​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 December 2015

சித்தன் அருள் - 263 - "பெருமாளும் அடியேனும்" - 33 - கருடாழ்வார் பெருமாளை விட்டு விலகுதல்!


​"சனிபகவான் துணை இல்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது. எனவே, தேவைப் படும்பொழுது சனீச்வரனுடன் தொடர்பு கொள்" என்று சொன்னார் பிரம்மதேவன்.

இதை நினைவிர்க் கொண்டுதான்  கலிபுருஷன் சனீஸ்வரரை தேடி வந்தான். சனீஸ்வரர், கலிபுருஷனுக்கு ஆர்வத்துடன் உதவி செய்யத்தான் துடித்தார். ஆனால், வேங்கடவனுக்கே எதிரியாகச் செயல்பட வேண்டும் என்று கலிபுருஷன் சொன்னதும் கலக்கமடைந்தார்.

வருத்தம் கலந்த முகத்தோடு சனீச்வரன் அந்தபுர அறையிலிருந்து வெளிவந்ததைக் கண்டு கலிபுருஷனுக்கு கலக்கமேற்பட்டது.

"காயா-பழமா?" என்றான் கலிபுருஷன்.

"காயும் இல்லை, பழமும் இல்லை, உறைக்காய்" என்றார் சனீச்வரன்.

"அப்படியென்றால்?"என்று கலிபுருஷன் திகைக்கும் பொழுது,

நீளாதேவி யாரையும் மதிக்காமல் தன் தோழிகள் புடைசூழ சனீஸ்வரனை விட்டு விலகி, தன் தாய் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

சனீச்வரன் ஒரு வார்த்தை கூட நீளாதேவியுடன் பேசவே இல்லை. அதே சமயம் தன் கணவனைக் கெடுக்க வந்த கலிபுருஷனைக் கண்டு, எரிச்சலுடன் பொருமித் தீர்த்தாள் நீளாதேவி.

சில நாழிகைகள் கடந்தன.

மௌனமாக இருந்த சனீச்வரன் வாய் திறந்து பேசினார்.

"கலிபுருஷா! நான் மிகவும் தர்மசங்கடத்தில் இருக்கிறேன். என் மனநிலை சரியில்லை. ஒன்று செய். நீயே என் பொருட்டு பிரார்த்தனை செய். உன் பிரார்த்தனையில் நான் இருப்பேன். நிச்சயம் கருடாழ்வார் நாக்கில் நான் அமர்வேன். போதுமா?" என்றார்.

"அப்பாடி"என்று பெருமூச்சுவிட்ட கலிபுருஷன் "எப்படியோ, சற்று தாமதம் ஆனாலும், முயற்சி வெற்றிதான்" என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டான். பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி, "தங்களின் துணைவியார் ஏதோ கோபத்துடன் செல்வது போல் இருக்கிறதே! என்னால் ஒன்றும் பிரச்சினை இல்லையே" என்று கேட்டான்.

"அதெல்லாம் உனக்கெதற்கு கலியா? வந்தாய், உதவி கேட்டாய், நானும் தந்துவிட்டேன். எப்படியோ உன் வேலை முடிந்து விட்டது. பிறகென்ன?" என்று எரிந்து விழுந்தார், சனீச்வரன்.

 "தங்கள் உதவிக்கு நன்றி, இப்பொழுதே தங்களை நினைத்துக் கொண்டு பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். தாங்கள் என்னை விட்டுப் போய் விடக்கூடாது" என்று காலில் விழுந்தான் கலிபுருஷன்.

"ம்ம்..சீக்கிரம் புறப்படு. நாழிகை ஆக ஆக திருமலையில் நிலமை வேறுவிதமாக மாறி விடப்போகிறது" என்று கலிபுருஷனை விரட்டி அடித்தார் சனி பகவான்.

திருமலையில் வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் பிரிவு ஏற்பட்டதோ இல்லையோ, அதற்கு முன் சனீச்வரன் தம்பதியரிடையே பிரிவு ஏற்பட்டு விட்டது என்பது உண்மை.

இதை சனீச்வரன் ஆழமாகச் சிந்தித்தார்.

நீளாதேவி தன்னுடன் இருக்கும் வரை தர்ம வழியிலே பூலோகத்திற்கு மட்டுமின்றி மூவுலகிற்கும் நல்லதும், கெட்டதும் செய்து வந்தோம். கலிபுருஷன் எப்பொழுது தன் வீட்டில் காலடி எடுத்து வைத்தானோ, அந்த நாழிகையே தனக்கும் "கலி" பிடித்துவிட்டது. இனி எல்லா இடங்களிலும் அதர்மம் கொடி கட்டி கும்மாளம் அடிக்கப் போகிறது! வேறு வழியின்றி தானும் கலிபுருஷனோடு கைகோர்த்துக் கொள்ள வேண்டியதுதான். விதி மிக வலிமையானது. என்ன செய்ய? என்று முடிவெடுத்தார். இது, கலிபுருஷனுக்கு பெரும் தெம்பைக் கொடுத்தது.

இதற்கிடையில்................

கனவேகமாக திருமலையில் காலெடுத்து வைத்த கருடாழ்வார் வேங்கடவனை நேரிடையாக சந்திக்க முயன்றார்.

ஆனால், வாசலில் இருந்த துவார பாலகர்கள் சட்டென்று கருடாழ்வாரைத் தடுத்து நிறுத்தினார்கள். கருடாழ்வாருக்கு அசாத்திய கோபம் வந்தது.

"என்னை தடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?' என்றார் கருடாழ்வார்.

"கருடாழ்வாரே! தயவுசெய்து சினம் காக்க! தாங்கள் சுமக்கும் வேங்கடவன்தான், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்." என்றனர் துவார பாலகர்கள்.

"எதற்கு?"

"தங்களுக்கு கிரகநிலை சரியில்லை. ஏழரைச் சனி பிடித்திருப்பதாகச் சொல்லி, சற்று அமைதியாகவே செயல்படுபடி உத்தரவிட்டிருக்கிறார்." என்றனர் த்வார பாலகர்கள்.

"அப்படியென்றால்?"

"பெருமாள் தங்களை உடனடியாகக் காணும் நிலையில் இல்லை" என்றனர்.

"அப்படியா?" என்ற கருடாழ்வார் "உங்கள் திருமலை வேங்கடவனுக்கு "கருடன்" சொன்னதாக இதையும் சொல்லும். இனிமேல் அவர் வேறு வாகனத்தில் உலா வரட்டும். கருடன் இனிமேல் பெருமாளுக்குப் பல்லக்குத் தூக்கத் தயாராக இல்லை" என்று கடுங்கோபத்தில் பேசிவிட்டு அப்படியே வெளியேறினார்.

துவார பாலகர் இதைக் கேட்டு அதிர்ச்சியால் உறைந்து போயினர்.

சித்தன் அருள் ................. தொடரும்!

2 comments:

  1. Om Agatheesaya Namaha: Om Sairam Om Namasivaya Namaha:

    ReplyDelete
  2. அகத்திய பெருமான் அவர்ரை நான் குருவாக ஏற்கிரேன் ஏனக்கு அவரை காணா ஏனக்கு வழிகாட்டுங்கள்,நன்றி
    ன்

    ReplyDelete