​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 22 March 2011

சித்தன் அருள் - 28

"எத்தனையோ அற்புதங்களை அகத்தியர் ஜீவநாடி மூலம் செய்து காட்டுகிறார் என்று சொல்லுகிறார்கள்.எனெக்கென்னவோ சிறிதும் நம்பிக்கை தோன்றவில்லை.  இருந்தாலும் எதோ ஒரு நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.  எனது சந்தேகத்தை அகத்தியர் போக்குவாரா?" என்ற பீடிகையுடன் ஒருவர் என்  முன்னால் வந்தமர்ந்தார்.

"உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டு விடுங்கள்.  எதற்காக உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்க வேண்டும்" என்றேன்.

எனக்கு வந்திருக்கும் வியாதி என்ன தெரியுமா? கான்சர்!ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.அதற்குரிய மருத்துவச் சிகிச்சையை செய்து கொண்டு வருகிறேன்.நான் இந்த நோயிலிருந்து குணமாகி விடுவேனா?  இதை அகத்தியரிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?" என்று ஒரு அதிர்ச்சியை தந்தார்.

இதைப்பற்றி அகத்தியர் அருள்வாக்கு தருவார் என்று தான் நம்புகிறேன். ஆனால் உங்களுக்கு அகத்தியர் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டுமே என்றேன்.

"இல்லை என்றால் இவ்வளவு தூரம் அகத்தியரை தேடி வந்திருக்க மாட்டேனே" என்றார் சட்டென்று.

எனக்காக இப்படிச் சொல்ல வேண்டாம்,நான் அவருடைய தூதன். அவ்வளவுதான்.அவர் என்ன சொல்கிறாரோ அதை நான் அப்படியே சொல்கிறேன்.  நம்பிக்கை இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள், என்றேன்.

இன்னொன்று. எனக்குப் பரிகாரம், பிரார்த்தனை என்று எதிலேயும் சிறிதும் நம்பிக்கை இல்லை. அப்படிச் சொன்னால் என்னால் அதைச் செய்ய முடியாது. அதே சமயம் எனக்குள்ள நோய் குணமாக வேண்டும் என்று கட்டளை இட்டார்.

இந்த வார்த்தைகள் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கியது. ஜீவ நாடியில் என்ன சொல்லப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது.ஏதேனும் பரிகாரம், பிரார்த்தனை என்று வந்துவிட்டால் அதை இந்த நபர் செய்யாமல் போனால், அதன் விளைவு வேறு விதமாக இருக்குமே என்ற கவலையும் ஏற்பட்டது. மருந்தும் சாப்பிடமாட்டேன், வியாதியும் குணமாக வேண்டும். இதற்கு அகத்தியர் தன அபூர்வ சக்தியை பயன்படுத்த வேண்டும், என்று விரும்பினார் அவர்.

"பகவானிடம் உங்கள் கோரிக்கையை வைக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு ஜீவா நாடியைப் புரட்டினேன். அதில் சம்பந்தமில்லாத சில வார்த்தைகள் வந்தது.

"ராமர் வேஷம் போட்டவனெல்லாம் இப்பொழுது ஆட்சியைப் பிடிக்கக் குழுவை கூட்டி பேசுகிறான். இன்னொரு கூட்டமோ, பொதுமக்களின் வரிப்பணத்தை கோடி கொடியைக் கொள்ளை அடிக்க அயோத்தியாபுரியில் சோம பானம், சுரா பானம் உண்டு, கைஎழுத்திடுகிறது. நாட்டில் பொய் தான் ஆட்சி செய்கிறது. ரத்தம் நன்றாக இருக்கிறவன் எல்லாம், இல்லாத வியாதியைச் சொல்லி உடன் பிறந்தவர்களைப் பயமுறுத்தி, சொத்தைப் பிடுங்குகிறான். பணம் என்ன பாடு படுத்துகிறது பார்" என்று சொன்னார்.

ஒரு வார்த்தை கூட என் எதிரில் இருப்பவருக்காக வரவில்லை என்றே எனக்கு தோன்றியது. எத்தனை தடவை கட்டை மூடி பின்பு பிரார்த்தனை செய்து திறந்தாலும் ஜீவ நாடியில் மேற் சொன்ன அதே வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே வரவில்லை. எனக்கும் அந்த வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் விளங்கவில்லை.  அப்படியே மூடி வைத்து விட்டேன்.

"சார் உங்களுக்காக கட்டைப் பிரித்துப் படித்தேன்.  எந்த செய்தியும் வரவில்லை.  ஒரு வேலை இன்றைக்கு நாள் சரியாக இல்லை என எண்ணுகிறேன்.  பின்னொரு நாள் வாருங்களேன்" என்று மெதுவாக சொன்னேன்.

"எனக்கு தெரியும் சார். இதெல்லாம் இப்படித்தான் என்று. என்ன, நான்தான் கண்டிஷன் போட்டேனே. பரிகாரம் பண்ண மாட்டேன், பிரார்த்தனை செய்ய மாட்டேன்னு.பின் எப்படி அகத்தியர் பதில் சொல்வார்?நீங்களே ஆளைப் பார்த்து குருட்டாம் போக்குல சொல்ற வார்த்தை சார் என்று வார்த்தைகளை அனலாகக் கக்கிவிட்டு விருட்டென்று எழுந்து போய் விட்டார்.

அந்த நபர் எழுந்து சென்ற பின்னர், எதற்காக சம்பந்தம் இல்லாமல் அகத்தியர் வார்த்தைகளை சொன்னார்? என்று குழம்பிக் கொண்டிருந்தேன். எனது அருகில் இருந்த சில நண்பர்களும் அகத்தியர் வாக்கினை பலவிதத்தில் புரட்டிப் பார்த்தார்கள்.  சரியான விடை கிடைக்கவில்லை.

சில மாதங்கள் கழிந்து.......

மறுபடியும் அந்த நபர் என்னைத்தேடி வந்தார்.  என் மனதில் அவரைப் பற்றி ஒரு தாழ்வான எண்ணம் தான் முதலில் ஏற்ப்பட்டது.எதற்காக நம்பிக்கை இல்லாமல் இப்போதும் அகத்தியரைத் தேடி வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  இருந்தாலும் இன்னொரு தடவை அந்த நபருக்காக ஜீவ நாடி படித்தேன்.

அன்றைய தினம் அகத்தியன் சொன்னது இது தான்.

திரைப்படத்தில் ராமர் வேஷம் போட்ட என்.டி.ராமராவ் தெலுங்குதேசம் என்னும் புதிய கட்சசியை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார். அதைத்தான் நாசூக்காக குறிப்பிட்டுருந்தேன். அகத்தியன் சொன்னது பொய்யா? மெய்யா? என்பதை நாளை காலைச் செய்திதாளில் முதல் பக்கத்திலே வெளிவரும்.

பொதுமக்களின் வரிப்பணத்தை தங்களுக்குப் பங்கு போட்டு பிரித்திட ஆளும் கட்ச்சியும், எதிர் கட்ச்சியும் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டதும் அன்றைக்குத்தான். இல்லாத திட்டத்தை இருப்பது போல் காட்டி, கோடி கோடியாக  பணத்தைச் சுருட்ட மது உண்டு திட்டம் போட்டனர். ஆனால் இது அப்போதே சில நல்லோரால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. அதையும் இப்போது சொல்கிறேன்.

மூன்றாவதாக என் எதிரே அமர்ந்திருக்கும் இந்த நபரை பற்றி நேற்றைக்கே கூறினேன்.  அதை அகத்தியன் மைந்தனான நீ உட்பட யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

சொத்துக்களை பிரித்து தானே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையினால் தனக்கு ரத்தப்புற்று நோய் இருப்பதாகச் சொல்லி, பொய்யால்  உடன் பிறந்தோரை அழ வைத்து, அந்த இறக்கக் குணத்தை வியாபாரமாக்க  திட்டம் போட்டவன் இவன்.

இவன் சொல்வது அத்தனையும் பொய்.  இவனுக்கு கான்சர் நோய் கிடையாது.  இல்லாத வியாதியைச் சொல்லி உடன் பிறந்தோரை ஏமாற்றி சொத்துக்களை குறுக்கு வழியில் பிடுங்கி, தனது காதலியின் பெயருக்கு மாற்றிவிட திட்டம் போடுகிற இவன், அகத்தியனைப் பழிப்பது என்ன நியாயம்?" என்ற ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை. எதையோ சொல்ல வாயெடுத்தார்.  ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

மறுபடியும் ஜீவ நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"இறைவனே இல்லை என்று சொல்லும் இனத்தைச் சேர்ந்தவன் இவன். அகத்தியனை சோதிக்கவே அனுப்பப்பட்ட நபர் இவன்.இல்லையெனில்  கண்டமாலை எனும் கொடிய நோய் இருப்பதாக அகத்தியனிடமே பொய்  சொல்வானா? ஆனால் விதியின் செயல் என்ன தெரியுமா. இன்னும் சில மாதங்களில் அதுபோன்ற உயிர்க் கொல்லி நோயால் இவன் அவஸ்தைப் படப் போகிறான்.  அப்பொழுது இவன் அகத்தியனை நோக்கித்தான் வருவான்" என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார் அகத்தியர்.

அந்த நபர் இந்த வார்த்தைகளைக் கேட்டு பயப்படுவார், அல்லது தவறுக்கு வருந்துவார் அல்லது பதறி மன்னிப்பு கேட்பர் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவரே இந்த அருள் வாக்கைப் பொய்யாக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விடுத்துப் போனார்.

அவருடைய பேச்சு, செயல், நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.  ஒரு வேளை அவர் சொல்வது உண்மை தானா? நாம் தான் தவறாக ஏதேனும் சொல்லி விட்டோமா என்று கூட கதிகலங்கிப் போனேன்.

எது நடந்தாலும் நடக்கட்டும், எல்லாமே அகத்தியருக்கே சமர்ப்பணம் என்று அப்படியே விட்டு விட்டேன்.  பின்னர் அந்த அவரும் என்னைத் தேடி வரவில்லை.  சரியாக மூன்று மாதங்கள் கழிந்தது.

ஒருநாள் காலைப் பொழுதில் திடீரென்று அந்த நபர் வந்தார்.அவரை கைத்தாங்கலாக மூன்று பேர் பிடித்துக் கொண்டு, கஷ்டப்பட்டு என் முன்பு கொண்டு நிறுத்தினர்.

"என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"பக்கவாதம் வந்து கை, ஒரு கால் செயல் படவில்லை.  வாயும் கோணிப் போய் விட்டது.  இவர் உயிர் பிழைத்ததே புண்ணியம்" என்று வந்தவர்களில் ஒருவர் சொன்னார். மேலும் அவர் கூறும் பொது, உங்களிடம் அழைத்துச் செல்லுமாறு இவர் கட்டாயப்படுத்தினார். அதன் பேரில், உங்களிடம் இவரை அழைத்துக் கொண்டு வந்தோம். அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை என்று இவரே தன் இடது கையால் எழுதி இருக்கிறார். பாருங்கள்" என்று நாற்ப்பது பக்க நோட்டைக் காண்பித்தார்.

"நான் என்ன செய்ய வேண்டும்" என்றேன்.

அகத்தியரிடம் இவருக்ககப் பிரார்த்தனை செய்து மன்னிப்பு கேட்டுத் தாருங்கள்.  இவர் எந்த சொத்தை அடைய கான்சர் என்று வேஷம் போட்டாரோ, அந்த கான்சரின் ஆரம்ப கட்டமாக வயிற்றில் கட்டி உருவாகி இருக்கிறது. போதா குறைக்கு திடீர் பக்கவாதமும் வந்து விட்டது. அகத்தியரை முழுமையாக நம்பி வந்திருக்கிறார். அவருக்கு உயிர் பிச்சை கொடுக்க அகத்தியர் முன் வரவேண்டும்" என்று வந்திருந்தோர் சொல்ல......

உடல் நிலை பாதிக்கப்பட்டவர் "ஆமாம்! ஆமாம்!" என்று தலையாட்டியபடி ஒரு கையால் ஜீவ நாடிக்கு நமஸ்காரம் செய்தார்.

மனது கேட்கவில்லை.

அவருக்காக ஜீவ நாடியை படித்தேன்.

"சொத்தைச் சேர்க்க ஆசை படுவதைவிட புண்ணியத்தைச் சேர்க்க ஆசைப் பட்டிருந்தால் இவனுக்கு இந்த தொல்லை வந்திருக்கதே" என்று அருள் வாக்கு சொன்ன அகத்தியர், சதுரகிரி மலையில் உள்ள  ஒரு மூலிகையைக் குறிப்பிட்டு, அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்ற பக்குவத்தையும் சொன்னார்"

அதன் பலனாய்..........

அந்த நபர், கான்சர், பக்கவாதம் இந்த நோயிலிருந்தும் நீங்கி முப்பது ஆண்டுகாலமாக ஆரோக்கியமாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1 comment: