​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 17 May 2016

சித்தன் அருள் - 327 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"ஒரு குழந்தை நன்றாக வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு, முன்மாதிரியாக இருக்கவேண்டும். குழந்தைக்கு முன்னால் சதா சர்வகாலமும் நல்ல அறச்சொற்களைப் பேசிக் கொண்டே இருந்தால், குழந்தையும் அதை இயல்பாக கற்றுக்கொள்ளும். குழந்தைக்கு முன்னால் சதா சர்வகாலமும் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தால், இறைவனின் ஸ்மரணங்களைக் கூறிக் கொண்டே இருந்தால் குழந்தையும் அதனை இயல்பாக கற்றுக் கொள்ளும். குழந்தையை வைத்துக் கொண்டு "பொய்" கூறுவது பெற்றோர்களே. எனவே அதனைக் (பொய்யை) கூறலாம் என்று அங்கீகாரம் கொடுப்பதே பெற்றோர்கள்தான். எத்தனைதான்  இடர் வந்தாலும் "உண்மையை" கூறு என்பது போல் பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும். அடுத்ததாக, ஒருவேளை, குடும்பத்தை விட்டு கல்வி கற்க வெளியே சென்றால், அங்கே சூழல் ஏற்புடையது இல்லை என்றால் என்ன செய்வது? அப்படி செல்வதற்கு முன்னரே பலமான அடித்தளத்தை குழந்தை மனதிலே ஏற்படுத்தி விடவேண்டும். அந்த அளவிற்கு ஒரு குழந்தையின் தாயும், தந்தையும், ஒரு கடுமையான தவம் போல் குழந்தை வளர்ப்பை கவனிக்க வேண்டும். அஹுதொப்ப குழந்தையை வைத்துக்கொண்டு நிறைய தர்ம காரியங்களை செய்யும் பொழுது, அதனை இயல்பாக குழந்தை கற்றுக் கொள்ளும். இது ஒரு எளிமையான வழியாகும். இதோடு நல்விதமாய் இறை ஸ்லோகங்களை அன்றாடம் சொல்லி, சொல்லி பழக்குவதும், ஆலயம் செல்லப் பழக்குவதும், நல்ல நீதி நூல்களை வாசிக்க கற்றுக் கொடுப்பதுமாக இருந்தால், கட்டாயம் அந்தக் குழந்தை வழி தவறுவதற்கான விதி அதன் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும், இந்த அடிப்படை விஷயங்கள் அதன் வாழ்க்கையில் கவசம் போல் காத்து நிற்கும்.  ஆனால் இவைகள் மட்டும் போதாது. கடுமையான பித்ரு தோஷங்களும், கடுமையான முன் ஜென்ம பாவங்களும்தான், பருவ காலத்தில் ஒரு பருவ தடுமாற்றம் குழந்தைகள் வாழ்விலே ஏற்பட்டு அதனால் கல்வி தடைபடுவதற்குண்டான வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு வழக்கம் போல் திலயாகம்,  வழிபாடு போன்றவற்றை செய்வதோடு கூடுமானவரை, குறைந்தபட்ச தேவைகளோடு ஒரு குடும்பம் வாழ்ந்து, எஞ்சியவற்றையெல்லாம் தக்க ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிட்டால், கூடுமானவரை குழந்தைகள் குறித்த கவலைகள் இல்லாமல் வாழலாம்." ​ அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!  

1 comment: