​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 9 March 2011

சித்தன் அருள் - 5


நாடி படிப்பதில் எத்தனையோ சங்கடங்கள் உண்டு. வருகின்ற அனைவரும் உடனடியாக நாடி படிக்கவேண்டும் என்பார்கள். நாடி படிக்கும் பொழுது, "செந்தமிழில் வரவில்லையே" என்று சந்தேகப்படுவார்கள். அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதை அடியோடு மறந்து விடுவார்கள்.

சிலருக்கு தங்களது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் பெயர் வராது போனால் நாடி சோதிடத்தை நம்பமாட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் மனதில் யார் யாரை பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களை பற்றிய அத்தனை ரகசியங்களையும் அகத்தியர் சொல்ல வேண்டும், என்று எதிர்பார்ப்பார்கள்.

அகத்தியர் தானாக எல்லா விஷயத்தையும் அப்படி அப்படியே முன்கூட்டியே சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் "இது ஏமாற்று நாடி" என்று, சிலர் சொல்லி விடுவதும் உண்டு.

"காண்ட நாடி" பார்ப்பது வேறு, "ஜீவ நாடி" பார்ப்பது என்பது வேறு. "அந்த நாடியில்" அன்றைக்கு அப்படி வந்தது... ஜீவ நாடியில் அப்படி வரவில்லையே" என்று காண்ட நாடிக்கும் ஜீவ நாடிக்கும் முடிச்சு போட்டு பேசுபவர்களும் உண்டு.

"நாடி" வந்து நேரிடையாக கேட்டால் நல்ல வழி கிடைக்கும், இன்னொருவரிடம் கேட்க சொன்னால் அதற்கு பதில் வராது என்று சொன்னால் இதையும் நம்ப மாட்டார்கள்.

இப்படி பலவகையான சங்கடங்கள் எனக்கு நிறையவே வரும்.

இருந்தாலும், நாடி பார்க்க வந்த ஒருவர் விஷத்தை குடித்துவிட்டு என்னிடம் நேராக வந்த போது, உண்மையில் நான் ஆடிப்  போய்விட்டேன்.

"என்ன ஆச்சு உங்களுக்கு" என்று பதறியபடியே கேட்டேன்.

"விஷம் குடித்துவிட்டேன்"

"ஏன்?"

"மனசு சரி இல்லை"

"சரி! அதுக்கு இங்கே ஏன் வரணம்?"

"நாடி பார்க்க"

"இந்த சமயத்திலா?"

"ஏன்? அகத்தியர் சொல்லமாட்டாரா?"

"கேட்டு பார்க்கணம். அதுக்கு முன்னால நீங்க பக்கத்து ஆஸ்பத்ரில "அட்மிட்" ஆகி உங்களை குணப்படுத்திக்கிட்டு வரணம்" என்றேன்.

"முடியாது. எனக்கு இப்போதே நாடி பார்க்கணம்" என்றார்.

"அய்யா! நீங்க வயசில பெரியவங்களா இருக்கீங்க. முதல்ல நீங்க ஆசுபத்ரிக்குப் போங்க. அப்புறமா நான் உங்களுக்கு அங்கேயே வந்து படிக்கிறேன்" என்று பயத்தோடு கெஞ்சி பார்த்தேன்.

நான் பயத்தோடு கெஞ்சுவது அவருக்கு விளையாட்டாகத் தோன்றியது. பலமாக வாய் விட்டுச் சிரித்தார்.

சிரிப்பை விட அவர் வாயில் இருந்து வெளி வந்த நுரைதான் அதிகமாக இருந்தது. அந்த சாயங்கால நேரத்திலும் "கரு நீலம்" தெரிந்தது.

விஷத்தின் தன்மை அதிகமாகியிருக்கும். எப்படி இருந்தாலும் இந்த மனுஷன் அரை மணி நேரத்திற்குள் "அம்போ" னு போய் விட போகிறான் என்று பயம் ஏற்பட்டது.

அப்புறம் மாட்டிக்கொள்ள போவது நான்தான், என்பதை நினைக்கும் போது கை, கால்கள் உதரத்தான் செய்தது. அவரை அப்படியே அலக்காக தூக்கி அருகில் உள்ள ஆஸ்பத்ரியில் சேர்க்கலாம் என்று பார்த்தால் அன்றைக்கு பார்த்து, எனக்கு ஆள் துணை ஏதுமில்லை.

எப்படியோ அவரை சமாதானப்படுத்தி நானே ஆஸ்பத்ரியில் கொண்டு போய் சேர்த்தாலும் ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள் வரும். போலீஸ் என்னை கூப்பிட்டு விசாரணை செய்யலாம். 

"நாடி பார்க்க வந்தோமா இல்லை, நாலு பேருக்கு பதில் சொல்ல வந்தோமா?எதற்கு எனக்கு இப்படிப்பட்ட சோதனை?" என்று மன இறுக்கம் ஏற்பட்டது.

அந்த பெரியவரை உட்காரக் கூட சொல்லவில்லை. அவரும் நின்று கொண்டு தான் பேசினார்.

"சொல்லுங்க. எனக்கு நாடி படிக்க முடியுமா? முடியாதா?"

இது எனக்கு ஆத்திரத்தை தந்தது. ஆனாலும் அடக்கி கொண்டேன்!

"இப்போதைக்கு இந்த நிலையில் என்னால் தங்களுக்கு நாடி படித்து பலன் சொல்ல முடியாது".

"சரி! எனக்கு ஒண்ணே ஒண்ணு மாத்திரம் கேட்டு சொல்ல முடியுமா?"

"என்ன வேணும்?"

"இப்போ இந்த பாட்டிலில் இருந்த விஷத்தை குடிச்சிருக்கேன். இதுனால நான் உயிர் பிழைப்பேனா? இல்லை செத்து போயிடுவேனா? அதை மட்டும் அகத்தியர்கிட்டே கேட்டுச் சொல்லுங்க!"

மனுஷன் தீர்க்கமாகவே பேசினார்.விஷத்தை குடித்த மாதிரியே தெரியவில்லை.

எனக்குத்தான் விஷம் குடித்தது போன்று ஒரு நிலை ஏற்பட்டது.

"என்னங்க! சீக்கிரம் அகத்தியர்கிட்டே கேட்டு பதில் சொல்லுங்க. குடலையும், வயிற்றையும் எரியுது" என்று மிரட்டினார்.

வெறுப்பு தான் வந்தது.

"அதான் சொல்றேன்ல, இந்த ஒரு கேள்வியை மட்டும் நாடியிலே கேட்டு சொல்லுங்க. நான் அப்படியே போய்டுறேன்" என்று பிடிவாதம் பிடித்தார்.

"ஒரே ஒரு கேள்வி தான் கேட்டீங்க. அதுக்கு மாத்திரம் பதில் சொல்றேன். ஆனால்... உடனே நீங்க இந்த இடத்தை விட்டு கிளம்பிடணும்" என்று நானும் கறாராக சொன்னேன். 

எப்படியோ இந்த மனுஷன் இடத்தை காலி பண்ணினால் போதும்னு எனக்கு தோன்றியது.

அவரை உட்கார சொல்லிவிட்டு, அவசர அவசரமாக குளித்து விட்டு பூசை அறையில் இருந்த நாடியை வெகு வேகமாக் தூக்கி கொண்டு வாசலுக்கு வந்தேன்.

இதற்குள் ஏதாவது ஏடாகூடமாக ஆகி விட கூடாதே என்று அகத்தியரிடம் வேண்டி கொண்டேன்.

நல்ல வேளை, அந்த மனிதருக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை.

ஓலை கட்டை பிரிக்க முற்படும் போது, இதுவரை நேராக இருந்த மனுஷர், வாந்தி எடுக்க முயன்றார்.

கண்கள் நேராக சுழல, அவர் உடலும் நடுங்கியது. 

"சரிதான். இனிமேல் இவருக்கு நாடி படிக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஏதோ கெடுதல் நடக்க போகிறது என்று நினைத்து, ஓலைக்கட்டை மூடத் தொடங்கினேன். 

"நான் உயிரோடு இருப்பேனா?  மாட்டேனா? என்று படியுங்க" என்று வற்புறுத்தியதால், வேறு வழி இன்றி நாடி படிக்க ஆரம்பித்தேன்.

சித்தன் அருள்............. தொடரும்!

5 comments:

  1. Ji please give ur contact no or email

    ReplyDelete
  2. Thanks for the visit. Hope the incidents gave an instinct to ask my email id. Here it is sgnkpk@gmail.com

    Namaskaram.

    ReplyDelete
  3. ayya please give your address or mobile number..
    i want to see you.. pls dont avoid me.

    ReplyDelete
  4. i am not avoiding anyone. Just send in your thoughts to my email id. i will certainly reply. if you are thinking about "Naadi" i am sorry. I don't have it. I just shared some incidents shared by a great soul with you all.

    ReplyDelete