​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 March 2012

சித்தன் அருள் - 62

அகத்தியரின் ஜீவநாடி படிக்கும் முன்பு எனக்குச் செய்வினையில் சிறிதும் நம்பிக்கை இல்லை.  நாம் செய்த வினைதான் "செய்வினை", இதை பணம் பறிப்பதற்காக சிலர் அப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி நமது அறிவைக் கெடுக்கிறார்கள்.  எனவே இதை நம்பாதீர்கள் என்று வெளிப்படையாகவே நிறையப் பேரிடம் சொல்லித் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.

பிரார்த்தனையில் ஜெயிக்க முடியாதது எதுவும் இல்லை என்பது என்னுடைய வாதம்.  கேரளாவில் தான் அதர்வண வேதம் பலமாக இருக்கிறது.  எனவே அங்கு வேண்டுமானால் இதனை நம்பலாம்.  நாம் நம்பத்தேவை இல்லை.

ஏன் என்றால், நான்கு வகை வேதங்களில் ருக், யசுர், சாம வேதத்திற்கு தமிழகத்தில் மரியாதை இருக்கிறது.  அதர்வண வேதம் மந்திர சக்தி நிறைந்தது.  இருப்பினும் அதர்வண வேதம் தழுவுவோர் தமிழகத்தில் பெரும்பாலும் யாருமில்லை.  இரண்டாவது, தமிழ் நாட்டில் அதர்வண வேதம் பிரபலமானதும் இல்லை.  எனவே செய்வினை, மாந்தரிகம், ஏவல், பில்லி, சூன்யம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.  ஒருவேளை கேரளாவின் எல்லைக்கு அருகிலிருக்கும் ஊர்மக்களிடம் இத்தகைய எண்ணம் நம்பிக்கையாக தோன்றி மரமாக வளர்ந்திருக்கலாம்.

இப்படி ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்று ஓர் நாள் என் நண்பர் கேட்டு "இது பற்றி மாமுனிவர் அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்களேன்" என்றார்.

முதலில் இதற்க்கெல்லாம் அகஸ்தியர் தன ஜீவநாடியின் மூலம் பதில் சொல்வாரா என்று எனக்குப் பயம், இருந்தாலும் முறைப்படி பிரார்த்தித்து அகஸ்தியரிடம் கேட்ட பொழுது

"பொறுத்திருந்து பார்.  இன்னும் இரண்டு தினம் பின்பு யாமே அவற்றை விளக்கமாக அளிப்போம்" என்று நல்வாக்கு அளித்தார்.

இது எனக்கு சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இரண்டு நாட்கள் கழிந்தது.  மறுநாள் காலை பதினோரு மணி அளவில், மிகவும் பிரபலமாக விளங்கிய ஒரு சினிமா கம்பனி முதலாளி என்னிடம் "நாடி படிக்க வரலாமா?" என்று கேட்டனுப்ப நானும் அகஸ்தியரின் உத்திரவைக் கேட்டு அவரை வரச் சொன்னேன்.

மிகப் பெரிய கோடீஸ்வரர் என்றாலும் மிகவும் பக்தியுடன் வந்திருந்தார்.  அவரது முகத்தில் பணக்காரக் களை பளிச்சிட்டது.  அதே சமயம் அவரது விழிகளில் கவலை ரேகை ஓடியதையும் கவனித்தேன்.

தொழில் பிரச்சனையாய் இருக்கும் என்று என்னுடைய மனம் சொன்னது.  அகத்தியரின் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.  "ஒளிமறை விண்மீன் சதயம் உதித்திட்ட வேளையில்" என்று ஆரம்பித்த அதன் சாராம்சம் இது தான்.

உன்னுடைய மகள் பர்வதகுமாரியின் பெயரைச் சூடியவள்.  வெளிநாட்டு மொழியில் சிறந்த கல்வி அறிவுடையவர்.  பேச்சிலும், எழுத்திலும் பலரை மிஞ்சிப் பதக்கம் பல பெற்றவள்.  பால் மணம் மாறாத அந்தக் குழந்தை, பள்ளிக்குச் சற்று தொலைவில் இருக்கும் படிப்பறிவில்லாத கீழ்குடிமகன் தன் வசியம் கொண்டு வர எத்தனிக்கிறான்.

