​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 February 2013

சித்தன் அருள் - 112


அனைத்தையும் அறிந்தவர்கள் சித்தர்கள் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு.  பொதுவாகவே என்னிடம் நாடி படித்து தங்கள் பிரச்சினைகளுக்கு பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறவர்கள் நாடியில் வரும் செய்திகளை கண்டு பல வேளை பயந்து, சொன்ன பரிகாரங்களை செய்யாமல் விட்டு, பின்னர் பிரச்சினை முற்றி, வாழ்க்கை கை விட்டு போய் விடும் என்று பயந்து மறுபடியும் நாடியை நாடி வர, முன்னர் சொன்ன பரிகாரங்களை செய்யாது விட்ட தோஷமும் சேர்த்து, அதே பரிகாரம், ஆனால் சற்று கடினமான முறையில் மீண்டும் உரைக்கப்படும்.

"இதை விட முதலில் சொன்னதே தேவலாம்!" என முணுமுணுத்த பலரையும் பார்த்திருக்கிறேன்.

இறைவனில் 'சிவபெருமானை" பற்றி தவறான தீர்மானம் பலரிடமும் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  அவர் சம்ஹாரத்துக்கு அதிபதி.  அவரிடம் போய் சேர பரிஹாரம் செய்தால், என்ன கிடைத்துவிடும்.  அவர் தான் இகபர வாழ்க்கையின் அதிபதி அல்லவே என்று நினைப்பவர்கள் நிறையபேர்.  ஒரு சிலரோ இப்படி எல்லாம் நினைக்காமல் 

"சித்தர் சொல்கிறார் எதிர் கேள்வி என்ன வேண்டி இருக்கிறது.  ஆத்மார்த்தமாக செய்வோம்.  பாக்கியை அவர் பார்த்துக்கொள்வார்" என்று செய்ய அவர்கள் பிரச்சினை உடனேயே விலகியதையும் பார்த்திருக்கிறேன்.

என்னிடம் அகத்தியர் அருளும் "ஜீவநாடி" இருந்ததை போல், போகரின் ஜீவா நாடி ஒன்றும் அகத்தியர் அருளால் என்னிடம் வந்து சேர்ந்தது.  பொதுவாக அதில், போகர் மருத்துவ முறைகளை பற்றியும், இன்ன வியாதிக்கு இன்ன மூலிகை என்றும் தகவல் தருவது வழக்கம்.  ஜீவ நாடி போலவே அதிலும் போகரின் வார்த்தைகள் தங்க நிறத்தில் வந்து போகும்.  அதை படித்து பலருக்கும் போகர் அருளால் மருந்துகளை கிடைக்க வழி செய்துள்ளேன்.

ஒருநாள் இரு இளம் வயது தம்பதியர் நாடி படிக்க வந்து அமர்ந்தனர்.  இருவரையும் அமரச்செய்து விஷயம் என்னவென்று விசாரித்தேன்.

"எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் தான் ஒரு குழந்தை பிறந்தது.  அதற்கு இப்பொழுது இரண்டு வயது ஆகிறது.  பிறக்கும் போதே உடல் நலக் குறைவுடன் பிறந்துள்ளது. "

"என்ன உடல் நலக் குறைவு?"

"ஒன்றரை வயதானதிலிருந்து திடீர் திடீர் என்று உடல் முழுவதும் நீல நிறமாகி விடும்.  உடனே, குழந்தையை வாரி எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கி சென்று சிகிர்ச்சை அளித்தால் வியாதி விலகி விடுகிறது.  ஆனால் மறுபடியும் அந்த வியாதியின் தாக்கம் எப்பொழுது வரும் என்பதை எங்களால், மருத்துவர்களால்   கணிக்க முடியவில்லை.  எத்தனையோ மருத்துவ முறைகளை கையாண்டு விட்டோம்.  முதலில் மாதம் ஒருமுறை என்று வந்த உடல் நலக்குறைவு, இப்பொழுது வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது.  கடைசியாக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர்தான் இந்த தாக்கம் எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்தார். பிறவியிலேயே எங்கள் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் உள்ளதாம்.  அதனால் ரத்தம் பம்ப் பண்ணுவது சரியாக அமையாத நேரங்களில், பிராணவாயு குறைவால் உடல் நீல நிறமாகிவிடுகிறது.  இதற்கு இரண்டு வழிதான் உள்ளதாம்.  ஒன்று குழந்தைக்கு அறுவை சிகிர்ச்சை செய்து பார்க்க வேண்டும்.  ஆனால் குழந்தை அறுவை சிகிர்ச்சையை தாங்குகிற அளவுக்கு உடலில் சக்தியை பெறவில்லை.  அதனால் அறுவை சிகிற்ச்சை செய்தால் பலன் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றார்".

"சரி! இரண்டாவது வழி என்ன சொன்னார்?"

"அந்த மருத்துவர் போகர் சித்தரின் மருத்துவ முறைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்.  அதனால், போகர் சித்தர் மனது வைத்தால் மருந்து மூலம் இந்த குழந்தையை பிழைக்க வைக்கலாம் என்றார்.  மேலும் அவர் உங்களிடம் போகர் நாடியில் போகரின் உத்தரவு என்ன என்பதை கேட்டு வரச் சொன்னார்.  தாங்கள் தான் போகர் நாடி படித்து எங்கள் பிரச்சினைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினர்.

போகரின் ஜீவநாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்து "சித்தபெருமானே! இந்த தம்பதியரின் குழந்தைக்கு நல்ல சரியான ஒரு தீர்ப்பை வழங்குங்கள்" என்று மனதுள் வேண்டிக்கொண்டேன்.

நாடியில் வந்த போகர் பெருமான் இவ்வாறு சொன்னார்.

"இந்தக் குழந்தையை சிவபெருமானால் மட்டும் தான் காப்பாற்றமுடியும்.  இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அது, ஒரு வியாழக்கிழமை அன்று அலகானந்தா நதியில் மூன்று முறை மூழ்கி குளிக்கப்படவேண்டும்.  அப்படி குளிப்பாட்டும் போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.  கண்டிப்பாக சிவபெருமான் வந்து இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்" என்று கூறி உடனே மறைந்துவிட்டார்.

பொதுவாகவே போகர் சித்தர் கேட்ட கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் சொல்பவர்.  மருந்து எதையும் கூறாமல், குழந்தையை அலகாநந்தா நதியில் மூன்று முறை முக்கி குளிப்பாட்ட வேண்டும் என்று கூறியதை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.  அலகாநந்தா நதி குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற ஒன்று.  பெரியவர்களே அதில் ஒரு முறை நீராடினால் விறைத்து போவார்கள்.  அதிலும் இந்த குழந்தை ரொம்ப பலவீனமான இதயத்தைக் கொண்டு பிறந்துள்ளது.  அந்த குளிரில் மூன்று முறை முக்கி எடுத்தால் என்னவாகும்?  என்று நினைப்பு எனக்கு.

"இதை தவிர வேறு எதுவும் போகர் கூறவில்லையா?" என்று கேட்டனர்.

"போகர் சொன்னதை கூறிவிட்டேன்,  மருந்து எதுவும் சொல்லவில்லை.  அவர் சொன்னபடி செய்துவிட்டு வாருங்கள்.  கண்டிப்பாக நல்ல செய்தியுடன் திரும்பி வருவீர்கள்" என்றேன்.

சற்றும் நம்பிக்கை இல்லாமல் சோர்ந்த மனதுடன் எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.

இரண்டு மாதங்கள் வரை அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதியினர் வந்தனர்.  அந்த குழந்தையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் அவர்களால் போகர் நாடியில் வந்து சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

"உண்மை தான்.  போகர் நாடியில் வந்து சொன்னதை சாதாரண மனிதர்களின் மன நிலையில் இருந்தால் நிறை வேற்ற முடியாது தான்.  சற்றே திட மான மன  நிலையுடன் சித்தர் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள்.  எல்லாம் வெற்றி அடையும்.  சீக்கிரம் போங்கள்" என்றேன்.

"இன்னும் ஒருமுறைகூட போகரின் நாடி படித்து ஏதேனும் மருந்தை போகர் சொல்கிறாரா என்று பார்த்து சொல்லுங்களேன்" என்றனர் அவர்கள்.

மறுபடியும் நாடியை படிக்க முன்னர் சொன்னதே இப்பொழுதும் வந்ததை கண்டு மனம் தளர்ந்த அவர்களை நோக்கி,

"வியாதிக்கு காரணமான கர்மாவையே அழித்தவர் சிவபெருமான்.  உங்கள் குழந்தையை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார்.  இனிமேல் அந்தக் குழந்தையை சிவபெருமானின் குழந்தை என்ற எண்ணத்துடன் தூக்கி சென்று, போகர் பெருமான் கூறியதை நிறைவேற்றுங்கள்.  நல்லதே நடக்கும்" என்றேன்.

அந்த தம்பதியர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;

"உங்கள் வாக்கை வேத வாக்காக வைத்து, இந்த நிமிடம் முதல் அந்தக் குழந்தை "சிவபெருமானின்" குழந்தை என்ற எண்ணத்துடன் சென்று நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டு வருகிறோம்" என்று கூறி விடை பெற்றனர்.

இரு வாரங்களுக்கு பின் அந்த இருவரும் என்னை காண வந்தனர்.  கையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக விளையாடியபடி இருந்தது.  அவர்கள் முகத்தில் நிறையவே சந்தோஷம்; கூட நிறையவே புல்லரித்துப்போக வைக்கிற அனுபவங்கள்.  அந்த குழந்தையின் தந்தை நடந்ததை விவரித்தார் 

"போகர் சித்தர் சொன்னது போலவே ஹிமாலயத்தில் உள்ள அலகானந்த நதிக்கரைக்கு குழந்தையுடன் போய் சேர்ந்தோம்.  தண்ணீரின் வேகமும் அதில் உறைந்த குளிர்ச்சியின் வீரியமும் எங்களை அதிர வைத்தது.  குழந்தையை எப்படி இந்த குளிர்ந்த தண்ணீரில் மூழ்கடிப்பது? என்ற யோசனை இருமுறை எங்களை தாக்கியது.  மூன்றாவது முறையும் அந்த கேள்வி எங்களை தாக்கும் முன் சித்தர் சொன்னபடி இறைவன் நாமமான "நமச்சிவாய" என்பதை கூறிக்கொண்டே மெதுவாக ஒருமுறை பயத்துடன் முக்கினோம்.  என்ன நடந்தது என்று புரியவில்லை.  பொதுவாகவே அப்படிப்பட்ட குளிர் உடலை தாக்கும்போது குழந்தை "வீ ல்" என்று அலறியிருக்கும்.  ஆனால் அந்தக் குழந்தை சிரித்தபடி அந்த நீரின் ஸ்பரிசத்தை விரும்பியது.  அப்போது எங்கள் பக்கமாக நடந்து வந்த ஒரு சாது, "குழந்தையை என்னிடம் கொடுங்கள்.  நான் குளிப்பாட்டி பத்திரமாக திருப்பி தருகிறேன், கவலை வேண்டாம்!" என்று கூறி வாங்கி சென்றார்.

குழந்தையை வாங்கி சென்றவர் நாங்கள் நின்ற பகுதிக்கு நேராக சற்று ஆழமுள்ள பகுதிக்கு சென்று குழந்தையை பலமுறை நீரியில் முக்கியபின் சற்று அருகில் வந்து குழந்தையின் உடலை தடவி கொடுத்து, பின் தன நனைந்த வஸ்திரத்தின் ஒரு முனையிலிருந்து சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் தடவி, சிறிதளவு அதன் வாயிலும் போட்டு அதன் வலது காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு எங்களிடம் தந்தார்.  குழந்தை கிடைத்த வேகத்தில் அதன் உடலில் உள்ள நீரை துவட்டும் வேலையில் கவனத்தை செலுத்தியதில் அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டோம்.  ஒரு நிமிட இடைவேளையில் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்த சாதுவை காணவில்லை.  குழந்தையின் உடல் சூடு முன்னரை விட சற்று அதிகமாக இருக்கவே, குழந்தைக்கு எல்லாம் சரியாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊர் வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மருத்துவர்களே அசந்து போய் விட்டனர்.  எங்கள் குழந்தையின் இருதயத்தில் இருந்த ஓட்டை முழவதுமாக அடைந்து போய் இப்பொழுது பம்பிங் சரியாக நடப்பதாக சொல்கின்றனர்.  வந்தவர் யார் என எங்களுக்கு புரியவில்லை.  எப்படி குணப்படுத்தினார் எனவும் தெரியவில்லை.  ஆனால் நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் மட்டும்  நடந்துள்ளது எங்கள் நன்றியை போகர் சித்த பெருமானுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.

போகர் ஜீவ நாடியில் நடந்த அதிசயத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார் 

"இந்தத் திருவிளையாடல் சிவ பெருமான் நேரடியாக நடத்தியது.  சித்தர்களுக்கே தலையாய சித்தர் தான் ஒரு திருவிளையாடலை ஏதோ ஒரு காரணத்துக்காக நடத்த விரும்புகிறார் என்றால், எங்களுக்கு அங்கே என்ன வேலை?  சொன்னதை சொல்வதுடன் எங்கள் வேலை முடிந்தது.  அதனால் தான் எந்த மருந்தும் அந்த குழந்தைக்கு விதிக்கப்படவில்லை.  சில திருவிளையாடல்களுக்கு அர்த்தம் புரியாது.  புரிந்துகொள்ளவும் முயற்ச்சிக்கக்கூடாது." என்ற உபதேசத்துடன் நிறுத்திக்கொண்டார்.

சிவபெருமானே நம்மிடை சித்தனாக உலா வருகிறார் என்பதை அறிந்த பொழுது உண்மையில் நானே அசந்து விட்டேன்.

சித்தன் அருள்......................... தொடரும்!   

8 comments:

  1. “தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    ஓம் நமசிவாய நமக

    ReplyDelete
  2. போகரின் ஜீவநாடி தற்பொழுது யாரிடம் உள்ளது என கூற இயலுமா?

    ReplyDelete
  3. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி உள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீற!

    ReplyDelete
  4. thank you so much for this extraordinary incident with SIVA PERUMAN.

    ReplyDelete
  5. Thank you so much sir, this information is really heart touching...thank you once again.

    ReplyDelete
  6. This is senthilkumar I am in chennai. I need your contact number and we will discuss lot of. Please sent me your contact number.
    This is my contact number 9710600846 and mail: senthil@rightsourcechennai.com

    ReplyDelete
  7. இதனால் என்ன நன்மை.....

    ReplyDelete
  8. நான் அகத்தியிர் நாடி பாக்க வேண்டும் ஐயா.... குருவிடம் கேட்டு சொல்லுங்கள்.....

    ReplyDelete