​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 November 2015

சித்தன் அருள் - 260 - "பெருமாளும் அடியேனும்" - 30 - சனீச்வர கலிபுருஷ சந்திப்பு!

ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதை அவனது செயல், பேச்சு மூலம் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவருக்கு நல்லகாலம் வந்துவிட்டதா அல்லது கெட்டகாலம் வந்துவிட்டதா? என்பதையும் அவரது நடவடிக்கை எடுத்துக் காட்டிவிடும்.

இத்தனை ஆண்டு காலமாக பெருமாளுக்கு தேவையான கைங்கர்யங்களைச் செய்து வந்த கருடாழ்வாரை திருமாலிடமிருந்து பிரித்து விடவேண்டும் என்று திட்டம் தீட்டினான், கலிபுருஷன்.

கருடாழ்வாரின் மனைவி இதற்கு பலிகடா ஆனாள்.  கலிபுருஷன் சொன்னதை நம்பினாள்.  அதுவரை அமைதியாக அடக்கமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவள், அதை அறவே மறந்தாள். கருடாழ்வாரின் மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டாள்.

அப்படிச் சொன்னால் "கருடாழ்வார்" தன் தவற்றை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்த்தாள், பாவம் அவள். தவறு செய்தால் தானே கருடாழ்வார் அதை ஒப்புக்கொள்வதற்கு? கருடாழ்வார் அதை மறுத்தபோது, திருமலை வேங்கடவனை நாடிச் செல்லக் கூடாது என்று வழியையும் மறித்தாள்.

மற்ற எல்லாவற்றையும் கூட கருடாழ்வார் பொறுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்வாரே தவிர, பெருமாள் தரிசனம் செய்யக் கூடாது என்று சொன்னதை மாத்திரம் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனவே, மனைவியின் கட்டுப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு, கருடாழ்வார் திருமலை வேங்கடவனைக் காணப் புறப்பட்டு விட்டார்.

வாழ்க்கையில் முதன் முதலாக நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு கருடாழ்வாரின் மனைவி அதிர்ச்சி அடைந்தாள்.

கலிபுருஷனுக்கு ஒரு திருப்தி! "எப்படியோ நாம் போட்ட திட்டத்தில் ஒரு பகுதி வெற்றி அடைந்துவிட்டது. இன்னொரு பகுதி வெற்றி அடைய வேண்டுமானால் திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் இடையே பகையை உண்டாக்க வேண்டும்" என எண்ணினான்.

எப்படி பகையை உண்டாக்குவது?

அவர்கள் இருவருக்கும் யுத்தத்தை ஏற்படுத்த முடியாது. வாக்குவாதம் ஏற்படவேண்டும். அந்த வாக்குவாதத்தில் கருடாழ்வார் மிகவும் தடித்த வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டும். அப்படி வார்த்தை தடித்துப் போனால், வேங்கடவன் வெகுண்டு எழுந்து கருடாழ்வாரை விரட்டி விடுவார்.

கருடாழ்வாருக்கோ மிகவும் ரோஷம் அதிகம். திருமாலிடம் கோபித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார். அப்படி கருடாழ்வார், திருமலை வேங்கடவனிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால், இனி பெருமாள் கருடாழ்வார் துணை இல்லாமல், வெளியே செல்ல வேண்டும்.

வேங்கடவன் தனித்து செல்லும் பொழுது, கலிபுருஷன் பெருமாளை வீழ்த்தி தன் அதர்ம செல்வாக்கை பூமியில் நிலை நிறுத்திவிடலாம் என்று கலிபுருஷன் ஆசையாக எண்ணி சந்தோஷப்பட்டான்.

அப்பொழுதுதான் கலிபுருஷனுக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.

சனிபகவான் துணையில்லாமல் கருடாழ்வாருக்கும் வேங்கடவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட முடியாது. ஏனெனில், வாக்கில் சனிபகவான் அமர்ந்துவிட்டால் போதும், எப்பேர் பட்டவர்களும் வீழ்ந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த கலிபுருஷன் சட்டென்று அங்கிருந்து சனிபகவான் இருப்பிடத்திற்கு வந்தான்.

நீளாதேவியோடு பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்த சனீஸ்வரனுக்கு ஏதோ ஒரு துஷ்டதேவதை மங்களமானஇடத்திற்குள் நுழைந்தால் என்ன அருவருப்பு ஏற்படுமோ, அதே போல் அவர் நாசியில் கெட்ட காற்று பட்டது.

ஒரு நாழிகை மௌனம் காத்து ஞானத்தால் பார்த்த பொழுது பூலோகத்தைக் கெடுக்க அவதாரம் எடுத்திருக்கும் கலிபுருஷன் தன் பக்கம் வந்திருப்பது தெரிந்தது.

கலிபுருஷனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த சனீச்வரன் இதுவரை கலிபுருஷனை நேரடியாகப் பார்த்ததில்லை. அவனைப் பார்க்க மனம் துடித்தது. சமீபகாலமாக திருமலையில் கலிபுருஷன் செய்து வரும் அட்டூழியங்களை அரசால் புரசலாக கேள்விப்பட்டிருந்தார்.

தன்னுடைய துணை இல்லாமல் எப்படி கலிபுருஷன் வெல்லமுடியும்? எல்லாக் கெடுதல்களுக்கும் தன்னை ஒரு சூத்திரதாரியாக பிரம்மன் படைத்த பொழுது கலிபுருஷனைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னதான் அவன் ஆட்டம் போட்டாலும் வேங்கடவன் முன்பு நிற்க முடியவில்லை.

தோற்றுப் போனான்.

ஆனால்.......

"அன்றே கலிபுருஷன் என்னைத் தேடி வந்திருந்தால் அவனுக்குத் தோள்கொடுத்து தூக்கி விட்டிருப்பேன். பெருமாளும் அன்றே தோற்றுப் போய் திருமலையை விட்டே ஓடிப் போயிருப்பார். ம்ம்ம்! இதெல்லாம் கலிபுருஷனுக்கு எங்கே தெரியப் போகிறது? போதாதகாலம். சரியாக மாட்டிக் கொண்டான், போனது போகட்டும். இப்போதாவது கலிபுருஷனுக்கு புத்தி வந்ததே! அதுவரைக்கும் சந்தோஷம்!"

என்று தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டார். பிறகு தன் இரண்டு கண்களையும் அகல விரித்து கலிபுருஷனைப் பார்த்தார் சனீச்வரன்.

சனீச்வரன் பார்வை கலிபுருஷன் மீது பட்டதும் அவன் மெய் சிலிர்த்துப் போனான்.

"அடியேன் கலிபுருஷன்! ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரனாக விளங்கும் சனீஸ்வரனைத் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். என்னை ஆசிர்வதிக்கவேண்டும்!" என்று சனீஸ்வரன் பாதத்தில் விழுந்தான்.

"ஆசிர்வாதம்தானே! தந்தோம்!" என்றவர் "எதற்காக என்னைக் காண வந்தாய்?" என்றார்.

"ஈஸ்வரா!"

"தவறு! சனீஸ்வரா என்று சொல்லும்" என்றார் சனீஸ்வரர்.

"அப்படியே ஆகட்டும் சனீஸ்வரரே! பிரம்மா என்னைப் படைத்து பூலோகத்திர்க்கு அனுப்பி கலியுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் கலியுலகம் தோன்றக் கூடாது என்று பூலோகத்தில் திருமலையில் கல் தெய்வமாக மாறி திருமால் என்னைத் தடுக்கிறார்".

"அப்படியா?"

"ஆமாம் பிரபு! பிரம்மா என்னைப் படைத்திருக்காவிட்டால் நான் ஏன் பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்? என்னையும் படைத்துவிட்டு என் தொழிலைக் கெடுக்கும் திருமாலையும் ஏன் திருமலைக்கு அனுப்பவேண்டும்?

"அதெல்லாம் இருக்கட்டும். பிறகு இது பற்றி பேசிக்கொள்ளலாம். இப்போது எதற்காக என்னைத் தேடி இங்கு வந்தாய்?" என்றார் சனீஸ்வரன்.

கலிபுருஷன் வந்த விஷயத்தை விளக்கத் தொடங்கினான்.

சித்தன் அருள்............. தொடரும்!

Wednesday 25 November 2015

சித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று கார்த்திகை தீப திருவிழா நாள். தீப ஒளி உங்கள் உள்ளங்களில் பரவி இறைவனை உணர்த்தட்டும் என்ற அகத்தியப் பெருமானின் அருள் வாக்கினை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! 

Thursday 19 November 2015

சித்தன் அருள் - 259 - "பெருமாளும் அடியேனும்" - 29 - கருடாழ்வார் மனைவியை விட்டு விலகல்!


கருடாழ்வாருக்கும், அவர் மனைவிக்கும் சண்டை நடக்கும். இருவரும் அந்த வேங்கடவனிடம் சென்று முறையிடுவார்கள். தன்னிடம் பணிபுரியும் ​கருடாழ்வார் தவறு செய்ததால் பெருமாள் கருடாழ்வாரை நீக்கிவிடுவார். இதனால் கருடாழ்வார் வேங்கடவனுக்கு உதவி செய்ய முன் வரமாட்டார். வேங்கடவனும் கருடாழ்வார் விலகியதால் தனியே துன்புறுவர். வேறு யாரும் "கருடன்" இருக்கும் அந்தப் பதவிக்கு முன்வர மாட்டார்கள். வேங்கடவன் பாடு படு திண்டாட்டமாக இருக்கும் என்று பலவிதமாக கற்பனையில் மூழ்கியிருந்தான் கலிபுருஷன்.

விஷம் எங்கு பாய்ந்தாலும் அதன் பாதிப்பு ஓரளவு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். இதில் கருடாழ்வாரும் தப்பவில்லை. மாட்டிக் கொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்ததும் வராததுமாக வாசலில் வழிமறித்து நின்றாள் கருடாழ்வாரின் மனைவி. இதை சற்றும் எதிர்பாராத கருடாழ்வார் அதிர்ச்சி அடைந்தார்.

"உண்மையைச் சொல்லுங்கள். இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கோபத்துடன் கேட்டாள்.

"ஏன்? இந்திரலோகத்திலிருந்து" என்று நிதானமாகச் சொன்னார் கருடாழ்வார்.

"இல்லை. இந்திரலோகத்து அந்தப்புரத்திலிருந்து என்று சொல்லுங்கள்" என்றாள் அவர் மனைவி.

"ஆமாம்!" என்றார்.

"உங்களுக்கு அங்கு என்ன வேலை?" என்றாள்.

"இதென்ன கேள்வி? வழக்கம்போல் பெருமாளைத் தரிசனம் செய்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அந்தப்புரத்திற்கு அனுப்பி விட்டு வருகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள். எனவே அவருக்கு அலங்காரம் செய்யச் சிறிது நாழிகை ஆகிவிட்டது. அதுதான் வீட்டிற்கு வரத்தாமதம்" என்றார் கருடாழ்வார்.

"உடம்பெல்லாம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு "ஜவ்வாது" வாசனை மணக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?" என்றாள் அவர் மனைவி.

"உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கேள்வி கேட்கிறாய்? அந்த வைகுண்டபதியின் பிறந்த நாள் அல்லவா இன்று? அவருக்கு வாசனை திரவியங்களை அங்கமெல்லாம் தடவி ஆனந்தப் படுத்தியவர்களில் நானும் ஒருவன். அந்த ஜவ்வாது அத்தர் என்மீதும் பட்டிருக்கிறது. அதில் என்ன ஆச்சரியப் படவேண்டியிருக்கிறது?" என்று அலட்சியமாக பதில் வந்தது கருடாழ்வாரிடமிருந்து.

"என்னிடமே பொய் சொல்கிறீர்கள். இது நியாயமா? தர்மமா? இந்திரலோகத்து அந்தபுரத்தில், யுவராணியோடு பொழுதை ஆனந்தமாகக் கழித்துவிட்டு அவள் தடவிய ஜவ்வாது வாசனையில் மெய்மறந்து போனீர்களா இல்லையா?" என்று கருடாழ்வாரின் மனைவி குற்றம் சாட்டினாள்.

இதுவரை அன்போடும் மரியாதையோடும் பெண்களுக்கே இலக்கணமாகத் திகழ்ந்த தன் மனைவி, இப்படியொரு குற்றத்தைத் தம் மீது சுமத்தியதை கண்டு கருடாழ்வார் பெரிதும் அதிர்சியடைந்தார்.

இனி என்ன சொன்னாலும் நம்பப்போவதில்லை என்று முடிவெடுத்தவர் மேற்கொண்டு பதில் சொன்னால் விபரீதமாகிவிடும் என்பதால் மௌனமாக இருந்தார். அதோடு இவள் ஏன் இப்படி மாறினாள்? இவளது மனதை கெடுத்தவர் யார் என்று தீவிரமாக யோசிக்கவும் ஆரம்பித்தார்.

"என்ன பதிலே வரவில்லை? உண்மை சுடுகிறது போலிருக்கிறது?" என்று கிண்டல் செய்த கருடாழ்வாரின் மனைவி "இனிமேல் நீங்கள் இந்திர லோகத்திற்குச் செல்லக் கூடாது" என்று உத்தரவு போட்டாள்.

"நிதானத்தோடுதான் பேசுகிறாயா?" என்றார் கருடாழ்வார்.

"ஆமாம்! தெள்ளத் தெளிவாகப் பேசுகிறேன். இனிமேல் நீங்கள் அங்கு செல்லக் கூடாது" என்றாள்.

"அப்படியென்றால் வைகுண்டவாசனின் கதி?"

"அவர் பற்றி எனக்கு கவலை இல்லை! அவர் எப்படியும் தன்னைப் பார்த்துக் கொள்வார். அவருக்கு நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார். ஆனால் நீங்கள் இனிமேல் இந்தக் குடிலைவிட்டு அங்கு செல்லக் கூடாது" என்றாள் மறுபடியும்.

ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படி இவள் பேசவே மாட்டாள். அதிலும், அந்த வேங்கடவன் மீது அளவு கடந்த மரியாதையும் பக்தியும், பாசமும் கொண்டிருக்கும் இவள் இப்படிப் பேசுவது விந்தையாக இருக்கறது. யார் இப்படி ஒரு குழப்பத்தை கிளப்பி இவள் மனதை மாற்றியிருப்பார்? என்று பெரிதும் குழம்பிப் போன கருடாழ்வார் "இது பற்றி வேங்கடவனிடம் நேரிடையாகச் சென்று முறையிடுவோம். அவரது பேச்சைக் கேட்டால் தன் மனைவி சமாதானமாகி விடுவாள்" என்று முடிவெடுத்தார்.

வாசல் தாண்டி உள்ளே நுழையும் முன்பே இப்படியொரு பீடிகையைப் போட்டதால் அப்படியே வேங்கடவனை தரிசனம் செய்து விஷயத்தைச் சொல்லி வரலாம் என்று திரும்பினார்.

"எங்கே போகிறீர்கள்?" என்று சட்டென்று குறுக்கே வந்து அவரை வெளியே செல்ல முடியாதவாறு வழியை மறித்தாள்.

"நன்றாக இருந்த நீ திடீரென்று மாறிவிட்டாய். என் மனம் சரியாக இல்லை. வேங்கடனாதனைச் சந்திக்கத் திருமலைக்குச் செல்கிறேன். வழியை விடு" என்றார் கோபத்தோடு, கருடாழ்வார்.

"அங்கேயும் போகக்கூடாது, இந்த இடத்தை விட்டு அசையவும் கூடாது" என்று உறுதியாகச் சொன்னாள்.

"என்னது? பெருமாளைத் தரிசனம் செய்யப் போகக் கூடாதா? எனக்கு அதை விட வேறு கைங்கர்யம் எதுவும் இல்லை. என்னை அங்கு செல்லாமல் தடுக்கும் உரிமையும் உனக்கில்லை. இன்னும் சொல்லப்போனால் இனி நீயும் எனக்குத் தேவை இல்லை" என்று கடுமையாகப் பேசிய கருடாழ்வார் அங்கிருந்து வெளியேறினார்.

இதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கலிபுருஷன் "தன் திட்டம் பலித்துவிட்டது!" என்று ஆனந்தப் பட்டுக் கொண்டு, "இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்" என்று காத்திருந்தான்.

சித்தன் அருள்................ தொடரும்!

Tuesday 17 November 2015

சித்தன் அருள் - 258 - சுவாமிமலை !


வணக்கம் அடியவர்களே!

அகத்தியர் அருளால், மகா சஷ்டியை நோக்கி நடந்து வந்த உங்களுக்கு அவர் அருளிய பல விஷயங்களை இதுவரை தெரிவித்துவிட்டேன்.

"மகாசஷ்டி"யான இன்று சுவாமிமலையில் அமர்ந்த முருகப் பெருமானின், திருத்தலத்தின் பெருமைகளை அவர் உரைப்பதை பார்ப்போம்.
  1.  பிரம்மதேவன் முதலான தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் முருகன் வாழும் சுவாமிமலையில் எப்போதும் வசிக்க ஆசைப்படுகின்றனர்.
  2. குஹன் ஈஸ்வரனுக்கு பிரணவத்தை உபதேசித்த நிகழ்வை பூமியில் மனிதருக்கு உணர்த்த உருவாக்கப் பட்ட புண்ணிய ஸ்தலம். ஆதலால், இதை கைலையை விட உயர்ந்த ஸ்தானம் என்று பெரியோர் கூறுவார். 
  3. முருகனுடைய மூர்த்தி இங்கு ஆகாச கங்கையாக விளங்குகிறது.
  4. இம்மலையில் உள்ள அறுபது படிகளும், வருஷ தேவதைகள்.
  5. ஆறு ருதுக்களும் அடிவார மலைகள், கோபுரங்கள் சப்த மாத்ரு கணங்கள். கோவில் வாசற்படிகள் தேவ மகளிர்.
  6. மலை ஏறும் பொழுது முருகன் நினைவுடன் ஒவ்வொரு படிகளுக்குரிய வருஷ தேவதைகளுக்கு தேங்காய் நிவேதனம் செய்து கற்பூர ஆராதனையுடன் வழிபடவேண்டும்.
  7. முருகன் இருக்கும் விமானத்துக்கு "அசலானந்தம்" என்று பெயர். விமானத்திலுள்ள ஷண்முகனை வழிபடுபவர் மறுபடியும் இவ்வுலகில் பிறக்கமாட்டார்கள்.
  8. முதலில் சுவாமிநாதனை தரிசித்த பின்னரே அடிவாரத்தில் உள்ள பரமேஸ்வரனை தரிசிக்க வேண்டும்.
  9. கார்த்திகை மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் முருகனை வழிபடுபவன், உலகின் தலைவனாக விளங்குவான்.
  10. ஸ்ரீ சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கிறவன் சகல சம்பத்துக்களும் பெற்று வாழ்வான்.
  11. அங்கப்ரதக்ஷிணம் செய்பவன் கோரிய பொருளை பெறுவான்.
  12. சித்திரை, வைகாசி, தை மாத பௌர்ணமிகளில் சுவாமிமலையில் பிரதட்சிணம் செய்தால் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவான்.
  13. பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை வழிபட்டு, பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தானம் ஆகியவைகளினால் அபிஷேகம் செய்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். இது சத்தியம்.
  14. தை பூச நட்சத்திரத்தில் முருகனை வழிபாட்டு பிரம்மா முதலிய தேவர்கள் தாங்கள் கோரிய பலனைப் பெறுகிறார்கள்.
  15. எனவே, தை மாத பூச நட்சத்திரத்தில் யார் ஒருவர் சுவாமிநாதனை தரிசித்து அங்கப்ரதக்ஷிணம் செய்கின்றார்களோ, அவர்களுடைய முன்னோர்கள் மூன்று கோடி தலைமுறையினர் கரை ஏறுகின்றனர். முறைப்படி படி ஏற முடியாவிட்டால் முதல் படிக்கட்டுக்கும், கடைசிப் படிக்கட்டுக்கும் பூசை செய்துவிட்டு படி எறவேண்டும்.
  16. சண்டிகை முதலான தேவதைகள் மலையைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களை வணங்கிய பின்னரே மலை ஏறவேண்டும்.
  17. தைப் பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் போகிறேன் என்று சொன்னாலே, முருகனுடைய அருள் கிடைத்துவிடும். அஸ்வமேத யாகப் பலன் கிடைக்கும்.
  18. பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் புறப்படுகிறவன் குகனாகவே ஆகிவிடுகிறான்.
  19. பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை தரிசிப்பதற்கு முன்பாக தர்மம் செய்தால் அவன் குபேர சம்பத்தைப் பெறுவான்.
  20. மௌனத்துடன் சென்று தரிசனம் செய்தால் தேவர்களின் அதிபதியாவான்.
  21. அங்குள்ள குமாரதீர்த்தத்தில் நீராடினால் வம்சம் சிறப்புற்று விளங்கும்.
  22. குமார தீர்த்தத்தில் மண் எடுத்து படிக்கட்டுகள் கட்டி திருப்பணிகள் செய்பவன் வம்சம் சிறந்து விளங்கும்.
  23. ஸ்ரீ சுவாமிநாதனை வணங்கினாலோ, சன்னதியில் தீபம் ஏற்றி வைத்தாலோ, பில்வ தளங்களால் அர்ச்சனை செய்தாலோ, அவன் தெய்வாம்சம் பொருந்தியவனாகிறான்.
  24. பால் காவடியில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர்.
  25. வேலைக் கையில் தாங்கிய குமாரனுடைய கோவில் விமானத்தை தூர நின்று தரிசித்தாலே எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
குருநாதர்கள் ஓதியப்பர், அகத்தியப் பெருமான் காட்டிய அருளால், இந்த வருட மகா சஷ்டியின் பயணத்தை இனிதே நிறைவு செய்வோம்.

உங்கள் சேமிப்புக்காக "சுப்ரமண்ய மங்களாஷ்டகம்" ஸ்லோகம் கீழே உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


அகத்தியர் அடியவர்கள் அனைவரும் இறை அருள் பெற்று, அகத்தியர் அருள், வழிநடத்தல் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்.

இந்த சுப்ரமண்யரின் தொடர் இத்துடன் நிறைவு பெற்றது.

Monday 16 November 2015

சித்தன் அருள் - 257 - முருகரின் தத்துவம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மகா சஷ்டி நோக்கிய பயணத்தின் 5வது நாளான இன்று அகத்தியர் அருளிய சில தகவல்களை பார்ப்போம்.

​இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.

இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்" வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

இதையே ஒரு சித்தர் 
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி 
என்கிறார்.

மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.

திருவடி என்பது நாதப்பிரம்மம். (நடராஜரின் இடது கை ஆள்காட்டி விரல் அவர் திருவடியை காட்டுவது, இந்த சூட்ச்சுமம் தான்). சப்த பிரம்மத்தால் (நாம ஜபம்) உலகினை கட்டி தன்னகத்தே வைத்தால் பிரம்மஞானம் உணர முடியும்.

தன் அன்பை எங்கு கொண்டுபோய் வைப்பதென்று முருகன் பதினான்கு உலகிலும் சுற்றிப் பார்த்தானாம். தொண்டர்கள் இருதயம்தான் தக்க இடம் என்று தீர்மானித்து நமது இருதயத்தில் புகுந்தானாம்.

"நான்" "எனது" என்கிற உணர்ச்சிகளை ஆண்டவனுடைய "நானாக" "உனதாக" மாற்றிவிட்டால் அது உலகம் முழுவதும் பரந்த "நான்" "உங்களுடையது" ஆக ஆகிவிடுகிறது.
ஒரு நிமிடம் கண்ணை மூடி முருகனை நினைத்து அகக்கண் திறக்கப் பெற்றால் அவர்களே மிகுந்த புண்ணியவான்கள்.

முருகன் நம் இருதயத்திலிருந்து எப்போதும் பிரம்ம ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறான். ஆனால், ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) அவன் பேச்சை கேட்க விடாமல் தாங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். "முருகா" என்னும் சப்தத்தினால் அந்த ஐவரையும் (பஞ்சேந்த்ரியங்கள்) ஒடுக்கவேண்டும்.

ஜீவர்களிடமுள்ள கருணை காரணமாக தனக்கு நெற்றிக் கண் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டாரம் முருகர்.

6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-

இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு  என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.

வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.

தேவசேனா, பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.

வள்ளி நாயகி,, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.

வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.

அகத்தியர் அடியவர்களே! அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி எல்லா அருளும் பெற்று வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்!

உங்கள் சேமிப்பிற்காக "சுப்ரமண்ய கராவலம்பம்" என்கிற ஸ்லோகம் கீழே உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்ளவும்.


Sunday 15 November 2015

சித்தன் அருள் - 256 - சுப்ரமண்யம் சண்முகம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"மகா சஷ்டியின்" நான்காவது தொகுப்பாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
  1. நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியை "சண்முகம்" என்பர் பெரியோர்.
  2. இதன்றி, நம் மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி அநாகதமாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது. இதை "சுப்ரமண்யம்" என்பார்கள்.
  3. இந்த தேகத்திலுள்ள ஆறறிவும், ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஆறு பிரகாசத்தையும் "சண்முகம்" என்பார்கள்.
  4. நம் மனம் ஒரு குகை போன்றது. குகை எப்போதும் இருந்திருக்கும். அந்த இருட்டில் ஒரு ஜோதியாக முருகன் விளங்குகிறான். அதனாலேயே அவனுக்கு "குகன்" என்ற பெயர் ஏற்பட்டது. "குஹ்யம்" என்ற சொல்லுக்கு "மிக ரகசியமானது" என்று பொருள். சாமானியர்களால் அறிய முடியாக ரகசியமாக அவன் இருப்பதால் "குகன்" என்ற பெயர் பெற்றான் என்றும் கூறுவார்.
  5. வள்ளி, தேவசேனா இருவரின் தத்துவத்தை; நம் பக்தி உண்மையாய் இருக்க, ஞானத்தை (இறைவனை) தேடி சென்றால் இறை தரிசனம் கிட்டும் என்பதை தேவசேனாவை மணந்தது வழியாகவும், எளிய உண்மை பக்தியுடன் இருந்தால் அவனே நம்மை தேடி வந்து அருள் புரிவான் என்பதற்கு வள்ளியை தேடி வந்து மணம்புரிந்த நிகழ்ச்சியையும் கூறுகிறார்கள்.
  6. தேவர்கள் வேண்டுதலின்படி, பரமேஸ்வரன், தனக்குள்ள ஐந்து முகத்துடன், அம்பிகை முகத்தையும் கொண்டு, ஆறுமுகமாக அவதரித்தார்.  
  7. மண்ணெல்லாம் ஒன்றாய் சேர்ந்து திரண்டு விண்ணில் சேரவேண்டுமென்று மேலே எழும்பியது மலை ஆனது. விண்ணாகிய தெய்வீக ஜோதியை காணவேண்டும் என்கிற உணர்ச்சியை எழுப்புவதே "மலையின்" தத்துவம். அதன் உச்சியில் இருக்கிற "ஞானமே முருகன்". அதனால் தான் குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.
  8. தேகத்தை சுத்தமாகச் செய்துவிட்டால், அதிலுள்ள ஆவியை தன் குடியாக்கிக் கொள்கிறான் முருகன். அதுவே திருவாவினன்குடி தத்துவம்.
  9. முருகா என்று வாயினால் மட்டும் சொன்னால் போதாது. அந்த நாமம் ரத்தாசயத்துடன் கலக்க வேண்டும். இப்படி செய்தால், நம் வாயிலிருந்து வரும் வாக்கே "சத்திய வாக்காகி" விடும்.
"சரவணபவ" என்கிற மந்திரத்துக்கு முன் 
  • "ஓம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தானாகவே நாடிவரும் முக்தியை பெற்றுக் கொள்கின்றனர்.
  • "ஓம் ஹ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் அறியாமை நீங்கப் பெறுவார்கள்.
  • "ஓம் க்லீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் மன்மதனைப் போல விளங்குவார்கள்.
  • "ஓம் ஐம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் கவிதை இயற்றும் புலவர்களாவார்கள்.
  • "ஓம் ஸ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தாபங்கள் தீர்த்து இன்பக்கடலில் திளைப்பார்கள்.
உங்கள் சேமிப்புக்காக "சுப்ரமண்ய புஜங்கம்" என்கிற ஒலிநாடாவை கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன்.


எல்லா நலமும் பெற்று இந்த மகா சஷ்டி முதல் சுப்பிரமணியர் அகத்தியப் பெருமான் அருளால் நீங்கள் அனைவரும் இனிதே வாழ்க! 

Saturday 14 November 2015

சித்தன் அருள் - 255 - உபதேச தத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பரின் மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அடியவர்கள் அனைவருக்காகவும், குருநாதர் அகத்தியப் பெருமான் அவர்கள் காட்டித்தந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முருகன், தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்ததன் தத்துவம் என்ன?

சிவபெருமான் முருகனிடம், "அப்பா முருகா! உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் என் ஸ்வரூபமே. ஆகவே, நீ எனக்கு ஞான உபதேசம் செய்தால் உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் கேட்டு உய்யும்" என்றார். அதன்படியே முருகன் சிவம் மூலம் ஜீவராசிகளுக்கு உபதேசம் செய்து கொண்டே இருக்கிறான். இதனால் சிவனின் உள்ளம் குளிர, ஜீவராசிகளின் உள்ளமும் குளிர்ந்ததாம்.

"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு 
செவி மீதிலும் பகர் செய் குருநாதா" 

என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.

இந்த உபதேசத்தை ஜீவராசிகள் மனம் கொடுத்துக் கேட்டால் தானே, பகவான் உருவாக்கிய நந்தவனத்தில் ஆனந்தமாக விளையாடலாம்!

பகவான் விளையாடும் நிலமே நந்தவனம். தன்னுடன் விளையாடுவதற்காக பல ஜீவராசிகளைப் படைத்துள்ளான். இந்த ஜீவா ராசிகளுக்கு அவன் கொடுத்த "சுயேச்சை" (சுதந்திரம்) காரணமாக. இவைகள் அவன் உபதேசத்தை மறந்து, "நான்" என்ற பிசாசின் வயப்பட்டு அல்லல் படுகின்றன. இந்த சுயேச்சையை பகவானிடம் "இச்சையாக" மாற்றிவிட்டால் என்றும் பேரின்பமே.

ஐந்து பூதங்களிலும் மேலான அதிகன் முருகன். அதனால் அருணகிரிநாதர் அவரை "அதிகா" என்கிறார். "அனகா" என்றால் பாவமற்றவன். ஒருவன் மற்றொருவனை வைதால் (திட்டினால்), வையப்பட்டவனுடைய பாவத்தை வைதவன் வாங்கிக் கொள்கிறான். புகழ்ந்தால் புகழப்பட்டவனுடைய புண்ணியத்தை பங்கிட்டுக் கொள்கிறான். (இங்கே அகத்தியப் பெருமான் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது. குருநாதர் சொல்வது இதுதான். பிறரை புகழ்வதில் எப்பொழுதும் தயங்காதீர்கள் என்கிறார். அதனால் பிறருடைய மனதை குளிர்விப்பதினால், நமக்கும் புண்ணியம் சேருகிறது என்று அர்த்தம்.]

சுப்ரமண்ய மூல மந்த்ர ஸ்தவம் என்கிற ஒலி நாடா உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டு அவர் அருள் பெற்று வாழ்க!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

Friday 13 November 2015

சித்தன் அருள் - 254 - சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரண்டாவது நாளான இன்று முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் உரைத்ததை உணர்வோம்.

  1. நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை). எல்லா உலக வடிவும் (சமஷ்டி பிரபஞ்சமும்), எல்லா உயிர்களின் வடிவமும் (விராட் ரூபி) ஆக விளங்குகிறான். அதனால் அவனே சாக்ஷாத்கார பிரம்மமாவான்!
  2. ருத்திர கோடிகள் அளவற்றவையில் இவனே மஹா சம்ஹார காரண ருத்திரன்.
  3. இவனே ஸ்ரீகண்ட ருத்திரக் கடவுளின் சக்தியான மஹா விஷ்ணு.
  4.  மஹா விஷ்ணுவின் நான்கு மூர்த்தங்களில், இவன் வாசுதேவ மூர்த்தி,
  5. எல்லா பிரஜாபதிகளுக்கும் இவன் பிரமன்.
  6. ஒளியுள்ள பொருட்களில் இவன் அக்னி தேவன்.
  7. திக் பாலகர்களில் இவன் "ஈசானன்".
  8. அக்னியில் "சிவாக்னி"
  9. அக்ஷரங்களில் பஞ்சாக்ஷரம்.
  10. வித்யைகளில் பர வித்யை.
  11. யோகங்களில் அஷ்டாங்க யோகம்.
  12. ஞானங்களில் இவன் சிவ ஞானம்.

ஆண்டியாகப் போன முருகரிடம் சிவபெருமான் அன்புடன் கூறியதாவது.....

"மைந்தா! நானும், சக்தியும் நீயன்றோ! தத்வமசி வாக்கியப் பொருள் நீ என்ற படி, என்னுடைய ஐந்து முகங்களும், தேவியின் ஒரு முகமும் சேர்த்து உனக்கு ஆறு முகங்களாயிற்று! என்னைக் குறித்து செய்யப்படும் வழிபாடும், நின் அன்னையைக் குறித்து செய்யப்படும் பூஜையும் உனக்கேயாகும். உன்னை பூஜித்தவர் எங்கள் இருவரையும் பூஜித்தவராகிறார்."

அகத்தியப் பெருமான் தரும் பரிசாக, உங்களுக்கு "சுப்ரமண்ய சஹஸ்ரநாமாவளி" என்கிற ஒலிநாடாவை கீழே உள்ள தொடுப்பில், இன்று தருகிறேன்.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டிக் கொண்டு........ 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் @ Mediafire 

Thursday 12 November 2015

சித்தன் அருள் - 253 - சுப்ரமண்ய த்ரிசதி - அடியவர்களுக்கு அகத்தியரின் பரிசு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தீபாவளியை அகத்தியரின் அருளால் இனிதே கொண்டாடியிருப்பீர்கள். நானும் அவ்வாறே இனிதாக கொண்டாடியதில், இந்த வார "சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும்" தொகுப்பை தட்டச்சு செய்து தயாராக வைக்க மறந்துவிட்டேன். ஆதலால், இந்த வார "பெருமாளும் அடியேனும்" தொடருக்கு ஒரு வார இடைவேளை விட்டுவிட்டு, அடுத்த வாரம் தரலாம் என்று நினைத்தேன்!

திடீரென அகத்தியரின் குரு சுப்ரமண்யரின் "மகா சஷ்டி" ஞாபகம் வர, எத்தனையோ அன்பர்கள் என்னென்னவோ விஷயங்களுக்காக விரதமிருப்பார்களே! அவர்கள் எண்ணம் ஈடேற முருகரின் அருள் எப்பொழுதும் அவர்களை சூழ்ந்திருக்க ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது.

ஆம்! "சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.

அகத்தியப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அந்த ஸ்லோகத்தை தேடத்தொடங்கினேன். விரைவில் அது கைவல்யமானது. அந்த ஸ்லோகத்தை, உங்களுக்கு, "மகா சஷ்டிக்கு" முன்பாக அகத்தியர் உங்கள் அனைவருக்கும் அளித்த பரிசாக கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.

உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு ...........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

Tuesday 10 November 2015

நாடி வாசிக்க! TO READ NAADI (PALM LEAF) !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" என்கிற இந்த வலைப்பூவை வாசிக்கிற உங்களுக்கு, நாமும் எங்கேனும் போய் நாடி வாசித்து நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுவது இயல்பு. தவறில்லை.

நீங்கள் அனைவரும் அவர் அருள் பெற்று வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் கீழே ஒரு சில விலாசத்தை, தொடர்பு எண்ணை தருகிறேன். எங்கு செல்வது என்பது உங்களின் தனி விருப்பம் தான்.

அங்கு சென்றதும் நடக்கின்ற விஷயங்கள், அகத்தியர் அருளால் நடப்பது என்று உணருங்கள்.

கல்லார் அகத்தியர் ஆஸ்ரமம்:-

Sri.Thavayogi Thangarasan Adigalar
Sri Agathiar Gnana Peedam
Agathiar Vanam, Agathiar Nagar,
Ooty Main Road, Kallaru - 641305, Mettupalayam,
Coimbatore Dt, Tamilnadu, India.

Website: www.agathiarkallar.org
E-Mail: contactus@agathiarkallar.org
Mobile: +91-98420 27383, +91-98654 91686
Office: +91-90428 27546, +91-98432 27546

அகத்தியர் நந்தி பிருகு நாடி:-

Sri.Selvam
Address: 51/8, Manickam Nagar,
Ground floor, 4th Cross Street,
Behind Ajax Bus Terminus,
Thiruvottriyur, Chennai-600019.
Cell No:9952026908 / 9976048004
Email:bjnaadi@gmail.com

அகத்தியர் குடில், தஞ்சாவூர்

Sri J. Ganesan,
Siddhar Arut Kudil,
No. 33/56, 2nd Street,
Co-operative Colony,
Opposite Co-operative Bus Stop,
Thanjavur - 7.
Phone : +91 94434 21627


எல்லா நலமும் பெற்று அவர் அருளால் வாழ்க!

Monday 9 November 2015

சித்தன் அருள் - அகத்தியரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


வணக்கம்  அடியவர்களே!

அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளின்" தீபாவளி நல் வாழ்த்துக்கள்! எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! இறையருள் துணை நிற்கட்டும்!

Saturday 7 November 2015

சித்தன் அருள் - 252 - திரிகூட மலை குற்றாலம் !

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குற்றாலம் அகத்தியப் பெருமானின் அருள் பெற்ற இடங்களில் ஒன்று. ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித் தந்த ஒரு புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

திரிகூட மலை, குற்றாலம் - நேர் பார்வை!


திரிகூட மலை, குற்றாலம் - சித்தர் பார்வை!

 
அகத்தியர் அடியவருக்கு நன்றி!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

Thursday 5 November 2015

சித்தன் அருள் -251- "பெருமாளும் அடியேனும்" - 28 - கலிபுருஷன் செய்த கலகம்!


"தங்களுடைய கணவர், இந்திரலோகத்தில் யுவராணியோடு தன்னை மறந்த நிலையிலிருக்கிறார்" என்று கருடாழ்வாரின் மனைவியிடம், கலிபுருஷனான அந்த "அதிதி"சொன்னதைக் கேட்டு, கருடாழ்வாரின் மனைவி, துடி துடித்துப் போனாள் .

தாம்பத்திய வாழ்க்கையில் தனக்கென்று ஓரிடம் கொண்டு, மற்றவர்களுக்கெல்லாம் ஓர் இலக்கணமாக வாழ்ந்துவரும் கருடாழ்வாரைப் பற்றி, கலிபுருஷன் சொன்னதால் "இருக்காது, இருக்கவே இருக்காது" என்று அவளுடைய உள்மனம் சொல்லிற்று.

ஆனால்.........

"கலியுகம் ஆரம்பித்துவிட்டது. இனி என்னென்ன நடக்குமோ?" என்று சில நாட்களுக்கு முன்பு கருடாழ்வார் தன்னிடம் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது!

"அப்படி சொன்னவரே இன்றைக்கு கூடா ஒழுக்கத்தில் சென்று விட்டாரே" என்று ஒரு பதட்டம் எற்படத்தான் செய்தது.

அதே சமயம்.........

அதிதியாக வந்தவர், சாமான்யமானவரல்லர். இந்திரலோகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை பற்றி, தெள்ளத் தெளிவாக தன்னிடமே இவர் சொல்கிறார் என்றால், இவர் தேவலோகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையேல், சித்த புருஷராக, மகரிஷியாக இருக்க வேண்டும். நேரடியாக நிஜ உருவத்தில் வர பயந்து, இப்படி மாறு வேடத்தில் அதிதியாக வந்திருப்பார் என்று பல்வேறு கற்பனையில் ஆழ்ந்தாள், கருடாழ்வாரின் மனைவி.

இவர் மட்டும் தப்பித்தவறி பொய் சொல்லியிருந்தால், பாம்பின் உடலை தன் கூறிய நகத்தால் கருடன் கீறிக் கொன்று விடுவதுபோல், இவர் கருடாழ்வாரால் பின்பு கொல்லப்படலாம். அதே சமயத்தில் இவர் சொல்வது ஒருவேளை உண்மையாக இருந்து விட்டால்? என்று மீண்டும் குழப்பமடைந்தாள் அவள்.

"தாயே" என்று கலிபுருஷனான அந்த வயதான அதிதி அழைத்தார்.

"சொல்லுங்கள் பெரியவரே"

"உண்ட வீட்டிற்கு துன்பம் விளைவிக்கும் செயலைச் செய்யமாட்டேன். நான் சொன்னது பொய்யாக இருந்தால், என் உயிர் தங்கள் கால் நகங்களாலேயே சின்னா பின்னமாகச் சிதைந்து கொல்லப்படட்டும்" என்று அழுத்தமாகச் சொன்னார்.

"பெரியவரே! உங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. தாங்கள் இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று மட்டும் என் உள்மனம் சொல்கிறது!" என்றாள்.

"உண்மைதானே!"

"தாங்கள், அதிதி போல் முதலில் நடந்து கொள்ளவில்லை. தங்களுடைய பேச்சும், செயலும் வித்யாசமாக இருந்தது. எல்லோருக்கும் படியளக்கும் அந்த வேங்கடவனைப் பற்றி ஏதேதோ கூறினீர்கள்."

"என்ன கூறினேன்?"

"இந்த உலகை எல்லாம் காப்பாற்றக் கூடியவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாள்தான் இன்றைக்கு வேங்கடவனாக அருள் பாலித்து வருகிறார். அந்த வேங்கடவனுக்கு என் கணவர், தினம் தினம் சேவை செய்கிறார். அவரைத் தூக்கி சுமக்கிறார். படியளக்கும் பெருமாளுக்கு தாசானு தாசனாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட சர்வலோக நாயகனுக்கு, தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா? என் கணவரா வேங்கடவனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்? இந்த வார்த்தையை அதிதியான தாங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?" என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள், கருடாழ்வாரின் மனைவி.

பெருமாள் மீது கொண்ட அளவற்ற பக்தியை கண்டு ஒரு நாழிகை மெய்மறந்து போன கலிபுருஷனான அந்த அதிதி, பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு, "அம்மணி! தாங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். என் காதில் வீழ்ந்ததைச் சொன்னேன். மற்றபடி தாங்கள் இதனை ஏற்பதும், எற்காமலிருப்பதும் தங்கள் விருப்பம்." என்றான் கலிபுருஷன் மிகவும் பவ்யமாக.

"அது சரி! தாங்களோ இங்கு அதிதியாக வந்தவர். அப்படியிருக்க எப்படி இந்திரலோக அந்தரங்க விஷயங்களைப் பற்றித் தெரியும்? இந்த மாதிரி செய்திகள் இறைவனுக்கும், தேவலோகத்திற்கும், முற்றும் துறந்த பூலோக முனிவர்களுக்கும் மட்டும்தான் தெரியும். அப்படியென்றால் தாங்கள் யார்?" என்றாள் சற்று கடுமையாக.

"தாயே! தங்களோடு எதிர்வாதம் செய்ய இந்த அடியேனால் முடியாது. அதை யானும், ஒரு போதும் விரும்பவில்லை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யவும் மாட்டேன்" என்றான் கலிபுருஷன்.

"பின் எதற்க்காக என் கணவரைப் பற்றி அவதூறாகக் கூறினீர்கள்?"

"தங்கள் இல்வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று, தங்களின் கணவர் இந்திர லோகத்தில் நான்கு பேருக்கு முன்பு கேவலப் படக்கூடாது என்பதற்காகச் சொன்னேன். அவ்வளவுதான்" என்று மிகவும் நல்லவன் போன்று பேசினான், கலிபுருஷன்.

"தங்களது நல்லெண்ணத்திற்கு நன்றி!" என்று அதிதிக்கு விடை கொடுத்தாள் கருடாழ்வாரின் மனைவி.

"தாயே! தங்களுக்கு சகல விதமான மங்களங்களும் உண்டாகட்டும். ஒரே ஒரு விஷயம். இந்த அதிதி சொல்வது பொய்யல்ல. தங்கள் வீட்டிற்கு வரும் கருடாழ்வார் நெற்றியில் செந்தூரப் பொட்டிருக்கும். ஜவ்வாது மணம் உடல் முழவதும் காணப்படும். இது எப்படி வந்தது? என்று மட்டும் கேளுங்கள். அவர் பதில் சொல்லத் திணறுவார். பிறகுதான் நான் சொன்னது உண்மை என்று தெரியும்" என்றவன் விடுவிடுவென்று வெளியேறினான்.

"அடடா! இந்த அதிதி யார் என்று இதுவரை சொல்லவே இல்லையே" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் கருடாழ்வாரின் மனைவி.

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த கருடாழ்வார் தம்பதியிடையே குடும்பத்தைச் சந்தேகப்படும்படி செய்து குழப்பத்தை உண்டு பண்ணிய சந்தோஷத்துடன் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் கலிபுருஷன்.

கருடாழ்வார் தன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

சித்தன் அருள்................ தொடரும்!

Tuesday 3 November 2015

சித்தன் அருள் - 250 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - V

​இதற்கிடையில், இரண்டாவதாக திருநெல்வேலியில் இருந்து வந்து சேர்ந்த ​நண்பர்கள், தாமிரபரணியில் நீராட விரும்பினார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரையில் அமர்ந்து, சங்கமா முனிவரின் ஸ்லோகத்தை சொல்லிக் கொடுக்க, அவர்களில் இருவர் தாம்பூலம் வைத்திருந்தனர். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் துண்டு, பூ, ஒரு ரவிக்கை துண்டு போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து, நதியின் நடுவரை சென்று கிழக்கு நோக்கி நின்று தாமிரபரணி தாய்க்கு த்யானம் செய்து கொடுத்தனர். அதை நதியில் விட, அது மெதுவாக அசைந்து செல்வது காண கண் கொள்ளக் காட்சியாக இருந்தது.
மறுபடியும் கோவிலுக்கு வந்து பார்க்க, கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மொத்தம் ஒரு 250 பேர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அனைவரும் அமைதியாக நின்று கொண்டு அல்லது அமர்ந்து கொண்டிருந்தனர். உற்சவ மூர்த்தியை தூக்கி வந்து மண்டபத்தில் உள்ள பீடத்தில் வைத்து, அபிஷேகம் தொடங்கினார்கள்.

முதலில் நறுமண எண்ணெய்களால் சுவாமிக்கு எண்ணை காப்பு போட்டு, அதிலிருந்து அபிஷேகம் செய்த எண்ணையை எடுத்து அங்கு அமர்ந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் உடலில் பூசிக் கொள்ள ஒவ்வொரு சொட்டு கொடுக்கப்பட்டது. சுத்தமான தாமிரபரணி நீர், பல விதமான நறுமண திரவியங்கள், 128 மூலிகைகள், அரிசி மாவு, பன்னீர், சந்தானம், பால் போன்றவைகளால் அபிஷேகம் நடந்தது.

பெருமாளுக்கு வலது பக்கமாக மண்டபத்துக்கு அருகில் நின்று அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அகத்தியப் பெருமான் ஒவ்வொரு அடியவர்களுக்கும் ஒரு வேலை கொடுத்திருந்தார். இல்லை! வேலை வாங்கிக் கொண்டிருந்தார். ஒருவர் பூசை சாமான்களை எடுத்துக் கொடுப்பதும், இருவர் மணி அடிப்பதும், ஒருவர் அபிஷேகத்துக்கான பாத்திரத்தில் நீரை நிறைப்பதும், ஒரு சிலர் பூக்களை ஆய்ந்து, துளசியை சீராக அமைத்து, இப்படி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஒரு நண்பர் வந்து எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்களேன் என்று அருகில் நின்றார்.

"பொறுத்திருங்கள்" என்று கூறி, பெருமாள் அபிஷேகத்துக்கு அண்டாவில் நீர் நிறைக்கும் வேலையில் அவரை சேர்த்துவிட்டேன். 

புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் போன்றவை சொல்லி ஒவ்வொரு அபிஷேகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது, எனக்குள் எதோ ஒரு எண்ணம் உதித்தது! நிற்க!

அதே நேரத்தில் வந்திருந்தவர்களில், ஒரு நண்பரை காணவில்லை. தேடிப்பார்த்து இல்லை என்று உணர்ந்து அமைதியானேன். உண்மையில், எல்லோரும் மண்டபத்துக்கு பக்கத்தில் நின்று பெருமாளின் அபிஷேகத்தை பார்த்த அந்த நேரத்தில், அவர் பிரதக்ஷிண வழியில், சன்னதிக்கு பின் புறமாக அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தாராம். திடீரென்று, யாரோ தாமிரபரணி ஓடுகிற வழியிலிருந்து மேல் ஏறி வந்து (அரூபமாகத்தான்) சன்னதியை நோக்கி செல்வது போல் உணர்ந்தாராம். ஆம்! ஒரு மிகப் பெரிய காற்று நாம் அமர்ந்திருக்க நம்மை தழுவி நடந்து சென்றால், சென்றதும் காற்றே இன்றி இருக்கும் நிலையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் தான் என்னுள் அந்த எண்ணம் உதித்தது.

"அய்யன் அகத்தியப் பெருமானை அழைத்திருந்தோமே! வந்துவிட்டாரா! அபிஷேகம் வேறு தொடங்கியாகிவிட்டதே!" என்று யோசித்து பெருமாளின் விக்ரகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.  அர்ச்சகர் செய்த அபிஷேகத்தை பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. பால் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டே, ஆனந்தத்தில் விழி இமை மூட..............

பெருமாள் முன், அங்கே, அர்ச்சகருக்கு பதிலாக, அகத்தியப் பெருமான் நின்று அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன். கண் திறந்து பார்க்க, அர்ச்சகர் தீர்க்கமான பார்வையுடன் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். மறுபடியும் கண்ணை மூட, அகத்தியப் பெருமான்தான் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். அடடா! சித்தன் அருளில் வந்த நம்பிமலை, கோடகநல்லூர் புனித நாட்கள் போன்றவற்றில் அகத்தியரே பெருமாளுக்கு அபிஷேகம் செய்த காட்சியை நாடியில் விவரித்த பொழுது, நமக்கும் அகத்தியப் பெருமான், பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை பார்க்கிற பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கியதுண்டு. அந்த ஆசையை இன்று குருநாதர் நிறைவேற்றி வைத்தார் என்று என் மனம் ஆனந்தக் கூத்தாடியது.


அபிஷேகம் நிறைவு பெற்ற பின், "எல்லோரும் வாருங்கள் உள்ளே. இனி மூலவருக்கு பூசைகள் செய்த பின், வெளியே வந்து உற்சவருக்கு பூசை" என்று கூறி உள்ளே சென்றார். வந்திருந்து, மிக அமைதியாக இருந்த அகத்தியர் அடியவர்கள், ஒவ்வொருவராக உள்ளே சன்னதி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர். சிறிது நேரத்தில் அந்த ஹால் முழுவதும் நிரம்பிவிட்டது. அடியவர்கள், படி மீது ஏறி நின்று பூசை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளே செல்ல இடம் கிடைக்கவில்ல. நான் த்வஜ ஸ்தம்பத்தின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே பூசை நடந்து அனைவரும் வெளியே வந்தனர். மூலவரை, மாலையில் சென்று பார்த்துக் கொள்ளலாம், கை நிறைய வேலை இருக்கிறது என்று தீர்மானித்து, உற்சவருக்கு நடந்த பூசையை கவனிக்கலானேன். தீபாராதனை நடந்த பொழுது, உற்சவரை பார்க்கவே முடியவில்லை. மிகப் பிரமாதமாக நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"என்ன பெருமாளே! உங்கள் முகத்தை கூட பார்க்க முடியாதா எனக்கு!" என்று கேள்வி கேட்ட மறு நிமிடம், ஒரு பக்தர் விலகினார், தீபாராதனை, பெருமாள் முகத்தருகே காண்பிக்கப்பட, ஒரு நிமிட தரிசனம்.


"அது போதும் பெருமாளே! மிக்க நன்றி!" எனக்கூறிவிட்டு காத்திருந்தேன்.

பெருமாளுக்கு நிவேதனம் செய்து, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சடாரி வைத்து, பெருமாளின் துளசி பிரசாதம் கொடுக்க, நிவேதன பிரசாதம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வலது பக்க மண்டபத்தில் வைத்து ஒருவர் தட்டுகொடுக்க, மற்றவர்கள் பிரசாத விநியோகத்தை தொடங்கினர். மிக மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால் வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அமைதியாக இருந்து, அபிஷேகத்தை பார்த்து, நீண்ட வரிசையில் நிதானமாக நின்று பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு, பின்னர் சாப்பிட்ட தட்டை கோவிலுக்கு வெளியே அதன் இடத்தில் வைத்துவிட்டு போனதுதான். பிரசாத விநியோகத்தின் கடைசியில் நின்று, வந்திருந்த அனைவருக்கும் "786" எண் பதித்த ரூபாய் நோட்டை - "பெருமாளின் பரிசு" என்று கூறி கொடுக்கிற வாய்ப்பை இறைவனும், அகத்தியப் பெருமானும் அடியேனுக்கு கொடுத்தார்கள். மேலும் சொல்லப்போனால்,
  1. இந்த வருட கோடகநல்லூர் திருவிழாவை, அகத்தியப் பெருமானே நேரில் நின்று நடத்தப் போகிறார் என்று முன்னரே தெளிவாக தெரிந்தும், அடியேனை பொறுமையாக அமைதி காக்க வைத்தார். ஒவ்வொரு எற்பாட்டையும் அவரே செய்து தந்தார்.
  2. அதில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் பங்கு பெற்றார்கள் என்பது சந்தோஷமான ஒரு விஷயம்.
  3. அகமதாபாத், சென்னை, பெங்களூர், மேலும் பல இடங்களிலிருந்தும் அகத்தியர் அடியவர்களை கிளப்பி விட்டு பங்கு பெற செய்தார் என்பது இன்னொரு விஷயம். அவர்களும் சின்ன சின்ன வேலைகளை செய்து தங்கள் சேவையை பூர்த்தி செய்தனர்.
  4. மேட்டுபாளயத்தில் வசிக்கும் ஒரு அகத்தியர் அடியவர் (நாடி வாசிப்பவர்) வந்திருந்து, முதல் நாள் தனக்கு அகத்தியர் நாடியில் வந்து உத்தரவிட்டதாகவும் "உடனே, நீ கிளம்பி செல் கோடகநல்லுருக்கு" என்று கூற, அந்த ஊர் எங்கிருக்கிறது என தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்தார். அவர் சார்பாக எல்லோருக்கும் "அகத்தியர், லோபாமுத்திரை" படம் ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார் என்பதிலிருந்து, அனைவருக்கும் அகத்தியப் பெருமான் ஒரு பரிசை வழங்கினார் என்று தான் கூறவேண்டும்.
  5. சென்னை மைலாப்பூரில் அகஸ்தியர் ஜோதிடம் பார்க்கும் ஒருவரை கிளப்பிவிட, அவர் தன் சிஷ்யர்களுடன் வந்து இறை தரிசனம் பெற்று சென்றார். அவரது நண்பர்கள், மிகுந்த அளவுக்கு பூசை பூக்களை சுத்தப்படுத்தி வைப்பதில் உதவி புரிந்தனர் என்பதை இங்கு கூறத்தான் வேண்டும்.
  6. வந்திருந்த ஒரு இளைஞர் (அகத்தியர் அடியவர்) வந்து தரிசிக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என "லட்டு" வாங்கி வந்து, இதையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்று வேண்டினார். அதற்கென்ன கொடுங்கள் என்று கூறி பிரசாத விநியோகத்தின் கூடவே அனைவருக்கும் வழங்கப்பட்டது.
உண்மையாக கூறப் போனால், ஒவ்வொரு அகத்தியர் அடியவரும், அவரவர்களுக்கு தெரிந்த வரையில், முடிந்தவரையில் அன்றைய பூசையில் கலந்துகொண்டனர் என்பதே உண்மை. அகத்தியரே வந்து அபிஷேகத்தை நடத்திக் கொடுத்து பூசையை நிறைவு செய்து கொடுக்க, இதை விட மிகப் பெரிய பாக்கியம் என்ன வேண்டும் நமக்கு என்று தோன்றிவிட்டது என்னவோ "உண்மை".

பூசை முடிந்து, பிரசாதம் வாங்கி அனைவரும் கிளம்ப, இறைவனை நோக்கி நன்றி சொல்லி ஒன்றை வேண்டிக் கொண்டேன்.

"உன் குழந்தைகள் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேரவேண்டும். இன்று நீ அருளியது இனி அவர்கள் வாழ்க்கையில் என்றும் உயர்வுக்கு வழி வகுப்பதாக இருக்கவேண்டும்!"

அனைவரும் செல்ல, கோவில் அமைதியானது. பூசாரி கோவிலை சார்த்திவிட்டு கிளம்பினார். நானும் நண்பர்களும், மாலையில் வந்து சேர்வோம் என்று கூறிய பக்தர்களுக்காக காத்திருந்து, மறுபடியும் தாமிரபரணியில் குளித்துவிட்டு, அன்றைய தினம் பிரதோஷம் ஆனதால், கோடகநல்லூர் கைலாச நாதரை தரிசனம் செய்துவிட்டு (செவ்வாய் பரிகார ஸ்தலம்), கோவிலுக்கு திரும்பி வந்தோம்.

பெருமாள் ஆஜானுபாகுவாக சிரித்தபடி நின்றிருந்தார். 25 அகத்தியர் அடியவர்கள் இருந்தனர். பெருமாளுக்கு இரவு பூசை நடந்து, நிவேதனம் (கடலை சுண்டல்) கொடுத்தனர். தேவாமிர்தமாக இருந்தது. பிறகு பள்ளியறை பூசை (பெருமாள் கோவிலில் இங்கு மட்டும் தான்) நடந்தது. எல்லோருக்கும் பள்ளியறை பால் பிரசாதமாக வழங்கினார்கள்.

அனைத்திற்கும் பெருமாளுக்கும், அகத்தியப் பெருமானுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை கூறிவிட்டு, ஊர் நோக்கி வந்து சேர்ந்தோம்.

அனைத்தும் அகத்தியர் அருளால் நடந்தது. அதனால் தான் இந்த தொகுப்பிற்கு "அகத்தியர் நடத்திய திருவிழா" என்று பெயர் கொடுத்தேன்.

அனைவரும் அவர் அருள் பெற்று விட்டீர்கள். அது கூடவே இருந்து உங்களை வழி நடத்தட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில், இதை சமர்ப்பிக்கிறேன்!

கோடகநல்லூர் சித்தன் அருள் நிறைவு பெற்றது!



சித்தன் அருள்................ தொடரும் !

Sunday 1 November 2015

சித்தன் அருள் - 249 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - IV

[ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! அகத்தியரின் சித்தன் அருள் வலைப்பூ, அவர் அருளாலும், உங்களைப் போன்ற அகத்தியர் அடியவர்களின் ஊக்குவிப்பினாலும், இன்றைய தினம் 10 லட்சம் பக்கப் பார்வைகளை பெற்றது! மிக்க நன்றியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்! கோடகநல்லூர்  திருவிழா தொடர்கிறது!]

அதெப்படி? நாமோ சாதாரண மனிதர்கள்! நமது எளிய வேண்டுதல்களுக்கு கூட சித்தர்களும், இறைவனும் இத்தனை கருணை புரிவார்கள்? அடடா! ஏதோ தெரிந்தவரையில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறோம், அதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு, வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார்களே! ஹ்ம்ம்! இன்று கோடகநல்லூரில் வந்து சேர்பவர்கள் அனைவரும் மிகுந்த பாக்கியசாலிகள். ஏதேனும் திருப்புமுனை அவர்களுக்கு, வாழ்க்கையில் அமையலாம்.  எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கட்டும் அகத்தியப் பெருமானே!" என்றெல்லாம் எண்ணங்கள் மனதுள் ஓடிக்கொண்டிருக்க, திடீரென "ஓம் நம சிவாய" என மனதுள் ஜபம் வந்தது. உடனே ஞாபகம் வந்து, வெளியே எட்டிப்பார்க்க, தூரத்திலிருந்து, லிங்க ரூபத்தில் அமர்ந்திருக்கும் "மொட்டை பொத்தை" என்கிற மலை (வள்ளியூர்) வந்து கொண்டிருந்தது.


எப்போது இந்த மலையை பார்க்கும் பொழுதும், சிவபெருமானே அங்கு விரும்பி வந்து அமர்ந்ததாக தோன்றும். எனக்கு தெரிந்த வரையில், அந்த மலை மீது யாரும் ஏறியது கிடையாது. ஏன் என்றால், அத்தனை செங்குத்தாக, வழி எதுவும் இன்றி நிற்கும் மலை.  சற்று நேரம் இந்த மலையை பார்த்தபடி ஜெபித்து, மேலும் பயணத்தை தொடர்ந்தோம்.

இதற்கிடையில், திருநெல்வேலியில் பூ மாலை வாங்க சென்ற நண்பர் தொடர்பு கொண்டு, மாலை கிடைப்பதில் உள்ள ஒரு சில பிரச்சினையை கூற, திட நம்பிக்கையுடன், நேரத்துக்கு கிடைத்துவிடும். வாங்கி வந்து சேருங்கள் என்று கூறிவிட்டு, கோடகநல்லூர் வந்து சேரும் பொழுது மணி காலை 8 ஆகிவிட்டது.

முதல் நாள் தான் பிரம்மோத்சவம் நிறைவு பெற்று இருந்ததால், தூரத்திலிருந்து பார்த்த பொழுது அதிக கூட்டம் இல்லை. இரவில் மழை பெய்து, கோவில் முன்புறத்தை நன்றாக சுத்தப்படுத்தி இருந்தது.

கோவில் கொடி மரத்தின் முன் நின்று நமஸ்காரம் செய்து வேண்டிக் கொண்டேன்.


"பெருமாளே! உங்கள் அருளால் வந்து சேர்ந்துவிட்டோம். எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக செய்திட அருள வேண்டும்! அனைவரையும் நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்!"


அர்ச்சகர் வெளியே வந்தார்.


"நமஸ்காரம்!" என்றேன்.


"நமஸ்காரம்! வந்துவிட்டீர்களா! உங்களைத்தான் பார்த்து பேச வேண்டும் என்று இருந்தேன்!" என்றார்.


"என்ன விஷயம்?"


"9 மணிக்கே பூசை, அபிஷேகம் தொடங்கி, 10 மணிக்கு நிறுத்தி வைத்துவிட்டு, பின்னர் அந்த கல்யாணத்தை நடத்தி மணமக்களை அனுப்பிவிட்டு, மறுபடியும் தொடரலாமே! எனக்கும் சற்று எளிதாக இருக்கும்!" என்றார்.


எதுவுமே யோசிக்காமல், "வேண்டாம்! முன்னரே தீர்மானித்தபடி 11 மணிக்கு பூசை அபிஷேகம் தொடங்கினால் போதும்! என் நண்பர்கள் வட்டத்தில் அனைவரிடமும் 11 மணி என்று கூறிவிட்டேன். அதனால் அனைவரும் திருநெல்வேலியில் பூசை அபிஷேகத்துக்கான சாமான்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சித்தன் அருளில் 11 மணி என்று போட்டாகிவிட்டது. ஆதலால், நிறைய அடியவர்கள் 10 மணிக்குத்தான் வந்து சேருவார்கள். எல்லோருக்கும் பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறதை பார்க்கிற பாக்கியம் கிடைக்க வேண்டும். ஆதலால், 11 மணிக்கு தொடங்கி பின்னர் எத்தனை மணிக்கு நிறைவு பெற்றாலும் பரவாய் இல்லை. நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கூறினேன்.


நான் இப்படி கூறுவேன் என்று அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.


"சரி! உங்கள் விருப்பம்" என்று முடித்துக் கொண்டார்.


நான் உள்ளே சென்று பெருமாள் தாயார்களை கண்டு வணங்கினேன்.  சித்தன் அருளில் பங்கு பெரும், ஒரு அகத்தியர் அடியவர் வேண்டுகோளுக்கு இணங்க, வாங்கி சென்ற துளசி மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாளுக்கு சார்த்தச் சொன்னேன். உணமையிலே, அதன் பின் பெருமாள் சற்று புன்னகையுடன் காட்சி கொடுத்தார் என்பதே உண்மை.


"அனைத்து விக்கிரகங்களுக்கும் வஸ்த்திரம் கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும். அதையும் சார்த்திட தயாராக இருங்கள்!" என அர்ச்சகரிடம் கூறிவிட்டு, வெளியே வந்து சமையல்காரர் வந்துவிட்டாரா! என்று தேடினேன்.


அவர் முன்னரே வந்து அமர்ந்திருக்க, "என்ன விஷயம்? யாருக்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் வேலையை தொடங்க வேண்டியது தானே! கிளம்புங்கள்" என்று சொல்லி அனுப்பிவிட்டு, நதியில் குளித்துவிட்டு வரலாம் என்று தயாரானேன்.


இதற்குள் கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டம். அகத்தியர் அடியவர்கள் என்று ஒரு பெரிய திருவிழா நடப்பது போல் கோவில் வாசல் மாறிவிட்டது.


நண்பர்களை அழைத்துக் கொண்டு, தாமிரபரணி கரையை அடைந்ததும், ஆச்சரியப்பட்டுப்போனேன். ஒரு 50 பக்தர்கள் பெரியவர்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே நதிக்கரை அமைதியாக இருக்கும். ஆனால் அப்போது ஒரே சப்தம். யார் இவர்கள் என்று விசாரித்த பொழுது, காக புசுண்டர் நாடியில் அன்றைய தினத்தை பற்றி வந்த வாக்கை கேட்டு தாமிரபரணியை வழிபட்டு, பெருமாளை கண்டு ஆசிர்வாதம் பெற்று செல்ல வந்தவர்கள் என்று தெரிய வந்தது.




நான் கரையில் அமர்ந்து கொண்டேன். நண்பர்கள் மெதுவாக தாமிர பரணி நதியில் இறங்க முயன்றார்கள். அப்போது நான் கூறினேன்.

"நதியில் இறங்கி கிழக்கு பார்த்தோ, வடக்கு பார்த்தோ கை கூப்பி நில்லுங்கள். சங்கமா முனிவர் கூறிய மந்திரத்தை நான் கரையில் அமர்ந்து கூறுகிறேன். நீங்களும் கூறிவிட்டு பின்னர், கிழக்கு நோக்கி நின்று முங்கிக் குளியுங்கள். ஒன்றை முயன்று பாருங்கள். 36 முறை முங்கி எழ வேண்டும். அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒவ்வொருமுறையும், தாமிரபரணி ஓடுகிற இந்த பூமியில் நீருக்கு அடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். நீருக்கடியில் நமஸ்காரம் செய்யும் பொழுது கண் திறந்து பார்த்தால் என்ன காண்கிறீர்கள் என உங்களுக்கு அப்போது தெரியும்" என்றேன்.


அவர்கள் வடக்கு நோக்கி கை கூப்பி நிற்க, கரையில் அமர்ந்து அந்த ஸ்லோகத்தை சொல்லிக் கொடுத்தேன். கூறிவிட்டு அவர்கள், நதியின் நடுவை நோக்கி குளிப்பதற்கு நடந்து சென்றார்கள்.


நான் நதியில் இறங்காமல் அமர்ந்திருந்தேன். ஒருவர் தன் குடும்பத்துடன் குளிக்க வந்தார். நான் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுத்ததை கண்டவர், எனக்கும் சொல்லி கொடுங்களேன்! என்றார். அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் சொல்லிக் கொடுக்க, அடுத்து ஒரு கூட்டம். இப்படி ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க திடீரென்று ஒரு யோசனை.


"ஆமாம்! எனக்கு யார் சொல்லித்தருவா!"


யோசித்து பார்த்த பொழுது யாரும் இல்லை. "சரி இவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததே, நான் சொன்னதாக ஏற்றுக்கொள் தாயே" என்று கூறிவிட்டு, நானும் நதியில் நீராட இறங்கினேன்.


நதியில் நீர் மட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் இழுவை அதிகம் இல்லை. கைகூப்பி கிழக்கு நோக்கி நின்று அகத்தியரையும், லோபாமுத்திரை தாயையும், கோடகநல்லூர் பெருமாள், தாயார் இவர்களை த்யானித்துவிட்டு தாமிர பரணியில் மூழ்கினேன்.


கிழக்கு நோக்கிய முதல் நமஸ்காரம் எளிதாக வந்தது. நேரம் நன்றாக இருக்கும் பொழுதே நல்லதை செய்து விட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதனால், 36 நமஸ்காரங்களை நோக்கி செயல் பட்டேன். 18 வது நமஸ்காரம் செய்து முடித்தவுடன் நீருக்கு அடியிலேயே இருந்து கண் திறந்து பார்க்க, அங்கே நான்கு பாதங்கள் தென்பட்டது. அகத்தியப் பெருமான், லோபா முத்திரையின் பாதங்கள்தான் அவை. தாமிர பரணித் தாய் கனிவுடன் கை தூக்கி ஆசிர்வதிக்கிற நிலையில் கண்டு,


"இது போதும் எனக்கு பெற்றோர்களே! இது போல் எல்லோருக்கும், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ அருளவேண்டும்!" என வேண்டிக் கொண்டேன்.


19வது நமஸ்காரமாக "ஒரு வாசி யோகி இறைவனுக்கு செய்கிற நமஸ்காரத்தை" செய்துவிட்டு, 36 எண்ணிக்கைவரை சென்று பின் ஸ்நானத்தை முடித்து கரை ஏறினேன். யாரிடமும் எதுவும் பேச தோன்றவில்லை. கரையிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து, நதி நீரை எடுத்து, விபூதி குங்குமம் பூசிக் கொண்டு கோவிலை பார்த்து நடந்தேன்.


திரும்பி நதியை பார்த்த பொழுது, அந்த 50 பேர் கூட்டமும், கையில் தாம்பூலத் தட்டுடன், தாமிரபரணி தாய்க்கு பூசை செய்ய நதி நடுவை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து நின்று, அவர்களில் பெரியவர் ஒருவர் மந்திரம் சொல்லிக் கொடுக்க, அதை அவர்கள் திருப்பி சொல்ல, ஒரு 15 நிமிடம் பூசை நடந்தது. தாமிரபரணி தாய்க்கு இப்படி ஒரு பூசையா! என்று சந்தோஷமாக பார்த்தபடி நின்றேன்.




கல்யாணம் முடிந்து, கல்யாணக் கூட்டம் விலகியது. அகத்தியர் அடியவர்கள் ஒரு 100 பேர்கள் இருந்தனர். இன்னும் வருவார்கள் என்று தோன்றியது.

"இந்தத் திருவிழா அகத்தியரால் நடத்தப் படுகிறது. நாமெல்லாம் ஒரு கருவி. யார் யாரெல்லாம் வரவேண்டும் என அவர் தீர்மானிக்கின்றாரோ அவர்கள் நிச்சயம் வந்து சேர்வார்கள்", என்று மனதுள் ஒலிக்க, சரி! அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபடி கோவிலுக்குள் சென்றேன்.

ஒரு நண்பர் வந்து "அர்ச்சகரிடம், உற்சவ மூர்த்தியின் அபிஷேகத்தை வெளியே மண்டபத்தில் வைத்து நடத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் சரி என்று ஒத்துக் கொண்டுவிட்டார். அதனால், உற்சவ மூர்த்தியின் பெரிய பீடத்தை வெளியே தூக்கி வைக்க ஆட்கள் தேவை" என்றார்.


அதுவும் நல்லதுதான் என்று யோசித்து, நண்பர்களுடன் உள்ளே சென்று பீடத்தை வெளியே தூக்கி வைத்தோம். இதற்கிடையில், பெங்களூர், கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்த இரு அகத்தியர் அடியவர்கள் மேலே தூக்கி கட்டியிருந்த திரைகளை கழற்றி தொங்க விட்டனர்.


இதற்கிடையில், திருநெல்வேலியில் இருந்து நண்பர்கள் குழு வந்து சேர்ந்தது. வஸ்த்திரம், பூ மாலை, உதிரிப் பூ, தாமரை மொட்டுக்கள், துளசி என வந்து சேர, ஒவ்வொரு அகத்தியர் அடியவர்களும், தாங்களாகவே முன் வந்து அவற்றை எடுத்து, மண்டபத்தில் வைத்து, அங்கேயே அமர்ந்து, பிரித்து சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தனர்.


கோடகநல்லூர் சித்தன் அருள்................. தொடரும்!