக் கொண்டேன்.

Wednesday 9 November 2011

சித்தன் அருள் - 56

இந்த ஜாதகங்கள் இரண்டும் பொருத்தமாக இருக்கிறதா? என்று பாருங்கள் என ஒருத்தர் என்னிடம் அதனைக் கொடுத்தார்.

‘அகத்தியர் நாடி மூலம் பார்த்துச் சொல்கிறேன்’ என்று அந்த ஜாதகங்களை பிரித்துப் பார்க்காமல் வைத்து விட்டேன்.

சட்டெனறு அவர் என் கையைப் பிடித்து ‘சார், தயவு செய்து ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னால் போதும், நாடி பார்த்துச் சொல்ல வேண்டியதில்லை’ என்று மடக்கினார்.

‘ஏன் நாடியின் மீது நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்டேன்.

‘நிறைய நாடி பார்த்து அலுத்து விட்டேன். நீங்களே கண்க்கிட்டு பார்த்து சொல்லுங்களேன்’ என்று அவர் சொன்னதால் அகத்தியரிடம் உத்தரவு கேட்டேன்.

‘நிந்தன் நாக்கில் நான் இருக்கிறேன். கூறுபோட்டு பார்த்து சொல்லிவிடு’, என்று எனக்கு உத்தரவு இட்டதால், நாடிக்கட்டை கீழே வைத்து விட்டேன்.

அவர் கொடுத்த ஜாதகங்களை அலசிப் பார்த்தேன்.

சில குறைபாடுகளை அவரிடம் சொல்லி ‘இப்போது திருமணம் செய்ய வேண்டாம். ஆறு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்வது நல்லது’, என்று முடித்தேன்.

‘இப்போது செய்தால் என்ன ஆகும்?’ என எதிர் கேள்வி கேட்டார் அவர்.

‘திருமணம் நடக்கும். ஆனால் சேர்ந்து வாழ இயலாத அளவு ஆறுமாதம் தனித்து இருக்க வேண்டியிருக்கும். பிறகு தான் உண்மையான திருமண வாழ்க்கை ஆரம்பமாகும்’ என்றேன்.

‘இதற்கு பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்களேன். அதைச் செய்து விட்டால் இந்த திருமணம் இப்போது நடைபெற்றாலும் பிரிவு இருக்காது அல்லவா?’ என்றார் அதற்கும் அடுத்தபடியாக.

மனுஷன் பெரிய கில்லாடி போலிருக்கிறாரே! வேறு எங்கேயோ இந்த ஜாதகங்களை அலசிப் பார்த்துவிட்டுத் தான் இங்கு வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘சட்சட்’ என்று அடுத்த கேள்விகளை கேட்பாரா?’ என்று எண்ணிக் கொண்டேன்.

எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளைச் சொல்லி, ‘என்ன தான் பரிகாரம் செய்தாலும். திருமண வாழ்க்கை என்பது இன்னும் ஆறுமாதத்திற்குப் பிறகுதான்’, என்பதை உறுதி செய்தேன்.

மேற்கொண்டு யோசிக்கவில்லை. நான் சொன்ன பரிகாரங்களைப் பற்றி நினைவிற் கொண்டதாகவும் தெரியவில்லை. கிளம்பிவிட்டார் அவர்.
ஒண்ணறை மாதம் கழிந்திருக்கும்.

ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி என்னிடம் வந்தார். தன்னுடைய மகளைப் பற்றிச் சொன்னாள். நல்ல படிப்பு படித்து அமெரிக்காவில் பணிபுரிவதாகவும், அவளது திருமணத்தைப் பற்றியும் கேட்டார்.
அகத்தியர் ஜீவநாடியைப் பற்றிக் கேட்டார்.

எதிரே அமர்ந்திருக்கும் பெண்மணியின் மகள் மிலேச்சன் நாட்டில் இருக்கிறாள். காதலித்து ஒருவனை மணந்து கொண்டு விட்டாள். இருந்தாலும் இன்றுவரை இந்த தாயாருக்கோ, மற்றவர்களுக்கோ அது தெரியாது. இதை அகத்தியனது மைந்தனான நீயும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்.’
திருமணம் இன்னும் நான்கரை மாதங்களுக்குப் பின் நடக்கும் அதுதான் இந்தப் பெண்ணின் மகளுக்கு ஏற்றது என்று சொல்லிவிடு.’ என்று அகத்தியர் கூறிவிட்டார்.

தெய்வரகசியம் என்பதால், எதிரே இருக்கும் பெண்மணியிடம், ‘அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மகளுக்கு இன்னும் நான்கரை மாதத்தில் திருமணம் நடக்கும். அது ஒரு விசித்திரமான முறையில் அமையும்’ என்று ஒரு ‘பொடி’ வைத்து சொன்னேன்.

‘அது என்ன விசித்திரமான முறையில் திருமணம்?’ என்று கேட்டார்.
நான் நேரிடையாக எதையும் சொல்லாமல், சிரித்து மழுப்பி விட்டேன். வநத அந்த பெண்மணி, ஏதோ ஒரு குழப்பத்தில் சென்று விட்டார்.

எனக்குக் கூட நாம் தவறு செய்து விட்டோமோ, அந்த தாயாரிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமோ என்று பின்பு தோன்றியது.
ஆனால் அகத்தியர் இட்ட கட்டளையாயிற்றே. அப்படியே மவுனம் காத்தேன்.
நான்கு மாதம் கழிந்தது.

அன்று காலையில் நாளிதழில் வந்த செய்தி எல்லோரையும் கதி கலங்க வைத்துவிட்டது.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் குண்டு வெடித்து நடுக்கடலில் மூழ்கி விட்டது. ஏறக்குறைய நானூறு பயணிகள் பலியானார்கள் என்ற செய்தி தான் இது.

அத்தனை பயணிகளுக்கும் அகத்தியர் மோட்ச தீபம் ஏற்றச் சொன்னார்.

அகத்தியர் இட்ட கட்டளையை ஏற்று அத்தனை பேர்களுக்கும் மோட்ச தீபம் ஏற்றி விட்டு வந்த போது முதலில் குறிப்பிட்டேனே ஒரு நபர். இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னாரே, அவர் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் முகத்தில் களையிழந்து நின்று கொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’

‘உங்களிடம் ஐந்து நிமிடம் தனியாக பேசவேண்டும்’, என்றவர் என்னை வலுக்கட்டாயமாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

‘சில நாட்களுக்கு முன்பு இரண்டு ஜாதகங்களை கொடுத்துப் பொருத்தம் பார்க்கச் சொன்னேன். நாடி பார்க்க வேண்டாம். நீங்களே பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேனே ஞாபகமிருக்கா’, என்றார் அவர்.

‘ஞாபகம் இருக்கிறது. அதற்கென்ன சொல்லுங்கள்.’

‘நீங்கள் கூட சொன்னீர்கள். 6 மாதம் பொறுத்திருந்து திருமணம் வையுங்கள் என்று,.’

‘பீடிகை போடாமல் நேரிடையாக விஷயத்திற்கு வாருங்கள்.’

‘என்ன பையன் ஜாதகம் தான் அது. நான் உங்களிடம் காட்டும் பொழுது, அவன் ஒரு பெண்ணை மணந்து கொண்டு விட்டான். இதை நான் மறைத்து உங்களிடம் ஜாதகத்தைக் காட்டினேன். அவன் மணந்து கொண்ட அந்த பெண் ஒரு பயிற்சியை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, விமான விபத்தில் சிக்கி, நேற்றைக்கு உயிரிழந்து விட்டாள்,’ என்றார்.

அழுதுகொண்டே அவர் இதை சொன்ன போது லேசான அதிர்ச்சி எனக்கு.
‘அந்த ஆத்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றுங்கள்,’ என்றேன் ஆறுதலாக.
அவரைச் சமாதானப்படுத்த சில நிமிடங்கள் ஆயிற்று.

