​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 March 2011

சித்தன் அருள் - 15

வாசலில் ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.  அந்த வாகனத்தின் பின் இருக்கையில் நடுத்தர வயதைச் சேர்ந்த வசதியுடைய ஒருவர் அமர்ந்திருந்தார்.  கார் ஓட்டி வந்த டிரைவர் தான், என் வீட்டு கதவைத் தட்டி இருக்கிறார் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.

"யார் நீங்கள்?" - என்றேன்.

அந்த டிரைவர் மிக பவ்யமாக "அய்யா! உங்களைப் பார்க்கணும்னு வெளியூரிலிருந்து வந்திருக்காங்க" என்றான்.

"உள்ளே வர சொல்லுங்கள்" என்றேன்!

"அவரால வர முடியாதுங்க, நீங்களே அய்யாவை பக்கத்திலே போய்ப் பார்த்துப் பேசினால் நல்ல இருக்கும்" என்றான் மெல்லிய குரலில்.

"யார் இவர்? எங்கிருந்து வந்திருக்கிறார்?, எதற்காக என்னை பார்க்கவேண்டும்? என்று மீண்டும் அவரிடம்  கேட்டேன்.

"அய்யா என்னை தப்ப எடுத்துகாதீங்க!  இதை எல்லாம் நீங்களே அய்யா கிட்ட நேரிடையாக கேட்டுத் தெரிஞ்சுகோங்க" என்று சற்று பல வந்தமாக வற்புறுத்தினான்.

"சரி" என்று அரைகுறை மனதோடு அந்தக் காரை நோக்கி நடந்தேன்.

"வணக்கம் அய்யா" - என்று இரு கை கூப்பி வணங்கினார், அந்தக் காரில் இருந்தவர்.

பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு "வீட்டிற்க்குள் வாங்களேன். சவுகர்யமாக உட்கார்ந்து பேசலாமே" என்றேன்.

ஒரு மாதிரி தயங்கினார்.  சில நிமிடங்கள் வரை அவர் பதிலேதும் பேசவில்லை.

அடுத்த நிமிடம் வேஷ்டியை சற்று விலக்கி தன கால்கள் இரண்டையும் என்னிடம் காண்பித்தார்.  அதில் மருந்து தடவப்பட்டிருந்தது.

"என்ன! ஏதேனும் அடிபட்டு விட்டதா?" என்றேன்.

"இல்லை.  எப்படி சொல்வது என்று தெரியவில்லை.  திடீரென்று என் கால்கள் இரண்டும் சட்டென்று செயலற்று விட்டது. என்னால் துணையின்றி நடக்க முடியாது.  "ஊன்றுகோல்" வைத்தும் நடக்க முடியாத நிலை" என்று கண்களில் நீர் தழும்ப சொன்ன பொது நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதற்குள் அவர் "உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் காரில் அமர்ந்து பேசலாம்.  இல்லை அகத்தியரை நாடி, நான் உள்ளே வந்துதான் பேசவேண்டும் என்றால் எப்பாடுபட்டேனும் உங்கள் வீட்டிற்குள் வந்து விடுகிறேன்" என்று மிகவும் மரியாதையோடு கேட்டுக் கொண்டார்.

"பரவாஇல்லை, நான் உங்கள் விருப்பபடியே காரில் அமர்ந்து பேசுகிறேன்" என்று கார் கதவை திறந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.

"எப்படி இது ஏற்பட்டது ? பிறந்தது முதலா?"

"இல்லை"

"இரண்டு மதங்களுக்கு முன்பு என் பெட்ரோல் கம்பெனிக்கு வந்து கொண்டிருந்தபோது சட்டேன்று என் இரண்டு கால்களும் மரத்து போயிற்று. காரில் இருந்து இறங்க கூட முடியவில்லை.  வலியும்  திடீரென்று ஏற்பட்டு என்னை துடிக்க வைத்தது.  அப்படியே டாக்டரிடம் போனேன்.  ஒரு மாதம் நிறைய மருந்துகள், சோதனைகள் என நடத்தினார்.  வலி குறைந்ததே தவிர எனது இரண்டு கால்களும் சுரணையற்று போயிற்று". 

"டாக்டர் என்னதான் சொன்னார்?"

இது மருந்தால், சிகித்சையால், பிசயொதேரபியால் குணப்படுத்த முடியாது. தானாக குணம் ஆகவேண்டும்.  கடவுளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.  மருந்துகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள் - என்று தான் எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

இதை சொல்லி முடிப்பதக்குள் அவருக்கத் தொண்டையை அடைத்தது. சரியாகப் பேசமுடியாமல் அவதிப்பட்டார்.  கண்களில் நீர் அருவி போல் வழிந்தது.  அடிக்கடி தன கையிலிருந்த துணியால் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

சில நிமிடம் மவுனத்திற்குப் பிறகு "இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன்.

என் கைகள் இரண்டையும் ஒன்று சேரப் பிடித்துக் கொண்டு, "எனக்கு ஜீவநாடி படித்து என் இரு கால்களைக் குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று அகத்தியரிடம் கேட்க வேண்டும்.  அதற்குத்தான் நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன்" என்றார்.

எனக்கு இது தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவருக்கு எதாவது ஒரு வகையில் உதவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை காரில் அமரச் செய்து விட்டு அகத்தியரிடம் அனுமதி கேட்டு, பின்பு அந்த நபருக்கு நாடி படிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

உள்ளே சென்று பூஜை அறையில் வைக்கபட்டிருந்த அகத்தியர் ஜீவ நாடியை எடுத்து வந்திருக்கும் அன்பரது காலிரண்டைக் குணமாக்க அருள் வாக்கு தர முடியுமா? என்று வேண்டி கொண்டேன்.

அகத்தியர் மள மளவென்று காரில் வந்தவரைப் பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

"இவன் பெயர் சோமசுந்தரன்.  கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தான்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறுக்கு வழியில் பணம் சேர்த்தான்.  அந்த பணத்தைக் கொடுத்து தன் செல்வாக்கால் பல இடங்களில் பல் வேறு தொழில்களை ஆரம்பித்தான்.  தொழிலும் அற்புதமாக வளர்ந்த்தது.  பணமும் எக்கசெக்கமாக குவிந்தது.

கஷ்டப்படும் பொழுதெல்லாம் இறைவனிடம் மனதார வேண்டி பிரார்த்தனை செய்தவன்.  பணம் கையில் நடமாடியதும் அந்த தெய்வத்தை மறந்தான். பெற்றவர்களை உதாசீனம் செய்தான்.  அவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

மது குடித்து விட்டு, போதையில் தாயாரை எப்படிப் புண்படுத்த வேண்டுமோ அப்படி எல்லாம் புண்படுத்தினான்.  சில சமயம் தன் காலால் எட்டி கூட உதைத்தான்.  அவர்கள் சகித்துகொண்டனர்.  இவனுக்காக பகவானிடம் பிரார்த்தனை செய்தனர்.  இத எல்லாம் இந்த சோம சுந்தரம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.  கேலி செய்தான்.  அதோடு கெட்ட சகவாசமும் ஏற்பட்டது.

இதையாவது விட்டு விடலாம்.  ஆனால் ஒரு பதினெட்டு வயது சிறுவனை இவன் படுத்தியபாடுதான் இறைவனுக்கே வெறுப்பை மூட்டியது.  அதன் விளைவாகத்தான் இவன் தன கால்கள் இரண்டையும் இழந்தாற்போல் ஒரு நிலையில் இன்று துடி துடிக்கிறான்" என்று முடித்துகொண்டார்.

"அப்படி என்னதான் அந்தச் சிறுவனைத் துன்புறுத்தினார்?" என்று கேட்டேன்.

"ஒரு கோவிலில் உள்ள சிலையைத் திருடச் சொன்னான், இவன்.  அதற்கு அந்த சிறுவன் மறுத்தான்.

மது உண்ட போதையில் "வேலைக்கார நாயே" என்று தன் காலால் எட்டி உதைத்தான் இவன்.  தகாத வார்த்தைகளை எல்லாம் பேசினான்.

அடிபட்ட வேகத்தில் அடி வயிற்றில் பாதிக்கப்பட்டு மரணத்தோடு போராடினான் அந்த சிறுவன்.  அந்த சிறுவன் இட்ட சாபம் தான் இது" என்று நடந்ததை விளக்கினார் அகத்தியர்.

1 comment: