​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 May 2013

சித்தன் அருள் - 126

நாடி படித்து வருகிற விஷயங்களை பார்க்கிறபோது எப்போதும் எனக்கு ஆச்சரியம் தான் மிஞ்சும்.  எப்படி இத்தனை நுணுக்கமான நிகழ்ச்சிகள் அகத்தியருக்கு தெரியவருகிறது?  இந்த உலகத்தின் மொத்த ஜனத்தொகையை எடுத்தால் 1000 ம் கோடிக்கு மேல் வரும்.  ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் செய்த தவறுகளை அகத்தியர் கண்டுபிடித்து, அதுவும் இரு செவி அறியாமல் செய்த தவறை கூட கண்டுபிடித்து, சரி செய்ய ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்து, அவர்களை திருத்தி, வாழ்க்கையை செம்மை ஆக்கி அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் சந்தோஷத்தில் மிதக்க விடுகிறார் என்று நினைக்கும் போது, சித்த சக்திக்கு முன் நாம் எல்லாம் ஒரு தூசு என்று தான் தோன்றுகிறது.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

ஒரு நாள் ஒரு தாய் நாடி படிக்க வந்தாள்.

"எனக்கு இரண்டு ஆம்பிள்ளை பசங்க.  ஒண்ணு நல்லா படிக்குது.  இன்னொன்று படிக்கவே மாட்டேங்குது.  ஏதாவது பரிகாரம் இருந்தா அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க" என்று மிகுந்த சோகத்தோடு கேட்டாள்.

"படிப்பு தானே, பசங்க  அப்படியும் இப்படியுமாகத்தான் ஆரம்பத்தில் இருப்பாங்க.  கவலைப்படாதீங்க, பின்னர் எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு நாடியைப் பிரித்தேன்.

பல ஆச்சரியமான சம்பவங்களை என்னிடம் சொல்லி, படிப்பு நன்றாக அமைய சில பரிகாரங்களை செய்ய சொன்னார் அகத்தியர்.

அவர் சொன்ன பிரார்த்தனைகளைக் குறித்துக் கொண்ட அந்த பெண், "படிப்பு மட்டும் இல்லைங்க, நடவடிக்கைகளும் சரியா இல்லை.  காலேஜில படிக்கிறவன், கண்ட பொம்பிள்ளை பிள்ளைகள் கூட சேர்ந்து ஊர் சுற்றுகிறான்.  தினமும் ஏகப்பட்ட புகார் வருது.  அதாங்க எனக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கு" என்றாள், அடுத்தபடியாக.

"பையனுக்கு என்ன வயது இருக்கும்?"

"இருபது"

"இப்போது தான் இப்படி மாறியிருக்கிறானா?  இல்லை........ சின்ன வயசிலேயிருந்தே இப்படித் தானா?"

"எட்டு வயசிலேயிருந்தே இப்படித்தான்.  ஆசையும், பாசமுமாக வளர்த்தேன்.  ஆனால் அம்மா என்று கூட பார்க்காமல் எதிர்த்து பேசுவான், திட்டுவான்.  ஏன்.. ஒரு சமயத்திலே அரிவாள் மனையைத் தூக்கி என் மீது எறிஞ்சிருக்கான்.  நல்ல வேளை லேசான காயத்தோடு தப்பித்தேன்" என்று காயம்பட்ட வகிடை என்னிடம் காண்பித்தாள் அவள்.

அந்தப் பையனைப் பற்றி பல ஆச்சரியமான சம்பவங்களை, அகத்தியர் ஏற்கனவே சொல்லி விட்டதால், அந்தப் பையனின் போக்கைப் பற்றி நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"இன்னொரு பையன் எப்படி?"

"அவனைப் பற்றி எந்த குற்றமும் சொல்ல முடியாது.  பயபக்தி உள்ளவன்.  நன்றாக படிக்கிறான்.  என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான்.  ஆனால் எனக்கோ மூத்த பையன் மீது தான் ரொம்ப பாசம்" என்று கண்கலங்கி பேசினாள்.

சில நிமிடம் நான் பொறுமையாக அந்த பெண்ணையே பார்த்தேன்.

"ஏன் சார்... மூத்த பையன் திருந்துவானா?  மாட்டானா?" நம்பிக்கை இல்லாமலேயே கேட்டாள், அந்தப் பெண்.

"கவலைப்படாதீர்கள்.  அவனை திருந்த வைப்போம்" என்று வாக்குறுதி கொடுத்தேன்.

"இன்னொன்று சார்.. அவன் இவ்வளவு கெட்டவனாக மாறியதற்கு என் தந்தை கொடுக்கிற இடம் தான் காரணம்.  ஏன் தான் இப்படி இருக்கிறாரோ தெரியவில்லை" என்றும் குறைப்பட்டுக் கொண்டாள்.

"பேரன் என்கிற செல்லம் தான் இதற்கு காரணமாக இருக்கும்" என்றேன் நான்.

அவள் பதிலொன்றும் சொல்லாமல் கிளம்பினாள்.

இரண்டு மாதம் கழிந்திருக்கும்.

இந்தப் பெண்மணியின் தந்தை என்னிடம் வந்து, "என் பேரன் நிறைய தப்பு பண்ணிட்டான்.  இப்போ போலீஸ் வந்து பிடிச்சுண்டு போயிட்டாங்க.  அவனைக் காப்பாத்தணும்.  நீங்க தான் உதவி செய்யணும்" என்று மிகுந்த கவலையோடு கேட்டார்.

"போலிசே வந்து பிடிச்சுட்டு போற அளவுக்கு அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்" என்று கேட்டேன்.

"இள வயசு.  இவன் கூடச் சேர்ந்தவங்க ஒரு பெண்ணைக் கூட்டிட்டு வெளியூர் போயிருக்காங்க.  அங்கே ஏதோ ஒண்ணு நடந்திருக்கு.  அதிலே அந்த பொண்ணு செத்துப் போச்சு.  மத்த எல்லோரும் தப்பிச்சுக்கிட்டாங்க.பாவம், அப்பாவி இவன் மட்டும் மாட்டிக்கிட்டான்" என்று மிகவும் சர்வ சாதாரணமாகச் சொன்னார், அந்தப் பையனுடைய தாத்தா.

இதைக் கேட்கும் போது எனக்கு மனம் பதை பதைத்தது.

"சார்... இதற்கெல்லாம் போய் அகத்தியர் உதவி செய்வார்னு நினைக்காதீங்க.  குற்றவாளிகளுக்கு அகத்தியர் துணை போகமாட்டார்" என்று நான் சொன்னேன்.

"என்ன சார் இது... நீங்களே இப்படி முடிவெடுத்தால் எப்படி?  கொலை கேசுல இருந்து என் பேரன் தப்பிச்சு வரணும்.  அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க" என்று மிரட்டல் தொனியில் கேட்டார்.

"மன்னிச்சுக்கோங்க.  அகத்தியர் கிட்டே இதற்கெல்லாம் அருள் வாக்கு கிடைக்காது.  வேறு ஏதாவது நாடியை வேண்டுமானாலும் பாருங்கள்" என மறுத்தேன்.

அந்த தாத்தாவுக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.

"என் பேரனைப் பற்றி உண்மையைச் சொன்னதால் தானே நாடி படிக்க மறுக்கிறீர்கள்.  உண்மையைச் சொல்லாமல் இருந்தால் நாடி படித்திருப்பீர்கள் அல்லவா?" என்று ஒரு போடு போட்டார்.

"நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அகத்தியர் எனக்கு உண்மை நிலையை எடுத்துக் காட்டிவிடுவார். தெய்வ ரகசியம் என்பதால் நானும் அதை வெளியில் சொல்லுவதில்லை" என்றேன்.

"இதை நான் நம்பத் தயாராக இல்லை.  நீங்களாக எங்களை ஏமாற்ற நாடகம் போடுகிறீர்கள்".

"எனக்கு எதற்கு நாடகம் போட வேண்டும்?  நானென்ன பணத்தை எதிர்பார்த்தா நாடி படிக்கிறேன்.  எனக்கு நாடி படிக்க வேண்டியது அவசியம் இல்லை.  இது எனக்கு பிழைப்பும் இல்லை.  எனவே நீங்கள் வெளியேறலாம்" என்றேன் சற்று கடுமையாக.

சட்டென்று எழுந்தார் அவர்.  வெளியே கிளம்பப் போகிறார் என்று எண்ணினேன்.

ஆனால் நடந்ததோ வேறு!

சடாரென்று என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

"நான் சோதிடம் சொல்பவன் அல்ல.  கர்மவினை தீர அகத்தியரிடமிருந்து அருள் வாக்கைப் பெற்றுக் கொடுப்பவன்.  என்னை யாரும் அதிகாரம் பண்ண முடியாது.  மிரட்டி உருட்டி பயமுறுத்தி பலன் கேட்கவும் முடியாது.  அப்படி மீறிக் கேட்டல் அவர்களை அகத்தியர் எளிதில் விடமாட்டார்.  எனவே அடக்கி வாசியுங்கள்" என்றேன்.

இதைக் கேட்டதும் அவரது சப்த நாடியும் அடங்கிவிட்டது.

"என்னை மன்னித்து என் பேரனுக்கு வாழ்வு கிடைக்க அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார், பணிவாக. பேச்சில் பயம் இருந்தது.

"அது இருக்கட்டும்.... உங்களுக்கு ஏன் இந்தப் பேரன் மீது இவ்வளவு அக்கறை, விஸ்வாசம்?"

"சின்ன வயதில் இருந்தே செல்லம் கொடுத்து வளர்த்து விட்டேன்.  அது தான் காரணம்."

"உங்களை பற்றி அன்றைக்கே அகத்தியர் பல விஷயங்களை எனக்குச் சொல்லி விட்டார். ஆனால் நீங்கள் சொன்ன காரணம் சரியாக இல்லையே" என்றேன்.

இதைக் கேட்டதும் அந்த பெரியவர் முகம் வெல வெலத்துப் போயிற்று..

"என்ன வந்தது நாடியில்" - அவரே பதட்டத்துடன் கேட்டார்.

"சொன்னால் நம்ப மாட்டீர்களே...."

"இல்லை நம்புகிறேன்"

"ஒன்றுமே தெரியாதது போல் என்னிடமே கேட்கிறீர்கள்.  நீங்கள் செய்த ஆரம்பத் தப்பு ஒன்று இருக்கிறதே, அதை மறந்து விட்டீர்களே."

"நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை."

"எத்தனை ஆண்டு காலமாக இந்த தப்பை மறைத்து விட்டிருக்கிறீர்கள் என்று அகத்தியருக்கு தெரியும்.  நீங்கள் என்னிடம் மறைக்க முடியாது" என்ற நான், பின்பு அந்தப் பெரியவர், தான் செய்த தவற்றை அகத்தியர் சொல்லக் கேட்கட்டும் என்று நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

"இவன் பெயர் சுந்தரலிங்கம்.  இவனுக்கு பிறந்த ஒரே மகள் ஷீலாராணி.  நிறைய சொத்து சுகம்.  செல்வாக்கு இருந்தது. ஷீலாராணியை, அவள் விருப்பத்திருக்கு மாறாக ஒரு இளைஞ்சனுக்கு இவன் திருமணம் செய்து வைத்தான்.  ஷீலாராணி கர்பமானாள்.  அவள் பிரசவத்திற்காக ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.  குழந்தை பிறந்தது.  பிறந்த அந்தக் குழந்தை செத்தே பிறந்தது.  அப்போது ஷீலாராணி மயக்க முற்ற நிலையில் இருந்தாள்.

தன குடும்பத்திற்கு ஒரு அருமையான வாரிசு இல்லாமல் போயிற்றே என்ற கவலையாலும், ஷீலாராணிக்கு குழந்தை இறந்து விட்டது என்ற தகவல் தெரியாமல் இருக்கவும் நள்ளிரவு நேரத்தில் அதே மருத்துவமனையில் பிறந்த இன்னொரு குழந்தையை எடுத்து இங்கே வைத்து விட்டான்.  இந்த சதிக்கு உடந்தையாக இருந்த செவிலித்தாயை பின்பு ஊரை விட்டே விரட்டி விட்டான்.

அந்தக் குழந்தை தானே இவனது பேரப்பிள்ளை?" என்று அகத்தியர் ஒரு அதிர்ச்சிக் கேள்வியைக் கேட்ட பொழுது, அந்தப் பெரியவரின் எல்லா நாடியும் தளர்ந்து போயிற்று.

"ஒரு குடிகாரனுக்கும், நடத்தை கெட்ட பெண்ணுக்கும் பிறந்த அந்த குழந்தை, இந்த சுந்தரலிங்கத்தால் கெட்டுப் போனான்.  செல்லம் கொடுத்து வளர்த்து, அந்தப் பையனைக் குட்டி சுவராக்கினான், இல்லையா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது அவர் என் காலைப் பிடித்துக் கொண்டு அழுதே விட்டார்.

"ஷீலாராணியும் அந்தப் பையனை தன் பிள்ளை போல் வளர்த்தாள்.  ஆனால் அந்தப் பையனுக்கு அவனுடைய உண்மையான தந்தை, தாயின் குணம் தான் இருந்தது.  அவனை திருத்த முடியவில்லை.

இந்த உண்மை இதுவரை ஷீலாராணிக்குத் தெரியாது.  சுந்தரலிங்கத்திற்கு மட்டுமே தெரியும்.  இதற்குப் பிறகு ஷீலாராணிக்கு பல ஆண்டுகள் கழித்து மற்றொரு குழந்தை பிறந்தது.  இந்த குழந்தையின் பரிணாம வளர்ச்சி, ஷீலா ராணிக்கு ஒத்துப் போயிற்று இல்லையா?"

அகத்தியர் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்ததும் சுந்தரலிங்கம் நடு நடுங்கிப் போனார்.

"சார்.  இந்த விஷயம் ஷீலாராணிக்கோ, மற்றவர்களுக்கோ தெரிய வேண்டாம்.  அதோடு அந்த பையனும் இந்த போலீஸ் கேசிலிருந்து வெளிவர நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

"சுந்தரலிங்கம், இதனை மறைப்பது நல்லதல்ல.  உன் பெண் ஷீலாரணியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்.  முதலில் அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.  வளர்த்த பாசம் காரணமாக அவளே இயல்பான நிலைக்கு மாறி விடுவாள்.

உனது பேரன் செய்த தவறுக்கு, கர்மவினைப்படி சிறு தண்டனை பெற்று, தப்புவான்.  அதுவரை சில சில பரிகாரங்களை செய்து வா" என்று அகத்தியர் அருள்வாக்கு தந்தார்.

ஷீலாராணிக்கு உண்மைச் சம்பவம் தெரிந்த பிறகு நான்கு மாதம் சுயநினைவே இல்லை.  அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டாள்.  பிறகுதான் தேறினாள்.  மூத்த மகனை ஆசையோடு வளர்த்ததால் அந்த பாசம் வென்றது.  அவனையும் தன மகன் போல் ஏற்றுக் கொண்டாள்.

அந்த பையன் சிலகாலம் தண்டனை பெற்று, நன்னடத்தை ஜாமீனில் வெளியே வந்தான்.

இப்போது, அன்மீகப் பணிக்காக சேவை செய்து கொண்டிருக்கிறான்.  அவன் இப்போது என்னிடம் கேட்பது இதுதான்.

"எனது உண்மையான தந்தை - தாயை அகத்தியர் எனக்கு அடையாளம் காட்டக் கூடாதா?"

இதற்கு அகத்தியர் தான் பதில் சொல்ல வேண்டும்.  சில கேள்விகளுக்கு ஒரு போதும் அகத்தியரிடமிருந்து பதில் கிடைக்காது.  அந்த பிரிவில் சென்று இந்த கேள்வி அமர்ந்தது. இன்றுவரை அந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

சித்தன் அருள் .................... தொடரும்!

Thursday 23 May 2013

சித்தன் அருள் - 125


அகத்திய பெருமானை ஒரு சிலர் பார்க்கிற பார்வையை நினைத்தாலே "ஏன் இப்படி அறியாமல் நடந்துகொள்கிறார்கள்" என்று நினைக்க தோன்றும். பணம், சொத்து போன்றவை சேரச் சேர, எதையும் மறைத்து வைத்து அவரிடம் விளையாடலாம் என்கிற எண்ணம் சிலருக்கு தோன்றும். அகத்தியரை ஏமாற்றிவிடலாம் என்கிற எண்ணத்தில் வருகிறவர்களுக்கு, ஒன்றுமே எனக்கு தெரியாது என்கிற நிலையில் இருந்து அகத்தியர் திருவிளையாடலை நடத்துவது, நாம் முதலிலேயே அறிந்தால் "வேடிக்கை" பார்க்கலாம், இல்லை எனில் நாமும் குழம்பிவிடுவோம்.  சித்தர்களுக்கு இந்த உலகத்தில் எத்தனையோ யுகங்களுக்கு, நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு குறுப்பிட்ட இடத்தில் என்ன நடந்துள்ளது என்பது கூட மிக தெளிவாக தெரியும்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம். 

ஒரு நாள், நாடி பார்க்க வந்தவர்களில் ஒருவர், 

"இந்த இடத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டார்.  அவரை கண்டதும், அவர் ஒரு கோடீஸ்வரர் என தோன்றியது.

அகத்தியரிடம் நான் அனுமதி கேட்டேன்.

"அந்த இடத்தில் தென்கிழக்குத் திசையில் பூமி தோஷம் இருப்பதால் இதை வாங்குவது அவ்வளவு நல்லதல்ல.  சற்று பொறுமையாக இருந்தால் இதைவிட மிக அருமையான இடம் கிடைக்கும்" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

இந்த பதிலைக் கேட்டதும் வந்திருந்த அந்த கோடீஸ்வரரின் முகம் மாறியது.  சிறிது நேர சிந்தனைக்குப் பின் 

"பூமி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும்? அதைச் செய்துவிட்டால் அந்த இடத்தை வாங்கலாமா?"

"பூமி தோஷம் விலக ஹோமம் எதுவும் செய்ய வேண்டாம்.  அந்த இடத்தின் தென்கிழக்குத் திசையில் சுமார் பன்னிரண்டு அடி தோண்ட வேண்டும்.  நான்கு அடி அகலத்தில் தோண்டவும் வேண்டும்.  அப்படி தோண்டிப் பார்க்கும் பொழுது கருமையாக ஒரு பொருள் கிடைக்கும்.  அதை கைப்படாமல் பிளாஸ்டிக் மூலம் எடுத்து வெளியே தூக்கி, யாரும் கால் படாத இடத்தில் எரிந்து விட வேண்டும்.  பின்பு குளிக்கவும் வேண்டும்.  இதைச் செய்தால் போதும்.  அல்லது நம்பிக்கை இருந்தால் அந்த இடத்தின் எட்டு திசைகளிலும் கலசம் வைத்து பூசித்து, அந்த கலசத் தண்ணீரை அங்கங்கே கொட்டி விட்டால் பூமி தோஷம் விலகிவிடும்.  பிறகு இதுபற்றி முடிவு எடுக்கலாம்" என்று அகத்தியர் வழி காட்டினார்.

"எல்லாம் சரி......... அந்த இடத்தை வாங்கிய பின்னர் தானே இதைச் செய்யவேண்டும்? அதற்கு முன்னர் இதை எப்படிச் செய்ய முடியும்?" என உடனே கேட்டார் அவர்.

இதுவும் எனக்கு நியாயமாகப்பட்டது.  அகத்தியரிடம் கேட்டேன் இது பற்றி.

"அகத்தியனுக்கு தெரியாதா இது?  முறைப்படி வாங்கிய பின்னர் தான் இப்படிப்பட்ட தோஷம் போகா "புண்யா வசனம்" செய்ய வேண்டும் என்று,  இவன் ஏற்கனவே அந்த இடத்தை வாங்கி விட்டான்.  ஆனால் வாங்காதது போல் அகத்தியனிடம் கேட்கிறான்.  எதற்கு இந்த பொய் வாக்கு?  ஆகவே தான் அவனுகேற்றவாறு நானும் மாறிப் பேசினேன்" என்றதும் அந்த நபர் முகம் வாடிப் போயிற்று.

ஆனால் வாக்குவாதம் எதுவும் செய்யவில்லை.  அமைதியாக சில நிமிடம் அமர்ந்து விட்டு "வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

பின்பு சில மாதங்கள் அவரை காணவே இல்லை.  நானும் இயல்பாகவே மறந்து விட்டேன்.

"சரி! எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கும்" என்று விட்டு விட்டேன்.  இதற்கிடையில் அவரது நண்பர் ஒருவர் யதேச்சையாக என்னைப் பார்க்க வந்தார்.  பேச்சின் இறுதியில் "அந்த கோடீஸ்வர நண்பர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்டேன்.

"அவருகென்ன சார், அந்த இடத்தை வாங்கியதிலிருந்து பெரும் பணம் பண்ணுகிறார்.  தோண்ட தோண்ட அந்த இடத்தில் மிகவும் அதிசயமான கிரானைட் கற்பாறைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.  அந்த மாதிரியான அபூர்வமான கிரானைட் கல் கிடைப்பது மிகவும் கடினமாம்.  அதனால் அந்த கற்களை வெளி நாட்டிற்கு கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டிருக்கிறார்" என்றார் அந்த நபர்.

"பரவயில்லையே" என்று வாழ்த்தினேன்.

இது நடந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும்.  ஒரு நாள் காலையில் அந்த கிரானைட் கோடீஸ்வரர் என்னைத் தேடி வந்தார்.  முகத்தில் கலக்கம் இருந்தது."என்ன விஷயம்? தொழில் நன்றாக நடக்கிறது என்று கேள்விப்பட்டேன்.  மனமுவந்த வாழ்த்துக்கள்" என்றேன்.

அவர் ஒன்றும் பதில் பேசவே இல்லை.  கண்கள் கலங்கி இருந்தன.  இன்னும் சற்று நேரத்தில் "ஒ"வென்று அழுதுவிடுவார் போலிருந்தது.

"இல்லை சார்.  நான் நம்பி ஏமாந்து விட்டேன்.  பல கோடி இழப்பு ஏற்பட்டு விட்டது.  அகத்தியர் சொன்னதைக் கேட்காமல் போனேன்.  அதனால் தான் இப்போது கஷ்டப்படுகிறேன்" என்றார்.

"நன்றாக உங்கள் வியாபாரம் நடக்கிறது.  கப்பல், கப்பலாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக அல்லவா கேள்விப்பட்டேன்" என்றேன்.

"முதலில் அப்படித்தான் இருந்தது.  வெளிநாட்டவர் எனது கிரானைட் கற்களை  தட்டிப் பார்த்து ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார்கள்.  இது விசேஷமான கல் என்பதால் ஐம்பது கோடிக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.  அந்த சந்தோஷத்தில் அகத்தியர் சொன்னதை மறந்து கற்களைத் தோண்டி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தேன்.

முதலில் சென்ற கற்கள் நன்றாக இருந்தன.  பின்னர் தென் கிழக்குத் திசையில் இருந்து எடுத்த கற்கள் அத்தனையும் பொடிப் பொடியாகிவிட்டன.  அது மட்டுமல்ல....... அதற்கு பிறகு எந்த இடத்தை தோண்டினாலும் அத்தனைக் கற்களும் பூமியிலிருந்து எடுக்கும் போதே மண்ணாக உதிர்ந்து விட்டன", என்றார் அவர்.

"அடப் பாவமே" என்றேன்.

அவர் தொடர்ந்தார்.

"அதுமட்டுமின்றி முதலில் கப்பலில் அனுப்பி வைத்த கற்களும் வெளிநாட்டுத் துறைமுகத்தில் இறக்கும் பொழுதே கண்ணாடி போல் உடைந்து சிதறியதால் அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.  இதனால் எனக்கு ஒரு கோடி நஷ்டமாகி விட்டது.  பெருங் கடன்காரனாக மாறி விட்டேன்.  சில சமயம் தற்கொலை செய்து கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.  நீங்கள் தான் எனக்கு அகத்தியரிடம் கேட்டு வழி காட்ட வேண்டும்" என்று கெஞ்சினார்.

"கற்கள் பொடியாகப் போனதற்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டேன்.

:"இருக்கிறது.  நான் வாங்கிய இடத்தில் "பூமி தோஷம்" இருக்கிறது என்று அகத்தியர் ஏற்கனவே கூறி இருக்கிறார்.  தென் கிழக்குத் திசையில் தோண்டி ஒரு கருப்பு நிறப் பொருளை எடுத்துப் போடச் சொன்னாரே உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதை நான் செய்யவில்லை.  அது தான் இத்தனை நஷ்டத்திற்கும் காரணம்" என்று கண்ணீர் விட்டார்.

"சரி! இப்போதாவது அந்த தென்கிழக்குத் திசையைத் தோண்டி அந்த கருப்பு நிறப் பொருளைத் தூக்கி எறியலாமே?"

"முடியாது.  ஏனென்றால் அந்தப் பக்கம் தோண்டி அந்த மண்ணையும் கல்லையும் எடுத்து கப்பலுக்கு அனுப்பும் போது தான் ரசாயன மாற்றம் போல் வலுவான அத்தனை கற்களும் பொடிப் பொடியாகப் போயிற்று.  வேறு சாந்தி பரிகாரம் எதுவும் நான் செய்யவும் இல்லை.  இதற்கு வேறு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று முடித்தார்.

அவரைப் பார்க்கும் பொழுது உண்மையில் எனக்குப் பரிதாபமாக இருந்தது.  அதே சமயம் அகத்தியர் சொன்னதை செய்யாததால் இத்தனை பெரிய தண்டனையை அடைந்திருக்கிறார் என்பதையும் என் உள் மனம் ஏற்கவில்லை.  ஏனெனில், அகத்தியர் அத்தனை கொடூரமானவர் அல்ல.  அகத்தியருக்கு கோபம் வரும், பார்த்திருக்கிறேன்.  ஆனால் யாரையும் இது வரை சாபம் இட்டதாக எனக்கு நினைவில்லை.

இந்த நண்பர் முதன் முதலில் வாங்கிய அந்த நிலத்தை வாங்கவில்லை என்று பொய் சொன்னார்.  இரண்டாவதாக அந்த இடம் பூமி தோஷம் உள்ளது, வாங்க வேண்டாம், பொறுத்திருந்தால் இதைவிட அருமையான இடம் கிடைக்கும் என்று நல்ல வழியைத்தான் அகத்தியர் காட்டினார்.  இவர் அகத்தியர் சொன்னபடி நடக்கவில்லை அவ்வளவுதான், என்று எண்ணிக் கொண்டேன்.

அகத்தியரிடம் உத்தரவு கேட்டு அவருக்காக நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"பொறுமை இருந்திருந்தால் இவ்வளவு நஷ்டம் வந்திருக்காது.  பணத்திற்கு ஆசைப்பட்டு, அவசர முடிவு எடுத்து விட்டான்.  அந்த இடம் ஒரு காலத்தில் மயான பூமியாக இருந்தது.  சோழர்கள் அரசாண்ட பொழுது இந்த இடத்தில் தான் பல்வேறு சிறு சிறு போர்களும் நடந்தது.  ஏகப்பட்ட பேர்கள் பலியான இடம் அது.  தட்ப வெப்ப சூழ்நிலையால் அந்த இடத்தில் பாறைகள் தோன்றினாலும் பார்ப்பதற்கு வழ வழப்பான கற்களாக மாறியது.  ஆனால் இவை எல்லாம் மக்களின் உபயோகத்திற்கு ஏற்ப்புடையதல்ல.

இவன், இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் இந்த இடத்திற்கு ஐநூறு ஏக்கர் பரப்பளவில் அற்புதமான மனைவளம் உள்ள பூமி கிடைத்திருக்கும்.  சிமெண்ட் தயாரிக்க பெருமளவு மூலப் பொருள்கள் உள்ள பூமி அது.  அதை வாங்கியிருந்தால் பாரத தேசத்தில் இவன் பெரும் கோடீஸ்வரராகவும், மிகப் பெரிய தொழில் வேந்தனாகவும் மாறியிருப்பான்.  இனிமேல் அதைப் பற்றி பேசி என்ன பயன்? அந்த இடமும் இனி இவனுக்கு கிடையாது.  அதுவும் கை விட்டுப் போயிற்று" என்று முடித்துக் கொண்டார்.

"என்னதான் இதற்கு பரிகாரம்? வேறு வழியே இல்லையா? என்று குரல் தழுதழுக்கக் கேட்டார்.

"இருக்கிறது.  ஆனால் அகத்தியர் சொன்னபடி நடக்க வேண்டுமே" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

"கண்டிப்பாக நடக்கிறேன்" என்றார்.

"ஒன்று செய்.  இந்த இடத்தைப் பற்றி ஆசையை விட்டு விடு.  நேராக "கடப்பா": வை நோக்கி செல்.  சில காலம் தங்கு.  அங்கு உனக்கு வழி கிடைக்கும்" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

"அங்கு நிலத்தை வாங்கினால் கிரானைட் கற்கள் கிடைக்குமா? என் கடன் அடையுமா? அதே ஏற்றுமதியை தொடர்ந்து செய்யலாமா?" என்று கேட்டார் அந்த கோடீஸ்வரர்.

"அகத்தியனிடமே மறைக்கிறாயே, இது நியாயமா? உன்னிடம் பணமா இல்லை.  குறுக்கு வழியில் பெரும்பணம் சேர்த்து அதை உன் ஆசை நாயகியிடம் கொடுத்து வைத்திருக்கிறாயே.  அதைச் சொல்லவா? இல்லை உன் வீட்டு பூசை அறையில் ரகசிய அறையில் நீ  குறுக்கு வழியில் சம்பாதித்த கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறாயே அதைச் சொல்லவா? அந்தப் பணத்தை வைத்து பாதி தமிழ் நாட்டையே உன்னால் வாங்க முடியுமே?" என்றதும் அந்த நபர் சட்டென்று அகத்தியர் நாடியின் பாதத்தில் விழுந்தார்.

"முதலில் அகத்தியன் இட்டதொரு கட்டளையைச் செய்.  இழந்ததை மீண்டும் பெறுவாய்.  ஆனால் ஒன்று இனி வரும் தொழில் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் செலவிடு.  ஏற்கனவே வாங்கிப் போட்ட இடத்தை உன்னிடம் பணிபுரியும் வசதியில்லாத தொழிலாளர்களுக்கு இலவசமாக வீட்டு மனையாக தானம் செய்து விடு.  அப்படி தானம் செய்யும் முன்பு பூமி தோஷ பூஜையையும் செய்து விட்டு பின்பு தானம் செய்.  உன்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கடுமையாகவே அகத்தியர் ஆணையிட்டார்.

இப்படி அகத்தியர் நாடி மூலம் பதில் சொல்வார் என்று அந்த நபர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விட்டார்.

நான்கு மாதம் கழிந்தது.

ஒரு நாள் என் எதிரில் கைநிறைய பழங்களோடு வந்து நின்றார் அந்த கோடீஸ்வரர்.  வாயெல்லாம் பல்லாகத் தெரிந்தது.  சந்தோஷம் உடலெங்கும் பூரித்திருந்தது.  கூடவே அவரது மனைவியும் வந்திருந்தார்.

அன்றைக்கு அகத்தியர் போட்ட போடில் இவர் திரும்பி என்னிடம் வருவார் என்று நான் துளியும் நம்பவில்லை.  ஆனால் அவரும் அவரோடு மனைவியும் சேர்ந்து வந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

"அகத்தியர் சொன்னபடியே கடப்பாவுக்குச் சென்றேன்.  மூன்று மாதம் கடுமையாக உழைத்து அலைந்தேன்.  கடைசியில் அகத்தியர் சொன்னபடி ஒரு அருமையான நண்பர் கிடைத்தார்.  பீமா ராவ் என்பது அவரது பெயர்.  அவரது துணையால் கிரானைட் நிலம் ஒன்று மிகவும் மலிவான விலைக்கு கிடைத்தது.  நிலத்தில் எந்த விதப் பிரச்சினையும் இல்லை" என்றவர் " இன்னொரு ஆச்சரியமான சம்பவம் என்ன தெரியுமா? எந்த ஒப்பந்தத்தை வெளிநாட்டுக்காரர் ரத்து செய்தாரோ, அவரே மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்.  மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது." என்றார்.

"அது சரி! பழைய நிலத்தை என்ன செய்தீர்கள்?" என்று நான் கேட்டேன்.

"அதைச் சொல்ல மறந்து விட்டேனே.  அகத்தியர் சொன்னபடி புனர்பூசை செய்து என் நிறுவன ஊழியர்களுக்கு இலவசமாக மனை போட்டு கொடுத்து விட்டேன்.  இது உண்மை.  இனி எதையும் அகத்தியரிடம் மறைக்க மாட்டேன்.  வேண்டுமென்றால் அகத்தியரிடமே கேட்டுப் பாருங்கள்" என்றார் அந்த நபர்.

"கூட வந்திருப்பவர்" என்று மெதுவாக கேட்டேன்.

"சத்தியமாக இவள் என்னுடைய மனைவி தான் மற்ற தொடர்புகளை விலக்கிக் கொண்டு விட்டேன்" என்றார் மகிழ்ச்சியோடு.

"எப்படியோ நன்றாக இருந்தால் சரி" என்று அகத்தியர் சார்பாக அந்த தம்பதிகளை வாழ்த்தினேன்.

இதிலிருந்து ஒரு விஷயம் உறுதியாக புரிந்தது.  அகத்தியரிடம் மறைக்க நினைத்தால் ஏமாந்து போவோம்.  அவர் கோபப்பட்டாலும், யாரையும் கை விடுவதில்லை, சரணடைந்துவிட்டால்.

சித்தன் அருள் .................... தொடரும்!

Thursday 16 May 2013

சித்தன் அருள் - 124


எந்த ஒரு மனிதரையும், பிற மனிதர்கள் கைவிடுவார்கள்.  அதற்கு இரு காரணங்கள் இருக்கும்.  ஒன்று அவர் செய்கிற செயல்கள் மற்றவருக்கு பிடிக்காமல் போவதால். இல்லை என்றால் மற்றவர் ஒரு சுயநலவாதியாக இருந்து தான் நினைத்த காரியம் நடந்து முடிந்ததும் கழற்றி விடுவதினாலும் ஆகலாம்.  இரு நிலைகளிலும் அதிகம் ஸ்ரமத்தில் உழலுவது இவர் மட்டும். ஆனால், சித்தர்கள் ஒருபோதும் தன்னை நம்பி வந்தவர்களை, எவ்வளவுதான்அவர்கள் சொன்ன பேச்சு கேட்க்காவிட்டாலும், பொறுமையாக அவர்கள் உணரும் வரை அமைதியாக இருந்து, வாழ்க்கையை சீர் படுத்துவார்கள், என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், நம்மவருக்குத்தான் பொறுமையே கிடையாதே.  தானும் "கொதித்து" மற்றவரையும் குறைவாக பேசி.......... என்ன சொல்ல!  அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

மிகச் சிறந்த  நண்பர் அவர்.  ஆனால் எதைச் சொன்னாலும் அதற்கு நேர் எதிர்மறையாகப் பேசுவார்.  சிலசமயம் செயல்பட்டும் கட்டுவார்.  யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்.  அவரைத் திருத்தவும் முடியாது என்று எல்லோரும் கை விட்டு விட்டனர். அவருக்குள் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணமும், தன் வாழ்க்கையை  தான் தீர்மானிக்கிறேன் என்கிற நினைப்பும் வலுவாக் இருந்தது.  இருந்தும் "பரிசுச்சீட்டு" எடுத்துப்பார்ப்போமே என்று நமக்கு எல்லாம் வருகிற எண்ணம் போல, அடிக்கடி நாடி பார்க்கவும் வருவார்.

அப்படிப்பட்ட நண்பர் திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தார்.

"தவறாக எண்ணாதீர்கள்.  அகத்தியர் சொன்னது எல்லாம் அப்படியே நடக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  இதெல்லாம் ஏமாற்று வேலை.  அப்படி எல்லாம் நடக்காது.  அவர் சொல்வதை நம்பவே வேண்டாம் என்று நான் சொல்லி வருகிறேன்.  இப்போது நீங்கள் எனக்கு நாடி படிக்க வேண்டும்" என்றார் மிகவும் உரிமையுடன்.

சிரித்துக் கொண்டே சொன்னேன், "எதற்கு வீண் சரமம்.  உங்களுக்கோ ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.  அகத்தியர் ஜீவநாடி என்பது இல்லை. அத்தனையும் பொய் என்றும் சொல்கிறீர்கள்.  பின் எதற்கு உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டு நாடி பார்க்க வேண்டும்.  விட்டு விடுங்கள்" என்றேன்.

"பரவாயில்லை என்னதான் நடக்கிறது என்றுதான் பார்ப்போமே" என்றார் பகுத்தறிவு தன்மையோடு.

"விதி யாரை விட்டது" என்று எண்ணிக் கொண்டேன்.  படிப்பதா, வேண்டாமா என்றும் யோசித்தேன்.  ஏதேனும் சொல்லி அகத்தியரின் கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்ற பயமும் இருந்தது.  இருப்பினும் நண்பரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து நாடியைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன்.

"உன்னுடைய உடன்பிறந்த சகோதரிக்கு திருமண வாழ்க்கை சரியில்லை. புகுந்த வீட்டில் துன்பப்படுவதால் இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போனாள்.  நாடி கேட்கின்ற இந்த நேரத்தில் அவள் மாடியிலிருந்து கீழே குதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாள், சென்று பார்" என்று நாடியில் வந்தது.

அந்த நண்பர் இதைக் கேட்டு அமைதியானார்.  பதில் ஒன்றும் சொல்லவில்லை.

"என்னுடைய சகோதரி ஹைதரபாத்தில் இருக்கிறாள்.  உடனடியாக நான் சென்று பார்க்க முடியாது.  தொலை பேசியில் கேட்டு விட்டுச் சொல்கிறேன்" என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.

அப்போதெல்லாம் செல்போன் இல்லாத காலம்.  எனவே ட்ரன்க்கால் போட்டு பேசவேண்டும்.  நேரிடையாக சட்டென்று பேச முடியாது.  எனவே வெகுநேரம் காத்திருந்துதான் பேச வேண்டியிருந்ததால் அந்த நண்பர் பேசிவிட்டு பின்பு என்னிடம் மறுபடியும் வந்தார்.

"சார்.  ஹைதராபாத்திலுள்ள என் தங்கை வீட்டாரிடம் பேசிவிட்டேன்.  நீங்கள் சொன்னபடி எதுவும் அங்கு  நடக்கவில்லை என்கிறார்கள்.  அப்படிஎன்றால் அகத்தியர் வாக்கு பொய்யாகிவிட்டது என்பதுதானே அர்த்தம்?" என்று படு உற்சாகத்தோடு சொன்னார் அந்த நண்பர்.  

"அகத்தியர் சொன்னது பொய் ஆகிவிட்டதே, இப்போது அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்" என்று கேலியாய் பேசினார்.

நான் அமைதியாக் இருந்தேன்.  அகத்தியர் ஏதோ "திருவிளையாடல்" நடத்துகிறார் என்று உணர்ந்து கொண்டேன்.

"நீங்கள் உங்கள் தங்கையோடு பேசினீர்களா?" என்று கேட்டேன்.

"இல்லை"

"பின் யாருடன் பேசினீர்கள்?"

"என் தங்கையின் மாமியாரிடம் பேசினேன்." என்றார்.

"ஏன் உங்கள் தங்கையிடம் பேசியிருக்கலாமே.  அவரிடம் நேரிடையாக பேசிவிட்டு வாருங்கள்.  பின்பு அகத்தியர் நாடி படிப்போம்" என்றேன்.

இதை அவர் முழமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

"எப்படியும் என் சகோதரியிடம் பேசிவிட்டு வருகிறேன்.  அதுவரை தாங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம்" என்று சொன்னவர் அவசர அவசரமாக வெளியேறினார்.

மறுநாள் காலையில் அந்த நண்பர் ஓடோடி வந்தார்.

"சார்! ஹைதராபாத்திலிருந்து தந்தி வந்திருக்கிறது.  தங்கைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவள் ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்று மட்டும் அதில் தகவல் உள்ளது" என்று கூறியபடி அந்த தந்தியை என்னிடம் காண்பித்தார்.

"உங்கள் சகோதரிக்கு ஒன்றும் ஆகிவிடாது.  பயப்பட வேண்டாம்.  குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை செய்யாமல் அவசர அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள்.  சுமங்கலி பிரார்த்தனை செய்திருக்க வேண்டும்.  அதுவும் செய்யவில்லை.  உங்களது தாயார் முடிபோட்டு வைத்திருக்கும் ஒரு மஞ்சள் துணியில் திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை இருக்கிறது.  அதையும் செலுத்தவில்லை.  இதை செய்துவிட்டால் எந்த வித பயமும் இல்லை.  எனவே அதனை முறைப்படி செய்து விட்டு ஊருக்கு புறப்பட்டு செல்லுங்கள்.  நல்ல செய்தி வரும்.  தங்கையைப் பற்றி பயப்பட வேண்டாம்" என்று உடனடியாக அகத்தியர் நாடி படித்துச் சொன்னேன்.

"எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது.  ஆனால் இதெல்லாம் எனக்கோ அல்லது என் வீட்டாருக்கோ உடன்பாடில்லை.  சுமங்கலி பிரார்த்தனை, திருப்பதி பெருமாள் உண்டியலுக்கும், என் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதர்க்கும் என்ன சம்பந்தம் சார்.  தவறாக எண்ண வேண்டாம்.  இதெல்லாம் செய்யாமலே நான் ஹைதராபாத் சென்று விட்டு வருகிறேன்" என்றார் அந்த நண்பர்.

"அது உங்கள் இஷ்டம்.  என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டேன்.  அந்த நண்பரும் கிளம்பி விட்டார்.

ஒரு மாதம் கழிந்தது.

சென்னை பொது மருத்துவமனயிலிருந்து ஓர் போன் வந்தது.  பேசியது அந்த நண்பர்தான்.

"என் தங்கைக்கு எலும்பு முறிவு பல இடங்களில் ஏற்பட்டிருக்கிறது.  ஹைதராபாத்தில் சரியான சிகிர்ச்சை செய்ய இயலவில்லை.  சென்னை மருத்துவமனையில் இப்போது சேர்த்திருக்கிறேன்" என்றார்.

"சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறேன்" என்றேன்.

"இல்லை சார்! என்னதான் சிகிர்ச்சை செய்தாலும் இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் என் தங்கை உயிர் பிழைப்பது கடினம் என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொல்கிறார்கள்".

"சரி.  நான் என்ன செய்ய வேண்டும்?"

"மறுபடியும் என் தங்கைக்காக அகத்தியர் நாடி படிக்க வேண்டும்" என்றார் அந்த நண்பர்.

"ஏற்கனவே அகத்தியர் சொன்ன பரிகாரங்களை செய்து விட்டீர்களா?"

"இல்லை"

"பின் எதற்காக நான் மறுபடியும் படிக்க வேண்டும்?"

"அப்போது எனக்காக படித்தீர்கள்.  இப்பொழுது என் தங்கைக்காக படிக்கக் கூடாதா?" கெஞ்சினார் அவர்.

"படிக்கிறேன்.  ஆனால் அகத்தியர் ஏதேனும் பிரார்த்தனை அல்லது பரிகாரம் சொன்னால் அதை நீங்களும் செய்ய மாட்டீர்கள்.  இப்பொழுது இருக்கின்ற நிலையில் உங்கள் தங்கையும் செய்ய முடியாது.  எனவே நான் உங்களுக்காக நாடி படிக்க விரும்பவில்லை.  என்னை விட்டு  விடுங்கள்" என்று கறாராக சொல்லி விட்டேன்.

அதற்கு பிறகு அந்த நண்பரிடமிருந்து பதில் இல்லை.

பதினெட்டு நாட்கள் கழிந்தது.

அந்த நண்பர் என்னைத் தேடி வந்தார்.  முகத்தில் கவலையும், சோகமும் கலந்திருந்தது.  பேச முயன்றும் அவரால் பேசமுடியவில்லை.

"என்ன?" என்றேன்.

"என் தங்கை இப்போது அபாயகட்டத்தில் இருக்கிறாள்.  ஆபரேஷன் செய்து சரியான குணம் ஆகவில்லை.  இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் டாக்டர்கள் கெடு விதித்திருக்கிறார்கள்.  அவளை எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும்.  அது அகத்தியரால் தான் முடியும்" என்றார் அந்த நண்பர்.

"மன்னிக்க வேண்டும்.  அகத்தியர் தெய்வமல்ல.  அவர் ஒரு சித்தர்.  நாடி வந்தால் வழிகாட்டுவார். அதை செய்யவில்லை எனில் மறுபடியும் அவர் உரைக்க மாட்டார்.  நீங்களோ அகத்தியர் ஜீவநாடி என்பது பொய் என்று நினைக்கிறீர்கள்.  பின் எதற்காக இங்கு வரவேண்டும்?  பிரார்த்தனை செய்யுங்கள்.  டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.  நிச்சயம் உங்கள் தங்கை பிழைத்துக் கொள்வாள்" என்றேன்.

"வேறு வழியே இல்லையா?"

"வேறு நாடியைச் சென்று பாருங்கள்.  நல்ல வழி கிடைக்கும்" என்றேன்.

"உங்களுக்கு மனிதத் தன்மையே கிடையாதா?  ஓர் உயிர் அங்கு துடிக்கிறது, கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டீர்களா?" என்று என் மீது சாடினார்.

"நண்பரே ஏன் இந்த வேகம்.  கடந்த முப்பது ஆண்டுகளாக தினமும் நான் அகத்தியரோடு தொடர்பு கொண்டிருக்கிறேன்.  அவரோடு போராடி வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  எனக்கு அகத்தியரைப் பற்றி நன்கு தெரியும். அவர் சொன்னபடி செய்யாமல், வந்தால் நல்ல பதில் கிடைக்காது.  நானோ அகத்தியப் பெருமானோ யாருக்கும் ஏஜென்ட் அல்ல.  உங்களது குறைகளை வைத்து பணம் பிடுங்கும் எண்ணமும் எனக்கு இல்லை.  ஆனால் நீங்களோ அல்ப கண்ணோட்டத்தில் என்னையும் அகத்தியரையும் எடை போட்டு ஊரெல்லாம் பேசுகிறீர்கள்.  நானென்ன மந்திரவாதியா சட்டென்று எதையும் மாற்றுவதற்கு? விட்டு விடுங்கள்" என்றேன்.

"பிறகு என்னதான் நான் செய்ய வேண்டும்?"

"முதலில் உங்கள் தாயார் விரும்பியபடி வீட்டில் சுமங்கலி பிரார்த்தனைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.  இரண்டாவதாக, திருப்பதி கோவிலுக்கு உடனடியாக ஆளை அனுப்பி வீட்டில் வைத்திருக்கும் மஞ்சள் துணியோடு உள்ள காணிக்கையை உண்டியலில் போட்டு விடுங்கள்" என்று வழி காட்டினேன்.

"இதை இப்போது என்னால் செய்ய இயலாதே.  மருத்துவமனையில் தங்க வேண்டும்" என்றார்.

"பயப்படவேண்டாம், உங்கள் தங்கையின் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது.  இதைச் செய்ய ஆரம்பித்து விட்டாலே அவள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பி விடுவாள்.  இனி இதனைச் செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்" என்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகன்றார் அந்த நண்பர்.

ஒரு வாரம் கழிந்தது.

அந்த நண்பர் மலர்ந்த முகத்தோடு என்னிடம் வந்தார்.  கையில் இனிப்பு பொட்டலம் இருந்தது.  நான் வாய் திறந்து பேசும் முன்னரே அவரே என்னிடம் இருந்த அகத்தியர் நாடிக்கு நமஸ்காரம் செய்தார்.

"என் தங்கை பிழைத்துக்கொண்டாள்" என்றவர் என்ன நடந்தது என்ற விஷயத்தை விளக்கினார்.

"அன்றைக்கு நீங்கள் சொன்னபடியே என் தாயார் முடி போட்டு வைத்திருந்த காணிக்கையோடு திருப்பதிக்கு கிளம்பினேன்.  ரயிலில் நிற்கக் கூட இடம் இல்லை.  என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்து கொண்டே சென்ற போது யாரோ ஒருவர் என் கையைப் பிடித்து முதல் வகுப்புக்கு அழைத்துச் சென்றார்.  அங்கு தன பக்கத்தில் என்னை உட்கார வைத்தார்.

திருப்பதிக்குத்தான் தானும் போவதாகவும், அங்கு தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், அங்குள்ள பேஷ்காரிடம் சொல்லி சவுகரியமாக தரிசனம் செய்து தருவதாகவும் சொன்னார், அந்தப் பெரியவர்.  அவர் யார்?  எதற்காக தன்னிடம் பரிவுகாட்டி திருப்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை.

திருப்பதி மலைக்குச் சென்றதும் அந்த பெரியவர் அங்கிருந்த பேஷ்காரிடம் என்னைச் சுட்டிக் காட்டி ஏதோ பேசிவிட்டு சென்று விட்டார்.  உடனே என்னை அழைத்துச் சென்று திருப்பதி வேங்கடவனை ஸ்பெஷல் தரிசனத்தில் தரிசிக்க வைத்தார்.

பெருமாளை தரிசித்த பின்னர், என் அம்மா முடி போட்டு காணிக்கையாக வைத்திருந்த மஞ்சள் துணி முடிப்பை உண்டியலை திருப்பதியில் போட்டேன்.

எப்போது காணிக்கையை உண்டியலில் போட்டேனோ அந்த நேரத்தில்தான் மரணத்தருவாயில் இருந்த என் தங்கையும் கண் திறந்திருக்கிறாள்.  அவள் உயிரும் தப்பிவிட்டது.

நேற்று தான் என் வீட்டில் சுமங்கலி பிரார்த்தனையும் நடந்தது.  இப்போது என் தங்கை மிக நன்றாகப் பேசுகிறாள்.  அவள் உயிருக்கு எந்த பயமும் இல்லை, என்று டாக்டர்களே சொல்லி விட்டார்கள்.  இனி அகத்தியர் நாடியை பழிக்கமாட்டேன்" என்று நீண்ட கதையை உணர்ச்சிவயப்பட்டு சொன்ன போது நானும் மெய்மறந்தேன்.

அவரது தங்கை மாடியிலிருந்து வீழ்ந்ததற்கு காரணமானவர்கள் வேறு விதமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

ஆனால்.....

அகத்தியரிடம் நாடி கேட்டு அதை அலட்சியமாகவோ வேண்டா வெறுப்பாகவோ, நம்பிக்கை இல்லாமல் செய்தாலோ அல்லது செய்யத் தவறியவர்களுக்கு ஏனோ எந்த காரியமும் நடப்பதில்லை என்பது மட்டும் என் அனுபவ ரீதியான உண்மை.

சித்தன் அருள் .................... தொடரும்!

Thursday 9 May 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


இன்று வரை சித்தன் அருளை வாசித்து வரும் சித்தர் அடியவர்களுக்கு ஓரளவுக்கு தர்மம் எது அதர்மம் எது, எதில் சேர்ந்திருக்கவேண்டும், எதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நமது தின வாழ்க்கையில் எளிய செயல்களால் தவம், பூசை செய்து நன்மை அடைய முடியும் என்று பல சித்தர்களும் கூறியுள்ளனர்.  உதாரணமாக, (திருமூலர் என்று நினைக்கிறேன்) நமது நெற்றியை "சிவன் விளையாடும் தெரு" என்கிறார்.  உள்ளே இறை இருப்பதை கண்டு உணர்ந்ததால் நெற்றியில் திருநீர் அணிகிறேன் என்கிறார், இன்னொரு சித்தர்.    பல பெரியவர்களுடன் கலந்து உரையாடியதிலிருந்தும், சித்தர் உரைகளை படித்ததிலிருந்தும், தெரிந்து கொண்ட சில நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் நிர்பந்தப் படுத்தவில்லை.  விருப்பமுள்ளவர், இந்த தொடரில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, செயல் படுத்தி வாழ்க்கையை சீர் படுத்திக் கொள்ளலாம். 

இவற்றுக்கான ஆதாரங்களை தேடாதீர்கள்.  நடை முறைப்படுத்தி நன்மை அடையுங்கள்.

"பூசை முறை" என்று சித்தர்கள் சொல்வது "நம்முள்ளே இறையை கண்டு" மானசீகமாக செய்கிற பூசையைத்தான்.  வெளியே உருவ வழிபாட்டில் அவர்கள் செய்ததெல்லாம் உலக, மனித நன்மைக்காகத்தான்.  உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள் என்று ஒரு வழக்குச்சொல் இன்றும் உண்டு.  உண்மை.  தனிப்பட்ட மனிதனை உபதேசிக்கும் போது, அவன் கர்மா இடம் கொடுத்தால், உருவ வழிபாட்டை எதிர்த்தனர், உள் பூசையை அறிவுறுத்தினர்.  கலியின் பாதிப்பினால், உள்பூசை என்பது எல்லோராலும் முடியாது, மனித மனம் உலக இன்பங்களை நோக்கி பயணிக்கும்.  அப்படிப்பட்ட மனிதனை நல் வழிப்படுத்த எண்ணி,  பொது  நலத்திற்காக தங்கள் ஆத்ம சக்தியை பகிர்ந்து புற வழிபாட்டிற்காக லிங்கமாக அமர்ந்தனர், கோவில்களை அமைத்தனர்.  அப்பொழுதும் அவர்கள் எண்ணம் "மனித மேம்பாட்டில்" தான் இருந்தது.  உருவ வழிபாட்டை செய்கிறவன் என்றேனும் ஒருநாள் உணர்ந்து, உள் நோக்கி திரும்பட்டும் என்கிற எண்ணத்தில் தான் வெளி பூசை என்கிற உருவ வழிபாட்டையும் நிறுவினர்.  அனைத்தையும் துறந்தவர்கள், எது வந்ததோ அதையும் ஏற்றுக்கொள்கிற மனபக்குவத்தையும் கொண்டிருந்தனர்.  அதனால் எதையும் இகழவில்லை.

வாழும் முறையில் செய்கிற காரியங்களால் எப்படி மேன்மை அடையமுடியும் என்பதை பார்ப்பதற்கு முன், என் நண்பர் பகிர்ந்து கொண்ட ஒரு ஒளிநாடாவை பார்ப்போம்.  இறைவன் ஒரு "மகா சிவராத்திரியின் போது தன்னை வெளிப்படுத்திக் கொண்ட காட்சி.  அவனது கண்கள், த்ரிநேத்ரம், மூக்கு, ஜடை, முகத்தின் வடிவம் ஆகாயத்தில் தெரிந்ததை இயல்பாக படம் பிடித்துள்ளார் யாரோ ஒரு பாக்கியவான்.


சித்தன் அருள் .................. தொடரும்!

சித்தன் அருள் - 123

நாடி பார்க்க வருபவர்களில் பலவித குணங்களை கொண்டவர்கள் உண்டு. அகத்தியர் சொல்வதை அப்படியே சிரம் மேற்கொண்டு செய்து நன்மை அடைபவர் ஒரு விதம்.  அகத்தியரை மதித்தாலும் அவர் வார்த்தையை மதிக்காமல் தனக்கு தோன்றியபடி செய்து, மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, பின்னர் என்ன செய்வதென்று அறியாமல், அவரிடமே ஓடி வந்து சரணடைந்து, பின்னர் அந்த ச்ரமங்களை சிலகாலம் கூட அனுபவித்து கழித்து, நிறைய பரிகாரங்களை செய்து மீண்டும் நல்வழிக்கு வந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு நடப்பவர்கள் இன்னொரு விதம்.  எத்தனை பெரிய தவறை செய்தாலும், "சரணம்" என்று வந்துவிட்டால், சித்தர் கூட உதவுவார், என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

அன்றைய தினம் மிக அமைதியாக விடிந்தது.  நிதானமாக பூசை, த்யானம் போன்றவை முடித்துவிட்டு, நாடியுடன் வெளியே ஹாலில் வந்து அமர, 

காத்திருந்தவர்களில் 

"என் எதிர்காலம் பற்றி அகத்தியரிடம் நாடியில் கேட்டுச் சொல்ல முடியுமா?" என்று ஓர் இளம் பெண் என்னிடம் கேட்டாள்.

நாடியில் "கல்வியறிவு அற்புதம், நல்ல தொழிலும் வெளிநாட்டில் அமையும், ஆனால் நாகப் பிரதிஷ்டையை ஆகம விதிப்படி நாற்பத்தி ஐந்து நாட்கள் பூசித்து செய்யவும்" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

கொஞ்சம் நாத்திகவாதம் குணத்தில் கொண்டவள் போலும், சற்று யோசனைக்கு பின்,

"இந்த பிரார்த்தனைகளைச் செய்யாவிட்டால் என்ன ஆகும்?" என்று அந்தப் பெண் எதிர் கேள்வி கேட்டாள்.

"ஒன்றும் ஆகாது" "விதி" தன் கடமையைச் செய்யும்.  எல்லாம் இருந்தாலும் புத்திர தோஷத்தால் ஏதேனும் ஒரு குறை ஏற்ப்படும்.  அவ்வளவுதான்" என்றார் அகத்தியர்.

"நானாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்.  பயந்தோ அல்லது தலையெழுத்தே என்று நடுங்கி இந்த பிரார்த்தனையைச் செய்வேன்.  ஆனால் இதில் நம்பிக்கை இல்லாதவர்களும், வெளிநாட்டினரும், மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லையெனில் அவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுமா?" என்று மிகத்தெளிவாக கேட்டாள்..

"நீ அகத்தியனை நாடி வந்தாய், உன் எதிர்காலப் பலனைச் சொன்னேன். என்னை வந்து கேட்பவர்களுக்கு மட்டுமே வழியைக் காட்டுவேன்.  கேட்காதவர்களுக்கு நான் ஏன் வாயைத் திறக்கப்போகிறேன்.  உனக்கு புத்திர தோஷம் உண்டு.  அவ்வளவுதான் என்னால் இப்போது சொல்ல முடியும்.  இந்த தோஷம் போக பரிகாரம் செய்வதும், செய்யாததும் உன் விருப்பம்.  அகத்தியன் ஒரு போதும் கட்டாயப்படுத்த மாட்டேன்" என சுருக்கமாகவே முடித்துக் கொண்டார்.

அவள் சிறிது நேரம் தயங்கினாள்.  மௌனமாக் இருந்தாள். அப்புறம் என்ன நினைத்தாளோ, தெரியாது.  சட்டென்று எழுந்து சென்றாள்.

