​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 18 April 2013

சித்தன் அருள் - 120


அகத்தியரின் அருள்வாக்கை  சோதிடமாக எண்ணித்தான் நாடி பார்க்க வருகிறார்கள் என்பதை வெளிநாட்டில் நான் காண நேரிட்டது.  அங்கு பக்தி உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தாலும் பகுத்தறிவுவாதிகளும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

எந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டு அகத்தியர் நாடி ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்களையும் முக மலர்ச்சியுடன் வரவேற்றேன்.

வந்தவுடனே அவர்களில் ஒருவர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

"இந்த ஓலைகட்டில் என் பெயர், என் பெற்றோர் பெயர் வருமா?"

என்ன பதில் சொல்வதென்று அகத்தியரிடம் கேட்டேன்.

"வராது என்று சொல்" என்று எனக்கு உத்தரவிட்டார் அகத்தியர்.

அப்படியே நானும் அவர்களிடம் சொன்னேன்.

"அப்படி என்றால் இதை நாடி ஜோதிடம் என்று எங்களால் ஏற்க முடியாது" என்றார் வந்தவர்களில் ஒருவர்.

"அதனால் என்ன? விருப்பம் இல்லை என்றால் விட்டு விட்டுப் போங்கள்" என்றேன்.

"இல்லை, சிலர் பார்க்கும் நாடி ஜோதிடத்தில் எங்கள் பெயர், எங்களது பெற்றோர் பெயர், பிறந்த நட்சத்திரம் எல்லாம் வருகிறதே?"

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்?  இது ஜீவநாடி.  அகத்தியராக நினைத்தால் சொல்லுவார்.  இல்லையென்றால் இல்லை" என்றேன்.

அவர்கள் சில நிமிடம் மவுனமாக இருந்தார்கள்.

கடைசியாக ஒருவர் கேட்டார்.

"எனக்கு அகத்தியர் மீது நம்பிக்கை இருக்கிறது.  எனக்கு என்ன நடக்கும் என்று அகத்தியரிடமே கேட்டுச் சொல்லுங்களேன்" என்றதும் நாடியைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.

"உனக்கு பதினெட்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான்.  ஒன்றரை வருடகாலமாக புற்று நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.  மருத்துவர்கள் அவனை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.  புற்றுநோயின் உச்சகட்டம் என்று சொல்லிவிட்டார்கள்.  அவனைப் பற்றி தானே அகத்தியரிடம் கேட்க வந்திருக்கிறாய் இல்லையா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

இதனை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  அதிர்ந்து போனார்.  கண்களில் நீர் ததும்பியது.

"ஆமாம்.  இன்னும் 72 மணிநேரம் தான் உயிரோடு இருப்பான் என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்" என்றார்.

பதிலொன்றும் சொல்லாமல் மேற்கொண்டு நாடியைப் புரட்டினேன்.

"அந்த மகன் உயிர் பிழைப்பானா, மாட்டானா என்று தானே துடிக்கிறாய்?  இதை நேரடியாக வாய் திறந்து கேட்டிருந்தால் நல்ல பதிலை அப்போதே சொல்லியிருப்பேன்.  ஆனால் நீயோ இங்குள்ள சிலரோடு சேர்ந்து அகத்தியனை சோதிக்கவே நினைத்தாய்.  நீ எப்படி நடந்து கொண்டாயோ அப்படித்தான் அகத்தியரிடமிருந்து பதிலும் கிடைக்கும்.  முனிவனை சோதிப்பதற்கு உனக்கு என்ன ஆசை?" என்று ஒரு கேள்வியைத் தூக்கி போட்டார்.

கேட்டவருக்கு சப்த நாடியும் ஒடுங்கி இருக்க வேண்டும்.  நான் மவுனமாக இருந்து விட்டு மேற்கொண்டு நாடியைப் புரட்டினேன்.

"உன் பெயரை சொல்வதாலோ, உன் பெற்றோர் ஜாதகத்தைச் சொல்வதாலோ என்ன லாபம்? உன் பெயர் இதுவல்ல, உன் பெற்றோர் இவர்கள் அல்ல என்று சொன்னாலும் நீ நம்ப மாட்டாய்.  அகத்தியன் தவறுதலாக சொல்கிறான் என்று என்னையும் சபிப்பாய், என் மைந்தனையும் திட்டுவாய்.  பெயரைச் சொல்லிவிட்டால், எல்லாமே உண்மையென்று நம்புவதால், பின் என்ன சொன்னாலும், அவை பலிக்காவிட்டால் திட்டுவாய்" என்று எதை எதைஎதையோ சொன்னவர் -----

"உன் மனைவி பித்துப் பிடித்தவளாக இருந்தாள்.  இரண்டு மாதத்திற்கு முன்பு ஒருநாள், தானாகவே, ஒரு நள்ளிரவு மாடி ஜன்னலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் இல்லையா?" என்று அதிர்ச்சி தரும் நிகழ்வைச் சொன்னார்.

இதைக் கேட்டதும் அந்த மனிதர் அழ ஆரம்பித்தார். சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த பின்னர் மேலும் நாடியைப் புரட்டினேன்.

"அதனையும் விட்டுவிடு.  இங்கே இந்த அகத்தியன் முன்பு அமர்ந்திருக்கும் இந்த நால்வருக்கு எத்தனை பிரச்சினைகள் என்று சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் ஈன்றெடுத்த மகள், வேறொரு இனத்தைச் சேர்ந்தவனோடு ஓடிப்போகவில்லையா?  அதோ அந்தப் பக்கம் அமர்ந்திருக்கும் பணக்காரப் பெருமகனின் மைந்தனோ கடற்கரையில் பிணமாகக் கிடக்கவில்லயா? இதோ என் முன் நேரடியாக அமர்ந்திருக்கும் நாற்பது வயதான மாதரசியின் கணவன், இவளை கைவிட்டு போனதால் வேறொரு மனிதனோடு திருட்டுத்தனமாக இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாளே, இது எந்த விதத்தில் நியாயம்?" என்று பட படவென்று பொரிந்து தள்ளி விட்டார், அகத்தியர்.

இதை நான் படிக்க............... என் எதிரில் இருந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.  தலை குனிந்து கொண்டார்கள்.

அதை படிக்கும் பொழுது எனக்கே தர்மசங்கடமாகத் தான் இருந்தது.  இதுவரை எதையும் இலை மறை காயாக சொன்னவர், இன்றைக்கு ஏன் இப்படி மாறி மாறி பேசுகிறார் என்பது எனக்கே புரியவில்லை.

இப்படி நாடியில் அருள்வாக்கு வரும்பொழுது பிடிக்காதவர்கள் எழுந்து சென்று விடுவார்கள்.  அல்லது எரிச்சலோடு பல்லைக் கடிப்பார்கள்.  ஆனால், என் முன் அமர்ந்த இவர்களோ மவுனமாக இருந்தனர்.  அகத்தியர் சொல்வதை ஏற்கிறார்களா அல்லது வெறுக்கிறார்களா என்பதை என்னால் உணர முடியவில்லை.  ஐந்து நிமிடம் மவுனம் நிலவியது.

பிறகு முதலில் பேசிய நபர் எழுந்து கை கூப்பி "அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை.  இதற்கு முன்பு வந்த சில ஜோதிடர்கள் நல்ல விஷயம் நடக்க பத்தாயிரம் ரூபாயை எங்களிடம் வாங்கி, பரிகாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டனர்.  அதனால் எனக்கும், இவர்களுக்கும் நாடி ஜோதிடம் என்றால் அலர்ஜி.  அதனால் நம்பிக்கை இழந்து ஏதேதோ பேசி விட்டோம்.  இது போன்று அந்த நாடியில் வரவில்லை.  எங்களை மன்னித்து விடுங்கள்" என்று கண்ணீர் மல்க வேண்டினார்.  நான் மவுனமானேன்.

பின்பு அவரே தொடர்ந்தார்.

"என் மகன் கான்சர் நோயிலிருந்து பிழைப்பானா?"

அகத்தியரிடம் வேண்டி அவருக்காக நாடியைப் படித்தேன்.

"புற்று நோயின் நான்காவது நிலை என்று சொல்லி உன் மகனை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.  உண்மையில் அவனுக்கு புற்று நோய் அல்ல.  ஆனால், அதன் தொடர்பாக உள்ள ஒரு வியாதிதான் வந்தது.  மருத்துவர் கொடுத்த மருந்தால் பின்னர் அதுவே கான்சராக மாறிவிட்டது.  இது தான் உண்மை.

உடனே இவனுக்கு மாற்று சிகிட்ச்சை செய்ய வேண்டும்.  அதற்கு முன்பு யாரேனும் ஒருவர் இந்தியாவுக்குச் சென்று, திருக்கடையூர் கோவிலில் ம்காம்ரித்யுஞ்ச யாகம் ஒன்றை உடனே செய்ய வேண்டும்.  அதோடு நாற்பத்தெட்டு நாட்களுக்கு தினமும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் மிருத்யுஞ்ச யாகத்தையும், ஆயுஷ்ஹோமம் ஒன்றையும் உடனே செய்ய வேண்டும்.  அவன் பிழைப்பான்.  கவலைப்படாதே" என்று அகத்தியர் சொன்னதும் தான் தாமதம், அவர்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அதிகமாயிற்று.

"இப்போது செய்கிறோம்.  மறுபடியும் டாக்டரிடம் மாற்று சிகிற்சைக்கு வேண்டிய ஏற்ப்பாடு செய்ய முடியுமா என்றும் பார்க்கிறோம்.  ஆனால் டாக்டர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்றுதான் தெரியவில்லை" என்றனர்.  பின்பு நமஸ்காரங்களைச் சொல்லி விட்டு புறப்பட்டு சென்றனர்.

மாற்று சிகிர்ச்சையா? அதற்கு வழியே இல்லை என்று முதலில் மறுத்த டாக்டர்கள் பின்பு, மறுபடியும் கடைசி நேரத்தில் மருத்துவர் குழுவைக் கூட்டியிருக்கிறார்கள்.  அந்தக் குழு தீர விசாரித்தபின் ஒரு முடிவுக்கு வந்தது.

"இந்தப் பையனுக்கு எதற்கும் குடல் பகுதியில் அறுவை சிகிர்ச்சை செய்து கட்டியை எடுத்து விடுவோம்.  இதில் பிழைத்தாலும் சரி, பிழைக்காவிட்டாலும் சரி" என்று முதலில் முடிவெடுத்து அவசர அவசரமாக அறுவை சிகிர்ச்சை செய்திருக்கிறார்கள்.

எல்லோருடைய பிரார்த்தனையும் பலித்திருக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த அறுவைச் சிகிர்ச்சை வெற்றி பெற்று விட்டது.

பையன் பிழைத்துக் கொண்டான்.

இருந்தாலும் இன்னும் 48 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் சொன்னதால் எல்லோருக்கும் ஒருவித பயம் ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயம், இந்தியாவுக்கு வந்து திருக்கடையூர் கோவிலில் அந்த பையனுக்காக மிருத்யுஞ்ச யாகமும் செய்திருக்கிறார்கள்.  அதோடு, தொடர்ந்து தினம் ஜெபம் செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

எப்படியோ, பின்னால் நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது.

மிகப் பெரிய பொல்லாத நோயிலிருந்து அந்த பையன் தப்பித்துக் கொண்டான்.  அந்த குடும்பமும் இப்பொழுது சந்தோஷத்தில் மிதக்கிறது.

இந்த மாதிரி அதிசயங்களை அகத்தியர் எல்லோருக்கும் செய்துவிட்டால் மிகப் பெரிய மகிழ்ச்சிதான்.  சிலருக்கு எல்லாமே உடன் நடந்து விடுகிறது.  பலருக்கு சில காலம் தள்ளி நடக்கிறது.  இன்னும் ஒரு சிலருக்கு எத்தனையோ பரிகாரங்கள் செய்தாலும் நடப்பது இல்லை.

இதற்கு என்ன காரணம்?

இது பற்றி பலதடவை நானும் யோசித்தேன்.  அகத்தியரிடமே கேட்டேன்.

"எல்லோருடைய விதியையும் நான் மாற்ற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டு ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு கொடுத்து வருகிறேன்.  ஆனால் வரிசை வரிசையாகத்தான் நடக்கிறது.  ஒருவேளை நிறைய பேர்களுக்கு அருள்வாக்கினை அள்ளித் தருவதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.  அல்லது "பிரம்மா" என் வேண்டுகோளை தாமதமாக நிறைவேற்றலாம்.  சிலசமயம் அவர் விஷயத்தில் நான் தலையிடுவதை அவர் விரும்பாமலும் தடுக்கலாம்.  இன்னும் சொல்லப் போனால் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்.  அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது" என்றார்.

இதைக் கேட்டதும் என் மனதுக்கு வருத்தமாக இருந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!

7 comments:

  1. எல்லாம் அவன் செயல்

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  3. We have surrendered in his feet...he has get things correct for us and mu daughter especially .. waiting for his words, grace and blessing. Thank you sir for the update.

    ReplyDelete
  4. Sir,
    Thanks for your update,i need your cont no, iam jayanthiramesh from chennai

    ReplyDelete
    Replies
    1. I do not have any contact number. You can send email.

      Delete
  5. ஓம் அகத்தீசாய நமஹ...

    // "எல்லோருடைய விதியையும் நான் மாற்ற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டு ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு கொடுத்து வருகிறேன்.

    ---> அண்ணா... நாம்தான் பொறுமையாக இருப்பதில்லை.... ஆனாலும் இது கலிகாலம் சித்தர்களின் வாக்கு வருவதை அப்படியே ஏற்று கொள் (நம் கர்மவினை காரணம்) என்று ஆனால் நம் மனது அவ்வளவு பக்குவபடவில்லையே. இவ்வளவு இன்னல்களை எப்படித்தான் தாங்குவதோ... எவ்வளவுதான் மன உறுதியோடு இருந்தாலும் சில நேரங்களில் மனது பித்து பிடித்தது போல் ஆகி விடுகிறதே அண்ணா :-(.

    ///ஒருவேளை நிறைய பேர்களுக்கு அருள்வாக்கினை அள்ளித் தருவதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். அல்லது "பிரம்மா" என் வேண்டுகோளை தாமதமாக நிறைவேற்றலாம். சிலசமயம் அவர் விஷயத்தில் நான் தலையிடுவதை அவர் விரும்பாமலும் தடுக்கலாம். இன்னும் சொல்லப் போனால் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது" இதைக் கேட்டதும் என் மனதுக்கு வருத்தமாக இருந்தது.

    ---> இதற்கு என்ன சொல்லா அண்ணா கண்டிப்பாக மிகவும் மன வருத்தம் அடைகிறது....

    ஓம் அகத்தீசாய நமஹ...
    ஓம் அகத்தீசாய நமஹ...
    ஓம் அகத்தீசாய நமஹ...

    ReplyDelete