​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 December 2015

சித்தன் அருள் - 262 - "பெருமாளும் அடியேனும்" - 32 - சனீச்வரன் குடும்பத்தில் பிரச்சினை!


திருமலை வேங்கடவனை பலமிழக்க வைக்க கலிபுருஷன் ​போட்டிருந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சனீச்வரன், முதலில் அரண்டு போனார்.

தான் சனீச்வரனாக இருந்தாலும், இதுவரை ஒரு போதும் அதர்ம வழியாகச் சென்றதில்லை. அதுமட்டுமின்றி, அவரவருக்கு கர்ம வினைப்படி என்னென்ன தண்டனையை சாத்வீக வழிப்படி கொடுக்க வேண்டுமோ, அதை இதுவரை கொடுத்துக் கொண்டு வருகிறோம்.

அதில் இதுவரை எந்த விதப் பாகுபாடும் யாருக்கும் காட்டியதில்லை. அப்படி ஒரு நெறிவழியில் சென்று கொண்டிருக்கிற நேரத்தில்  கலிபுருஷன் புதிய "சனி" பகவானாக வந்துவிடுவான் போலிருக்கிறதே என்று மனதில் எண்ணிக் கொண்டார்.

இதுவரை சனீச்வரனான தனக்கு "சனி" பிடித்ததில்லை. இந்த கலிபுருஷன் பேசுவதைப் பார்த்தால் முதன் முறையாக தனக்கு ஏழரைச் சனியோ அஷ்டமத்துச் சனியோ வந்து விட்டது போல் தோன்றுகிறதே.  இதென்ன கொடுமை என்று மேலும் எண்ணும் பொழுதுதான், கலிபுருஷன் வலையில் தன் கணவர் வீழ்ந்து விடக்கூடாதே என்று பயந்தாள் சனீச்வரனுடய தர்மபத்னி நீளாதேவி.

திருமலை வேங்கடவனுக்கே "சதி" செய்யும் கலிபுருஷன், நாளைக்கு தன் வாழ்க்கையிலும் ஏன் குறுக்கிடமாட்டான்? எனவே தன் கணவரை அவனை விட்டுப் பிரிக்க வேண்டும், இல்லையெனில் இது பெரிய இடத்து வம்பாக மாறிவிடும் என்று நினைத்து நீளாதேவி, தன் கணவனை அந்தப்புர அறைக்கு அழைத்துச் சென்றாள்.

"திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் நீங்கள் ஏன் பகையை உண்டாக்க வேண்டும்? யார் அந்த கலியன்? அவன் பேச்சை கேட்டு தவறேதும் செய்யாதீர்கள்" என்றாள் நீளாதேவி.

"மெதுவாக பேசு. அவன் காதில் விழுந்து விடப் போகிறது" என்று மௌனமாக எச்சரிக்கை விடுத்தான் சனீச்வரன்.

"எதற்காக இப்படி நடுங்கித் தவிக்கிறீர்கள்? யார் அவன்? உங்களைவிட பலசாலியா?"

"ஆம்!"

"ஆமாமா. அப்படியென்றால் அவன் பேச்சைக் கேட்டு திருமாலுக்கும் கருடனுக்கும் பிளவை உண்டாக்கப் போகிறீர்களா?"

"அதை இப்பொழுது சொல்ல இயலாது. எனினும் அப்படி ஒரு நிலை திருமாலுக்கும் கருடாழ்வாருக்கும் வருமேன்றிருந்தால் என்னால் அதைத் தடுக்க முடியாது.

"நாதா! தங்களது நெறி தவறாத தன்மையைக் கண்டு மூவுலகமும் மெய்மறந்து  பாராட்டுகிறது. சகல ஜீவன்களுக்கும் அடைக்கலம் தரும் திருமாலுக்கே தாங்கள் துரோகம் செய்யலாமா? அல்லது அந்த கருடாழ்வார்தான் தங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்? என்று நிதானமாகவே கேட்டாள் நீளாதேவி.

"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்! ஆனால் பிரம்மா எனக்கொரு கட்டளை இட்டிருக்கிறார். அதன்படி என் மனதிற்குப் பிடித்தம் இல்லையென்றாலும் நான் கலிபுருஷனுக்குத் துணை போகத்தான் வேண்டும் போலிருக்கிறது" என்று வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூறினார் சனீஸ்வரர்.

"அதென்ன கட்டளை?"

"அது தெய்வ ரகசியம். உன்னிடம் சொல்ல இயலாது நீளாதேவி!" என்றார் சனீஸ்வரர்.

"நீங்கள் சொல்லாவிட்டால் என்ன? நானே படைப்புக் கடவுளான அந்த பிரம்மனிடம் போய்க் கேட்டுக் கொள்கிறேன்"

"கேட்டு என்ன பயன்? அவர் கட்டளையிட்டது, கட்டளையிட்டதுதான். நான் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன்."

"அப்படியென்றால்?"

"இனிமேல் பூலோகத்தில் கலிபுருஷனின் ஆட்சிதான் அமையப் போகிறது. அதர்மம் தலை தூக்கும். இது தெய்வங்களையும் கூட பாதிக்கும்!"

"தெய்வங்களையே பாதிக்கும் விஷயமென்றால் பிரம்மாவையும் கூட பாதிக்குமே! பின் எப்படி கலிபுருஷனைத் தோற்றுவித்தார்?"

"அதற்குப் பெயர் தான் பிரம்மா. இது காலத்தின் கட்டாயம். இதற்கு மூன்று தேவர்களும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்."

"சரி! எப்படியும் போகட்டும். நீங்கள் இந்த பிளவுக்கு துணை போகவேண்டாம். அது கலிபுருஷன் பாடு, பிரம்மா பாடு. அவ்வளவுதான் நான் சொல்வேன்."

"தேவி! உன் ஆலோசனைக்கு நன்றி! இந்த விஷயத்தில் நீ தலையிடாதே. வெற்றி பெறுவது திருமலைத் தெய்வமா, அல்லது கலிபுருஷனா? என்று வேடிக்கை பார்"

"நான் வேடிக்கை பார்ப்பது இருக்கட்டும். இங்கே இப்பொழுது இன்னொரு வேடிக்கை நடக்கப் போகிறது. அதை பார்க்க வேண்டாமா?" என்று சூசகமாக ஒரு சொல்லை வீசினாள் நீளாதேவி!

"என்ன வேடிக்கை?"

"எப்போது நீங்கள் என் பேச்சை மீறி, செயல்படுவதாக தீர்மானித்து விட்டீர்களோ, இனிமேல் உங்களோடு நான் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை!"

"என்ன சொல்கிறாய்? நீளாதேவி!"

"ஆமாம். கலிபுருஷன் பேச்சைக் கேட்டும் பிரம்மாவின் பேச்சுக் கட்டுப்பட்டும் நீங்கள் திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் பிளவை ஏற்படுத்தப் போகிறீர்கள். கேட்டால், அது காலத்தின் கட்டாயம் என்கிறீர்கள். இப்பொழுது நான் இதற்காக தங்களை விட்டுப் பிரியப் போகிறேன். இதை தடுக்க முடியுமா என்று பாருங்கள்!" என்றாள் நீளாதேவி.

சனிபகவான் இதைக் கேட்டு அதிர்ந்து போனார்.

நீளாதேவியுடன் உள்ளே சென்ற சனீச்வரன், வெகு நாழிகையாகியும் வெளியே வராததால், கலிபுருஷன் கலக்கமடைந்தான். ஏனெனில் என்னதான் தான் பலவாறு முயற்சி செய்தும், இதுவரை திருமலை வேங்கடவனை வெற்றி பெற முடியவில்லை.

வேறெங்கு சென்று தன் கலியுலக வேலைகளைச் செய்தாலும் தகும்? வேங்கடவன் ஏதேனும் வடிவில் வந்து கெடுத்துவிடுவான் என்ற பயம் இருந்ததால், முதலில் வேங்கடவனுக்கே சோதனையை உண்டாக்கிவிட்டால் பின்னர் பூலோகத்தில் தன் செல்வாக்கு அற்புதமாக மிளிரும் என்று கணக்கிட்ட கலிபுருஷனுக்கு..

முன்பு பிரம்மா தனக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது.

சித்தன் அருள்..................... தொடரும்!

3 comments:

  1. Om Namasivaya...Om Agathiyar Ayyanae Thunai....

    Mikka nandringa ayya...

    ReplyDelete
  2. Iyaa yenathu peyar siva kavin, agathiyar nadi parka yengu sella vendum.melum contact no sollavum. nan Chennail irukiren. thayavuseithu vazhi kattavum.
    om namasivaya...

    ReplyDelete
    Replies
    1. Check this link and go

      http://siththanarul.blogspot.in/2015/11/to-read-naadi-palm-leaf.html

      Delete