இரண்டு மாதம் கழிந்தது.

"நான் தான் அந்தப் பெண்ணின் தந்தை" என்று கூறி நடுத்தர வயதைச் சேர்ந்தவர் என்னிடம் வந்தார், ஒரு கடிதத்தை கொடுத்தார்.  வாங்கிப் பிரித்து படித்தேன்.

"அகத்தியர் மகானை நான் மதிக்கிறேன்.  ஆனால் பரிகாரங்களைச் செய்யாமல் வாழ்ந்து என்னுடைய புத்திர தோஷத்தை முறியடித்துக் காட்ட விரும்புகிறேன்.  ஏனெனில் எனக்கும், என்னை மணந்து கொள்ளப் போகிற அமெரிக்கா கணவருக்கும் பரிகாரம், தெய்வ நம்பிக்கை போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை.  தாங்களே வியக்கும் வண்ணம் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்து தங்களிடம் வந்து காட்டப் போகிறேன், எந்த விதப் பரிகாரமும் செய்யாமல்" என்று எழுதியிருந்தாள்.

இதை படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று பதறிப் போனேன்.  "அகத்தியரும், நீங்களும் தான் அவளுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று நா தழுதழுக்க அவள் தந்தை என்னிடம் கேட்டுக் கொண்டார். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் இந்தக் கடிதத்தை பொருட்படுத்தவே இல்லை.  அப்படியே விட்டு விட்டேன்.

ஒன்றரை ஆண்டுகள் கழிந்தது. அவளுக்கு  ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவள் தந்தை வந்து சொல்லி விட்டுப் போனார்.

இதற்கு என்ன அர்த்தமெனில், புத்திர தோஷத்திற்கு உரிய எந்த விதமான பரிகாரமும் செய்யாமல் தான் அழகான குழந்தையை அமெரிக்காவில் பெற்றெடுத்து விட்டதால் அகத்தியரின் வாக்கு பொய்த்து விட்டது என்பதை இலைமறை காயாக தன் தந்தையை விட்டு எனக்கு சொல்லச் சொல்லி இருக்கிறாள்.

இதற்கும் நான் வருத்தமோ, கோபமோ படவில்லை.  அவள் யாரோ நான் யாரோ, எதற்காக அவள் மீது கோபப் பட வேண்டும்?  அகத்தியருக்கும், அவளுக்கும் உள்ள தொடர்பு இது, என்று விட்டு விட்டேன்.

மூன்று வருடம் கழிந்தது.

திடீரென்று ஒருநாள் அவள் தந்தை வெகு வேகமாக என்னிடம் வந்தார்.

"அவள் தன் குழந்தையோடு உங்களைச் சந்திக்க வருகிறாள்.  அவள் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் போல் தெரிகிறது.  என்னிடம் அதைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.  நீங்கள் அவளுக்கு உதவ வேண்டும்" என்றார்.

"குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே?"

"இல்லை என்றுதான் தோன்றுகிறது!"

அவள் எப்படி இருக்கிறாள்?"

"டென்ஷனாக இருக்கிறாள்.  நிதானமாக பேசவில்லை."

"சரி! அவள் கணவர்?"

"அவர் அமெரிக்கர்! அவள் அவரை அழைத்து வரவில்லை".

"சரி! நாளைக்கு மதியம் வரச் சொல்லுங்களேன்" என்று அவரை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தேன்.

எதற்காக இப்போடியொரு டென்ஷன்? என்று எனக்கும் புரியவில்லை.  அவளைப் பற்றி நாடியில் கேட்கவும் மனமில்லை.  விட்டு விட்டேன்.

மறுநாள் மாலை.

அவள் தனது மூன்று வயது ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு கலங்கிய விழிகளோடு உள்ளே நுழைந்தாள்.

வந்தவளை உட்காரச் சொன்னேன்.

ஆனால் அவளால் உட்கார முடியவில்லை.  முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது குழந்தைப் பார்த்தேன்.  பார்க்க மிக அழகாக இருந்தது.  வெளியில் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும், ஏதோ ஒரு பெருங்குறை இருப்பது போல் என் கண்ணில் தென்பட்டது.

இதற்கிடையில் அவளே குழந்தையைக் காட்டி பேச ஆரம்பித்தாள்.

"இவன் ஒன்றரை வயது வரை நன்றாக பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும்தான் இருந்தான்.  அம்மா! அப்பா! என்று கூட பேசினான்.

ஆனால்,

ஒரு நாள் சட்டென்று எதையோ கண்டு மிரண்டு போனது போல் தென்பட்டான்.  என்னவெல்லாமோ செய்து பார்த்தேன்.  இவனுக்கு பேச்சே நின்று போனதால் மந்தமாகிப் போனான்.  பயந்து போன நான், டாக்டரிடம் அழைத்துப் போனேன்.

குழந்தையைப் பரிசோதித்து விட்டு, இந்தக் குழந்தைக்கு மூளை நரம்பில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.  இதனால் இவனுக்கு நிறைய மருத்துவச் சிகிர்ச்சை தேவைப்படும்.  பதினைந்து வயது குழந்தையாகும் போது இரண்டு வயது குழந்தைக்குரிய மூளை வளர்ச்சிதான் இருக்கும்.  வேறு வழியில்லை" என்று கை விரித்து விட்டார்.

"இப்படியொரு அதிர்ச்சியை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.  என் குழந்தையை அகத்தியர் தான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்று அழுதாள்.

மீண்டும் அந்தக் குழந்தையை உற்றுப் பார்த்தேன்.

"கூப்பிட்டால் திரும்பி பார்க்க முடியாது.  பசியெடுத்தால் வாய் திறந்து கேட்க முடியாது.  பாத்ரூம், சிறுநீர் வருவதை அவனால் சொல்லத் தெரியாது.  உடம்பில் வலி ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்டி பெற்றோரின் உதவி கேட்க முடியாது.

மற்ற குழந்தைகளிடமிருந்து பிரித்துதான் தனியாக அவனுக்கு கல்வி சொல்லித் தரவேண்டும்.  சில சமயம் அவன் என்ன செய்கிறான் என்பதை அவனால் புரிந்து கொள்ள இயலாது.  பேச முடியாத குறை, எதையும் சண்டை போட்டு போராடி பெற்றுக் கொள்ள முடியாத ரகம்; இதனால் தனைத்தானே கடித்துக் கொள்வது......" என்று அவள் கதறியபடி கொட்டித்தீர்த்தாள்,

அவள் தனது குழந்தையைப் பற்றிச் சொல்லும் பொழுது உண்மையில் அப்போது நான், நானாக இல்லை.  துடித்துவிட்டேன்.

குழந்தையே இல்லை என்றால் கவலை இல்லை.  குழந்தை பிறந்தும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வாழ்க்கையில் நிம்மதியே இல்லை என எண்ணத்தான் தோன்றியது.  அவளுக்கும், அந்தக் குழந்தைக்கும் என்னால் ஒரு சொட்டுக் கண்ணீர்தான் விட முடிந்தது.

மனம் நிறைய வேதனையுடன் அகத்தியரிடம் வேண்டிக் கொண்டேன்.  அகத்திய பெருமானே நல்வாக்கு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்தபடி நாடியைப் பிரித்தேன்.

"இது அவரவர் கர்மவினை" என்று சட்டென்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.  வேறு எதுவும் வாக்கு வரவில்லை.  பல முறை பிரார்த்தனை செய்து நாடியை திறந்த போதும் அகத்தியர் எதுவும் சொல்லவில்லை.

புத்திர தோஷம் பற்றி முன்னதாகவே சொன்ன பிறகும், அதை ஏற்காமல் தன்னை அவமதித்ததால் அவளுக்கு அருள்வாக்கு சொல்லாமல் அகத்தியர் கோபமாக இருப்பதை அறிய முடிந்தது.

அவளிடம் இதை தெரிவித்து மானசீகமாக அகத்தியரிடம் மன்றாடி, மனம் உருகி பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.  நானும் என்னுடைய பங்கிற்கு அகத்திய பெருமானை மனம் உருகி வேண்டினேன்.

"தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்துள்ளனர்.  அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அகத்தியரே கோபப்பட்டால் அது முறையாகுமா? மனம் திருந்தி வந்தவர்களுக்கு உதவவேண்டியது அகத்தியரின் கடமை...." என்று பலவாறாக மன்றாடி வேண்டினேன்.  அதன் பிறகு அகத்தியர் கோபம் தணிந்து பதில் சொன்னார்.

"அன்றைக்கே யாம் சொன்னோம்.  ஆங்கோர் இன்னல் தீர நாகம் தன்னை ஆகம விதிப்படி நாற்பத்தைந்து நாட்கள் பூசித்து அருகிலுள்ள கோவிலில் வைக்கச் சொன்னேன்.  கேட்டாள் இல்லை.  இப்போது வந்து புலம்புவதில் என்ன பயன்?"

"அகத்தியன் தெய்வமல்ல.  ஆனால் நல்வழியைக் காட்டுபவன்.  பிரார்த்தனை செய்தால் விதிமகளிடம் போராடி விதியை மாற்றிக் கொள்ளலாம் என்று அற நிலைக்கு வித்திடுபவன்.  இந்தச் சொல்லை அவமதித்ததால் ஏற்பட்ட விளைவுதான், இது.  இனி என்ன செய்வது?  சில பிரார்த்தனைகளை இன்னும் பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து செய்யத்தான் வேண்டும்.  இந்த நிலையிலிருந்து இந்தக் குழந்தை பிழைத்து மாறி விடும் என்றாலும் அவனுக்கு திருமணம் என்பது ஒரு கேள்விக் குறியாகவே இருக்குமே" என்று சொன்ன அகத்தியர், "அகத்தியனை இவள் நாடி வந்ததால் இவளது குழந்தையை மற்ற குழந்தை போல் மாற்ற முயற்சிக்கிறேன்" என்றார்.

இதை கேட்டதும் தான் அவளுக்கு உயிரே வந்தது.  ஆனந்தத்தினாலோ அல்லது நல்ல வாழ்க்கை கிடைக்க அகத்தியரே முயர்ச்சிப்பதினாலோ பரவசப்பட்டாள்.

ஐந்து நிமிட அவகாசத்திற்கு பின் அகத்தியர் ஜீவநாடியை மீண்டும் படித்த பொழுது........

"அந்தக் குழந்தை காலில் அணிந்திருக்கும் ஷூவை முதலில் கழற்றி வாசலில் தூக்கி ஏறி" என்றார்.

தொடர்ந்து கூறும் போது, "உன் அமெரிக்க வேலைக்காரியை உடனடியாக மாற்று.  இதனால் தான் பிரச்சினையே உருவாகியிருக்கிறது" என்றார்.

மூளை வளர்ச்சியற்ற அவளின் குழந்தைக்கு மூலிகை மருந்து ஏதாவது தருவார் என்றுதான் நானே எதிர் பார்த்தேன். ஆனால் அகத்தியர் வேறு விதமாகச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

"குழந்தையின் காலில் இருந்த "ஷூ"வைக் கழற்றி வெளியே வீசுக என்று சொன்ன போது அகத்தியரை அவமதித்து விட்டதாக எண்ணித் தான் இப்படிச் சொல்கிறாரோ என எண்ணிக் கொண்டேன்.

ஆனால்

அந்த "ஷூ"வை அந்த குழந்தை அணியும் போதெல்லாம் ஒரே பதற்றமாக பயந்து கொண்டிருக்கும்.  அந்த "ஷூ"வின் அடியிலிருந்து வெளிவரும் சப்தம் அந்தக் குழந்தையை அச்சுறுத்த வைக்கும் என்பதை பெற்றவர்களும் உணரவில்லை.  மற்றவர்களுக்கு தெரியவில்லை.

அந்தக் குழந்தை மற்ற "ஷூ" அணியும் பொழுது எந்த சப்தமும் வராது.  அதனால் அது இஷ்டப்படி குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்.  இந்த சப்தம் வரும் "ஷூ"வின் அடிப்பாகத்தில் உள்ள செப்புத் தகட்டில் அதர்வண வேதத்தின் பாதிப்பு இருப்பதால் அது குழந்தையை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அகத்தியர் ஒருவரால், மட்டுமே அன்றைக்குக் கண்டுபிடிக்க முடிந்தது.

அகத்தியர் சொன்னபடி அவள், அந்த "ஷூ"வைக் குழந்தையின் காலில் இருந்து கழற்றியதும் குழந்தையின் முகத்தில் ஆறுதல் வந்தது.  சிறுது நேரம் கழித்து குஷியாக விளையாட ஆரம்பித்தது.

"எதற்காக அகத்தியர் "ஷூ"வைக் கழற்றச் சொன்னார்?" என்று அவள் கேட்டாள்.

"அந்த "ஷூ"வுக்கு அடியில் குழந்தைகளை குஷிப் படுத்துவதர்க்காக வைக்கப்பட்ட இசைக்கருவியில் ஒரு சிறு செப்புத் தகடு எப்படியோ வந்துவிட்டது.  அது அதர்வண வேதத்தின் பாதிப்பைக் கொண்டது.  அது குழந்தையை பலவாறு பயமுறுத்திக் கொண்டிருந்தது.  அதை எடுத்து விட்டதால் இப்போது குழந்தை சந்தோஷமாகக் காணப்படுகிறது" என்று அகத்தியர் சொன்னதை சொன்னேன்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன அவள், "இந்த ஷூவை வாங்கி ஒன்றரை வருஷம் ஆகிறது.  ஆனால், அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை.எப்போதாவது ஒருமுறை தான் பயன்படுத்துவோம்.  நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.  அகத்தியருக்கு என் நன்றிகள்" என்றாள்.

"எல்லா ஷூவிலும் இம்மாதிரி இருப்பதில்லை.  ஏதோ தப்பித் தவறி வந்திருக்கிறது.  இனிமேல் பயப்பட வேண்டாம்.  இப்பொழுதே குழந்தை பாதி குணம் ஆகிவிட்டதாக எண்ணிக் கொள்ளவும்" என்றேன்.

"அது சரி! அமெரிக்காவிலும் வேலைக்காரியையும் உடனே மாற்றுக என்றாரே? அதற்கு ஏதாவது காரணம் உண்டா?" என்று கேட்டாள்.

இதற்கு அகத்தியர் பதில் அளிக்கும் போது"அதை இப்போது முழுமையாக உரைக்க முடியாது.  அது எப்படி என்பதை உங்கள் வீட்டு ஒளிப்பட நகலை பார்த்து தெரிந்து கொள்க" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.  உடனடியாக அமெரிக்காவிலுள்ள தன் கணவருக்கு தொடர்பு கொண்டு, வீட்டிலுள்ள வீடியோவை போட்டு பார்க்க சொன்னாள்.

கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் குழந்தையை கண்காணிக்க வேலைக்காரியை நியமித்து செல்வது வழக்கம்.

அப்படித்தான் அவர்களும் ஒரு வேலைக்காரியை தன் குழந்தைக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்தக் குழந்தை சற்று அடம் பிடித்ததால் அந்தக் குழந்தையை பயமுறுத்தி மிரட்டி அடக்கப் பார்த்து இருக்கிறாள் அந்த வேலைக்காரி.  பெற்றோர் இல்லாத சமயத்தில் அந்த வேலைக்காரி மிரட்டி பயமுறுத்தி குழந்தைக்கு உணவு கொடுத்ததால், அந்த குழந்தை மிரண்டு அதிர்ச்சி அடைந்து மூளை நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தான் தெரிய வந்தது.

அவள் கணவர், அந்த வேலைக்காரிக்குத் தெரியாமல் வைத்திருந்த கண்காணிப்பு வீடியோவில் அந்த வேலைக்காரியின் மிரட்டல் நடத்தை பதிவாகியிருந்ததை பார்த்துவிட்டுச் சொன்னார்.

அடடா, இத்தனை நாளுக்கு இதைப் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று அங்கலாயித்துக் கொண்டாள்.  இனிமேல் அந்த வேலைக்காரி வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் இங்கிருந்தபடியே தன் கணவருக்கு உத்தரவும் போட்டாள்.

அந்த "ஷூ" அணிந்திருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம், வேலைக்காரி அந்தக் குழந்தையை தன் கட்டுப்பாடிற்குள் கொண்டு வர மிரட்டியது ஆகியவை அந்தக் குழந்தைக்கு மூளைச் சிதைவை உண்டு பண்ணியது என்பதை அகத்தியர் நாசூக்காக தன் நாடி மூலம் அவளுக்கு எடுத்துக் காட்டியது எனக்கு எல்லாமே பெரும் ஆச்சரியம்.

அகத்தியரிடம் அவள் கெஞ்சிக் கேட்டாள், "இனிமேலாவது என் குழந்தை சரியாகி விடுவானா?"

இதற்கு அகத்தியர் சிரித்துக் கொண்டே இருந்தார்.  பதில் எதுவும் வரவில்லை.

"ராமேஸ்வரம் சென்று ஆங்கோர் தர்ப்பணம் செய்துவிட்டு வா மேற்கொண்டு உரைக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார்.

ஆயிரம்கோடி நமஸ்காரங்களை அகத்தியருக்குச் சொல்லிவிட்டு, ராமேஸ்வரம் போய் விட்டு வருவதாக கிளம்பினாள்.

அவள் சென்று வெகுநேரம் ஆனா பின்பு கூட நான் இயல்பான நிலைக்கு வரவில்லை.  எப்படி அகத்தியரால் இதையெல்லாம் எடுத்து காட்ட முடிகிறது என்று மெய்மறந்து போனேன்.  இயல்பான நிலைக்கு வர எனக்கே பலமணி நேரம் ஆயிற்று.

பத்து நாட்களுக்குப் பின்.......

அவள் மறுபடியும் என்னைப் பார்க்க தன் குழந்தையோடு வந்தாள்.  அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவிருந்தது.  ராமேஸ்வரம் சென்று தர்ப்பணம் செய்து விட்டதாகச் சொன்னாள்.  தான் அமெரிக்கவாசி என்று தெரிந்ததால் நிறைய பணம் கேட்டதாகவும் ஆனால் மந்திரங்களை உருப்படியாகச் சொன்னார்களா என்பது தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அகத்தியரின் நாடியைப் புரட்டினேன்.

"விதியை வெல்ல பிரார்த்தனை உதவும் என்கிற உண்மையை இப்போதாவது அவள் தெரிந்து கொண்டாளே, அது போதும்.  நாகப் பிரதிஷ்டையை நல்ல படியாக பூசித்து, கோயிலில் வைக்கட்டும்.  அதோடு வல்லாரை, கருந்துளசியை பொடி செய்து தினம் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அந்தக் குழந்தை சாப்பிட்டு வரட்டும், படிப்படியாக குழந்தை குணமடைவான்" என்றார்.

பன்னிரண்டு வருஷ காலம் ஆயிற்று.

இப்போது அவள் பையன் மற்ற குழந்தைகளுக்கு இணையாகப் படிக்கிறான்.  ஓட்டப்பந்தயம் ஓடுகிறான்.  ஆரோக்கியமான சூழ்நிலைக்கு ஏறக்குறைய வந்துவிட்டான், என்று அவளும் சொல்கிறாள்.

அவள் சார்பில் அவளது தந்தையும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லியும் வருகிறார்.

இன்னும் நான்காண்டு காலத்தில் அவன் முழு மனிதனாக முற்றிலும் மாறிவிடுவான் என்று அகத்தியரும் வாக்கு அளித்திருப்பதால் அந்தப் பையனுக்கு அவள் "அகத்தியன்" என பெயர்  இட்டாள்..

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 2 May 2013

சித்தன் அருள் - மிகப் பெரிய ஏக முக ருத்ராக்ஷம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஏதேனும் அபூர்வ தகவல் கிடைத்தால் அதை நான் மட்டும் அனுபவிக்காமல் எல்லோரும் தெரிந்துகொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் பலரிடமும் பகிர்ந்து கொள்வது உண்டு.  ஏனோ என்னால் அந்த மன நிலையை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் ருத்ராக்ஷம் பற்றி சிறிது ஆராய்ச்சி செய்த போது மிகப் பெரிய ருத்ராக்ஷம் எங்கு இருக்கும்? என்ற கேள்வி என் மனதுள் எழுந்தது. சரி! வலைப்பூவை துழாவி பார்ப்போம் என்று நினைத்த போது கிடைத்த தகவலை கீழே தருகிறேன்.  உண்மையிலேயே ஒன்றரை அடி ருத்ராக்ஷம், அதுவும் "ஏக முகத்துடன்" ஒரு அகத்தியர் சீடரிடம் இருக்கிறது என்று அறிந்த பொழுது மனம் பூரித்து விட்டது.

தமிழக கேரளா மலை பிராந்தியத்தில் "கல்லார்" என்கிற இடத்தில் அகத்தியருக்கு ஒரு ஆஸ்ரமம் அமைத்து திரு தவயோகி தங்கரசன் சுவாமிகள் என்பவர், அந்த ஆஸ்ரமத்தில், ஒன்றரை அடி ஏக முக ருத்ரக்ஷத்தை வைத்து லிங்கமாக பாவித்து பூசை செய்து வருகிறார்.  அந்த ஒளி நாடாவை பாருங்கள்.


ஓம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் - 122


தனது ஒரு மகளை அழைத்துக் கொண்டு என்னை பார்க்க வந்தனர் ஒரு பெற்றோர்.

அவர்களை வரவேற்று அமரச்செய்து "வந்த விஷயம் என்ன?" என்று கேட்டேன்.

அதற்கு அந்தத் தாய்

"இவள் என் மகள்.  அவளுக்கு முப்பத்திரண்டு வயது ஆகிறது.  இன்னமும் பருவம் அடையவில்லை.  இவள் பருவம் அடைவாளா?  இவளுக்கு திருமணம் நடக்குமா?  வாரிசு பாக்கியம் இருக்குமா? என்று அகத்தியரிடம் நாடியில் கேட்டுச் சொல்லுங்களேன்" என்றார்.

இந்த மாதிரி உடல் நோயுடன் வருபவரிடம் ஒரு சில கேள்விகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.  அது போல் அவர்களிடமும் பொதுவாக கேட்டேன்.

"டாக்டர்களிடம் இது பற்றி கேட்டீர்களா?"

"கேட்டோம்.  அதற்குரிய வாய்ப்பே இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறிவிட்டனர்.  அகத்தியர் தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்" என்று கண்ணீருடன் வேண்டினர்.

அகத்தியரிடம் அவர்களின் பிரச்சினைக்கு வழி கேட்கலாம் என்று, நாடியை பிரார்த்தனை செய்தபின் திறந்து படிக்க தொடங்கினேன்.

அதில், பல்வேறு முன் ஜென்ம தோஷங்களை விடாமல் சொல்லி, சதுரகிரியில் அல்லது கொல்லிமலையில் விளையும் கருதோன்றி மூலிகைகளைப் பற்றி விளக்கி, கலப்படமில்லாத அந்த மூலிகைச் சாற்றைப் பற்றியும் பக்குவமாக சொன்னார்.

"இந்த மூலிகைகள் பத்து மாதத்திற்கு ஒரு முறைதான் வளரும்.  எனவே பொறுத்திருந்து, அந்த மூலிகைச் சாற்றை காட்டிலுள்ள சித்த வைத்தியர் மூலம் ஒரு அமாவாசை விடியற்காலையில் உட்கொண்டால், அதற்ககு பிறகு பதிமூன்று மாதங்கள் கழிந்து பருவநிலை அடைவாள்" என்று நீண்டதோர் விளக்கத்தை அளித்தார்.

"திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெரும் பாக்கியம் உண்டா? என்றாள், அந்தப் பெண்ணின் தாய்.

"அந்த பாக்கியம் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏற்படும்" என்றார் அகத்தியர்.

இந்த வார்த்தையைக் கேட்டு உண்மையிலேயே அந்த பெற்றோர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் சந்தோஷப் படவில்லை!

மவுனமாக இருந்தார்கள்.

இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பெண்ணோ தலைகுனிந்தபடியே இருந்தாள்.  அவள் கண்களில் இருந்து நீர் வடிந்தது.

அந்தப் பெண்ணின் தந்தை பேசத் தொடங்கினார்.

"சார்.  எங்களை தவறாக எண்ணக் கூடாது.  இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு எல்லா மருத்துவரிடமும் சென்று காட்டினேன்.  இவள் பருவம் அடைவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனெனில் கருப்பை மிகவும் சுருங்கி, செயல் அற்று போய் விட்டது.  எந்த மருத்துவச் சிகிர்ச்சையாலும் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டார்கள்" என்றார்.

எனக்கு உள்ளுக்குள் சிறு அதிர்ச்சிதான்!

கருப்பையே குறையோடு காணப்படும் பொழுது எப்படி சினை முட்டைகள் தோன்றும்?  பருவம் அடைவதற்கு வாய்ப்பே இல்லையே?  அப்படியிருக்க அகத்தியர் எப்படிச் சொன்னார்? என்ற கேள்வி எழுந்தது.

அந்தப் பெரியவர் சில மருத்துவச் சான்றிதழ்களை என்னிடம் கட்டினார்.  இவளுக்கு கருப்பையே இல்லை என்று ஓர் சான்றிதழ்.  கருப்பை இருக்கிறது, அது செயல்படவில்லை என்று இன்னொரு சான்றிதழ்.

வலது பக்கம் கடைசி விலா எலும்பு இல்லாததால் எப்படியும் இவள் பருவம் அடைந்து குழந்தை பெறும் பாக்கியம் உண்டு.  இதற்கு எட்டு ஆண்டுகள் தீவிரமாக மருத்துவச் சிகிர்ச்சை பெற வேண்டும். இருப்பினும் அறுதியிட்டு முழுமையாக உறுதிதர முடியாது என்று புகழ் பெற்ற பெண் டாக்டர் கொடுத்த சான்றிதழை பார்த்தபொழுது எனக்கே "பகீர்" என்றது.

அகத்தியர் என்னடாவென்றால், சர்வ சாதாரணமாக இவள் பருவமடைவாள், மூலிகைச் சாரை உண்டு வாழ்ந்தால் போதும் என்று சொல்லி விட்டாரே, இதை எப்படி நம்புவது? என்று யோசித்துப் பார்த்தேன்.

அவர்களிடம் கடைசியாகச் சொன்னேன்.  "நீங்கள் அகத்தியரிடம் கேள்வி கேட்டீர்கள், அவரிடமிருந்து நல்ல பதிலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  இதற்கு மேல் என்னால் விளக்கம் தர இயலாது.  நீங்களாயிற்று, அகதியராயிற்று" என்று தான் என்னால் சொல்ல முடிந்தது.

"நாங்க அகத்தியரை நம்பித்தான் கடைசியாக இங்கு வந்திருக்கிறோம்.  அவர் சொன்னபடி மலைகளுக்குச் சென்று மூலிகைகளை எப்பாடு பட்டேனும் பெற்று சாப்பிடச் சொல்கிறோம்.  ஆனால்..."

"என்ன ஆனால்?"

"நாங்கள் மலையிலிருந்து வாங்கும் மூலிகைகள் உண்மையானதா?  அல்லது போலியானதா? என்பதைப் பற்றி அகத்தியர் தான் வழிகாட்ட வேண்டும்.  அதற்கு உதவுங்கள்", என்றார் அந்த பெண்ணின் தந்தை!

"அதற்கென்ன?  வாங்கி வாருங்கள்.  பார்த்து சொல்கிறேன்" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

ஆறு மாதம் கழிந்திருக்கும்.

ஒரு நாள் மூன்று பாட்டில்களில் ஏதோ ஒரு தைலத்தைத் தூக்கிக் கொண்டு அந்த பெண்ணின் தந்தை என்னிடம் வந்தார்.

"பொதிகைமலை, சதுரகிரி மலை, கொல்லி மலைகளில் கஷ்டப் பட்டு தேடி மூன்று விதமான தைலங்களை கொண்டு வந்திருக்கிறேன்.  இவைதான் கருதோன்றி தைலமா?  இவை கருப்பை தோஷ நிவாரணம் தருமா? என்று தெரியவில்லை.  இதில் எதை உட்கொண்டால் இந்தப் பெண்ணுக்கு கருப்பை வளரும்? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

அகத்தியரை வேண்டிக் கொண்டு நாடியைப் புரட்டினேன்.

"இந்த மூன்றுமே கருப்பை தோஷ நிவாரண மூலகை தைலங்கள் அல்ல.  அந்த மூன்றும் கலந்த செந்நிறமாக ஒரு அளவு மூலிகைச் சாறு கிடைக்கும்.  இது பொதிகை மலை உச்சியில் புலி, சிறுத்தைகள் உலாவும் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நீர் வீழ்ச்சிக்கு இடது பக்கத்தில் அமைந்துள்ள குகைக்கு அருகே வளர்ந்திருக்கும் செடியைப் பறித்து ஆறு மாதம் பக்குவப்படுத்தி தருவது.  அதுதாண்டா கருப்பை தோஷ நிவாரண மூலிகை.  இந்த மூலிகை எல்லாம் சரியானதில்லை" என்று விளக்கம் கொடுத்தார், அகத்தியர்.

"இந்த தகவலை அன்றைக்கே அகத்தியர் கொடுத்திருந்தால், இன்றைக்கு அதைக் கொண்டு வந்திருப்போம்" என்று அங்கலாய்த்தார் அந்தப் பெண்ணின் தாயார்.

"அன்றைக்கு அகத்தியர் அருள்வாக்கை கேட்க வந்திருந்த போது உங்களுக்கு அகத்தியர் மீது சிறிதும் நம்பிக்கை இல்லை.  தற்கால மருத்துவர் சொன்னதைத்தான் முழுமையாக நம்பினீர்கள்.  அதனால் தான் அகத்தியன் வாய் திறக்கவே இல்லை" என்று சட்டென்று மறுமொழி சொன்னார், அகத்தியர்.

இது உண்மைதான், ஏனெனில் நாடி பார்க்க வரும் பெரும்பாலானவர்களுக்கு அகத்தியர் அருள்வாக்கு இது என்று எண்ணுவதில்லை.  ஒரு சாதாரண ஜோதிடரிடம் ஜோதிடம் பார்ப்பதுபோல் பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.  தெய்வ வாக்காக - சித்தர் வாக்காக எண்ணுவதில்லை.

இப்படிப்பட்ட மனிதர்களை அகத்தியர் முன் கூட்டியே அடையாளம் கண்டு கொண்டு அவர்களது அவ நம்பிக்கைக்கு ஏற்றவாறே பதில் சொல்லிவிடுகிறார்.  ஏனெனில் அவர்கள் முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை அல்லது பரிகாரங்களை செய்வது இல்லை.  இதைப் பற்றி அகத்தியரும் கண்டு கொள்வதில்லை.

பின்னர் எதுவும் நடக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு வேறு இடம் நோக்கிச் செல்க என்று பட்டவர்த்தனமாக சொல்லி விடுகிறார்.  இதனால் எந்த நஷ்டமும் அகத்தியருக்கு இல்லை.

அகத்தியர் சொன்னதை இப்போதுதான் அந்த பெண்ணின் தாயார் ஒத்துக் கொண்டாள்.

பொதிகை மலைக்குச் சென்று அகத்தியர் சொன்ன அந்த மூலிகைகளைப் பறிப்பதாக அந்த பெரியவர் சொல்லிவிட்டு விடை பெற்றார்.

ஒரு மாதம் கழிந்தது.

"சார்! இப்போது பொதிகை மலைக்குச் செல்ல முடியாதாம்.  வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.  ஏப்ரல் கடைசியில் அல்லது மேய மாதம் பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி தருவோம்.  அப்போது சென்று உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள்" என்று சோர்ந்து போய் சொன்னார்.

"கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்.  வேறொன்றும் செய்ய முடியாது" என்று நானும் ஒதுங்கிக் கொண்டேன்.

கடைசியாக பலமுறை வற்புறுத்தியதின் பேரில் அகத்தியர் நாடியை, அந்த நபருக்காக படித்த பொழுது.........

"இன்னும் மூன்று மாதத்திற்குள் பொதிகைப் பயணம் இருக்கும்.  அதை பயன்படுத்திக் கொண்டால் கருப்பை தோஷ நிவாரண மூலிகை கிடைக்கும்" என்று பதில் வந்தது.

நான்கு மாதம் கழிந்தது.

அந்தப் பெண், அவளுடைய பெற்றோர் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு ஒரு பாட்டிலில் அந்த மூலிகை தைலத்தை என்னிடம் எடுத்துக் காட்டினார்கள்.

இது தான் கருப்பை தோஷ நிவாரண தைலம் என்று அகத்தியர் அந்த தைலத்துக்கு உத்திரவாதம் கொடுத்தார்.

எப்படி இந்த மூலிகைச் சாற்றினை உட்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பொதிகை மலையிலுள்ள ஒரு சித்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்ததால் அகத்தியருக்கு வேலை சுலபமாக போயிற்று.

பல மாதங்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற அந்த மூலிகையை சந்தோஷமாக எடுத்துச் சென்றனர்.

கருப்பையே இல்லை என்றும், கருப்பை வளர்ச்சி இல்லை என்றும் சான்றிதழ் கொடுத்த இந்த டாக்டர்களையும் மீறி, இந்த  பெண்ணிற்கு கருப்பை  வளர்ச்சியுற்றால், விஞ்சான உலகத்தில் இது வியக்கத்தக்க சாதனை என்று எண்ணி நானும் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

எட்டு மாதம் கழிந்தது.

அந்தப் பெண்ணை மறுபடியும் பரிசோதித்த டாக்டர்கள், அவளுக்கு கருப்பை தோன்றி, வளர்ந்து கொண்டிருப்பதை அறிந்து வியந்து போயிருக்கின்றனர்.  தற்சமயம் மிகவும் பலவீனமாக கருப்பை காணப்பட்டாலும், இந்தப் பெண் பருவமடைய இன்னும் மூன்று மாதமாகும் என்று உறுதி கொடுத்ததே மிகப்பெரிய மகிழ்ச்சி அவர்களுக்கு.

இதுபற்றி என்னிடம் தகவலும் சொன்னார்கள்.

இருந்தாலும், இந்தப் பெண் பருவமடைய வேண்டும்.  அதற்குப் பிறகு திருமணம் நடக்க வேண்டும்.  அவளுக்கு வாரிசும் தோன்ற வேண்டுமே என்று அடுத்த கவலையும் ஏற்பட்டது.

"அகத்தியரை முழுமையாக நம்பி இருக்கிறோம்.  எது நடக்குமோ, அது நடக்கட்டும்" என்று அந்த குடும்பத்தினர் முழுமையாக நம்பிச் சென்றார்கள்.

ஆறு மாதம் கழிந்தது.

அந்தப் பெண் பூப்படைந்தாள்.  மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவளுக்குத் திருமணம் செய்யலாம், "வாரிசு" பாக்கியம் உண்டு.  கருப்பை வலுவாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

இதை விட வேறு பாக்கியம் வேறு என்ன வேண்டும் என்று அக மகிழ்ந்து போனார்கள், அந்தப் பெண்ணும் அவளது பெற்றோரும்.

இன்றைக்கு....

அந்த பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து நன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அகத்தியர் தன் வாக்கைக் காப்பாற்றிவிட்டார் என்று நினைப்பதைத் தவிர வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.

சித்தன் அருள் ..................... தொடரும்!