புறப்படும் முன்பு, ‘இப்போது அகத்தியர் ஜீவநாடியைப் பார்க்க முடியுமா?’ என்றார்.

‘இன்னொரு நாள் வாருங்கள். இப்பொழுது உங்களுக்கு தீட்டு இருக்கிறது. படிக்க இயலாது,’ என்று சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

பத்து நாட்கள் கழித்து….

முன்பு என்னிடம் நாடி பார்த்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி வந்தார்.
‘ஐயா, உங்களிடம் சில மாதங்களுக்கு முன்பு என் பெண் திருமணத்தைப் பற்றிக் கேட்டிருந்தேனே, ஞாபகமிருக்கா?’ என்றார்.

நினைவுபடுத்திக் கொண்டு சொன்னேன்.

‘நன்றாக ஞாபகமிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெண்ணுக்கு நாலரை மாதம் கழித்து திருமணம் நடத்தவும். இப்பொழுது வேண்டாம் என்று சொன்னது ஞாபகமிருக்கிறது’ என்றேன்.

‘அந்த பெண் பற்றி அகத்தியர் ஏதாவது சொன்னாரா?’ என்று சந்தேகத்துடன் கேட்டார்.

‘ஏன்?’

‘ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது உண்மையா? பொய்யா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக வந்திருக்கிறேன்.

இந்த அம்மாவின் பெண்ணைப்பற்றி அன்றைக்கே அகத்தியர் என்னிடம் தெய்வரகசியமாக சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இனியும் மறைப்பதில் பயனில்லை என்று நினைத்தேன்.

‘அம்மா, அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெண் அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டாள். இதை அவள் உங்களிடம் சொல்லவே இல்லை. திருமணம் செய்து கொண்டாலும் அவளது இல்லற வாழ்க்கை என்பது நான்கரை மாதம் கழிந்த பின்பு தான்’ என்று அகத்தியர் சொன்னார்.

‘தெய்வ ரகசியம்’ என்று சொன்னதால் முற்பகுதியைச் சொல்லாமல் நாடியின் பிற்பகுதியை மாத்திரம் உங்களிடம் சொன்னேன்’ என்றேன்.

‘நீங்கள் கூட இதை என்னிடம் மறைத்து விட்டீர்களே. இது என்ன நியாயம். உங்களை மனப்பூர்வமாக நம்பித்தானே நான் வந்தேன்.’ என்றார் அந்த பெண்மணி.

இந்த பெண்மணி கேட்டதில் நியாயம் இருந்தது. ஆனால் அகத்தியர் கூறிய தெய்வ ரகசியத்தை நான் எப்படி சொல்ல முடியும்?

‘உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ, எந்த நபரை, என் மகள் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டாளோ, அந்த நபர் என்னைப் பார்க்க விமானத்தில வந்து கொண்டிருக்கும் போது விமான விபத்தில் உயிரிழந்து விட்டார். என் மகள் இப்பொழுதுதான் தகவல் சொன்னாள். இது எதனால் என்பதை நாடி மூலம் அகத்தியரை கேட்க முடியுமா?’ என்றார் அந்தப் பெண்மணி.

நான் ஒன்றும் சொல்லாமல் அகத்தியரிடம் விட்டுவிட்டேன்.

அவர் சொன்னார்.

‘இவளுடைய மகள் ஆசைப்பட்டு வீட்டிற்கு தெரியாமல் அமெரிக்காவில் மணந்து கொண்டாள். அவளுக்கும், இறந்து போன அவளது கணவனுக்கும் தாம்பத்ய வாழ்க்கை நீடித்து நிற்காது. அவளுக்கு ஆறு மாதம் கழித்து மறுமணம் நடக்கும் என்பதை விசித்திரமாக அவளது திருமணம் நடக்கும் என்று நாசூக்காக சொன்னேன். சற்று பொறுத்திரு’ என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.

அந்த அம்மாவுக்கு என்ன தோன்றியதோ, அப்புறம் வருகிறேன் என்று சட்டென்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்.

விமான விபத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒருவர், தன் மனைவியை இழந்திருக்கிறார். இன்னொரு பெண் தன் கணவனை குறுகிய காலத்திற்குள் இழந்திருக்கிறாள். இந்த இரண்டு பேர்களும் தனித்தனியாக அகத்தியர் ஜீவநாடியை என்னிடம் பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இது எதற்காக? என்று எனக்குப் புரியவில்லை. வெகு நாட்களாக இந்தக் கேள்வி என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

சில மாதங்கள் கழிந்தது.

ஒரு நாள் மாலை . மனைவியை விபத்தில் இழந்த அந்த கணவனும், கணவனை இழந்த அமெரிக்காவில் பணியுரியும் இளம் பெண்ணும், தம்தம் பெற்றோருடன் என்னைச் சந்திக்க வந்தனர்.

விஷயத்தைக் கேட்டபொழுது-

ஏர்போர்டில் அவர்கள் தற்செயலாக சந்தித்துள்ளனர். அப்போது, இருவரும் தங்கள் இழப்புகளைப் பற்றிப் பேசி, அது நட்பு என்று விரிந்து, காதலாக மாறி, அவரவர்கள் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு விட்டு, வாழ்த்து வாங்குவதற்காக குடும்பத்தோடு என்னைப் பார்க்க வந்திருக்கின்றனர் எனத் தெரிந்தது.

இதைத்தான் அகத்தியர் தன் அருள்வாக்கில் ‘ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும், விசித்திர திருமணமாக அது இருக்கும்’ என்றும் சொன்னாரோ என்றே நினைக்கிறேன்.

எப்படியோ நல்ல காரியம் நடந்து விட்டது. மகிழ்ச்சி தான்.

Tuesday 8 November 2011

சித்தன் அருள் - 55


‘சூது வாது தெரியாத என் கணவரை அநியாயமாக வேலையிலிருந்து நீக்கிட்டாங்கய்யா. நீங்க தான் அகத்தியரிடம் சொல்லி, மறுபடியும் அவருக்கு வேலை வாங்கித் தரணும்’ என்று கண்ணீர் மல்க ஒரு இளம் பெண் என்னிடம் வந்தாள். கூடவே அவளது கணவனும் வந்தார்.

“வேலையிலிருந்து நீக்கிட்டாங்களா? அல்லது சஸ்பெண்ட் செய்துட்டாங்களா? எது சரி?” என்று கேட்டேன்.

இதற்குள் அவள் கணவரே, ‘சஸ்பெண்ட் தான் செய்திருக்காங்க. ஆனா அவங்க மறுபடியும் வேலைக்கு எடுத்துப்பாங்கன்னு எனக்குத் தோணல’ என விரக்தியோடு சொன்னார்.

‘எத்தனை நாளாயிற்று?

‘மூன்று வருஷமாச்சு.

‘மூன்று வருஷமா யார் கிட்டேயும் போய் சோதிடம் பார்க்கவில்லைய?’

‘பார்த்தேன். யார் யாரோ எதை எதையோ சொன்னார்கள். அத்தனையும் செய்துட்டு வந்தேன். ஆனா இது வரை எந்த பலனும் கிட்டவில்லை’ என்று நொந்துப் போய்ச் சொன்னார்.

‘அப்படியென்ன தப்பு செய்து விட்டதாக உங்கள் மீது புகார் கொடுத்தாங்க?’
‘அதை எப்படி சொல்ல முடியும்? மானேஜ்மெண்டிற்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை. பலமுறை என்னை மிரட்டிப் பார்த்தாங்க. நானாகவே வேலையை விட்டுட்டுப் போனா நல்லதுன்னு சொல்லிப் பார்த்தாங்க. நான் அதற்கெல்லாம் பிடி கொடுக்காம நடந்தேன். கடைசியிலே ஒரு பொய் புகார் கொடுத்து சஸ்பெண்ட் செய்துட்டாங்க.”

இவ்வாறு அவர் சொன்னாலும் ஏதோ ஒன்றை மறைப்பது போல் எனக்கு தோன்றிற்று.

‘சரி… நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’

‘எனக்கு எப்போ மீண்டும் வங்கியிலே வேலை கிடைக்கும்னு அகத்தியரைக் கேட்டு சொல்லணும்’ என்றார்.

அகத்தியரை வணங்கி விட்டு நாடியைப் புரட்டினேன்.

‘இன்னவன் பதுக்கி வைத்திருக்கும் ரூ.5 லட்சம் பணத்தை, ஈரோடு மாவட்டம் அருகில் இருக்கும்…. ஒரு கிராமத்தில் குடியிருக்கும் வயதான கண்பார்வையற்ற பெண்மணியிடம் ஒப்படைத்து விட்டால் – வங்கியில் மீண்டும் பணி கிடைக்கும். இதனை இன்னும் 22 நாட்களுக்குள் செய்யாவிட்டால் இவனுக்கு வேலை கிடைப்பது கஷ்டம். வேறு விதமான தண்டனையும் பெறக் கூடிய அவலம் ஏற்படும்’ என்று அகத்தியர் முடித்தார்.

இதைக் கேட்டதும் அவன் அதிர்ந்து போனான். அவன் மனைவியோ ‘குய்யோ முறையோ’ என்று புலம்ப ஆரம்பித்தாள்.

‘இதோ பாருங்க ஐயா! எங்கிட்ட இப்போ இருக்கிறது இந்த மஞ்சள் கயிறு ஒண்ணுதான். கையிலே அஞ்சுபைசா கிடையாது. எல்லா நகை நட்டு, வீடு வாசல் எல்லாத்தையும் வித்து ஒரு வேளை கஞ்சி குடிச்சிட்டிருக்கோம். என் கிட்ட சல்லி காசு கிடையாதுங்க…. எங்களை போய் அந்தக் கிழவிக்கு பணம் கொடுக்கச் சொல்றாருங்களே, என்னங்க நியாயம்?’ என்று கத்தினாள் அவள்.

‘இதோ பாருங்க, நீங்க யாரு, அந்த கிராமத்துப் பெண்மணி யாருங்கிறது எனக்குத் தெரியாது. இது உங்களுக்கும், அகத்தியருக்கும் உள்ள தொடர்பு. நீங்க கேள்வி கேட்டீங்க. அகத்தியர் பதில் சொல்லிட்டாரு. மத்தபடி ஏதும் எங்கிட்டே கேட்காதீங்க’, என்று சொன்னேன்.

அதெப்படி பதுக்கி வைக்கப்பட்ட பணம்னு சொல்றாரு. நாங்க என்ன கொள்ளையா அடிச்சோம். எங்கிட்டே போய் இப்படியொரு நிபந்தனை விதிச்சிட்டாரே. இது அகத்தியர் ஜீவ நாடியா இல்லை உங்கள் சொந்தக் கதையா?’ என்று சற்று முறைத்தபடியே கேட்டான் அந்தப் பெண்ணின் கணவன்.

நான் ஒன்றும் பேசவில்லை. கட்டை மூடி பைக்குள் போட்டு விட்டேன்.
‘சரியான ஆளுயா இவன். இங்கே சோத்துக்கே வழியில்லைன்னு ஒவ்வொரு நாளும் திண்டாடிக்கிட்டிருக்கோம். எங்கோ இருக்கிற கிழவிக்கு 5 லட்சம் கொடுக்கணுமாமே. எங்கோ இருக்கிற கிழவிக்கு 5 லட்சம் கொடுக்கணுமாமே. ஒரு வேளை இந்த ஆளுக்கும், அந்த கிழவிக்கும் ஏதேனும் சம்பந்தமிருக்குமோ? இல்லைன்னா எல்லா வேலையையும் விட்டுட்டு அந்தக் கிழவிக்குப் போய் பணத்தை கொடுக்கணும் என்று சொன்னா, ஏதோ ஒரு கமிஷன் வியாபாரம் போல தானே இருக்குது’ என்று அவர்கள் சப்தமிட்டு கேலி செய்தது என் காதில் விழுந்தது.

இதைவிடக் கேவலம் எதுவும் உண்டா? பேசாம நாடி படிக்கிறதை விட்டு விட வேண்டியதுதான் என்று எனக்கு வெறுப்பு தோன்றியது. இருந்தாலும் ‘சர்வமும் அகத்தியருக்கே அர்ப்பணம்’ என்று அமைதி காத்தேன்.

இரண்டு நாட்கள் கழிந்தது.

அந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி நபர், பம்மியபடியே வந்தார். சாதாரணமான நிலையில் இருந்தால் அவரை ‘வாங்கோ’ என்று முக மலர்ச்சியோடு வரவேற்றிருப்பேன். ஆனால் அவரைப் பார்த்ததும் இரண்டு நாட்களுக்கு முன்னால் காதில் விழும்படியான விஷமான பேச்சு தான், என் நினைவுக்கு வந்தது. எனவே அமைதி காத்தேன்.

‘ஐயா, அகத்தியர் சொல்றபடி கடனோ – கிடனோ வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமத்து பெண்மணிக்கு கொடுக்கலாம்னு நெனைக்கிறேன். இதற்கு அகத்தியர் ஒத்துக் கொள்வாரா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. என்னைக் கோபிக்காதீங்க சார்’ – என்று பவ்யமாக கேட்டார்.

இந்த மாதிரி நபர்களுக்கெல்லாம் நாடி படிக்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘பெருந்தவறை செய்து விட்டு ஒண்ணும் தெரியாதவன் போல் வேஷம் போடுகிறாயா? முதலில் அகத்தியன் இட்டதொரு கட்டளையை தலைமேல் ஏற்க. இருக்கிற பணத்தின் ஐந்தில் ஒரு பகுதியைத்தான் அந்த கண் பார்வை குறைந்த பெண்மணிக்கு கொடுக்கச் சொன்னேன். பணமா இல்லை உன்னிடம்? அகத்தியனை சோதிக்க வேண்டாம். இன்னும் இருபது நாளுக்குள் அகத்தியனது இந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் போனால் இருபத்தியோராம் நாள் அன்று பதுக்கி வைத்திருக்கும் பணமெல்லாம் கறையானுக்கே உணவாகும். பின் அகத்தியனைப் பழித்துப் பயனில்லை’ என்று சட்டென்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

எந்தப் பதிலும் சொல்லாமல் தலை குனிந்தபடியே வெளியேறினார் அவர்.
ஒண்ணறை மாதம் கழிந்தது.

அந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி ஊழியரோ அல்லது அவனது வாயாடி மனைவியோ என்னைப் பார்க்க வரவில்லை. என் உள் மனதில் ஓர் அரிப்பு இருந்தது.

‘அகத்தியரோ பணம் இருக்கிறது என்கிறார். இவனோ பணம் இல்லை என்கிறான். இதில் எது நிஜம் என்பதை அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.,என்றைக்காவது ஒருநாள் இதற்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டேன்.”

திடீரென்று அன்று மாலையில் ‘அவன்’ மட்டும் என்னைப் பார்க்க காத்திருந்தான்.

‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

‘நீங்க சொன்னபடி எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு சென்றேன். அகத்தியர் சொன்ன அந்த விலாசத்தில் தேடி பார்த்தேன். அந்த மாதிரி பெண்மணி யாரும் அங்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் திரும்பி வந்து விட்டேன். மேற்கொண்டு என்ன செய்யலாம்?’ என்ற பரிதாபமாகக் கேட்டான்.

நாடியைப் பார்த்து விட்டு சொல்கிறேன் என்று அகத்தியரைப் பிரார்த்தனை செய்து விட்டுக் கேட்டால்-

‘அகத்தியனிடமே நாடகமாடும் இவனை என்ன செய்வது? இவன் அங்கு போகவும் இல்லை. அந்தப் பெண்மணியைப் பார்க்கவும் இல்லை’ என்றார்.
பின்னர் என்னிடம் மட்டும் தெய்வ ரகசியமாக சில தகவல்களை சொல்லி விட்டு பின்னர் வேறுவிதமாக நாடகமாடினார்.

‘….. கிராமத்துக்குச் சென்று அந்தப் பெண்மணியை காணாமல் திரும்பியதை அகத்தியன் முற்றிலும் நம்புகிறோம். உனக்குப் பணம் மீண்டும் கிடைக்க, செய்த பாவத்தைப் போக்க வழி பலவற்றை காட்டினோம். இங்கு உன்னைப் பொறுத்தவரையில் அகத்தியன் கூற்று தப்பாகி விட்டது. எனவே இனி அகத்தியனை நாடி வரவேண்டாம். வேறு சித்தர் நாடி ஏதாவது ஒன்றைப் பார்த்துக் கொள்’ என்று முடித்துக் கொண்டார்.

இதைக் கேட்டதும் இரட்டிப்பு சந்தோஷத்தோடு அவன் போனான். எனக்கு இது புதிதாக இருந்தது.

இந்த நபர் கிராமத்து பெண்மணியைத் தேடிப் போகவில்லை. அந்த பெண்மணியையும் பார்க்கவில்லை என்று அகத்தியர் சொன்னாரே, பின்னர் வேறு விதமாக வாக்கு சொல்கிறாரே? என்ன தான் இவன் வாழ்க்கையில் அப்படியொரு ரகசியம் இருக்கிறது? என்று மனம் பதை பதைத்தது.
‘கொஞ்சம் பொறுத்திரு. சென்றவனே இரண்டு நாளில் அகத்தியனை நாடி திரும்புவான். அப்போது அவனுக்கு என்ன நடந்தது என்பதை யாம் உரைப்போம்,’ என்று அடுத்த புதிரைப் போட்டார்.

இதைக் கேட்டதும் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இனிமேல் நாமாக இது பற்றிக் கேட்கவே வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

மூன்றாம் நாள் காலையில்…

‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று ஓடி வந்து காலில் விழுந்தான் அந்த வங்கி ஊழியன்.

அகத்தியர் நாடியைப் பிரித்தேன். வேகவேகமாக வார்த்தைகள் வந்து விழுந்தன. அகத்தியர் சொன்ன தகவல்கள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தன.

அந்த தகவல்கள்…..


நான் வேறு எதுவும் பேசவில்லை. அவன் வாய் திறந்து கேட்கும் முன்பு நானே நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

‘யுவராஜ் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு வேலைக்குப் போனான். தான் சம்பாதித்த தொகையில் ஒரு பகுதியை ஆத்தூரில் உள்ள தன் தாய்க்கு மாதாமாதம் வங்கியின் மூலம் அனுப்பினான்.

எல்லாப் பணத்தையும் கொடுத்தால் தாயால் அதை வைத்துக் காப்பாற்ற முடியாதே என்று நினைத்து அதே வங்கியில் தன் பெயருக்கென்று பெருந் தொகையை ரகசியமாக சேர்த்துக் கொண்டிருந்தான். இந்தப் பணம் குறித்த தகவல் யுவராஜுக்கும் அந்த வங்கியின் மானேஜருக்கும் மட்டுமே தெரியும்.
இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் வெளிநாட்டில் அவன் மரணமடைந்து விட்டான். இதனை புரிந்து தெரிந்த ‘இவன்’ அந்த யுவராஜின் ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி அவன் சேமித்து வைத்திருந்த 25 லட்சம் ரூபாயை போலி கையெழுத்து இட்டு சிலர் துணையோடு அப்படியே கையாடி விட்டான்.

பையன் இறந்து விட்டதால் பணம் வருவது நின்று போனது. யுவராஜின் தாயை உறவினர்களும் கைவிட்டு விட்டனர். இதனால் ஒரு வேளைச் சோற்றுக்கு கூட வழியின்றி, கண்பார்வையும் இழந்த நிலையில்., பட்டினியால் தவித்துக் கொண்டிருந்தாள் யுவராஜின் வயதான தாயார்.

அவர் வறுமையில் வாடிக் கொண்டு நாள்தோறும் உயிரோடு போராடிக் கொண்டு ஆத்தூரில் துடியாய் துடிக்க…..

இங்கு….

அந்த வங்கி ஊழியனும், அவரது நண்பர்களும் சுக போகமாக தினமும் குடியும் கூத்துமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால் வெளியில் வேஷம் போட்டான் இந்த வங்கி ஊழியன். ஒரு சமயம் இந்த வங்கி ஊழியனுக்கும் அவன் நண்பர்களுக்கும் குடிபோதையில் வாக்கு வாதம் வர, ‘எங்களுக்கும் அநத் 25 லட்சத்தில் பங்கு கொடு. இல்லையெனில் போலீசில் புகார் கொடுப்போம்’ என்று மிரட்டினார்கள்.

இது அந்த வங்கி ஊழியனுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘குடும்பத்தை விட்டு கையாடின அந்தப் பணத்தைக் கொண்டு வேறு எங்கும் சென்று விடலாமா?’ என்று கூட அவனுக்குத் தோன்றிற்று.

இதற்குள் விஷயம் வெளியே வரக்கூடாது என்பதற்காக கூடுதல் பணத்தை அந்த கெட்ட நண்பர்களுக்கு கொடுத்து சமாதானம் செய்து கொண்டிருந்தான். எத்தனை நாளைக்கு அவனால் மூடி மறைக்க முடியும்?

எப்படியோ இந்த ‘மோசடி’ வங்கி அலுவலக மேலதிகாரிகளுக்குத் தெரிந்து போயிற்று. இவனைக் கூப்பிட்டு விசாரிக்க இவனும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். வங்கித் தலைமை இவனை தற்காலிக பணி நீக்கம் செய்தது. இவன் பேரில் கோர்ட்டில் வழக்கும் போட்டது.

இவன், தான் கையாடிய பணத்தை ஒரு துணிப்பையில் சுற்றி, வீட்டிற்குப் பின்புறமுள்ள சாக்கடைத் தொட்டிக்கு அடியில் குழி தோண்டி அதில் புதைத்துவிட்டு, ஒன்றும் தெரியாத மாதிரி சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடுகிற மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறான்.

இவன் உண்மையிலே குற்றமற்றவன் என்று இவனது வீட்டாரையும் நம்ப வைத்தது தான் மிகப் பெரிய ஆச்சரியம். கையாடல் செய்த பணத்தை எல்லாம் செலவழித்து விட்டேன் என்று நாடகம் ஆடுகிறான். மேலும் வங்கி அவன்மீது போட்ட கிரிமினல் வழக்கு கடந்த மூன்று ஆண்டாய் நடந்து கொண்டிருக்கிறது இல்லையா?’ என்று அகத்தியர் ஒரு பெரிய அதிர்ச்சித் தகவலைத் தந்தார்.

இத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டானே தவிர வாய் திறந்து எதிர்த்தோ அல்லது மறுத்தோ எதுவும் பேசவில்லை அவன்.

மீண்டும் தொடர்ந்தார் அகத்தியர்.

‘இதையெல்லாம் அன்றே அகத்தயன் யாம் அறிவோம். அந்த ஆத்தூர் பெண்மணிக்கு அவள் மைந்தன் பணம் சேரட்டும் என்று தான் யாம் நினைத்து, இவனை அங்கு பணத்தை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னோம். கேட்கவில்லை.

மறுமுறை ஆத்தூருக்குப் போனதாகவும், அந்தப் பெண்மணியைக் காணவில்லை என்றும் பொய் சொன்னான். அகத்தியனும் இதைக் கேட்டு நாடகம் ஆடினேன். இவனும் நம்பிப் போனான். இப்பொழுது ஏன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தான் தெரியுமா? அதை இவன் தன் வாயால் சொல்லட்டுமே என்றார் அகத்தியர்.

அவனால் வாய் திறந்து பேசமுடியவில்லை. விசும்பி விசும்பி அழுதான்.

கடைசியில், கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்னது இதுதான்.

‘சாக்கடைக்கு பக்கத்தில் குழி தோண்டி புதைத்திருந்த அத்தனை பணமும் கரையானால் ஒரே நாளில் பெரும்பாலும் அரிக்கப்பட்டு போயிற்று. அது மட்டுமா? அவனுக்கு கல்லீரலில் புற்று நோய் ஆரம்பமாகியிருக்கிறது.
இந்த தகவலை அவனே சொன்னாலும், முதலில் யாரும் நம்பவில்லை. பின்னர் ஆதாரத்தோடு எடுத்துக் காண்பித்த பின்பு தான் எல்லோரும் நம்பினோம். எல்லோரும் அதிர்ச்சியால் உறைந்து போனோம். இருந்தாலும் அந்த ஆத்தூர் பெண்மணிக்கு என்ன வழி என்று கேட்டேன் அகத்தியரிடம்.

‘இன்னும் சிலகாலம் நீதிமன்றத்தில வழக்கு நடக்கும். செய்த தவறுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று இவனுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அப்பொழுது இந்த மூன்றரை ஆண்டுக்கான ஊதியம் கிடைக்கும். இதை ஆத்தூர் பெண்மணிக்கு அப்படியே கொடுக்கட்டும்.

பின்னர் அந்த அம்மா உயிரோடு இருக்கும் வரை இவன் தன் சம்பளத்தில் இருந்து ஒரு சிறு தொகையை மாதந்தோறும் கொடுத்து வந்தால் இவனுக்கு வந்த பொல்லாப்பிணி விலகிவிட்டும் என்று ஒரு நூதனமான வழியைக் காண்பித்தார்.

இதையெல்லாம் கேட்டபிறகு ‘வழக்கு முடிய தாலதாமதமானால் அது வரை அந்த ஆத்தூர் பெண்மணி உயிரோடு இருப்பாளா?’ என்று ஒரு சந்தேகம் வந்தது.

இதை எப்படி அவன் புரிந்து கொண்டானோ தெரியாது. சட்டென்று ஒன்றைச் சொன்னான்.

‘அகத்தியர் உத்தரவு இட்டால் இப்பொழுதே அந்த பெண்மணியை தேடிப்பிடித்து என் வீட்டில் வைத்து சோறு போடுகிறேன். அவளை என் பெற்ற தாய் போல் காப்பாற்றுகிறேன்’ என்றான் மிகுந்த துடிப்போடு.

அகத்தியரும் உத்தரவு கொடுத்தார். ஆனால் இதை அவனது மனைவி ஏற்கவில்லை. எதிர்த்துப் பேசினாள்.

‘எம் புருஷன் நல்லவன்னு நெனைச்சு பெருமை பட்டுக் கொண்டிருந்தேன். என் தாலியை அடமானம் வைச்சு இந்த மூணு வருஷம் வயிறார சோறு போட்டேன். இப்ப எனக்கே இப்போது தானே தெரிகிறது.
இனிமேல் இவன் எனக்கு புருஷனும் இல்லை. நான் இவனுக்கு பெண்டாட்டியும் இல்லை. இந்த ஆளை நான் வீட்டிற்குள்ளே சேர்க்கவே மாட்டேன்’ என்று கொடி பிடித்தாள் ஆக்ரோஷமாக.

பிறகு அகத்தியரிடம் என்ன செய்வது என்று கேட்டேன்.

‘அவன் வழக்கில் விடுபட்டு மீண்டும் பணியில் சேரும் வரை ஆத்தூரிலே இருந்து அந்த யுவராஜாவின் தாயாருக்கு பணிவிடை செய்து வரட்டும். வழக்கு சாதகமாகி மீண்டும் வேலைக்குச் சேர்ந்த பிறகு அந்தப் பெண்மணிக்கு கொடுக்க வேண்டிய பெருந்த தொகையைக் கொடுத்து விட்டு, மீண்டும் மனைவியோடு குடித்தனம் செய்யட்டும்,’ என்பதுதான் அகத்தியரின் கட்டளை.

இதை அவனும், அவன் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

வழக்கில் ஜெயித்து விட்டான். ஆனால் ‘டிபார்ட்மெண்ட் ஆக்ஷன்’ மூலம் அதே பதவியில் தொடரவிடாமல், மிகக் குறைந்த பதவியை கொடுத்து நீலகிரி பக்கம் அவனை அனுப்பி விட்டனர்.

இப்பொழுது, அவனுக்கு வந்தது புற்றுநோய் இல்லை. சாதாரண வயிற்றுப் புண் என்று மருத்துவர் சொல்லிவிட்டதால் மகிழ்ச்சியோடு உலா வருகிறான்.
ஆத்தூர் அம்மணியும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து இறந்து போனதாக தகவல்.

மற்றவர்கள் பணத்தை ஏமாற்றி தட்டிப் பிடுங்கி வாழ்வோருக்கு இந்த வங்கி ஊழியரின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும்.

இதைப் படித்த பிறகாவது மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் மனம் திருந்தி வாழ்ந்தால் சரி தான்.

Monday 31 October 2011

சித்தன் அருள் - 54

நொண்டி, நொண்டி நடந்து வந்த அந்தப் பெரியவருக்கு வயது எழுபது இருக்கும். கூடவே முப்பது வயதுடைய ஒரு பையனையும் அழைத்து வந்தார்.

பெரியவர் முகத்திலும் சரி, கூட அழைத்து வந்த அந்த பையனுடைய முகத்திலும் சரி. ஒரு சோக ‘இழை’ ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்கள் பட்டுப் புடவையும், பட்டு வேஷ்டியுமாக கட்டிக் கொண்டா வருவார்கள்? அதே போல் நாடி பார்க்க வருகிறவர்கள் புன்னகை பூத்துக் கொண்டா வருவார்கள்? ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதால் தானே அகத்தியரை நோக்கி வருவார்கள். அதே மாதிரி ஏதாவது பெரிய பிரச்சினை இவர்களுக்கு இருக்கலாம்… என்று எண்ணிக் கொண்டேன்.

‘இவன் என்னுடைய ஒரே பையன். நீண்ட நாட்கள் கழித்து பிறந்தான். மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இவனை அகத்தியர்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று நாதழுக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டார் பெரியவர்.

பையனைப் பார்த்தேன். படித்த களை நெற்றியில் இருந்தது. ஆனால் தாடியும், மீசையுமாக தூங்கி வெகு நாள் ஆனது போல் சோர்வாகக் காணப்பட்டான்.

‘என்ன பிரச்சனை?’ என்று பையனைப் பார்த்துக் கேட்டேன்.

மெல்லச் சிரித்தானே தவிர வாய் திறந்து எதுவும் சொல்ல மறுத்து விட்டான்.

‘நீங்களே அகத்தியரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார் அந்தப் பையனின் தந்தை.
‘நான் அகத்தியரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது இருக்கட்டும். அதனால் எனக்கென்ன லாபம்? வந்தவர் நீங்கள். ஏதோ பிரச்சினை தீர வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். அதைச் சொன்னால் அகத்தியரிடமிருந்து பதில் வாங்கித் தருகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்.”

‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்படி எல்லாமே அகத்தியர் முன் கூட்டியே சொல்லி விடுவார். வாய் திறக்க வேண்டாம் என்றார்களே…”

‘யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!’

இது வருகிறவர்களது நடத்தை, உண்மை, தன்னம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது. நீங்கள் பொய் சொன்னால், அகத்தியரும் உங்களைச் சோதிக்க ‘பொய்’ சொல்லுவார். அவரைச் சோதிக்க நினைத்தால், அவரும் உங்களைச் சோதிப்பார்’ என்றேன்.

சற்று நேரம் மவுனமாக இருந்தார்.

‘இவன் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். அவ்வளவுதான்’ என்றார் அந்தப் பெரியவர்.

நான் ஒன்றும் சொல்லாமல் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து இவன் அகத்தியனை வந்து சந்திக்கட்டும்’ என்று ஒரே வரியில் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

‘என்ன சார் இது! எந்தப் பதிலும் வரவில்லையே?’ என்றார் அந்தப் பெரியவர்.