ஏதுமறியாத இந்தக் குழந்தை அந்தக் கீழ்மகன் வைத்து நடத்தும் சிறு பெட்டிக்கடையில் சிறு சிறு தின் பண்டம் வாங்கத் தோழிகளோடு போவதுண்டு.  பணமும், அதிகாரமும், புகழும் மிக்க குடும்பத்தில் பிறந்த உன் மகளை கரம் பிடித்து உல்லாசமாக வாழ நினைக்கிறான்.

நாடி பார்க்கும் இந்த வேளையில் அந்த நயவஞ்சகன், பலராமர் பிறந்திட்ட மண் நகருக்குச் சென்று அதர்வண வேதத்தின் துஷ்ப்ரயோகத்தை ஒரு மிட்டாய் மூலம் பெறப் பொல்லா வழியில் சென்று கொண்டிருக்கிறான்.  நீ செய்த முன் ஜென்ம புண்ணியத்தாலும் உன் மனைவி தினம் தினம் என்னப்பன் முருகப் பெருமானை ஐந்து முக விளக்கேற்றி வணங்குவதாலும் உந்தன் மகள் அந்தப் பொல்லா வலையில் சிக்காமலிருக்க நல்ல நேரத்தில் நீ இங்கு வந்தாய்.  இனியும் ஏழு நாட்கள் உந்தன் மகளை அந்த கொடியவன் நிழல் படாவண்ணம் காத்திரு.  பின்னர் அவன் செய்த அத்தனையும் வீணாகி, பின்னர் அதுவே அவனுக்கு நற்பாடம் கற்றுக் கொடுக்கும்.  உடனே சென்று முருகப் பெருமானுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்துவிட்டு அன்னவன் காலடியில் இருக்கும் எலுமிச்சை பழத்தினை எடுத்து வீட்டின் பூசை அறையில் வைத்திரு.  இனி அச்சப்பட தேவை இல்லை.  நிம்மதியாக உறங்கலாம்" என்று விவரமாக எடுத்துரைத்தார்.

இதை படிக்கப் படிக்க அந்த பெருமகனாரின் முகம் பயத்தால் வியர்த்துக் கொட்டியது.  பேச்சும் சரியாக வரவில்லை.  கைகளில் சிறிது நடுக்கமும் ஏற்ப்பட்டதைக் கவனித்தேன்.

"நான் வந்ததும் என் பெண்ணை பற்றி கேட்கத்தான்.  ஆனால் இது இத்தனை சீரியஸ் ஆகா இருக்கும் என்று எனக்குத் தெரியாது" என்றவர் மேற்கொண்டு சில விஷயங்களைச் சொல்லி முடித்தார்.

அவரை தடுத்து நிறுத்தி "முதலில் குறுமாமுனி" சொன்னபடி முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.  கெடுதல் எதுவும் நடக்காது என்று அகஸ்தியரே சொல்லிவிட்டதால், அவரே உங்கள் குழந்தைக்கு மறைமுகமாக நிழலாக இருந்து பாதுகாப்புத் தருவார்.  பின்னால் பேசுவோம்" என்று அனுப்பிவைத்தேன்.  இரட்டிப்பு மகிழ்ச்சியோடும் எதிர் கால நம்பிக்கையோடும் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

பத்து நாள் கழிந்திருக்கும்.

அந்தப் பெரியவர் கை நிறையப் பூ, பழத்தோடு முக மலர்ச்சியாக என்னைத் தேடி வந்தார்.  கூடவே அவரது மனைவியும், பால் மணம் மாறாத அவர் மகளும் மகிழ்ச்சியோடு வந்தனர்.

"அகஸ்தியர் எனக்கு நல் வழி காட்டினார்" என்று சொல்லிவிட்டு நடந்த கதையை எனக்கு விளக்கினார்.

"என் குழந்தை நன்றாகத்தான் இருந்தாள்.  திடிரென்று அவள் எதையோ நினைத்துப் பயப்படுவதாக என் மனைவி என்னிடம் சொன்ன போது, முதலில் நம்பவில்லை.  அவளுக்கு தெரியாமல் அவளது தோழிகளிடம் விசாரித்த பொழுது பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு பெட்டிக் கடை நடத்துபவன் இவளை விகல்பமாக பார்த்து பேசுவது நடந்திருக்கிறது. படிப்பறிவில்லாத அவனது வேகம், சில சமயம் தாறுமாறாகவும் பேச வைத்துப் பார்த்தால், தன் தோழிகளிடம் சொல்லிக் கவலைப் பட்டிருக்கிறாள்.

என் மனைவி, இயல்பாகவே கெட்டிக்காரி.  தன் மகளது பயத்தைக் கண்டு அவளிடம் காரணம் கேட்க, என் மகள் இதப் பற்றிக் கேட்டிருக்கிறாள்.  அவள் மழுப்பிவிட்டதால், அவள் தோழிகளிடம் கேட்டு என் மனைவி என்னிடம் சொன்னாள்.  என் குழந்தை ஏன் பயப்படுகிறாள்? என்பதைக் கேட்கவே அன்றைக்கு நான் உங்களைத் தேடி வந்தேன்" என்று முடித்தார்.

'சரி.  இப்பொழுது எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதா?" என்று கேட்டேன்.

"நீங்கள் சொன்னபடி உடனே முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து அங்கிருந்து ஒரு எலுமிச்சம்பழம் எடுத்து என் பூசை அறையில் வைத்தேன்.  பின்பு வெளியூர் பயணமாக என் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அறுபடை வீடு சென்று விட்டு நேற்று இரவு தான் திரும்பினேன்.  அதற்குள் அந்தப் பையன் தன் கடையை மூடி விட்டுக் கேரளாவுக்கே சென்று விட்டான் என்கிறார்கள்.  வேறு சிலரோ அவன் விபத்தில் மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் இருக்கிறான் என்கிறார்கள்.  எது எப்படியோ இன்னும் பத்து நாளில் இப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றி விடுவேன்" என்றார் அவர்.

"அதெல்லாம் வேண்டாம்.  இனி அந்தப் பையன் உங்கள் பெண் பக்கம் திரும்பவே மாட்டான்.  குழந்தையின் படிப்பை அவள் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள். மற்றவற்றை உங்களது பிரார்த்தனையும் காப்பாற்றும், அகஸ்தியரும் பார்த்துக் கொள்வார்" என்று தைரியமாக சொன்னேன்.

அப்பொழுது "இந்தச் செய்வினை எல்லாம் உண்டா?" என்று அவரே சந்தேகப்பட்டுக் கேட்டார்.

"இதற்கு நான் பதில் சொல்ல முடியாது.  அகஸ்தியரிடமே கேட்டுவிடுவோம்" என்று நான் ஓலைச்சுவடியை எடுத்தேன்.  முறைப்படி பிரார்த்தனை செய்துவிட்டுச் செய்வினை என்பது உண்மையா? அது எத்தகைய வலிமை உடையது?  இது விதியை மாற்றிவிடுமா? இதை நம்பலாமா?  யார் யாருக்கெல்லாம் எப்போது இப்படிப்பட்ட கஷ்டம் வரும்? அதை தடுப்பது எப்படி?" மனதில் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டே படிக்க ஆரம்பித்தேன்.

"முதலில் இருக்கின்ற ஒளி விளக்கை எல்லாம் அணைத்துவிடு.  நல்லது சொல்லும் பொழுது மட்டும் விளக்கை ஏற்று.  அதுவரை யாம் கூறுவதைக் கவனமாகக் கேள்" என்றார் அகஸ்தியர்.

அவர் சொன்ன விளக்கங்கள் என்னை மட்டுமல்லாது அங்கிருந்த மற்றவர்களையும் வியக்க வைத்தது!

3 comments:

  1. ஐயா, உங்கள் முகவரி கொடுக்க முடியுமா? sungayu@gmail.com

    ReplyDelete
  2. பில்லி சூன்யம் உன்மையா

    ReplyDelete
  3. உங்கள் போன் நம்பர் வேண்டும்..ஐயா

    ReplyDelete