​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 July 2016

சித்தன் அருள் - 369 - "பெருமாளும் அடியேனும்" - 57 - கேசரிக்கு வந்த சோதனை!


“தங்களுக்கா ஸ்வாமி சந்தேகம்? கேளுங்கள் பெருமாளே!”

“உன் பெயரில் ‘அஞ்சனாத்திரி’ என்று இந்த மலையின் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டுவதில் உன் கணவருக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்குமா? கொஞ்சம் கேசரியிடம் கேட்டுச் சொல்லேன்.”

“பெருமாளே! இதென்ன விளையாட்டு? தாங்கள் சொல்லி என் கணவர் கேட்காமலா இருக்கப் போகிறார்? நிச்சயம் ஏற்பார் வேங்கடவா!”

“இல்லை அஞ்சனை! தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறுதானே?”

“ஆமாம்”

“அப்படியெனில் கேசரியும் அஞ்சனையும் வேறு வேறுதான்”

“தங்கள் சொல்படி....”

“வாயுபகவானுக்கு தத்து கொடுக்க நீ முன்வந்தாய்”

“ஆமாம்”

“உன் கணவன் முன்வரவில்லை.”

“ஆமாம்”

“அதற்கே ஒத்துக் கொள்ளாதவன் இப்போது அவனை விட்டு விட்டு உன் பெயரில் இந்த ‘மலை’ எந்நாளும் விளங்கும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வான்?”

“இல்லை வேங்கடவா! அவர் இதுவரை என் சொல்லை மீறி எதையும் செய்ததில்லை.”

“இப்பொழுது ‘ஹனுமான்’ விஷயத்தில் மாறியிருக்கிறதே”

“திருமலை அரசே! தாங்கள்தான் பிள்ளையையும் கிள்ளி விடுகிறீர்கள். பின்னர் தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள். தங்களுக்கு இது தெரிந்திருந்தும் என்னையும், கேசரியையும் பிரிக்கலாமா?” என கைகூப்பி, கண்ணீர் மல்கக் கேட்டாள்.

திருமால், அஞ்சனையையே கண் மூடாமல் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன அஞ்சனை? நானா உங்கள் இருவரையும் பிரித்தேன்? உன் கணவன் தான் இப்போது பிரிந்து செல்கிறான்”

“இல்லை வேங்கடவா! இல்லை. அவர் மனம் பிள்ளைப் பாசத்தால் நேற்றிரவு முழுவதும் சஞ்சலப்பட்டது உண்மைதான். அவரை நான் சமாதானப் படுத்தியதும் உண்மைதான். ஆனால் தங்கள் உத்தரவை கேசரி ஒரு போதும் மீறமாட்டார். என்னை விட்டு அகலவும் மாட்டார். இது சத்தியம்.” என்றாள் அஞ்சனை.

“அஞ்சனாத்திரி மலைக்குச் சொந்தக்காரியாக மாறிவிட்ட அஞ்சனை! உன் கணவர் இப்பொழுது உன்னிடம், உன் ஆசிரமத்தில் இருக்கிறானா என்று பார். இருந்தால் அவனை என்னிடம் அழைத்து வா. நீ வரும்வரை நான் காத்திருக்கிறேன்.” என்று வேங்கடவன் சொன்னபோது, ‘ஏதோ ஒரு சூட்சுமம் நடந்திருக்கிறது. இல்லையெனில் திருமலைவாசன் இப்படியரு சொல்லைத் தன்னிடம் சொல்லியிருக்க மாட்டார், என்ற எண்ணத்தோடு, தான் பரண் அமைத்துத் தங்கியிருந்த ஆசிரமத்திற்குச் சென்றாள்.

அங்கு கேசரியையும் காணவில்லை. ஹனுமனையும் காணவில்லை. பல்வேறு இடங்குளுக்கும் சென்று பார்த்தாள். சேவகர்களும் நான்கு திக்குகளிலும் தேடிப் பார்த்தனர்.

நான்கு நாழிகைகள் ஆயிற்று.

எங்கு தேடியும் கேசரியையும் ஹனுமனையும் காணவில்லை.

‘என்ன ஆயிற்று’ என்று தெரியாமல் அஞ்சனைக்கு அழுகை வந்துவிட்டது. நேராக வேங்கடவனையே நேரில் சந்தித்து இதுபற்றிக் கேட்டுவிடலாம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடினாள்.

திருமால் புன்னகையுடன் காணப்பட்டார்.

“என்ன அஞ்சனை! உன் கணவன் கேசரி என்ன சொன்னான்? உன் பேரில் இந்த மலை இருக்கச் சம்மதம் கொடுத்தானா?” என்று நிதானமாகக் கேட்டார்.

“வேங்கடவா என்னை ஏன் இன்னும் சோதிக்கிறீர்கள்? வேண்டாம். உங்கள் நாடகத்தை நிறுத்தி விடுங்கள். என் கணவனையும் நான் பெற்ற என் பிள்ளையையும் என்னிடம் ஒன்றாகச் சேர்த்து விடுங்கள்.” என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அஞ்சனையை சமாதானப் படுத்திய திருமலைவாசன், “நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது என்மீது கோபப்பட்ட உன் கணவன், குழந்தை அனுமனைத் தூக்கிக் கொண்டு மலை மீதிலிருந்து குதிரையில் சேவகர்களோடு சென்று விட்டான். மலைக்குக் கீழேயுள்ள கோனேரிக்கரை அருகே அவன் சென்று கொண்டிருக்கிறான். இப்பொழுது சொல். நானா உன் கணவனைப் பிரித்தேன்?” என்று நயமாகப் பேசினார் வேங்கடவன்.

என்னதான் தெய்வ பக்தி இருந்தாலும் தனக்குப் பிறந்த குழந்தையை மற்றவர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்க யாருக்கும் மனம் வராது.



இந்த நிலையில்தான் அன்றைக்கு கேசரியும் இருந்தான். தன் மனைவி அஞ்சனை கூட, தன் சொல்லை மீறி வேங்கடவன் பின் சென்றது கேசரிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

இரவு முழுவதும் தூங்காமல் பரிதவித்த கேசரி, பொழுது விடிந்ததும் அஞ்சனைக்குத் தெரி யாமல் தன் குழந்தை அனுமனைத் தூக்கிக் கொண்டு தன் தேசத்திற்கே சென்றுவிடுவது என்று முடிவெடுத்தான்.

மறுநாள்-

அஞ்சனை திருமலைவாசனைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில் கேசரி அனுமனை மிக ஜாக்கிரதையாக யாருக்கும் தெரியாமல் ஒரு சிறு பெட்டியில் பட்டுத்துணியால் மூடி குதிரையில் ஏறினான்.

குதிரையிலிருந்து குழந்தை விழுந்து விடாமல் இருக்க நாலாபக்கத்திலும் நன்றாகச் சோதனை செய்து கொண்டு யாரிடமும் எதையும் சொல்லாமல் வெகுவேகமாக மலையிலிருந்து இறங்கினான்.

கோனேரி நதிக்கரைக்கு வந்த பின்புதான் கேசரிக்கு சோதனை ஏற்பட்டது. அன்றைக்குப் பார்த்து கோனேரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எப்படியிருந்தாலும் கேசரி அக்கரைக்குச் சென்று தான் தன்நாட்டை அடைய வேண்டும். இங்கும் அங்கும் குதிரையில் உலா வந்து கொண்டானே தவிர, கேசரி அக்கரைக்குச் செல்ல முடியாதவாறு வெள்ளத்தின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.

பரிசலில் சென்று அக்கரையை அடையலா மெனில் கேசரியின் கண்ணில் ஒரு பரிசல் கூடத் தென்படவில்லை. குதிரையோடு ஆற்றைக் கடக்கவும் முடியாது. துணிந்து கடந்துவிடலா மென்றால் கையோடு கொண்டுவந்த குழந்தை அனுமனை எப்படி பத்திரமாகக் கரை சேர்ப்பது என்ற கவலையும் ஏற்பட்டது.

மீண்டும் வேங்கடமலைக்கே ஏறிச் சென்று விடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. கோனேரிக் கரையில் வெள்ளம் வடிவதாகவும் தெரியவில்லை. வெள்ளம் எப்போது வடியும் என்று எத்தனை நாள்கள் தான் கரையில் காத்திருக்க முடியும் என்றும் பலவாறு தனக்குத் தானே கற்பனை செய்து கொண்டு இரண்டுங் கெட்டான் நிலையில் கேசரி பரிதவித்துக் கொண்டிருந்தான்.

அப்போது...............

சித்தன் அருள்............. தொடரும்!

2 comments:

  1. திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான் அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான்

    குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாச நாதன் அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான் அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை ஆனால் மகாபதிவிரதையாக ஒரு மகளை பெறுவாய் அவள் மூலம் என் அம்சத்தில் உனக்கொரு பேரன் பிறப்பான் என்று வரம் கொடுத்தாராம்

    குஞ்சரன் மிகவும் சந்தோசபட்டான் குழந்தை இல்லையே என்று வருந்துவதை விட பிள்ளை கலி தீர்க்க பெண் குழந்தையாவது பிறக்கட்டுமென்று தவத்தை முடித்து வீட்டுக்கு போனான் அவனுக்கு சில நாளில் அஞ்சனா என்ற அழகான மகள் பிறந்தாள்

    கன்னிபருவம்' எய்திய அஞ்சனா தேவி கேசரி என்ற வானர வீரனை காந்தர்வ முறையில் மணம் முடித்தாள் அஞ்சானா தேவி முன் குறத்தி வடிவாக வந்த தர்மதேவதை திருவேங்கட மலைக்கு சென்று தவம் செய் அதன் பயனாக தேஜசும் வீரியமும் நிறைந்த மகன் பிறப்பான் என்று சொன்னாள்

    அஞ்சனா தேவியும் திருமலை சென்று தனது தவத்தை துவங்கினாள் பக்தி சிரத்தையோடு அவள் செய்த தவம் வாய்வு பகவானுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவள் தவத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்று விரும்பி தினசரி ஒரு பழத்தை அவள் அறியாமல் அவள் முன்னால் வைத்து போனான் ஒருநாள் சிவபூஜைக்காக வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அவள் இருந்த இடத்தில் வைத்து விட்டான்

    கண்விழித்து பார்த்த அஞ்சானா தேவி தன்முன்னால் இருந்த பழத்தை வணங்கி சாப்பிட்டாள் அப்போதே அவள் கர்பவதியானாள் சிவனுக்கான பழம் என்பதனால் சிவ அம்சத்தோடும் வாயு பகவான் அதை கொடுத்ததினால் வாயு புத்திரனாகவும் அஞ்சனா தேவிக்கு பிறந்த அனுமான் கருதபடுகிறார்

    http://www.aanmikagnani.com/

    ReplyDelete
  2. Anna, Om Agatheesaya Namaha: Aum Sairam

    The Green and the Background gives us great support to read, Thanks Anna for the change

    ReplyDelete