‘காரணமில்லாமல் அகத்தியர் எதுவும் சொல்ல மாட்டார். நீங்கள் சென்று விட்டு, நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து வாருங்கள்’ என்றேன்.

இதைக் கேட்டதும் சட்டென்று அவருக்கு என் மீது கோபம் வந்தது!

‘உங்களை தெய்வமாக நம்பி நான் இங்கே வந்தது மிகப் பெரிய தப்பு. எங்களிடமிருந்து தகவல் வாங்கி, எங்களுக்கே பதில் சொல்வீர்கள் போலும். நான் எந்த பிரச்சினை என்று சொல்லாததால் உங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று விரட்டி விட்டீர்கள். இது போன்ற மோசடி உலகில் வேறு எதுவும் இல்லை. சுத்த பிராடு” என்று ஆவேசமாக வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு போனார் அவர்.

ஆனால் அந்த பையன் தலைகுனிந்தபடியே அவர் பின் சென்றானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை!

எனக்கு மனது நொறுங்கிவிட்டது! இருந்தாலும் அகத்தியர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று எண்ணியபடி அமைதி காத்தேன்.

அடுத்தாற்போல் ஒருவர் வந்தார். நாடி பார்க்கவும், அகத்தியர் அருள் வாக்கை அப்படியே எழுதிக் கொள்ளவும் ‘பேப்பரோடு’ வந்தமர்ந்தார்.

அவர் யார், எவர் என்று விசாரிக்காமல், அரை குறை மனதோடு நாடி பார்க்க ஆரம்பித்தேன். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அகத்தியர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘போதை மருந்துக்கு அடிமையாகி, பெரும் பணம் சேர்க்க மிலேச்சன் நாட்டிற்குச் சென்ற களவாணிப் பையன் அவன். நிர்வாணமாக திரையில் தோன்றி வக்கிரமாக வாத்ஸாயனாரின் சாஸ்திரத்தை மிலேச்ச நாட்டு வேசிகளோடு செயல்படுத்தி, நீலப்படத்தில் நிஜமாக நடித்தவன். செய்திட்ட பாவத்திற்கு பெரும் பணம் பெற்று தாய் நாடு திரும்பினாலும் மகாராஷ்டிரா மாவீரன் மண்ணில் கால் பதித்ததும், தான் கொண்டு வந்த நீலநிறப் படங்களோடு காவல் துறையில் மாட்டிக் கொண்டவன். எப்படியோ காவல் துறைக்குத் தெரியாமல் தப்பித்து, தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் இன்று காலையில் தான் கால் வைத்தான்.

இவனைத் தேடி காவல் துறை அலைந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் பிடிபடுவான். சிறைக் கம்பிக்குள் சில நாட்கள் வாசம் செய்துவிட்டு, நாற்பத்தெட்டு நாளில், தற்காலிக பொறுப்பு  விடுதலை வாங்கி அகத்தியனை நோக்கித்தான் வருவான். அகத்தியனை பழித்த அந்த மகனின் தந்தைக்கோ பக்கவாதம் நோய் உண்டாகும். அகத்தியனை வணங்கிய பின் உயிர் தப்புவான்’ என்று விறுவிறுப்பாக வந்தது.

சுருங்கச் சொன்னால், சற்று முன் வெளியே சென்ற அந்த பெரியவரின் மகன், பெரும் பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்று நிர்வாணப் படங்களில் நடித்து, போதை மருந்துக்கு அடிமையாகி இந்தியாவில் அந்த படங்களை கள்ளத் தனமாக கடத்தி வந்து விற்க வந்தபோது, மும்பை விமான நிலையத்தில், காவல் துறையினரால், சுங்கத் துறையினரால் பிடிபட்டு, எப்படியோ வந்திருக்கிறான். இது அவனது தந்தைக்கும் தெரியும். மூடிமறைத்து விட்டு நாடி கேட்டு வந்திருக்கிறார் என்பதுதான் அகத்தியர் சொன்ன வாக்கு.

வாசகர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லாம் சரி, இந்த வாக்கினை அந்த பெரியவரிடமே அகத்தியர் ஏன் சொல்லவில்லை? 
சம்பந்தமில்லாத மனிதரிடம் ஏன் இதைச் சொல்கிறார் என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.
ஒருவருக்கு வரவேண்டிய தகவல், இன்னொருவருக்கு தவறாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து அதிர்ந்து போனேன். வந்த அந்த நபரோ சலனமில்லாமல் அகத்தியர் சொன்னதை அப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், என்பதுகூட எனக்கு மனதை சங்கடப்படுத்தியது.
ஐயா, ‘தவறான தகவல் வந்திருக்கிறது. இந்த வாக்கு உங்களுக்கு வந்தது அல்ல. உங்களுக்கு முன்னால் வந்தவருக்கு சொன்ன தகவல். தயவு செய்து இதைக் கிழித்து போட்டு விடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். அகத்தியரிடமிருந்து அருள்வாக்கு வாங்கித் தருகிறேன்’ என்றேன்.

ஆனால் அவரோ குலுங்கி குலுங்கி அழுதாரே தவிர நான் சொன்னதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எழுதிய அந்த வாசகத்தைக் கிழித்தும் போடவில்லை.

சட்டென்று காலில் பொத்தென்று விழுந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“சார், அகத்தியர் சொன்னதெல்லாம் உண்மை. முன்னால் சென்றாரே அவர் எனது தந்தை. அவருடன் சென்றவன் என் தம்பி. ‘பி.இ.’ படித்து ஒரு பொறுப்புள்ள என்ஜினியராக இருந்தான். அவனுக்கு இளமை கோளாறு. பார்க்கவும் மிகவும் நன்றாக இருப்பதால், பெண் வேட்கையால் தள்ளப்பட்டான்.
வெளிநாட்டிற்குச் சென்று நீலப்படங்களில் நடித்தால் பெரும் பணம் கிடைக்கும் என்று யாரோ ஆசை காட்டியதால், எப்படியோ வெளிநாட்டிற்குச் சென்றவன் சரியாக அந்த மோசமான கும்பலில் மாட்டிக் கொண்டான். அதே சமயம் பல லட்சம் சம்பாதித்து இந்தியாவுக்கு திரும்பும் போது மாட்டிக் கொண்டான். அவனை போலீஸ் தேடுவதும் தெரியும்.” என்றார் அவர்.

‘உங்கள் தந்தைக்கு நாடியில் நம்பிக்கை இல்லையா?’

‘இல்லை.’

‘உங்கள் தம்பிக்கு….’

‘அவன்தான் போதைக்கு அடிமையாகிவிட்டானே. நான் தான் அவர்களை உங்களிடம் வரச்சொன்னேன். என் தந்தை ஏடாகூடாமாகப் பேசுவார் என்பது எனக்குத் தெரியும். எனவே என் தந்தையை பின்தொடர்ந்து வந்தேன். இப்பொழுது நான் என்ன பரிகாரம் செய்தால் தம்பியைக் காப்பாற்ற முடியும்? என் தந்தையை பக்க வாதத்தில் இருந்து காப்பாற் முடியுமா?’ என்று கேட்டார் அந்த நபர்.

‘அகத்தியனைப் பழித்ததால் அதற்குரிய தண்டனை உன் தந்தைக்கு உண்டு. மீதமுள்ள கேள்விக்கு நாற்பத்து எட்டு நாட்கள் ஆகட்டும் வா. இனிமேல் நம்பிக்கை இல்லாதவர்களை அகத்தியனிடம் அனுப்பாதே’, என்று உத்தரவிட்டார் அகத்தியர்.

நேரடியாக இவரே தம்பியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ‘நாடி’ மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் வர வேண்டும் என்று வருத்தப்பட்டேன்.

நாற்பத்தி ஒன்பதாம் நாள்.

அந்த பெரியவரும், போதை மைந்தனும் என்னிடம் வந்தனர். பெரியவருக்கு எதுவும் பேச முடியவில்லை. நடக்க முடியாமல் நடந்து வந்தார். அவருக்குக் கைத்தாங்கலாக யாரோ இருவர். காலை நீட்டி மடக்க முடியாத நிலை. பேச்சிலும் வழவழ கொழ கொழ. கண்ணீரில் கண்கள் மூடியிருந்தது. அவரால் கைதூக்கி கும்பிடக் கூட முடியவில்லை.

நடந்த கதையைக் கேட்டேன்.

அன்னைக்கு வந்துவிட்டுப் போன ஆறு மணி நேரத்தில் அந்த போதை மைந்தனை ஆபாச பட வழக்கில் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். விசாரணைக் கைதியாக இருந்திருக்கிறான். ஜாமீன் இரண்டு நாளைக்கு முன்பு தான் கிடைத்திருக்கிறது.

அவன் தந்தைக்கோ இதையெல்லாம் கேட்டு, பிளட் பிரஷர் அதிகமாகி, அது லேசான வாதத்தில் வந்து முடிந்திருக்கிறது. மருத்துவ வசதியைக் கொண்டு உயிர் தப்பியிருக்கிறார். பையன் ஜாமீனில் விடுதலையானதும் என்னைப் பார்க்க நம்பிக்கையோடு வந்திருக்கிறார்.

மொத்தத்தில் அகத்தியர் வாக்கு அவர்களைப் பொறுத்தளவில் உண்மையாகி விட்டது. எதிர் காலம் எப்படி இருக்கும்? என்று நம்பிக்கையோடு கேட்டான் அந்த போதை மைந்தன்.

‘வெளிநாட்டில் நீலபடத்தில் நடித்திருப்பதால், இப்போது தப்பித்தாலும் தவறான முறையில் நீலப்படங்களைக் கொண்டு வந்தால் அதற்குரிய தண்டனையை முறைப்படி பெற வேண்டும்’ என்று சொன்ன அகத்தியர், போதைப் பழக்கத்திற்குள்ளான அவனுக்கு – அந்தப் பழக்கம் போக சில மூலிகைப் பொடிகளை உபயோகிக்கச் சொன்னார். பக்கவாதம் நோய் தாக்கிய அவனது தந்தைக்கும் பொதிகை மலையில் மட்டுமே விளையக்கூடிய மூலிகைகளைச் சொல்லி உண்டு வரச் சொன்னார்.
பி.இ. படித்திருந்தும் இப்படிப்பட்ட சமூக விரோத குற்றம் செய்ததினால், அவனுக்கு வேலை போயிற்று. சிறிது காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்தான். இப்போது சொந்தமாக இறை பணிக்குரிய பொருட்களை விற்பனை செய்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கிறான். போதைப் பழக்கமும் அவனை விட்டு விலகிவிட்டது. அவன் தந்தையும் யார் தயவும் இல்லாமல் நடக்கிறார். அவரை நெற்றியில் விபூதி, கழுத்தில் உத்திராட்சத்தோடு இன்றும் பார்க்கலாம்!

Sunday 30 October 2011

சித்தன் அருள் - 53


நாடி பார்க்க வருகிறவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் செய்த தவறுகளைச் சொல்லி பரிகாரம் கேட்பதில்லை. அதை அப்படியே மறைத்து விட்டு ஓலைச் சுவடியில் ஏதாவது புதியதாக செய்தி வராதா? அகத்தியர் ஏதேனும் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்த மாட்டாரா? என்று தான் கேள்விகள் கேட்பதுண்டு.

இன்னும் சிலர் என் பெயர் என்ன? என் மனைவி தற்சமயம் எங்கிருக்கிறாள்? என்றும் கேட்பதும் உண்டு.  இவர்கள் அகத்தியரை சோதிக்க இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதால், அகத்தியரும் அவர்களுக்காக நையாண்டியாக அதே மாதிரி பதில் சொல்வதுண்டு.

அகத்தியர் கூறுகின்ற இந்த பதில் உண்மைக்கு மாறாக இருக்கும். ஆனால் அவர்களை மட்டம் தட்டுவது போலிருக்கும். அவர்கள் அகத்தியர் மீதோ அல்லது என் மீதோ கோபம் கொள்ள முடியாது. அப்படியே கோபப்பட்டாலும் அகத்தியர் இடுகின்ற சில கட்டளைகளால் அவர்கள் அடிபட்டு, பின்னர் எழுந்திருக்கிற முடியாத நிலைக்கும் ஆளானதுண்டு.

அன்றைக்கு என்னைப் பார்க்க வந்திருந்த ஒரு பெண்மணி மிகவும் நிதானமாக கேட்டார். ‘என் கணவரை கடந்த 2 ஆண்டு காலமாக காணவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துத் தாருங்கள்? என்று.

இப்படிச் சொல்லும் பொழுது அவள் முகத்தில் எந்தவிதமான பதட்டமோ, பயமோ இல்லை. எனக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணியது.

‘என்ன முயற்சியெல்லாம் எடுத்தீர்கள்?’

‘எல்லா முயற்சியையும் எடுத்துப் பார்த்து விட்டேன். ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அகத்தியர் தான் என் கணவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்’ என்றாள் மறுபடியும் நிதானமாக.

கணவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அலைந்து திரிந்து மனம் நொந்து விரக்தியின் உச்சத்திற்கே வந்துவிட்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது. அதனால்தான் இப்படி பற்றற்ற முறையில் பேசுகிறாள்…. என்று எனக்குள் நானே எண்ணிக் கொண்டேன்.

அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

‘எதிரில் இருக்கும்   இப்பெண்மணியால் அகத்தியனுக்கு ‘தீட்டு’ பட்டுவிட்டது. எனவே 13 நாட்கள் கழித்து அகத்தியனை வந்து பார்க்கச் சொல்’ என்று தான் உத்தரவு வந்ததே தவிர, மற்றபடி எந்த தகவலும் அகத்தியரிடமிருந்து வரவே இல்லை.

இந்த ‘தீட்டு’ விஷயத்தை அந்தப் பெண்மணியிடம் கூறாமல் ‘இன்றைக்கு நேரம் சரியில்லை. 13 நாட்கள் கழித்து வாருங்கள். அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்கிறேன்.’ என்று நாசூக்காக சொல்லி அனுப்பி வைத்தேன்.

13 நாட்கள் ‘தீட்டு’ ஏற்பட்டதால், யாருக்கும் அகத்தியர் அருள் கிடைக்காமல் போயிற்று. எனக்கும் சிறிது ஓய்வு கிடைத்ததே என்று எண்ணி, சந்தோஷப்பட்டேன்.

நண்பர்கள் சிலர் அழைததால் திருப்பதிக்கு சென்ற பொழுது, அங்கு இதே பெண்மணியை ஒரு நபரோடு கண்டேன். பூ பொட்டோடு அமர்க்களமாக சிரித்துப் பேசிக் கொண்டே போனார்கள். நல்லவேளை அந்த பெண்மணி என்னைக் கண்டு கொள்ளவில்லை. எனக்கு உள்ளூற சந்தோஷம். எப்படியோ காணாமல் போன கணவர், கண் எதிரே கிடைத்து விட்டார். அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தினேன். அதே சமயம் எனக்குள் ஒரு சந்தேகம். ‘எதற்காக அகத்தியர், இந்தப் பெண்ணால் தீட்டுப்பட்டு 13 நாட்கள் அருள்வாக்கு தரவில்லை?’ என்பதுதான். வந்திருந்த அந்த பெண்ணால் தீட்டுப்பட்டிருக்கிறது என்றால் அவளது கணவன் அல்லது தந்தை அல்லது தாய் மரணமடைந்து இருக்க வேண்டும். அவளுக்கு திருமணமாகி விட்டதால் அவளது பெற்றோர் இறந்திருந்தால் மூன்று நாட்கள் தான் தீட்டு இருக்கும். கணவன் இறந்திருந்தால் தான் பதிமூன்று நாட்கள் தீட்டு உண்டு.
அப்படியென்றால் திருப்பதி மலையில் பூவோடும், பொட்டோடும் கலகலவென்று சிரித்துக் கொண்டு போனால்…. இதற்கு என்ன அர்த்தம்? எது நிஜம்? எது பொய்? என்று குழப்பிக் கொண்டேன். காரணமில்லாமல் அகத்தியர் எதையும் செய்ய மாட்டார், சொல்ல மாட்டார் என்று மட்டும் எண்ணிக் கொண்டேன்.

பதினைந்து நாட்கள் கழிந்த பின்னர்….

அதே பெண்மணி, என்னிடம் வந்தாள். ‘பதிமூன்று நாட்கள் கழித்து வரச் சொன்னீர்களே, அதுதான் வந்தேன். எப்படியாவது என் கணவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்றாள்.

இதைக் கேட்டதும் எனக்கு அடி வயிறு பற்றி எரிந்தது. திருப்பதியில் கண்ட காட்சி கண்ணில் அடிக்கடி வந்தது. என் கண்ணால் கண்டது பொய்யா? இல்லை இவள் சொல்வது பொய்யா? இல்லை, அவசரத்தில் இவளைப் போன்ற ஒரு பெண்ணைக் கண்டு தவறுதலாக இவள் தான் அவள் என்று எண்ணிக் கொண்டேனா?’ என்று குழம்பிக் கொண்டேன்.

சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அகத்தியரிடம் என் குழப்பத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘இன்னவளின் கணவன், இவளை விட்டு விலகிச் சென்று ஒன்றரை ஆண்டுகள் ஆனது என்னவோ உண்மைதான். வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்ற அவன், வேற்று நாட்டு அரசால் கைது செய்யப்பட்டான். தகாத தப்பு செய்ததாக!
பதினைந்து நாட்களுக்கு முன்பு அகத்தியனை நாடி இந்த பெண்மணி வந்த அதே நேரத்தில் வெளிநாட்டில் கார் விபத்தில் இவளது கணவன் உயிரிழந்து விட்டான். அது இவளுக்கு இன்னமும் தெரியாது. அந்த அரசாங்கமும் இவளுக்கு முறைப்படி தகவல் சொல்லவில்லை.

அகத்தியனை நோக்கிவந்த நேரத்தில் இவளது கணவர் இறந்து போனதால் இவளது தீட்டு எமக்கு பட்டு, அதனால் யாம் இவளை பின்னர் வரச் சொன்னோம்.

இந்நிலையில் இவளுக்கும், பக்கத்து வீட்டு ஆண்மகனுக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருந்தது. இதை இவளது கணவனும் அறிவான். அவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததும் உண்மை. சில நாட்களுக்கு முன்பு வேங்கடவன் சன்னிதியில் காதலனின் வற்புறுத்தலுக்காக கட்டாய தாலி அணிந்து கொண்டு வந்தாள்.

எனவே இன்றைக்கு ‘சுமங்கலி’ என்பதால், இவளைப் பற்றி யாம் சொன்னோம். இவளை எப்படிச் சொல்லி சமாளிக்க முடியுமோ, அப்படிச் சொல்லி அனுப்பி விடு’,  என்று அகத்தியர் எனக்குக் கட்டளையிட்டார்.

இது எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடமாகிப் போயிற்று. அகத்தியர் ஏன் என்னை இப்படிப்பட்ட சோதனைகளில் இறக்கி விடுகிறார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

இப்பொழுது எனக்குள்ள கேள்வி இரண்டு. ஒன்று இந்தப் பெண்ணின் உண்மையான கணவர் வெளிநாட்டில் இறந்திருக்கிறார். அவரது உடல் இந்தியாவுக்கு வர இன்னும் சில நாட்கள் ஆகும். இந்த நிமிடம் வரை  இவளுக்கு இந்த உண்மை தெரியாது. இதன்படி பார்த்தால் இவள் விதவை.

சில நாட்களுக்கு முன்பு காதலனால் திருப்பதி சன்னிதானத்தில் கட்டாயத்தாலி கட்டிக் கொண்டு, தாம்பத்திய சுகம் அனுபவித்துக் கொண்டு வருவதால் இவள் சுமங்கலி. இப்படியிருக்கும் பொழுது அவள் ஒன்றும் தெரியாதது போல் தன் கணவனைப் பற்றி கேட்கிறாளா? இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன்.

‘அம்மணி, நீங்கள் உங்கள் முகவரியைக் கொடுத்து விட்டு போங்கள். நான் ஒரு நல்ல நாளில் தங்களுக்கு பதில் கடிதம் அனுப்புகிறேன்’ என்று சொல்லி அவளது முகவரியை தவறாமல் வாங்கிக் கொண்டேன்.

முகவரி வாங்கிக் கொண்டாலும் நான் எந்தவிதக் கடிதமும் அந்தப் பெண்மணிக்கு எழுதவே இல்லை. அதே சமயம் அகத்தியர் சொன்ன அத்தனையையும் ஒன்று விடாமல் எழுதி அவள் கடித முகவரியும் எழுதி, கவரை நன்றாக ஒட்டி என் அறையிலேயே வைத்து விட்டேன்.
ஒன்றரை மாதம் கழித்து திடீரென்று அவள் வந்தாள். என்னிடம் சண்டையோ வாக்குவாதமோ செய்யவில்லை. நான் சட்டென்று அவளுக்கு எழுதிய அகத்தியர் வாக்கு கடிதத்தை அப்படியே கொடுத்தேன்.

அதை சப்தமில்லாமல் பிரித்து படித்து விட்டு, ‘இதை அன்றைக்கே என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாமே’ என்று ஒரு வார்த்தை மட்டும் கேட்டாள்.

‘நியாயம் தான். அகத்தியர் சொன்னதை அப்படியே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அன்றைய சூழ்நிலையில் இந்த செய்தி தங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும். அதைத் தவிர்க்கவே இப்படிச் செய்தேன்’ என்றேன்.

அவள் ஒன்றும் பேசவில்லை. சில நிமிடம் மவுனமாக இருந்தாள். ‘வெளிநாட்டிலிருந்து பத்து நாளைக்கு முன்புதான் எனக்கு செய்தி வந்தது. அங்கேயே எல்லா காரியங்களையும் செய்யச் சொல்லி விட்டேன். அதுவும் நேற்றைக்கு முடிந்து விட்டது’ என்றாள்.

பெயருக்கு நானும் வருத்தம் தெரிவித்து விட்டு, ‘உங்களுக்கு உதவத்தான் புதுக் கணவர் கிடைத்திருக்கிறாரே. கவலையை விடுங்கள்’ என்றேன்.

‘இருக்கலாம். இருந்தாலும் எனக்கென்னவோ நான் செய்தது மிகப் பெரிய தவறு என்றே தோன்றுகிறது. ஆசையோடு கட்டிய தாலிக்கும், மிகவும் கட்டாயமாகக் கட்டிய தாலிக்கும் வித்தியாசம் உண்டு. எனக்கு இந்த இரண்டாவது திருமணம் பிடிக்கவில்லை. தவிர அவருக்கும் மனைவி, குழந்தை உண்டு. வருமானமும் கிடையாது. எனவே அவரை விட்டு விலகுவதாக முடிவு செய்து விட்டேன்’ என்றாள்.

நான் மவுனமாக அந்தப் பெண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்ன செய்யப் போவதாக உத்தேசம்?’ என்று கேட்டேன்.

‘என்னிடமிருக்கும் பணத்தைக் கொண்டு அகத்தியர் பெயரால் ஏதேனும் சமூகத் தொண்டு செய்யலாம் என்று எண்ணுகிறேன்’ என்றாள் அவள்.

நல்ல முடிவு என்று வாழ்த்தினேன்.

அதன்பிறகு அந்தப் பெண்மணியை நான் பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக ஏதேனும் சமூகத் தொண்டு செய்து கொண்டிருப்பாள் என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரிகிறது.