​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 April 2012

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!

  1. காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.
  2. பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.
  3. ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.
  4. குளித்தபின் உணவு உண்ணுங்கள்.  பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.
  5. பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.
  6. வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.  ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.
  7. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.
  8. மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.
  9. பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
  10. கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.
  11. மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.
  12. பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி
  13. வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.
  14. லுங்கி, கைலி அணியாதீர்கள்.  வறுமை வாட்டும்.  வேஷ்டியே நல்லது.  நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.
  15. வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.  இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.
  16. புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.
  17. அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.
  18. மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.
  19. குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.



அகத்தியரின் சில அறிவுரைகள்!


  1. உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது.  அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல்.  கணவன் மனைவி பிரிய வேண்டி வரும்.
  2. சாலி கிராமத்தில் பல வகைகள் உண்டு.  இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாளிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை.  அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது.  அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும்.  ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்ஹாரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்ஹர் சாளிக்ராமமாக மாறியது.  அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டி சுவராக்கி விடும்.  கெட்ட ஆவிகள் கொடிகட்டி பரக்க ஆரம்பிக்கும்.
  3. ஒரு மனிதனுக்கு ஜாதகம் என்பது, எப்போது கருவாக உருவாகிறானோ அப்பொழுதே ஜாதகம் கணிக்க பட்டாயிற்று.  அது தான் உண்மையான ஜாதகம்.  ஆனால், இதை பிரம்மாவும், சித்தர்களும் தான் அறிவார்கள்.  பிறந்த நேரப்படி ஜாதகம் என்பது மனிதர்கள் எழுதுவது.  அது உண்மையான ஜாதகம் அல்ல.
  4. ஒரு திருமணத்தில் தாலி என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது.  அதை செய்யும் முறை ஒன்று உண்டு.  வீட்டிற்கு பொற்கொல்லரை அழைத்து வந்து, ஒரு அருமையான நன்னாளில், சந்திராஷ்டமம் இல்லாத நாளில், அஷ்டமி, நவமியைத் தவிர்த்து விடியற்காலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில் தங்கத்தை உருக்கி, இதற்கு பிறகே திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.
  5. இந்த அவசர கால உலகத்தில் அனைவரும் கடையில் சென்று தயார் படுத்தப்பட்ட தாலியை வாங்குகிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று சொல்லி போவார்கள்.  அந்த நாள் அந்த கல்யாண தம்பதியர் இருவருக்கும் உகந்த நாளா என்று பார்க்கவேண்டும்.  கடையில் நல்ல நாள் பார்த்து வாங்கிய தாலியை பூசையில் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.  அல்லது கோவிலில் கொடுத்து பூசை செய்ய வேண்டும்.  அப்படி செய்தால், ஏதேனும் தோஷம் இருந்தால் அது விலகிவிடும்.
  6. நாம் அறியாமலே சில தவறுகளும் நடக்கும்.  கவனமாக இருக்கவேண்டும்.  திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்கும் அந்தணர், அதைப் புனிதப் பொருளாக எண்ணி, கையில் வைத்து கிழக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை சொல்லிய பின்பு, மணமகனிடம் கொடுக்கவேண்டும்.  தாலி தொலைந்து விடக் கூடாது என்பதற்காக அதை அந்தணர் இடுப்பில் சொருகி கொள்ளக் கூடாது.  உண்மையில், புனிதமான பொருட்களை மார்புக்கு கீழே வைத்துக் கொள்ளக்கூடாது, என்பது விதி. இடுப்புக்கு கீழே சொருகிவிடும் தாலியில், வியர்வை படும் சாத்தியங்கள் அதிகம்.  வியர்வை ஒளிக்கற்றை தாலியின் புனிதத்தை கெடுத்து விடும்.


சித்தன் அருள் - 69

"ரணமண்டலத்தில் மலையொன்று இருக்கிறது.  மேலே ஏறிப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று சொன்னவர் ராகவேந்திர சுவாமிகள் தான் என்று நண்பர் சொன்னது எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

சாதாரணமாக நண்பர் அப்படிச் சட்டென்று எதுவும் சொல்ல மாட்டார்.  அவரது கண்ணிற்கு ஸ்ரீராகவேந்திரர் - அர்ச்சகர் ரூபத்தில் தரிசனம் கொடுத்திருக்கிறார்.  சில மணி நேரங்களுக்கு முன்பு பாலகனாய்ப் பேசி, ஸ்ரீ ராகவேந்திரறாய் மாறி அனுக்ரகம் தந்து, செடி, கொடிகளுக்கிடையில் மறைந்து கண்ணாம்பூச்சி கட்டியவர் இப்பொழுது அர்ச்சகராய்ப் பக்கத்தில் வந்து அனுமன் பிரசாதம் கொடுத்து, அசரீரியாய் ரண மண்டலத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்றால் அந்த மகானை அருகில் நின்று தரிசனம் செய்யும் பாக்கியம் எங்கள் இருவருக்கும் கிடைத்தது,  நாங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியம் தான்.

அப்படிப்பட்டவரை மறுபடியும் தரிசனம் செய்யத் திரும்பிப் பார்த்தோம்.  தேடி பார்த்தோம்.  அங்கு நின்று கொண்டிருந்த பலரிடம் அவரைப் பற்றி விசாரித்துப் பார்த்தோம்.  ஏன் அங்கு பூசை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்களிடம் கூடக் கேட்டுப் பார்த்தோம்.

அவர்கள் சொன்ன பதில் எங்களைத் திக்குமுக்காட வைத்தது.

"எங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகர்கள் இல்லை.  நீங்கள் கையில் வைத்திருக்கும் பிரசாதம் இங்குள்ளதுதான்.  ஆனால் இனிமேல் தான் நெய்வேத்யம் செய்ய வேண்டும்.  அதற்குள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் எங்களுக்கு ஆச்சரியம்.  நீங்கள் சொல்கின்ற நபர் என்று யாரும் இந்தக் கோவிலில் இல்லை.  எங்கள் கண்களுக்குத் தட்டுப்படவும் இல்லை."

இதைக் கேட்டு அதிர்ந்து போனோம்.

பொதுவாக இப்படிப்பட்ட அற்புதங்களைச் சினிமாவில்தான் பார்க்கலாம்.  கனவில் வரலாம்.  ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றால், சத்தியமாக ஒருவர் கூட நம்பவே மாட்டார்கள்.  ஸ்ரீ ராகவேந்திரரின் பரிபூரண கடாட்சம் நிறைய மகான்களுக்குக் கிட்டியிருக்கிறது.  அருள் கிட்டியிருக்கிறது.  ஏகப்பட்ட நன்மைகள் கிடைத்திருக்கிறது.  இது அவர் ஜீவனாக இருந்த சமயத்தில்.

ஆனால்,

இப்பொழுது எங்களுக்குக் கிட்டியிருக்கிறது.  இந்த சந்தோஷத்தை எங்களிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது.

அந்த சமயம் எங்கள் கையில் கிடைத்த பிரசாதம், ஸ்ரீ ராகவேந்திரரே கொடுத்த பிரசாதம் என்று தெரிந்ததும் அதை வலுக்கட்டாயமாக ஆவலோடு அங்கிருந்த அத்தனை பேர்களும் உரிமையோடு எடுத்துக் கொண்டார்கள்.  இது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது.

ஆனால், எனக்கோ நண்பருக்கோ மிச்சம் மீதி எதுவும் இல்லை.  ஊருக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கவே முடியாமல் போயிற்று.

ஸ்ரீ ராகவேந்திரரின் அற்புத தரிசன நினைவைச் சுமந்து கொண்டு துங்கபத்திரா நதியைக் கடந்து இக்கரைக்கு வந்து சேர்ந்தோம்.  சந்தோஷமும், மன நிறைவும் எங்களுக்குப் புத்துணர்வைத் தந்தது.  இருக்காதா பின்னே!

நண்பரிடம், "என்னுடன் ரணமண்டல மலைக்கு வந்துவிட்டுப் போகலாமே" என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன்.  வியாபார நிமித்தம் அவசர நிலை காரணமாக ரண மண்டல மலைக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஸ்ரீ ராகவேந்திரரே நேரில் சொன்னாலும் அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லை என்ற வருத்தம் நண்பருக்கு இருக்கத்தான் செய்தது.  ஆனாலும் பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே.

திடீரென்று நான் ரண மண்டலம் செல்ல வேண்டியிருந்ததால் ஏற்கனவே அன்றிரவு சென்னைக்கு திரும்புவதாக இருந்த நண்பர், என் பொருட்டு மறுநாள் விடியற்காலையில் என்னை ரண மண்டலத்தில் காரில் இறக்கி விட்டு சென்னைக்கு பயணத்தைத் தொடர்வதாக முடிவு செய்தார்.

இதற்கும் இன்னொரு காரணம் இருந்தது.

நள்ளிரவில் ரண மண்டலத்திர்க்குச் சென்றால் தங்குவதர்க்குச் சௌகர்யம் இருக்குமோ இருக்காதோ என்ற பயம்.  இரண்டாவதாக மொழி தெரியாது.  எனவேதான் எனக்காக நண்பர் மறுநாள் காலையில் கிளம்ப முன் வந்தார்.

முன்னிரவு நேரம்.

ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு ஒரு தடவை ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று கிளம்பினோம்.  அன்றைக்கு ஏகப்பட்ட கூட்டம்.  தங்கத் தேர் பவனி வேறு.  அதோடு மந்திராலய மடத்துப் பிரதான சுவாமியும் அங்கு வந்திருந்தார்.

கூட்டத்தின் கடைசியில் நாங்கள் நின்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எங்கள் பக்கம் திரும்பிய சுவாமிஜி என்னை அழைத்தார்.

"இன்று இரவு நீங்கள் இருவரும் என்னுடன் சுவாமியின் தீர்த்தப் பிரசாதம் சாப்பிட வேண்டும்.  நேராக வந்து விடுங்கள்" என்று சொல்லி விட்டுச் சிரித்தபடி ஆசிர்வாதம் கொடுத்தவர் நேராக தன் இருப்பிடம் சென்று விட்டார்.

இந்தத் திடீர் அழைப்பைக் கேட்டு, இது கனவா - நனவா? இதுவரை மந்திராலய மடத்து சுவாமியை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.  நமஸ்காரமும் செய்ததில்லை.  இங்கு வந்து மூன்று நாளாகிறது. என்னை யாரென்று அவருக்குத் தெரியாது. அவர் இருப்பிடத்திற்கும் நான் சென்றதும் இல்லை.  இப்படியிருக்க அந்த சுவாமிஜியுடன் சேர்ந்து இரவு போஜனம் அருந்துகின்ற பாக்கியம் எங்கள் இருவருக்கும் எப்படி ஏற்பட்டது?  இது அவ்வளவு எளிதில் கிடைக்கிற பாக்கியமா? என்று ஒரு நிமிடம் திணறிப் போய் விட்டேன்.

என்னைத்தான் கூப்பிட்டாரா இல்லை என் பின்னால் நின்று கொண்டிருந்த வேறு யாரையாவது கூப்பிட்டாரா?  நான் தவறாக எண்ணிக் கொண்டேனா? என்று கூட எண்ணிப் பார்த்தேன்.  அப்படியேதும் இல்லை என்பதைச் சற்று நேரத்தில் மடத்திலிருந்து வந்த ஊழியர்கள் உறுதி செய்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் "மூலராமரின்" பூசை முடிந்த பின்னர், எனக்கும் நண்பருக்கும் மந்திராலயா சுவாமிஜியின் பக்கத்தில் அமர்ந்து அவருடன் ஸ்ரீ ராகவேந்திரரின் தீர்த்தப் பிரசாதம் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது.  உண்மையில் இந்தப் பாக்கியம் ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் இல்லாமல் எங்களுக்குக் கிடைத்திருக்காது.

சாப்பிட்டு முடித்த பின்னர், சுவாமியே எங்களை அழைத்து மந்த்ராலயா மடத்துச் சம்பிரதாய சிவப்பு வஸ்திரம் அணிவித்து, அட்சதை தூவி ஆசிர்வதித்துச் சொன்னார்.

"எனகென்னவோ, உங்கள் இருவருக்கும் ராகவேந்திரர் பிரசாதத்தைக் கொடுக்க வேண்டுமென்று ஏதோ ஒரு உத்திரவு வந்தது போல் தோன்றிற்று. அதன்படியே செய்தேன் அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.

அப்போதுகூட சுவாமிஜியிடம் என்னைப் பற்றியோ அகஸ்தியர் ஜீவநாடியைப் பற்றியோ பிற்பகலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றியோ எதுவும் சொல்லவில்லை.  ஸ்வாமிஜியும் எதுவும் கேட்கவில்லை என்பதுதான் விசேஷம்.

மறுநாள் காலையில்,

நண்பர் காரில் நானும் அவரும் ரணமண்டலம் நோக்கிப் புறப்பட்டோம்.

"அகஸ்தியர் அருளால் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் கிடைத்தது.  ரண மண்டலத்தில் வேறு என்ன என்ன தரிசனம் கிடைக்கப் போகிறதோ! எது இருந்தாலும் என்னையும் நினைத்துக் கொள்" என்றார் ஏக்கம் கலந்த உரிமையுடன்.

"ஏன், நீயும் வாயேன் இரண்டும் பேருமே சேர்ந்து அனுபவிப்பது" என்றேன்.  நண்பருக்கு ஆசைதான்.  ஆனாலும் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதால் என்னை மட்டும் ரண மண்டலத்தில் இறக்கிவிட்டு விடை பெற்றுக் கொண்டான்.

ரண மண்டலம் மலை கண்ணுக்கு தெரிந்தது. அந்த மலைக்குச் செல்லும், ஒற்றையடிப் பாதையும் தெரியவே, அகஸ்தியரைத் த்யானித்து அனுமனை வணங்கி நடக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது காலை மணி ஒன்பது இருக்கும்.

என்னைத்தவிர அந்த மலைமேல் ஏறுபவர்கள் கண்ணுக்குத் தெரிந்து ஒருவர் கூட இல்லை.  எதிரே மலையிலிருந்து இறங்கி வந்த ஒரு சிலர் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டு தங்களுக்குள் மௌன பாஷையால் ஏதோ சிலாகித்துக் கொண்டனர்.

அவர்கள் சாதாரண கிராமவாசிகள் என்பதால் "மலைக்குச் செல்ல இது சரியான வழியா" என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அப்படியே நான் கேட்டாலும் அவர்கள் பதில் சொல்வார்களா? அப்படியே பதில் சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு இருக்குமா? என்பதும் சந்தேகம் தான்.  இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி என்னைக் காப்பாற்றும், வழி காட்டும் என்ற நம்பிக்கை இருந்தது.

எதற்கும் அகஸ்தியரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று ஓரிடத்தில் என் பெட்டியை வைத்து, ஜோல்னா பையில் வைத்திருந்த ஜீவ நாடியை எடுத்தேன்.

மந்திராலயாவில் இறங்கியதிலிருந்து இப்பொழுதுவரை அகஸ்தியர் ஜீவநாடியை நான் பார்க்காமல் இருந்ததர்க்குக் காரணம் உண்டு.  அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை ஆகிய நாட்களில் அகஸ்தியர் யாருக்கும், எந்தவித அருளையும் ஓலைச்சுவடியின் மூலம் கொடுக்க மாட்டார்.  யார், எப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் மேற்கூறிய நான்கு தினங்களில் அகஸ்தியரிடமிருந்து பதில் கிடைக்கவே கிடைக்காது.

நாடி பார்க்கும் முன்பு எனக்கு அகஸ்தியர் இட்ட கட்டளைகளில் இதுவும் ஒன்று.  இதையும் மீறி அரசாங்கத்தின் மிக முக்கியப் பொறுப்புள்ள ஒருவருக்கு நாடி படிக்கப் போய் அகஸ்தியரின் கோபத்திற்கு ஆளாகி, இதனால் அன்னவர் குடும்ப வாரிசு பித்தனாகி காணாமல் போவார் என்று சொல்லி அதன்படியே விமான நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவம் பின்னாளில் நடை பெற்றதால் எனக்கு இதில் பயம் உண்டு.

கூடுமானவரை நல்லதையே சொல்வோம் என்பதுதான் என் விருப்பம்.

மலையில் நின்று அகத்தியரை மூல மந்திரத்தால் பிரார்த்தனை செய்து நாடியைப் புரட்டினேன்.

"நவமி திதி" இன்னும் நான்கு நாழிகை பாக்கி இருப்பதால் ஓளி மூலம் மலையின் மேல் உச்சிக்கு வழி காட்டுவதாகக் கூறினார்.

கையில் இருந்த ஓலைச் சுவடியில் புறப்பட்ட ஒரு ஓளி நேராகச் செங்குத்தாகச் சென்றது.  பிறகு இடது பக்கம் திரும்பி ஒரு அரச மரத்தைக் காட்டியது.  பின்னர் அங்கிருந்து வலது பக்கமாகத் திரும்பி தெற்கு நோக்கி லேசாகக் கீழே இறங்கி ஒரு கட்டத்தைச் சுட்டிக் காட்டியது.  சுட்டி காட்டப்பட்ட அந்த இடத்தில் ஒரு சுனை போல் சிறு பள்ளத்தைக் காட்டியது.  பிறகு வலது பக்கம் சாய்ந்து மேலே ஏறியது.

சாய்ந்து சென்ற அந்த ஓளி சட்டென்று ஒரு குறப்பிட்ட இடத்தில் நின்றதும் "ராமர் கோயில்" என்று எழுத்து வந்தது. பின்னர் அந்த கோயிலின் மேல் வேகமாகச் சென்று "மலை உச்சி" என்ற எழுத்தைக் காட்டி மறைந்து விட்டது.

எழுத்தாலே இதுவரை வழி காட்டி வந்த அகஸ்தியர் இப்போதுதான் முதல் முதலாக ஒளிக்கீற்றின் மூலம் எனக்கு வழி காட்டியிருக்கிறார்.  இந்த மாதிரி வழிகாட்டுவது இதுதான் எனக்கு முதல் அனுபவம்.  இதற்கு முன்னால் இப்படி வந்ததே இல்லை.

நல்லவேளை "நவமி" நான்கு நாழிகை இருக்கும் பொழுதே அகஸ்தியரிடமிருந்து நல்ல வழியைப் பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சி எனக்கு.

ஓரளவுக்கு அந்த வழிகாட்டுதலை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு மேலே ஏறினேன்.  அப்படியும் தெரியாமல் போனால் அகஸ்தியர் வழிகாட்டுவார்.  இல்லையென்றால் யாராவது ஒருவர் எதிரில் வராமலா போய் விடுவார் என்ற நம்பிக்கை தான்.

ஆனால்..........

ஒன்றரை மணி நேரம் நடந்த போதும் கூட ஒரு மனிதரும் எதிரே வரவில்லை.  எனக்குப் பின்னால் காட்டுச் சுள்ளி பொறுக்குவதற்காகக் கூட யாராவது வருவார்களா என்று எதிர் பார்த்தும் வீணாகப் போயிற்று.  அந்த மலையில் உயிருள்ள ஒரு நடமாடும் ஜீவன் என்று ஏதாவது இருந்தால் அது நிச்சயம் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

ஒரு விதத்தில் இந்தத் தனிமை திடீர்ப் பயத்தைக் கொடுக்கத்தான் செய்தது.  வானத்தில் "மேகம்" என்று இருந்தால் வெயிலிலிருந்து என்னைக் கொஞ்சம் காப்பாற்றி இருக்கும்.  மலையில் மரங்கள் என்று நிறைய இருந்தால், வெயில் கஷ்டம் இல்லாமல் சுகமாக இருந்திருக்கும்.

பாதி மொட்டை மரங்கள், பயங்கர முட்கள் நிறைந்த செடிகள்.  சில சமயம் சின்னச் சின்ன குட்டியான காய்ந்த மரங்கள்.  காற்று கூட ஏனோ நல்லபடியாக வீச இஷ்டப்படாமல் இருந்தது.

இப்போது தான் நான் அவசப்பட்டு செய்த தவறு என் நினைவுக்கு வந்தது.

சித்தன் அருள் ................ தொடரும்!

Sunday 15 April 2012

வாசி நிலை அறிய அகத்தியர் கூறும் வழி!

அகத்தியர் பன்னிரெண்டாயிரம்

சித்தனாகும் பூரணத்தைக் கும்பத்தில் வைத்து
சிறப்பான வாசியைத்தான் மனது மிகநாட்டி
பித்தனாய்க் கும்பகத்தைப் பிங்கலையில் வாங்கி
பேரான கண்மணியை யிடை கலையில்வாங்கி
சுத்தமுடன் மையமதில் நடுகலயிநின்று
சூரியனை வம்பரத்தில் வகையுடனே தாக்கி
நித்தமே இக்கலையில் பூரகத்தைமாட்டி
நேரான பின் காலையில் வட கலயைவாங்கே

வாங்கியே மூவாண்டு வழக்கஞ்ச்செய்து
வாசியைத்தா நெப்போதும் பழக்கம் பண்ணி
தூங்கியே திரியாதே புலஸ்தியாகேள்
துப்புரவாய்ப் பழகிவந்தா எல்லாஞ்சித்தி
ஏங்கியே வாடாதே வாசியோகம்
என்மகனே செய்துவந்தால் பழக்கமாகும்
ஓங்கியே மகத்தான வாசி தன்னை
உத்தமனே செய்துவந்தால் சித்தியாமே!



அகத்தியர்!

Thursday 12 April 2012

சித்தன் அருள் - 68 - மகான் ராகவேந்திரர் தரிசனம்!

அந்த இயற்கையான, ரம்மியமான சூழ்நிலையில், மரம் செடி புஷ்பங்களுக்கு அருகில் ஒரு பன்னிரண்டு வயது பாலகன் சிறு பாறையில் அமர்ந்திருந்தான்.  முகத்தில் தெய்வீகக் களை.  கண்களில் அபாரமான காந்த சக்தி.  செந்நிற மேனி.  எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் தீர்க்கமான உதடுகள். நெற்றியில் யு வடிவமான சந்தனக் கீற்று.  பாகவதர் "கிராப்" உடம்பில் பட்டும் படாததுமான மெல்லிய பூணூல்.  இடுப்பில் ஆரஞ்சு நிறத்தில் மெல்லிய வேஷ்டியுடன் இருந்தான் அவன்.  எங்கேயோ சினிமாவில் பார்த்தது போல் என் கண்ணுக்குத் தென்பட்டது.


யாருமே இல்லாத அந்த அற்புதமான இயற்கைச் சூழ்நிலையில் ஒரு சிறு பையன் அங்குள்ள மரத்தடியில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.


என்னைப் பார்த்ததும் சிரித்தான்.


நண்பரும் நானும் அந்தச் சிறுவனின் பக்கத்தில் சென்றோம்.


"பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பார்க்கப் போறேளா?" என்றான் சுத்தத் தமிழில்.


"ஆமாம்" என்றேன்.  "இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாயே, உனக்கு தமிழ்நாடா?" என்றேன்.


"கும்பகோணம் பக்கத்தில்"


"இங்கேயே தங்கிவிட்டாயா?"


"ஆமாம்!"


"கூட யாராவது வந்திருகிரார்களா?  தனியே இங்கிருப்பதால் தான் கேட்டேன்!"


"தனியாகத்தான் இருக்கிறேன்.  கூடப் பிறந்தவர்களோ, பெற்றோரோ யாரும் கடைசி வரை கூட வருவதில்லையே" என்று சொன்னான்.


இதைக் கேட்டதும் எனக்கு மட்டுமல்ல, என் கூட நின்று கொண்டிருந்த நண்பருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.


"இங்கு வேதம் படிக்க வந்திருக்கிறான் போலிருக்கிறது.  அதான் இப்படிப் பேசுகிறான்" என்றார் என் நண்பர்.


"இல்லை.  வேதம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.


இது எனக்கு அதிகப் பிரசன்கித்தனமாகவே இருந்தது.  "வேதம் என்ன அவ்வளவு எளிதா? அதைப் படித்து தர்க்கம் வாதம் செய்ய குறைந்த பட்சம் பதினெட்டு வருஷமாவது ஆகுமே.  இவன் என்ன இப்படிப் போடு போடுகிறான்" என்று நினைத்துக் கொண்டேன்.


"என்ன அளவுக்கு மீறிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களாக்கும்.  அது சரி. நீங்கள் ராகவேந்திரரைத் தரிசனம் பண்ணியாகிவிட்டதா?" என்றான்.


"ராகவேந்திரரின் ப்ரிந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டோம்.  இன்றைக்கு ஊருக்குக் கிளம்புகிறோம்" என்றார் நண்பர்.


"நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே" என்று அர்த்த புஷ்டியோடு பார்த்த பொழுது என் உள்மனது ஏதோ உறுத்தியது.


"இவன் பேசுவதையும், கேட்பதையும் பார்த்தால் சாதாரண சின்னப் பையனாகத் தெரியவில்லை.  தன்னைப் பற்றி எதையும் அதிகம் சொல்லாமல், எங்களைப் பற்றியே கேள்வி கேட்கிறான்.  இவனிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமகேதர்க்கு?  நான் ராகவேந்திரரைத் தரிசனம் பண்ணினால் என்ன, பண்ணாமல் போனால் இவனுக்கென்ன?  தவிரவும் மந்திரலயத்திர்க்கு வருகிறவர்கள், ராகவேந்திரரை தரிசனம் செய்யாமல் வேறு எதற்கு வருவார்களாம்?"


இப்படி எண்ணி யோசித்தபொழுது நண்பர் என்னைக் கை பிடித்து "வா போகலாம்" என்று கண்ணால் ஜாடை காண்பித்தான்.


"இன்னும் நான் கேட்டதற்குப் பதிலே சொல்ல வில்லையே" என்று அந்தப் பையன் கேட்டது என் காதில் மறுபடியும் மறுபடியும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.


"சரி வருகிறோம் தம்பி" என்று சொல்லிவிட்டு " சாரி! உன் பெயர் என்னவென்று சொல்லவே இல்லையே" என்று பெயருக்கு கேட்டு வைத்தேன்.


"பாலா ராகவேந்திரன்" என்று பதில் கிடைத்தது.


"என்னது பால ராகவேந்திரனா?"


"ஆமாம்! அங்கே ஜீவ சமாதியில் பெரிய ராகவேந்திரர்.  இங்கே உயிருடன் இருப்பது பால ராகவேந்திரன்" என்று சொல்லிச் சிரித்தான்.


இன்னமும் இவனுக்குக் குறும்புத்தனம் போகவில்லை என்பது தெரிந்தது.


பொதுவாக மாத்வாகுலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ராகவேந்திரர் என்று பெயர் வைத்துக் கொள்வது வழக்கம்.  அதன்படி இவனும் தன்னைப் பால ராகவேந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை என்று விட்டு விட்டேன்.


நண்பர் என்னை மேலும் அவசரப்படுத்தினான்.


"கொஞ்சம் பொறுங்கள்.  நீங்கள் ராகவேந்திர ப்ரிந்தாவனத்தைத் தரிசனம் செய்தாலும் ராகவேந்திரரைத் தரிசனம் செய்யவில்லை.  இதற்கு ராகவேந்திரரின் மூல மந்திரத்தை ஜபம் செய்தால் அவரது தரிசனம் கிடைக்கும், செய்து பாருங்களேன்" என்று கூறி மெதுவாக எழுந்தான்.


எனக்குச் "சுரீர்" என்று உரைத்தது.


அடடா! ராகஹ்வேந்திரரைத் தரிசிக்கும் முன்பு ராகவேந்திரரின் மந்திரமான


"பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயசா
பஜதாம் கல்ப வ்ரிக்க்ஷாய நமதாம் காமதேனவே!"


இதை மனதிற்குள் தினமும் சொல்லச் சொல்லி அகஸ்தியர் எனக்கு ஆணையிட்டிருந்தார்.


ஆனால் நான் அதை அடியோடு மறந்துவிட்டேன்.


பொதுவாக நாடி பார்க்கும் முன்பு சில மூல மந்திரங்களை அகஸ்தியர் சொல்லி "இதை விடாமல் ஜபித்துக் கொண்டிரு.  இதை உன் மனதிற்குள் ஜெபி. வெளியே தெரியும்படி ஜெபிக்கதே" என்று ரகசியமாகச் சொல்வது உண்டு.


அப்படி நான் ஜெபிக்காமல் மற்றவர்களுக்கு நாடி படித்தால் ஒன்று நாடியில் எந்தச் செய்தியும் வராது, அல்லது ஒன்றுக்குப் பதிலாக வேறொன்று வரும்.  சரியாக அமையாது.


சில சமயம், "இதை உன் மனதிற்குள்ளேயே இருக்கட்டும்.  காரியம் நடக்கும் வரை வெளியே சொல்லாதே என்று சில செய்திகளை முன் கூடியே எனக்குச் சொல்வதும் உண்டு.  இதையும் மீறி நான் அவசரப்பட்டோ அல்லது உற்சாகத்தோடோ  வெளியே சொன்னால் நான் சொல்வதற்கும், நடப்பதற்கும் நேர் எதிர்மறையாக மாறிவிடும்.


இதெல்லாம் ஜீவ நாடியின் சூட்சுமங்கள்.  இருந்தாலும் இதுவே என்னைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு.


ராகவேந்திரரின் இந்த மூல மந்திரத்தை அகஸ்தியர் என்னக்குச் சொல்லியும், நான் மறந்து போனதை எப்படி இந்தச் சிறுவன் எனக்கு எடுத்துக் காட்டினான் என்பதுதான் என் மனதில் விழுந்த சம்மட்டி அடி.


நண்பரிடம் சொன்னேன்.


"இந்த சிறுவன் தெய்வீகத் தன்மையுடையவன்.  ராகவேந்திரரின் மூல மந்திரத்தைச் சொல்லச் சொல்கிறான்.  இங்கேயே இவன் கண் முன்னே நாம் இருவரும் அந்த மந்திரத்தைச் சொல்வோம்" என்றேன்.


நண்பரும் தனது அவசரத்தை மறந்துவிட்டு, கொண்டு வந்த பையைக் கீழே வைத்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டான். அந்த ஜபத்தை இருவரும் தொடர்ந்து சொன்னோம்.


சில நிமிடங்கள் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்த பொழுது, அந்தப்  பையன் மெல்ல நடந்து கொண்டிருந்தான்.  பத்தடி தூரத்தில் சிறுவனாகத் தோன்றியவன், பதினைந்து அடி தூரத்தில் பகவான் குரு ராகவேந்திரராக என் கண்ணுக்குக் காட்ச்சியளித்துக் கொண்டே சென்றார்.  ஆகாய ஜோதி பூமியில் தவழ்ந்து போவது போல இருந்தது.
உடம்பெல்லாம் புல்லரித்தது.  (உண்மையாகவே இதை தட்டச்சு செய்கிற பொழுது, எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவி, உடலில் ரோமங்கள் எல்லாம் எழுந்து நிற்க, ஒரு மின்சாரம் என்னுள் பாதம் முதல் தலை வரை ஓடியது உண்மை.  கண்ணை மூடினால் அவர் நடந்து செல்வதும் தெரிகிறது.  ஒன்றும் பேசவே தோன்றவில்லை!)


இதற்கு பிறகு எனக்கு மந்திரமே வாயில் வரவில்லை.  இனம் புரியாத சக்தியினால் பீடிக்கப்பட்டது போல் இருந்தேன்.  தெய்வ தரிசனம் என்பது இதுதானோ? என்று நினைத்து நினைத்து புளங்கிதம் அடைந்தேன்.


இப்படிப்பட்ட அனுபவம் கிடைத்தது என்பது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய புண்ணியம்! (உண்மை).  இதை என் உள்ளுணர்வு இன்றைக்கும் எண்ணி எண்ணி சந்தோஷம் அடைகிறது.


இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை எனக்கருளிய அகத்தியருக்கு நன்றியைச் செலுத்தினேன்.


நான் என் சுய நினைவுக்கு வந்த போது என்னருகில் இருந்த நண்பரைப் பார்த்தேன்.


அவர் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தார்.


பத்து நிமிஷம் கழிந்தது.  "அந்தப் பையனை காணவில்லையே" என்று சுற்றும் முற்றும் தேடினார்.


"நண்பா! உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.  நமக்கு காட்ச்சியளித்த அந்தச் சிறுபையன் பால ராகஹ்வேந்திரன் இல்லை.  சாட்சாத் ராகவேந்திர சுவாமிகள் தான்.  மூல மந்திரத்தை நான் ஜெபிக்க மறந்து போனதை ஞாபகபடுத்தி எனக்கு ராகவேந்திரராகத் தரிசனம் கொடுத்து அப்படியே செடி கொடிக்கிடையில் மறைந்தும் போனார்" என்றேன்.


"அப்படியா?"


"அதுமட்டுமில்லை! என் கண்ணில் பாலகனாக தோன்றியவன், பதினைந்து அடி தூரத்தில் வயதான ராகவேந்திரராகக் காட்சியளித்து அப்படியே மறைந்து போனதை நான் உணர்ந்து கொண்டேன்.  உனக்கு எதுவும் தோன்றவில்லையா?" என்று கேட்டேன்.


மகிழம் பூவின் வாசமும், பவள மல்லியின் வாசமும் திடீரென்று எனக்குத் தெரிந்தது.  எப்படி அந்த வாசனை வந்தது என்று யோசித்தேன். அருகில் அதற்குரிய மரமே இல்லை.  எனவே லேசாகக் கண் திறந்து பார்த்த பொழுது அதோ அந்தச் செடி, கொடிக்கிடையில், வயதான முக்காடு போட்ட ஒருவர் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்.  அவரது பின்புறம் தெரிந்தது.  மற்ற படி உன் அளவுக்கு பகவான் ராகவேந்திரர் என் கண்ணில் தென்படவில்லை.  எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்றான் என் நண்பன்.


"அப்படிச்சொல்லதே.  உன்னால்தான் எனக்கு ராகவேந்திரர் தரிசனம் இங்குக் கிடைத்திருக்கிறது.  நீதானே பஞ்சமுக அனுமானைத் தரிசனம் செய்யலாம் என்று கூடிக் கொண்டு வந்தாய்.  இல்லையென்றால் ஒன்றுமே கிட்டாமல், சோர்வுடன் ஊர் திரும்பி இருப்போம்" என்றேன்.


"ஆமாம்.  நாம் இரண்டு பெறும் இந்தத் தெய்வீக அனுபவத்தை பெற்று இருக்கிறோமே.  இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா?" என்றான்.


"மற்றவர்கள் நம்பினால் நம்பட்டும்.  நம்பாவிட்டால் போகட்டும்.  உனக்கும் எனக்கும் இந்தத் தரிசனப் பாக்கியம், கிடைத்தது உண்மை தானே?" என்றேன் உற்ச்சாகத்துடன்.


அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.


கீழே வைத்திருந்த பையை நாங்கள் கையில் எடுக்கும் பொழுது அந்தப் பையின் மீது குங்குமத்தால் பிசைந்து தடவப்பட்டது போன்ற ராகவேந்திரரின் ப்ரிந்தாவனத்தில் கொடுக்கப் படும் மந்திராட்சதையும், ரோஸ் நிறத்தில் சிறு சிறு துண்டுகளாக அல்வா போல் அழகாக வெட்டப்பட்டு கொடுக்கும் இனிப்பும், பூவோடு காணப் பட்டது.


நன்றாக "ஜிப்" வைத்து மூடிக்கொண்டு வந்த எங்கள் இருவரது பையின் மீது இந்த மந்திராட்ச்சதையும் இனிப்பான நைவேத்தியத்தையும், புஷ்பத்தோடு வைத்தவர் யார்?


எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பிற்பகல் பொழுதில் அங்கு இல்லை.


அப்படியானால் சாட்சாத் ராகவேந்திரரின் கருணையில்லாமல், இது நடந்திருக்காதே.  ஆகா! அப்படிஎன்றால் உண்மையில் நாங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று ஆனந்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஆனந்தக் கண்ணீரைச் சொறிந்தோம்.


இதற்குப் பிறகு பஞ்சமுக ஆஞ்சநேயரைத் தரிசிக்கவா, இல்லை இந்த சந்தோஷத்தோடு அக்கரைக்குச் சென்று ஊருக்குத் திரும்பி விடலாமா? என்று ஒரு சந்தோஷ சஞ்சலம் ஏற்பட்டது.


உடனே நண்பர் சொன்னார் " நாம் இங்கு வந்ததே பஞ்ச முக ஆஞ்சநேயரைத் தரிச்க்கத்தான்.  அதை மறந்துவிட்டுப் போவது நல்லதல்ல.  வா போகலாம்" என்று சொல்ல,


ராகவேந்திரர் தரிசனம் கொடுத்த அந்த மண்ணில் புரண்டு புரண்டு விழுந்து அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு தெய்வீகச் சந்தோஷத்தோடு பஞ்ச முக அனுமானை தரிசிக்கக் கிளம்பினோம்.


ஒரு பாறை வடிக்கப்பட்டது போல பஞ்ச முக ஆஞ்சநேயர் கம்பீரமாகத் தரிசனம் கொடுத்தார்.  ஆனந்தமாகத் தரிசனம் செய்தோம்.


அந்த திவ்யமான அனுமன் தரிசனத்தை நல்லபடியாக முடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்குள்ள ஒரு அர்ச்சகர் விறு விறு என்று என்னை நோக்கி வந்தார்.


கை நிறைய அனுமன் பிரசாதத்தை கொடுத்துவிட்டு "நீங்க யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.  நீங்க "ரணமண்டலம்" சென்று விட்டு ஊருக்குப் போங்கள் என்று எனக்கு சொல்லச் சொல்லி உத்திரவு ஆகியிருக்கிறது" என்றார்.


"ரணமண்டலமா? அது எங்கே இருக்கிறது?" என்று நான் கேட்கும்பொழுது நண்பர் இடை மறித்தார்.


பக்கத்தில் தான் இருக்கிறது.  அங்கு தான் நான் ஆபிஸ் வேலையாக வந்தேன்.  அதற்குள் மறந்துவிட்டதா? என்று கேட்டுவிட்டு "ரணமண்டலத்தில் எங்குச் செல்லவேண்டும்? என்ன பார்க்க வேண்டும்?  எப்பொழுது செல்ல வேண்டும்? என்று கேட்டான்.


"ரண மண்டலத்தில் ஒரு பெரிய மலை இருக்கிறது.  அந்த மலையில் ஏறிவிட்டு வாருங்களேன்" என்று சொன்னாரே தவிர முழுமையாக எதையும் சொல்லவில்லை.


"சரி" என்று பெயருக்கு சொல்லிவிட்டு நண்பருடன் கலந்து ஆலோசித்தேன்.


"எதோ அசரீரி சொன்ன மாதிரி இந்த அர்ச்சகர் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு உத்தரவு போடுகிறார்" என்றவன், "அந்த அர்ச்சகர் முகத்தை பார்த்தாயா?" என்றான்.


"சரியாகப் பார்க்கவில்லை"


"எனகென்னவோ கொஞ்ச நேரத்திற்கு முன்பு பின்புற தரிசனம் கொடுத்த ராகவேந்திரர் எனக்கு இப்போது அர்ச்சகர் ரூபத்தில் முன்புறமாகத் தரிசனம் கொடுத்து அருள்வாக்குச் சொன்னதுபோல் தெரிகிறது" என்றவன் "சரி... சரி!.  நமக்கும் மீறி ஏதோ சில சக்திகள் நம்மை எங்கேயோ கொண்டு செல்கின்றன.  நான் உன்னை ரணமண்டலத்தில் காரில் இறக்கிவிட்டுச் செல்கின்றேன்,  எனக்கு ஆபிசில் வேறு வேலை இருப்பதால் நான் ஊருக்குச் செல்கிறேன்.  நீ ரணமண்டலத்தில் தங்கி மலைக்குச் சென்று வா.  அங்கு ஆஞ்சநேயர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  எனக்கும் சேர்த்து தரிசனம் பண்ணிவிட்டு வா" என்றான் என் நண்பன்.


(நண்பர்களே! இந்த தொகுப்பை தட்டச்சு செய்த பின் என்னுள் என்னவோ இனம் புரியாத மாற்றம்!  அதை சில நாட்கள் இருந்து அனுபவித்த பின் மறுபடியும் சித்தன் அருளில் உங்களை சந்திக்கிறேன்!  அதுவரை விடை கொடுங்கள்!)

Thursday 5 April 2012

சித்தன் அருள் - 67


அந்த அம்பாஸிடர் காரில் என் நண்பர் ஒருவர் இருந்தார்.


அவரைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி.  முன்பின் தெரியாத இடத்தில் வசதிகள் பொருந்திய நண்பர், அதுவும் காரில் வந்து நிற்கிறார் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது.  அவருடன் காரில் ஏறி மந்திராலயா ஊருக்குப் பயணமானேன்.  அவர் இறை வழிபாட்டில் மட்டுமல்ல, நான்கு கோயில்களுக்கு செல்ல வேண்டும், நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்.  இன்னும் சொல்லப்போனால் என் கையில் இருக்கும் நாடி உண்மைதானா? நான் சொல்வதெல்லாம் கதையா அல்லது கற்பனையா என்று கூட எனக்குத் தெரியாமல் ஆராய்ந்து பார்த்தவர்.

முதன் முதலில் அவருக்கு நாடி படித்த போது ஆயிரம் கேள்விகளைக் கேட்டார்.  "அதெப்படி பெருவிரல் ரேகையில்லாமல் நாடி படிக்க முடியும்?  எப்பொழுது கேள்வி கேட்டாலும் அகஸ்தியர் எப்படி பதில் சொல்வார்?  இதுவரைக்கும் அகஸ்தியர் நாடி சொல்லி எல்லோருக்கும் எல்லாமே நடக்கவில்லையே? பணத்தை வைத்துதானே பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது! அது மட்டுமின்றி எதற்கெடுத்தாலும் எல்லாம் முன் செய்த வினை என்றுதானே எல்லா நாடிகளும் சொல்கிறது! பிறகு எதற்கு நாடி பார்க்க வேண்டும்? நாடி என்பது உண்மையா அல்லது பொய்யா, இதற்கு பதில் என்ன? இந்த இருபதாம் நூற்றாண்டில் இப்படியொரு அதிசயம் நாடியில் நடக்கிறது என்றால், பின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸ்காரர்களே தேவை இல்லையே.  போலீஸ் ஸ்டேஷனும் தேவை இல்லையே.  நாடியைப் படித்தே குற்றவாளி யார் என்று சொல்லிவிடலாமே.  அதை ஏன் அகஸ்தியர் சொல்லுவதில்ல?" என்று இதுபோன்று நூற்றுக் கணக்கான கேள்விகளை என்னிடம் கேட்டவர்தான் என் நண்பர்.

இவரது கேள்விகள், இன்னும் சொல்லப்போனால், பகுத்தறிவு வாதிகளைவிட மிக அதிகமாகவும், இருந்தன.  உண்மையில் நண்பர் கேட்டது அத்தனையும் நியாயமானதுதான்.  அதற்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை.  சாதாரணமாக என் கைக்கு இந்த ஜீவநாடி கிடைக்காமலிருந்திருந்தால் இப்படித்தான் நானும் நாடி படிக்கிறவர்களைப் பார்த்து கேட்டிருப்பேன்.  நண்பர் தெய்வ பக்தி கொண்டவர்.  பழைய கால சம்பிரதாயப்படி நடப்பவர். நானோ எதிலும் பொறுப்பில்லாமல் மற்றவர்களை கேலி கிண்டல் செய்து, பெரியோர்களை மதிக்காமல், தெய்வபக்தியை நிந்தனை செய்ததினால் தான் மற்றவர்களுக்கு தெய்வ நெறிப்படி வழிகட்டும்படி அகஸ்தியர் எனக்கு கட்டளை இட்டிருக்கவேண்டும் என்று என் நண்பர் பின்னர் எனக்கு விளக்கம் சொன்னதும் உண்டு.

நண்பர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் உடனடியாக அப்போது அகஸ்தியரிடமிருந்து பதில் வரவில்லை.  உடனடியாக பதில் வராததால் இந்த நாடியெல்லாம் போலி, தெய்வமாவது நாடி மூலம் பேசுவதாவது, எல்லாம் ஏமாற்றுவேலை.  இப்படி ஏமாற்றுகின்ற இந்த நாடிக்காரரான உன்னை இந்தியன் பீனல் கோடு நூற்றி இருபதின்படி உள்ளே போடவேண்டும் என்று கூட விளையாட்டாக சொன்னது உண்டு.

ஆனால் காலம் செல்ல செல்ல அகஸ்தியர் நாடியை தொடர்ந்து விடாமல் பார்த்ததின் விளைவு, நண்பர் வியந்து போகும் அளவுக்கு சில உதாரணங்களையும், அவர் வாழ்க்கையில் நடக்கப் போகும் சில சம்பவங்களையும் அகஸ்தியர் சொல்லி, அது நடந்த பிறகு தான் "நாடி ஜோதிடம் நல்ல ஜோதிடம்.  அது சொல்பவரின் நன்னடத்தை, ஜபம், பிரார்த்தனை, நம்பிக்கை, ஒழுங்கு, எல்லாம் நல்லபடியாக இருந்தால் நடப்பதும் நன்றாக நடக்கும் என்பது மட்டுமல்ல, நாடி ஜோதிடத்தின் தத்துவமே" என்பதையும் உணர்ந்தார்.

விதியை மாற்ற முனிவர் நமக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து இறைவன் கட்டளையிட்ட பின் அதை முனிவர் நமக்கு முன்கூட்டியே தருகிறார்.  இதற்கு முதலில் பொறுமையும் நம்பிக்கையும் தேவை, நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று ஆசை, இல்லாவிட்டால் தூற்றுகிறோம்.  இதனால் தான் நாமும் ஏமாந்து போகிறோம். நம்பிக்கை குறைவதால் எல்லாருமே கற்பனையாகக் கூடத் தோன்றுகிறது.  இதை என் நண்பர் போன்றோர் பின்னால் தான் உணர்ந்தனர்.

இந்த நினைவுகளுடன் நண்பர் ஏதேதோ பேச்சுக் கொண்டுத்துக் கொண்டு துங்கபத்ரா நதியின் அழகைப் பார்த்துக் கொண்டே மந்திராலயாவில், அவர் தங்கி இருக்கும் அறையை அடைந்தேன்.

உள்ளே நுழைந்ததும் நான் கேட்ட கேள்வி இதுதான்.

"நான் இங்கே வரப்போறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?  உன்னை நான் கொஞ்சம் கூட ரயில்வே ஸ்டேஷனில் எதிர்பார்க்கவே இல்லை" என்றேன்.

"எனக்கு தெரியும்.  நீ இங்கே வரப்போறேன்னு" என்றான் பதிலுக்கு.

"எப்படி?"

"அகஸ்தியர் உனக்கு மட்டும்தான் அருள் புரிவாரா என்ன?  எனக்கும் அருள் புரிந்திருக்கிறார்" என்று சொல்லி சிரித்தார்.

"நேரத்தை வீணாகாதே.  சட்டென்று விஷயத்திற்கு வா" என்றேன்.

"நான் சொல்றதுக்கு முன்னாள் ஒரு கேள்வி.  கால பைரவருக்கு ஒன்பது நாளுக்கு விளக்கு ஏற்றச் சொன்னார் அகஸ்தியர்.  ஆனால் நான்கு நாள்தான் விளக்கு ஏற்றி இருக்கிறாய்.  பாக்கி நாள் விளக்கை யார் ஏற்றுவது?

எனக்கு பகீர் என்றது.  இது எப்படி இவனுக்குத் தெரியும் என்று என் உள்மனம் அலைபாய்ந்தது.

மீண்டும் அவனே தொடர்ந்தான்.

"பரவாயில்லை.  உன் சார்பில் தொடர்ந்து விளகேற்ற நானே அங்கு ஏற்பாடு செய்துவிட்டேன்.  அதை விடு.  இன்னொரு சமாச்சாரம்.  உனக்கு ரயிலில் டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்ததும் நான்தான்.  அது தெரியாதா உனக்கு?"  என்றான்.

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.  எப்படி இந்த விஷயமெல்லாம் தெரிந்தது.  ஏனெனில் நான் நண்பனை பார்க்கவும் இல்லை.  இது விஷயமாக பேசவும் இல்லையே என்று யோசித்தேன்.

"எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு நினைக்கிறாயா?  சொல்கிறேன் கேள்.  போனவாரம், திருவண்ணமலையில் நான் சப்தரிஷி நாடி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது உன்னுடன் மந்த்ராலயா பயணம் செய்யுமாறு உத்திரவு வந்தது.  சப்தரிஷி நாடி சொன்னதின் பேரில் நேற்றைய தினம் உனக்கும் எனக்கும் இரண்டு டிகேடுகளை நான்கு நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்தேன்.  இதை ரகசியமாக வைத்திருந்தேன்.  ரயில்வே ஸ்டேஷனில் உன்னை ஆச்சரியப்படுத்தலாம் என்று நினைத்தேன்.  அதற்குள் என் கம்பனி விஷயமாக ரணமண்டலம் வரை வர அவசர வேலை ஒன்று வந்துவிட்டது.  நேற்றே ரணமண்டலம் வரவேண்டும் என்பதால், காரில் புறப்பட்டு வர வேண்டியதாயிற்று.  இதற்கு முன்பு மறுபடியும் நான் திருவண்ணமலையில் இருக்கும் சப்தரிஷி நாடி படிப்பவரிடம் இந்தச் சூழ்நிலையைச் சொன்னபோது கால பைரவர் கோயிலில் விளகேற்ற பாக்கி ஐந்து நாளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைத்துவிட்டு, ரிஷி சொன்ன சொல்லை தட்டிய பாவத்திற்கு காணிக்கையை அகஸ்தியர் கோயிலில் செலுத்திவிட்டு புறப்படச் சொன்னதின் பேரில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காரில் புறப்பட்டு நேற்றே வந்தேன், என்றான் என் நண்பன்.

இது கேட்க ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் நம்புவதற்கு பலமணி நேரம் பிடித்தது.  ரயில் நிலையத்தில் நான் பட்ட கஷ்டத்தைச் சொல்லி "அது சரி எனக்கு டிக்கெட் கொடுத்த நபர் யார்?" என்றேன்.

"என் கம்பனியில் பணிபுரியும் நபரின் உறவினர்.  அவருக்கு உன்னைத் தெரியாது.  இரண்டு டிக்கெட்டுகளையும் கொடுத்து உன் அங்க அடையாளத்தைச் சொன்னேன்.  வீட்டு விலாசத்தை கொடுத்தேன்.  அதன்படி டிக்கெட்டைக் கொடுப்பதற்குப் பதிலாக ஸ்டேஷனுக்கு வந்து திண்டாடி அப்புறம் கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டுக் கொடுத்திருக்கிறான்.  வீட்டில் வந்து கொடுத்திருந்தால் நீயும் டென்ஷனாகி இருக்க மாட்டாய்" என்றான் என் நண்பன், சர்வ சாதாரணமாக.

"இதுவரை அகஸ்தியர் தான் அரூபமாக ஓளி வடிவில் ஜீவநாடி மூலம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்த எனக்கு திருவண்ணாமலை சப்தரிஷி நாடியிலும் இப்படி வருகிறது என்பது மிகப் பெரிய சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆராய நான் முற்படவில்லை.  நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பது போல் நான் சப்தரிஷி நாடி மூலம் பார்க்க விரும்பவில்லை.

மந்திராலயத்தில் மூன்று நாட்கள் தங்க வேண்டும்.  மூன்றாம் நாள் பகலிலோ அல்லது இரவிலோ கனவிலோ அல்லது நனவிலோ ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் கிடைக்கும் என்பது அகஸ்தியரின் அருள் வாக்கு.

ஆவியைக் காட்டியவர் ஆண்டவனின் அருள்பெற்ற அவதார புருஷரான ராகவேந்திரரையும் காட்ட விரும்பிகிறார் என்பது எனது நினைப்பு.

ஜீவசமாதியின் முன்பு விழுந்து விழுந்து வணங்கினேன். முதல் இரண்டு நாட்கள் ஒன்றுமே நடக்கவில்லை.  நண்பரும் மூன்று நாட்கள் என்னதான் தங்கினார்.  ஒவ்வொரு சமயத்திலும் "என்ன தரிசனம் கிடைத்தது?" என்று கேட்டான்.

என் கண்ணுக்கு, மந்திராலயா கோயிலில் உள்ள அத்தனை பேர்களும் "ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்றுதான் தெரிந்தது. அங்கு காணப்பட்ட பெரும்பாலான மனிதர்களின் உருவ மைப்பு, சந்தன கீற்று. மாத்வர் உடை, சிவப்பு நிறம், ஆரஞ்சு நிற உடைகள் அத்தனையும் பார்க்கும் பொழுது ஸ்ரீ ராகவேந்திரர் போல்தான் தோன்றியது.  நல்ல சாப்பாடு, மூன்று வேளை துங்கபத்ராவில் குளியல்.  ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் எட்டு திசைக்கும் பதினெட்டு நமஸ்காரங்களைச் செய்து ராகவேந்திரரின் மூல மந்திரத்தைச் சொல்லிக் கழித்தாயிற்று.

என் கண்ணுக்கு ஸ்ரீ ராகவேந்திரரின் தரிசனம் கிடைக்கவில்லை.  என்னைவிட என் நண்பனுக்கு மிகவும் வருத்தம்.  இன்னும் பத்து மணி நேரம் தான் இருந்தது.  பொழுதும் போகவில்லை.  வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

"துங்கபத்ரா நதிக்கு அக்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உண்டு சென்று பார்க்கலாம்" என்று நண்பர் வற்புறுத்த பரிசிலில் கடந்து அக்கரைக்குச் சென்றோம்.  அப்படியாவது சில மணி நேரம் கழியட்டும் என்ற எண்ணம் தான்.

சாதரணமாக முட்டியளவு ஜாலம் தான் இருக்கும்.  நடந்தே சென்று விடலாம்.  ஆனால் ஆங்காங்கே முதலைகள் இருப்பதால் சற்று ஜாக்கிரதையாக நதியைக் கடக்க வேண்டும் என்று எல்லோரும் முதலில் சொன்னார்கள்.

இப்படி ஒரு பயத்தோடு பஞ்ச முக ஆஞ்சநேயரைத் தரிசிக்க போவதை விட பேசாமல் ராகவேந்திரர் ப்ருந்தவனத்திலேயே தங்கிப் பிரார்த்தனை செய்து விடலாம் என்ற என் எண்ணத்தை அடியோடு விரட்டிவிட்டு வலுக்கட்டாயமாக பரிசிலில் அக்கரைக்கு அழைத்து சென்ற நண்பரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டியதுதான்.

அக்கரையில் இறங்கி அப்படியே ஒரு ஒற்றையடிப் பாதையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் அப்போது அந்த இடத்தில் இல்லை.

நேரம் மதியம் மூணு அல்லது மூன்று நாற்பது இருக்கலாம்.  திடீரென்று யாரோ கனைப்பது போல் சப்தம்.  திரும்பி பார்த்தோம்.

சித்தனருள்.............. தொடரும்!

சித்தன் அருள் - 66


அந்த நள்ளிரவிலும் எனக்குத் தைரியம் தந்த அகஸ்தியருக்கு நன்றி சொல்லி நான் திரும்பும் பொழுது இரவு மணி இரண்டு.


திரும்பி நடக்க வழி தெரிகிறதா என்று டார்ச் லைட்டை அடித்தேன்.  பளிச்சென்று எரிந்தது.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு எரியாத டார்ச் இப்பொழுது எரிந்தது எனக்கு மேலும் ஆச்சரியத்தைத் தந்தது.

அந்த டார்ச் ஒளியை வைத்து எதிரே நின்ற அமுதாவின் ஆவியின் மீது அடித்தேன்.  ஆனால் அங்கு ஆவியைக் காணவில்லை.  வெறும் சுவர் மட்டும்தான் தெரிந்தது.

சரி இனிமேல் இங்கிருப்பதில் பயனில்லை என்று அங்கிருந்து கிளம்பினேன்.

அந்தக் கட்டிடத்தை விட்டு வீதிக்கு வந்தபோது முதலில் எனக்கு வழிகாட்டிய அந்தக் கருப்பு நாய் நின்று கொண்டிருந்தது.  இடையில் காணாமல் போன அது இப்பொழுது எதற்காக அங்கு நிற்கிறது என்று தெரியவில்லை.

என்னைக் கண்டதும் அது முன்னே செல்ல அதன் வழியில் நானும் டார்ச்சை அடித்துக் கொண்டே சென்றேன்.

வேகமாக ரோட்டைக் கடந்து மெயின் ரோடுக்கு வரும்பொழுது இதுவரை குரைக்காத  அந்த நாய் திடீரென்று பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது.  மேற்கொண்டு நகரவே இல்லை.

அதன் பின்னர் பத்தடி தூரத்தில் வந்து கொண்டிருந்த நான் இந்த எதிர்பாராத குரைக்கும் சப்தத்தைக் கேட்டு, லேசான அதிர்ச்சியோடு நின்றேன்.

நாய் மீதும் அதனைச் சுற்றிலும் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்த போது சுமார் எட்டு அல்லது ஒன்பது அடி நீளமுள்ள ஒரு நாகப் பாம்பு வாயில் எலியைக் கௌவிக் கொண்டு, நாங்கள் சென்று கொண்டிருந்த பாதையைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

ஒரு சின்ன அதிர்ச்சி தான்.

இரண்டு நிமிடம் நான் தனியே முன்னால் சென்று கொண்டிருந்ததாலோ அல்லது அந்தக் கருப்பு நாய் எனக்கு எச்சரிக்கை விடுக்காமல் இருந்திருந்தாலோ அந்தப் பாம்பை நான் மிதித்திருக்கலாம். 

இதை நினைத்துப் பார்த்த பொழுது "இதெல்லாம் எனக்குத் தேவையா" பேசாமல் என் நண்பனை போல வீட்டில் இருந்திருந்தால் இந்த வம்பே தேவை இலையே என்று நினைக்கத்தான் தோன்றியது.

மிகவும் நிதானமாக பயமில்லாமல் அந்த நாகம் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் தாண்டும்வரை பொறுமையாக நின்று கொண்டிருந்தேன்.

ஒருவேளை என்னை நோக்கி அந்தப் பாம்பு திரும்பி விட்டாலோ அல்லது அந்த நாய் குரைப்பதைக் கேட்டு அதனை நோக்கிச் சீறிவிட்டாலோ அல்லது இந்த நாய் ஏதாவது ஒரு ஆவேசத்தில் அந்தப் பாம்பைக் கடிக்கப் பாய்ந்து சென்று விட்டாலோ என் பாடு திண்டாட்டம்தான்.

என்னதான் கையில் ஜீவநாடி இருந்தாலும் இந்த அவஸ்த்தை எல்லாம் யார் படுவது?  நானும் மனிதன் தானே.

ஏதாவது ஒன்றுக்கொன்று இசகு பிசகாக மாறிவிட்டால் இவனுக்குப் பயித்தியம், நாடி பின்னால் சென்று மாடிக் கொண்டான்.  இந்தக் காலத்தில் இப்படிக் கூடப் படித்த பைத்தியம் உண்டா என்றுதான் மற்றவர்கள் பேசுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

இந்த மனப் போராட்டங்கள் ஒரு ஐந்து நிமிடம் அங்கு நீடித்தன.

ஆறாவது நிமிடம் அந்தப் பாம்பு பாதை விட்டு விலகிப் பக்கத்து வயலுக்குள் வேகமாகச் சென்ற பின்புதான் அந்த நாயும் குரைப்பதை நிறுத்தியது.

இரவு மணி மூன்றுக்கு நான் மெயின் ரோட்டை அடைந்தேன்.

இதுவரை என்கூட, எனக்கு வழிகாட்டிய அந்தக் கருப்பு நாய், ரோட்டில் நின்ற அய்யனார் சிலைக்கருகே வந்த பின்பு காணவில்லை.  பத்து நிமிடம் தேடித் பார்த்தேன்.  அந்தக் கருப்பு நாயைக் காணவே இல்லை.

என் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது.  இன்னும் சொல்லப்போனால் குளித்துவிட்டு அப்படியே உடை அணிந்து நிற்பது போன்று எனக்கே தென்பட்டது.  இது பயமா?  இல்லை.  நடக்காததை நினைத்து ஆச்சரியத்தால் ஏற்பட்ட விளைவா என்று தெரியவில்லை.

எப்படியும் பஸ் வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்பதால், மறுபடியும் அகஸ்தியரை த்யானித்து ஓலைச் சுவடியைப் படித்தேன்.

"அய்யனாருக்கு வணக்கம் செலுத்தி விட்டு உன்னைப் போகச் சொன்னேன்.  ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை.  அதன் விளைவுதான் அந்தக் கார்க்கோடகன் தரிசனம்.  உன்னை எச்சரிக்கவே வந்தது.  இன்னொன்று.  என்னையே நம்பாமல் அடிக்கடி எனக்கேன் இந்த வம்பு என்று மனதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.  இந்த அகத்தியனை முழுமையாக நம்பியிருந்தால் எத்தகைய சோதனையும் வராது.  நீயே என்னை நம்பாமல் மற்றவர்களைப் போல் நினைப்பதால் உனக்கொரு அதிர்ச்சியைத் தரவே அந்தக் கார்கோடகன் வந்தது" என்று எனக்கொரு குட்டு வைத்தார் அகஸ்தியர்.

அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

பின்பு " அந்தக் கருப்பு நாயைப் பற்றி தாங்கள் முன்னமே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.ஆனால் அது யார் அய்யனரா?" என்று கேட்டேன்.

"இல்லை" அவர்தான் கால பைரவர்.  உனக்கு துணையாக அந்த நள்ளிரவில் வந்தவரும் அவர்தான்.  அந்தக் கால பைரவருக்கு நன்றி சொல்ல ஊருக்குச் சென்று அவர் சன்னதியில் ஒன்பதுநாள் விளக்கேற்றி வா" என்றார்.

இதைக் கேட்டதும், தெய்வமே எனக்கு அந்த இரவில் துணை நின்ற பெருமையை எண்ணிப் பூரிப்புக் கொண்டேன்.

மறுநாள் என் நண்பர்களிடமும் இந்தச் சம்பவத்தைச் சொல்லி விளக்கிய பொழுது ஆச்சரியமும் பட்டார்கள்.  அதே சமயம், "இது உண்மையாக இருக்குமா" என்று ஆராயவும் செய்தார்கள்.

நான் கால பைரவர் கோயிலுக்கு விளக்கு ஏற்றச் சென்ற பொழுது எனக்கு இன்னொரு அதிசயம் அங்கு காத்திருந்தது.

அந்தக் கோயிலின் அர்ச்சகர் "நீங்க இன்னிக்கு இங்கு வரப்போறீங்க, ஒன்பது நாளைக்கு பைரவர் சன்னதியில் விளக்கு ஏற்றவும், போறீங்கன்னு சொல்லி, ஒரு பெரியவர் இரண்டுபடி நல்ல எண்ணை, இரண்டு படி நெய் என்று அந்த இரண்டையும் இப்பத்தான் என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார்" என்றார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அந்தக் கோயிலின் கருவறையில் நெய்யும் எண்ணையும் திரியும் கொடுத்துவிட்டு சென்றவர் அகஸ்தியரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று என் உள் மனம் சொல்லியது. 

ஏனெனில் இந்தக் கால பைரவர் விளக்கு விஷயம் என்னையும் அகஸ்தியரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  ஏன் நண்பர்களுக்கு ஆவியைப் பற்றிய கதையைச் சொன்னேனே தவிர பாம்பு வந்ததற்கு காரணம் நான் அய்யனாரையும் அகத்தியர் மீது நம்பிக்கை இழந்ததையும் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவே இல்லை.

இனிமேலாவது அகஸ்தியர் வாக்கை அமுத வாக்காக எடுத்துக் கொள்ளவேண்டும்.  சந்தேகப்படவோ சஞ்சலப்படவோ கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக இருந்தேன்.

சில சமயம் அகஸ்தியரின் கூற்று, சிலருக்குச் சரியாக நடக்காது.  இதற்கு எதோ ஒரு காரணம் இருந்திருக்கும்.  அப்பொழுதெல்லாம் கூட நான் ஏன் இப்படி வாக்குப் பொய்யாகிறது, நாம் தான் தவறுதலாகச் சொல்லிவோட்டோமோ? என்று குழம்பிப் போவதும் அகஸ்தியரைப் பற்றி மனவருத்தப் பட்டதுமுண்டு.

அதெல்லாம் கூட தவறுதான் என்பதை அகஸ்தியர் இந்த நள்ளிரவு நாடகத்தில் எனக்கு எடுத்துக் காட்டிவிட்டார்.

என் நண்பர் ஒருவர் அமுதாவைப் பற்றி உண்மையானத் தகவலை அரிய, அதை காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்து வந்தபோது அந்தத் தேதியில் "காணவில்லை" என்ற பெயரில் ஒருவர் அமுதாவைப் பற்றி "கம்ப்ளைன்ட்" கொடுத்திருப்பது தெரிய வந்தது.

அமுதாவும் கொல்லப்பட்டாள்.  அமுதாவைக் கொன்றவனும் தன் குடும்பத்தோடு விபத்தில் கொல்லப் பட்டான் என்பதால் இதைப் பற்றி மேலும் ஆராய நான் விரும்பவில்லை.

அப்படியே விட்டு விட்டேன்.  பின்னர் அந்த ஆவிக்கு மோட்சம் கிடைத்து விட்டதாக அகஸ்தியர் பல ஆண்டுகளுக்குப் பின் சம்பந்தமில்லாமல் ஒரு நாள் கூறினார்.  விபத்தில் பலியான அமுதாவைக் கெடுத்துக் கொன்ற குடும்பத்தினரும் உறவினரிடம் சென்று அவர்களது ஆத்மா சாந்தி அடைய 48 நாட்கள் மோட்ச்ச தீபம் ஏற்றும்படி அகஸ்தியர் சொல்லி இருந்தார்.  அதன்படியே ஆள் அனுப்பி அவர்களிடம் சொல்ல அவர்களும் மோட்ச தீபம் ஏற்றினர்.

எனவே அமுதாவுக்கும் ராஜகுரு குடும்பத்தினருக்கும் அகஸ்தியர் அருளால் மோட்சம் கிடைத்துவிட்டது என்பதில் எனக்கொரு திருப்தி.

அன்றைக்கு நான்காம் நாள்.

அமுதாவின் ஆவியைக் கண்ட பின் எனக்கு அடுத்த கட்டளை.

"மந்திராலயம்" செல்ல வேண்டும் என்பது தான்.

மந்திராலயா செல்ல ரயிலில் பயணமாக வேண்டி டிக்கெட் கவுண்டரில் போய் நின்றேன்.

டிக்கெட் கிடைக்கவில்லை.

ரிசர்வேஷன் இல்லாமல் பயணம் செல்ல வேண்டியதுதான் என்றெண்ணி பிளாட்பாரத்திற்கு வந்தேன்.  அங்குள்ள கூட்டத்தை பார்த்த பொழுது, இன்றைக்கு மட்டுமில்லை, இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த ரயிலில் ஏறவே முடியாது என்ற நம்பிக்கைதான் ஏற்பட்டது.

எல்லா பெட்டியிலும் ஆட்கள் நிரம்பியிருந்தனர்.  இந்த ரயிலை விட்டால் மந்திராலயா செல்ல வேறு ரயிலும் அன்றைக்கு இல்லை.  மறுநாள் வேண்டுமானால் வேறு ரயிலைப் பிடித்து வண்டி மாறி மாறி எப்படியும் மந்திராலயா சென்றுவிடலாம்.

ஆனால் இன்றைக்குத் தானே அகஸ்தியர் செல்லச் சொல்லியிருக்கிறார் என்று கிளம்பியதால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

எல்லா குறுக்கு வழியிலும் இறங்கிப் பார்த்தேன், எந்த டிக்கெட் கண்டக்டரும் என் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.

ரிசர்வேஷன் இல்லாத பெட்டியில் பயணம் செய்யுங்கள்.  ஒவ்வொரு ஸ்டேஷனில் வந்து எண்ணப் பாருங்கள்.  அந்த ஸ்டேஷனில் யாராவது இறங்கினால் இடம் தருகிறோம், என்றார்களே தவிர ரிசர்வேஷன் கிடைக்கவில்லை.

ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது.

ஒரு விதத்தில் வெறுப்பும் துக்கமும் அடைக்க கையிலிருந்த அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

"அஞ்சற்க மைந்தா! தடையின்றி உன் பயணம் நடக்கும்"  என்றார் அகத்தியர்.

எனக்கோ கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

என்னை நோக்கி வேகமாக ஓடிவந்த ஒருவர் "சார் நீங்கள் மந்த்ராலயம் தானே போகவேண்டும்.  இதோ இந்த கோச்சில் இரண்டு "சீட்" போட்டிருக்கிறேன்.  உடனே ஏறுங்கள்.  இந்த பெர்த்திர்க்குரிய கட்டணத்தை நானே கட்டிவிட்டேன்.  கிளம்புங்கள்" என்றார்.

எனக்கோ பேராச்சரியம்.

எப்படி இன்னொருவர் பெயரில் ரிசர்வேஷனில் பயணம் செய்வது.  இது குற்ரம் ஆயிற்றே என்று எண்ணினேன்.  வந்தவரோ என்னை வலுக்கட்டாயமாக அந்தக் பெட்டியில் ஏற்றி, என் பெட்டியையும் தூக்கி உள்ளே போட்டார்.  அடுத்த செகண்ட் அந்த ரயில் புறப்பட்டது.  அந்த நபரும் கண்ணிலிருந்து மறைந்தார்.  எப்படி இது சாத்தியம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்த டிக்கெட் கண்டக்டர் என்னிடம் வந்தார்.

நான் பயணம் செய்ய வாங்கியிருந்த டிக்கெட்டை அவரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தை விளக்கும்போது

அவர் சிரித்துக் கொண்டே என் டிக்கெட்டை என்னிடமே திருப்பிக் கொடுத்தார்.

"நீங்கள்"

என் பெயரை சொன்னேன்.

"அவசரப்பட்டு டிக்கெட் வாங்கிவிட்டீர்கள்.  உங்கள் பெயரில் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு "பெர்த்" பதிவு செய்யப்பட்டுவிட்டது" என்றார்.

"எப்படி? இருக்காதே"

"இதோ கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்த ஒருவர் உங்களைப் பற்றிக் கூறி அவரது டிக்கெட் என்னிடம் இருக்கிறது.  இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.  இதோ நான் அவரை அரை நிமிடத்தில் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி நான் அதைக் சரி பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி விட்டார்" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

"இப்பொழுது நீங்கள் வேறு டிக்கெட்டைக் காண்பிக்கிறீர்கள்.  சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்" என்று என்னை உட்கார வைத்தார்.

இது எப்படி நடந்தது என்று என்னால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

"யார் அவர்?" எதற்காக அன்றைக்கு மந்த்ராலயாவுக்கு டிக்கெட் எடுக்கணும்.  அதுவும் இன்றே எடுக்கணும்.  எப்படி அவருக்கு என் பெயர் தெரியும்?" என்றெல்லாம் வெகுநேரம் திகிலோடு யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவரவர்கள் ஒரு சீட்டிற்கு அலையும் போது என் பெயரில் இரண்டு பெர்த் எப்படிக் கிடைத்தது? எல்லாம் என்னைத் திக்கு முக்கட வைத்தது.  ஒரு பெர்த்தை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாமென்று நினைத்தேன்.  ஆனால் அதற்குப் பிறகு டிக்கெட் கண்டக்டரும் என்னிடம் வரவில்லை.  வேறு யாரும் வந்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை.

மறுநாள் காலை பத்துமணி.

ரயில் மந்த்ராலயா ஸ்டேஷனில் நின்றது.  முதல் தடவையாக மந்த்ராலயா செல்வதால் மெதுவாக இறங்கினேன்.

அது சின்ன ரயில்வே நிலையம் என்பதால் விசேஷமான பிளாட்பாரம் அல்லது தாங்கும் வசதி எதுவும் அப்போது இல்லை.

இங்கிருந்து ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதிக்குச் செல்ல குறைந்த பட்சம் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.  ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மந்த்ராலயா ஜீவசமாதிக்குச் செல்ல அரசாங்க பஸ் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவையோ அல்லது ரயில் அங்கு வரும்போழுதோ ஸ்டேஷன் வாசலில் வந்து நிற்கும்.

அதுவரை வெறிச்சோடித்தான் காணப்படும்.

எப்படிடா அங்கு செல்லப் போகிறோம் என்று நினைத்து ஸ்டேஷனிலிருந்து வெளி வந்த போது

ஒரு அம்பாஸிடர் கார் என்னருகே வந்து நின்றது.

சித்தனருள்....... தொடரும்!