​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 31 December 2016

சித்தன் அருள் - 553 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவேண்டும். ஒருநாள் போய்விட்டால், வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே, ஒவ்வொரு தினமும் கழியும் போதும், அன்றைய தினத்தில், நாம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம், உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால், எண்ணங்களால், பொருட்களால், மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து, சிந்தித்து, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, கூடவே, இறையருளும், எமது ஆசியும் தொடரும்.

Friday 30 December 2016

சித்தன் அருள் - 552 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதன், உடல் எடுத்ததற்கு, மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும்  செய்யலாம். இதுதான் நடக்கப்போகிறதே என்று, எந்த மனிதனையும் நாம், வாளாய் (சும்மா) இருக்கச் சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையாக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மனம்தான், ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால், ஒன்று மாற்றி ஒன்று, அவன் விருப்பத்திற்கு மாறாக நடக்கும்பொழுது, மிகவும் விரக்தியுற்று, சோர்வுற்று, தன்னிலையை மறந்து, மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான்.  எனவே, ஒரு மனிதன், பதட்டம், குழப்பம் இல்லாமல், எதனையும் நிதானமாக, மூன்றாவது பார்வை கொண்டு, ஒவ்வொரு பிரச்சினையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அனைத்துமே தெளிவாகிவிடும். அனைத்துமே, சிக்கல் அற்றதாகிவிடும். இந்த கருத்தை மனதில் பதியவைத்தால்,  என்றும், எக்காலமும் நலமாகும். ஆசிகள். சுபம்!

Thursday 29 December 2016

சித்தன் அருள் - 551 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பிரச்சினையே இல்லாத வாழ்க்கையை தா, என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும், இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால், அவ்விதமான அமைப்பு, யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம், தெளியாத மனிதனுக்கு எதுவுமே புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேர்ந்திருப்பதால், அவனுக்கு எதுவும் பிரச்சினையாகத் தோன்றாது. இந்த கருத்தை உன்னிப்பாக கவனித்து, மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால், மனிதனுக்கு, எக்காலத்திலும், எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை.

Wednesday 28 December 2016

சித்தன் அருள் - 550 - மார்கழி மாதம் - பாபநாசத்தில் நீராடவேண்டும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி நதியின் ஆதிகாலத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவுடன், ஸ்ரீ தாமிரபரணி தேவியானவள், சிவபெருமானை நோக்கி, பூசித்து, தவமிருந்தாள். அப்படி இருந்த இடம்,  திருநெல்வேலியில் இன்றுள்ள பாபநாசம் என்கிற ஊர்.

ஸ்ரீ தாமிரபரணி தாயின் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் காட்சி கொடுத்து தாமிரபரணித் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பலவரங்களை கொடுத்து பின் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் உறைந்து போனார்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரங்களில் ஒன்று ........

"மார்கழி மாதத்தில் இவ்விடத்தில் எனது தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி (நீராடி) தங்களை தரிசனம் பண்ணுவோர், மறுபடியும் இந்த பூமியிற் பிறக்ககூடாது" என்றாள்.

சிவபெருமானும் "அங்ஙனமே" என்று வரமளித்தார்.

பிறகு மலயகுமாரியான இம்மகா நதியானவள் சதாசிவத்தினிடமிருந்து இவ்விதம் அனுக்ரஹம் பெற்று அகஸ்திய மாமுனியுடன் அமர்ந்து அவருக்கு குருபூசை முதலியவை செய்து, பின்னர் மார்கழி மாதத்தில் தன் இருப்பிடம் ஏகினாள்.

இப்படிப்பட்ட தகவல் என்பது மிக மிக அரிதான ஒன்று. ஆதலால், இந்த வாய்ப்பை மனதில் கொண்டு, அகத்தியப் பெருமான், லோபா முத்திரை அருளுடன், அனைவரும் பாபநாசம் சென்று நீராடி, கோவிலில் சிவபெருமானை தரிசனம் செய்து, இப்பூமியில் மறுபிறவி இல்லாத நிலையை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மார்கழி மாதத்தில் எந்த நாளிலும் செல்லலாம்.

ஸ்ரீ லோபாமுத்திரா தாய்க்கும், அகத்தியப் பெருமானுக்கும் நன்றியை, பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு,

சித்தன் அருள்.............. தொடரும்!

சித்தன் அருள் - 549 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எது எங்கனம் ஆயினும், இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும், அவனவன் மனநிலையை பொறுத்தே அமைவது, ஆகுமப்பா! அப்பனே, இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே, அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும்பொழுதே. அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா, இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்கும்கால், யாதொரு தொல்லையும் இல்லை.  மனதை வலுவாக்குதலே, இந்த உலகில் முதல் பணியாக மனிதனுக்கு இருக்கவேண்டும். மனம் உறுதி பெற, உறுதி பெற எந்த பிரச்சினையும், பிரச்சினையாக தோன்றாது.

Tuesday 27 December 2016

சித்தன் அருள் - 548 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அகுதொப்ப பிரார்த்தனைகளும், தர்மங்களும் பலன் தரவில்லை என்றால், அகுதொப்ப குறை, அதனை செய்கின்ற மாந்தனிடம் உண்டு, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகுதொப்ப அறியுங்கால், முன் ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து, பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை, தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது, இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே, சில தீமைகள் போல் தோன்றுகிற நன்மைகளும், தீமைகளாய் மாற்றி, இறை தருகின்றது, என்பது பொருளாகும்.

Monday 26 December 2016

சித்தன் அருள் - 547 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது, அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக்கொண்டுதான் இருக்கும். எனவே, பின்விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியில் இருந்தே, ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழகவேண்டும். இடையிலிருந்து தொடங்கினால், அதற்கு, அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அறத்தில் மிகப்பெரிய அறம், உண்மை பேசுவதாகும். உண்மையால் பிரச்சினை வருவது உண்மைதான் என்றாலும், உண்மையை, உண்மையாக, நன்மையாக பேசவேண்டும். உண்மையை கூறுகிறேன் என்று, யார் மனமும் புண்படும்படி வார்த்தைகளை பேசக்கூடாது. நாகரீகம் கலந்து உண்மையை பேசும் கலையை கற்க வேண்டும். சில சமயம் மௌனம் காக்கலாமே ஒழிய, சின்ன விஷயங்களுக்காக உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், நாங்கள், எம்முன்னே அமரும் சில மனிதர்களுக்கு மௌனம் காக்கிறோம் என்றால், உண்மையைக் கூற முடியவில்லை என்றுதான் பொருள்.  உண்மையை கூறினால், நம்பி வந்த கூட்டம் எரிச்சலடையும், பிறகு தேவையில்லாத விவாதங்கள்  வரும். அதனால் தான் சில நேரங்களில் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் மௌனமாக இருப்பதாலேயே, அனைத்திற்கும் "சம்மதம்" என்று அர்த்தமல்ல. அதற்குத்தான் கூறுகிறோம், "ஜீவ அருள் நாடி" என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதை கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் பக்குவம் தேவை. மழை பொழிவது இயற்கை என்றாலும் கூட,  மழை நீர் வேண்டுமென்றால், நல்ல தரமான பாத்திரத்தை கவிழ்த்து வைக்காமல், நிமிர்த்து வைத்து, மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். அதைப்போல எம்முன்னே அமருபவருக்கு பக்குவம், தெளிவு இல்லாமல் "இது என்ன வாக்கு? இது என்ன ஜோதிடம்?" என்று விமர்சிப்பதால், பாவங்கள் சேர்வதைத்  தவிர, கர்மாக்கள் குறைவதில்லை.

Saturday 24 December 2016

சித்தன் அருள் - 546 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இகுதொப்ப,  ஒவ்வொரு துளியும், புவி சுழன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது "இறை நோக்கி செல், இறை நோக்கி செல், இறை நோக்கி செல்" என்பதுதான். ஒரு பிறவியில் அதை விட்டுவிட்டால், எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க இயலாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம், மனிதனுக்கு இறை தந்திருப்பது, இறையின் கருணை. விலங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும், தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டை காட்டுவது? என்றால், விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்கு கொடுத்த அறிவை கொண்டு குகையை வடிவமைக்க கற்றுக் கொண்டுவிட்டான். எனவே, மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி, மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிடவேண்டும். "எங்கு சென்று அமர்வது?" என்று தெரியாமல், இறை திணறவேண்டும். அந்த அளவுக்கு மனம், புத்தி, செயல், எண்ணம், வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே, சண்டை, சச்சரவில் மனதை செல்ல விடாமல், அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால், அதுவே சுய தீர்த்தம், மெய் தீர்த்தம்

Friday 23 December 2016

சித்தன் அருள் - 545 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறையருளால், இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி, அறம் புரிய, என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள், சாத்வீக எண்ணங்கள், சதாசர்வ காலம் தர்ம சிந்தனை. இகுதொப்ப வாழ்வை நடத்த, கர்மாக்கள் குறையுமப்பா. இகுதொப்ப சினம், விரக்தி, தளர்வு, பிறரை பிறரோடு ஒப்பிட்டுக் கூறுதல், ஒரு மனிதன் இல்லாதபோது அவரைப் பற்றி விமர்சனம் செய்தல், காழ்ப்பு உணர்ச்சி இன்னும் இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் தள்ள தள்ளத்தான், மனிதன், மாமனிதனாகிறான். இகுதொப்ப ஒரு பயணம் செய்யும்பொழுது, இறை நாமமும், பிரார்த்தனையும் செய்து கொண்டு செல்வது நலம். வீண் விவாதங்களும் பிரச்சினைக்குரிய செயல்களும், வாக்குகளும் வேண்டாம்.

Thursday 22 December 2016

சித்தன் அருள் - 544 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா. 

அகத்தியப் பெருமானே! எல்லாரையும் ஆசிர்வதித்து, ஒவ்வொருவருடைய வேண்டுதலையும்  நிறைவேற்றி வையுங்கள்!

Wednesday 21 December 2016

சித்தன் அருள் - 543 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ, நீதி வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளைக் காட்டி அருளுகிறோம். எனவே, இறையே "காட்டானை" மீது அமர்ந்து வந்தாலும், தன்னைக் "காட்டானை, காட்டானை" என்றுதான் இறையே இருக்கிறார். அகுதொப்ப "காட்டானை" யை நீ பிடித்து, நன்றாக வழிபடு. "காட்டானை" உன் அருகில் இருக்க அதைத் தவிர வேறு "காட்டானை" எதற்கு? எனவே, "காட்டானை", "காட்டானை"யாக இருக்க, நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வரவேண்டும்? இருந்தாலும், காட்டிக் காட்டி, காட்டி அருளுகிறோம். "காட்டானை" திருவடி வணங்கி, நாங்கள் காட்டி அருளுகிறோம். "காட்டானை" தன்னைக் காட்டாத, நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் "காட்டானை" யின் திருவருளாலே, எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு, அந்தக் "காட்டானை" அருள் புரிந்தால், நாங்கள், எங்களையும் காட்டி அருளுகிறோம். "காட்டானை" அருளவேண்டும் என்று தன்னைக் "காட்டானை" திருவடி வணங்கி வேண்டிக்கொள்.

Tuesday 20 December 2016

சித்தன் அருள் - 542 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

 அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மயிலைக் கனவில் கண்டாலே புண்ணியம். நனவில் கண்டால் அதைவிட புண்ணியம். ஆனால் மனிதன் கண்ணில் பட்டால் மயிலுக்குத்தான் பாவம்.

Monday 19 December 2016

சித்தன் அருள் - 541 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன்,  சாஷாத் தரிசனம் மூலமாகவோ, பசு மாட்டு தரிசனம் மூலமாகவோ, யானையின் தரிசனம் மூலமாகவோ, பல்லியின் ஒலி மூலமாகவோ, ஒரு சுப சகுனத்தை காட்டுகிறார். அதை விட (பூசை, யாகங்களின் போது) வானத்தில் இருந்து ஒரு துளி மழை விழுந்தாலும், இறை அதை ஏற்றுக் கொண்டது என பொருளாகும்.

Sunday 18 December 2016

சித்தன் அருள் - 540 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வீட்டின் அருகில் இருக்கும் லோபாமுத்திரா சமேத அகஸ்தியப் பெருமான் கோவிலில் இன்று காலை அபிஷேக, பூசைகளுடன் அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரத்தை, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். மிக அருமையான தரிசனம், ஆசிர்வாதத்துடன், அங்கு அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன். நான்காவது படத்தை சற்று பெரிதாக்கி பார்த்தால், ஓரளவுக்கு அகத்தியரும், லோபாமுத்திரையும் தெரிவார்கள். அவர் அருள் பெற, நீங்கள் அனைவரும், இன்று விழைவீர்கள் என நம்புகிறேன்.




அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு


அவரவர் செலுத்துகின்ற வாகனத்திலிருந்து, வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இகுதொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களிலே அதிகம் இட்டு, இட்டு, இந்த குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

Saturday 17 December 2016

சித்தன் அருள் - 539 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! மறுபடியும் உங்களை, ஞாபகப்படுத்துவதற்காக. நாளை அகத்தியப் பெருமானின் நட்சத்திரம். ஏதேனும் அகத்தியர் சன்னதிக்கு சென்றோ, வீட்டிலோ, சிறிது நேரம் பிரார்த்தித்து, ஒரு செயல்/உதவி அவரை நினைத்து, பிறருக்கு செய்து, அவர் அருள் பெற வேண்டிக்கொள்கிறேன்.  இன்றைய "அகத்தியரின் அருள்வாக்குக்கு செல்வோம். ஓம்  லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!]

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும், இறை சக்தியைக் கொண்டு, பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும், என்றாலும் கூட, இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவனே, உழன்று, சிதிலப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கஷ்டப்பட்டு, பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான், இறையின் எண்ணமாகும். அறிவிலே தெளிவும், மனதிலே உறுதியும், இருக்கவேண்டும். இது கிடைப்பதற்கு, மனிதன் வாழ்விலே துன்பங்கள் படவேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம். தொடர்ந்து பூசை செய்ய முடியவில்லையே என்று  வருந்தாதே. அந்த ஏக்கமே, ஒரு பூசை தான். எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதோ, அங்கு  அமர்ந்து, நீ பூஜை செய்யலாம். அங்குதான், இங்குதான், அதிகாலைதான், உச்சிப்பொழுததுதான் என்பது இல்லை. இறையை வணங்க, காலம், நாழிகை, சூழல் எதுவும் தேவை இல்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும்.  எனவே, இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும். ஆசிகள். சுபம்.

Friday 16 December 2016

சித்தன் அருள் - 538 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


[வணக்கம் அகத்தியர்  அடியவர்களே! இன்றைய அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை தொடரும் முன்............. ஒரு சிறிய வேண்டுதல். வரும் ஞாயிற்று கிழமை (18/12/2016) அன்று அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம். அனைத்து அகத்தியர் சன்னதியிலும் சிறப்பு பூசை நடக்கும். அதில் கலந்துகொண்டு, இயன்றதை செய்து, அவர் அருள் பெறுங்களேன்!

 இனி, அருள்வாக்குக்கு செல்வோம்.]

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உந்தனுக்கு, கடைவரையில் இறையருள் தொடர நல்லாசிகள். எது குறித்தும் மனக்கலக்கம் கொள்ள வேண்டாம். அன்றன்று காலம், விதிப்படி, விதிப்பயனாக, அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும், மன உளைச்சல்களும் தொடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தொடர்கிறதே என்று, இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே, சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும், இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக்கூடாது. சிந்தை கொள். எம்மீது ஆர்வம் கொண்டு, நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது அருளாசி உண்டப்பா!

Thursday 15 December 2016

சித்தன் அருள் - 537 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு, உரைப்பது என்னவென்றால், இடைவிடாத, மனம் தளராத பக்தி, மன உறுதி குறையாத பக்தி, வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களுக்கும், இறைக்கும், எந்தவித தொடர்பும் இல்லை என்ற அழுத்தமான எண்ணம், எது நடந்தாலும் இறை நம்பிக்கை குறையாமல் இருக்கவேண்டும். இந்த நிலையிலிருந்து, இறைவனை ஆத்மார்த்தமாக விருப்பு, வெறுப்பு இன்றி உலகியல் ஆசைகளுக்காக இல்லாமல், "இறையை காணவேண்டும்,  அவன் அருளைப் பெறவேண்டும்,  அதைத்  தவிர வேறெதுவும் நிரந்தரமல்ல" என்ற உணர்வோடு இறைவனை வணங்கத் தொடங்கினால், அது சிவ இரவு என்ன? நவ இரவு என்ன? பிரதோஷமாக இருந்தால் என்ன? கார்த்திகையாக இருந்தால் என்ன? எந்த நாளாக இருந்தால் என்ன? அன்று அனைவருக்கும் இறை காட்சி திண்ணம், உறுதி. பிறகு, ஆங்காங்கே சிறு சிறு விஷயங்கள் எதற்காக நடத்திக் காண்பிக்கப்படுகிறது? அது இன்னும் பக்குவம் அடைய வேண்டியவர்களுக்காக நடத்திக் காண்பிக்கப்படுகிறது. எனவே, எங்கு சென்று வணங்கினாலும், அவரவர்கள் விரும்பும் வண்ணம் அற்புதங்கள் உண்டு. கட்டாயம் நடக்கும். அது திருவண்ணாமலையாக இருந்தால் என்ன? கொல்லி மலையாக இருந்தால் என்ன? சதுரகிரியாக இருந்தால் என்ன? இருந்தாலும், ஆப்பூர் மாலையிலும், மருத்துவாமலையிலும், பௌர்ணமி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி அன்று சென்று, மனம் ஒன்றி பிரார்த்தனைகள் செய்தால், இறை, சாந்நித்தியத்தை வழங்கும்.

Wednesday 14 December 2016

சித்தன் அருள் - 536 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஞானம் அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே, தாய், தந்தை, உற்றார், உறவினர், சூழல், ஏதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார், தந்தை  சிரமப்படுகிறார், என்று எண்ணும்பொழுதே மீண்டும் மனிதன், மாயவலைக்குள் சிக்கிவிடுகிறான். எனவே, ஒவ்வொரு உடலும், தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். பெற்று வந்த கர்மங்களின் படி அதன் வாழ்வின் போக்கும், சிந்தனைகளும், சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன. இருந்த போதிலும், துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும், என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த ஒரே வழி, பிரார்த்தனை. (பித்ரு தோஷங்களும், தந்தை வழி, தாய் வழி, முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால், இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு, ஆலயத்தில் மீன்களுக்கு உணவு, ராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து, குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால், முன்வினை இருக்கிறது என்று பொருள். முன்வினை குறையக்குறைய, துன்பங்கள் குறைந்துகொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை, தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒரு வகை. 

Tuesday 13 December 2016

சித்தன் அருள் - 535 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனை வணங்கிக் கொண்டே, தர்மத்தை செய்துகொண்டே வாழ்ந்தாலும், இதற்கு முன்பே எடுத்த  ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலியால், சலனங்களும், சங்கடங்களும், சோதனைகளும், வேதனைகளும் ஒரு மனிதனுக்கு வரத்தான்  செய்யும். இது போன்ற தருணங்களில் எல்லாம், இத்தனை தர்மம் செய்தோமே, இத்தனை இறை வணங்கினோமே, எதற்காக இத்தனை கஷ்டங்கள் வரவேண்டும்? என்று எண்ணாமல், தொடர்ந்து வைராக்கியத்தோடு இறைவனை வணங்கி வந்தால், எந்த கஷ்டமும் இல்லாத சூழல் வரும், அல்லது, அதை உணராத மனோபாவம் வந்து விடும்.  இதை மனதிலே வைத்துக் கொண்டு எம் வழியில் வர நல்லாசிகள்.

Sunday 11 December 2016

சித்தன் அருள் - 534 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தமிழ் மொழியிலே, கூடுதலாக, இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு, தமிழைப் பேசினாலே அது சுவாசப்பயிற்சிக்கு சமம். இலக்கணத்தைப் பற்றி கூறினால், எத்தனையோ அதிசயங்கள், அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு தமிழாவது? மொழியாவது? சிறப்பானது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம், என்றெல்லாம் அளந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல, தமிழ் மொழியிலே, காரண காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. உலகத்திலே எந்த மொழியிலும் "ழ"கரம் என்ற உச்சரிப்பு கிடையாது. மூன்று இனமாக பிரிக்கப்பட்டு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே போதும், அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்படவேண்டும்? எந்த தளை, சீர், எத்தனை அடியிலே அமைக்கப்படவேண்டும், என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு.

[இது உண்மை. அனுபவ பூர்வமாக இதை அடியேன் உணர்ந்துள்ளேன். சிறப்பான முறையில் தமிழை பேசும் பொழுது, உள்ளுக்குள்ளே ஒரு வித சக்தி பரவுவதையும், சுவாசம் சரி செய்யப்படுவதையும், உள் கழிவுகள் தானாக விலகி, உடல் சுத்தமடைவதையும், பல மறை பார்த்திருக்கிறேன். இதை நடை முறைப் படுத்துவது மிக நல்லது. மேலும், தமிழ்  மொழியின் தெய்வம், உள்ளிருந்து நம்மை வழி நடத்துவதையும் உணர முடியும்.]

Saturday 10 December 2016

சித்தன் அருள் - 533 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

"வில்வத்தால் ஆராதனை செய்வது எமக்கு பிரியம்" என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான். "வில்வத்தை ஏற்றுக்கொள்" என்றால் மனிதன் உண்ணமாட்டான். ஆனால் அதையே "பிரசாதம்" என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல, அன்போடு எதைக் கொடுத்தாலும், அதை இறை ஏற்றுக்கொள்ளும். வில்வத்தை பக்தியில்லாமல் நீ போட்டால், சிவன் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? பிடிக்காதது என்ற ஒன்றையும் கூட, பக்தியோடு படைத்தால் இறை அதை ஏற்றுக்கொள்ளும். எனவே, பக்தி, அன்போடு செய்யப்படும் செயலை அல்ல, அந்த செயலுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது. இன்னொன்று, வேறு மார்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், நெய் தீபத்திற்கு பதிலாக, வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலரோ, மலர்களை போடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமில்லை, தன் உள்ளத்தை தவிர.

Friday 9 December 2016

சித்தன் அருள் - 532 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இன்பம் என்ற ஒன்றை, எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனால்தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தைப் பார்க்கவில்லையோ, அவனுக்கு  எதனாலும், எவற்றாலும் துன்பம் இல்லை. அது இறை ஒருவருக்குத்தான் சாத்தியம். அதனால்தான், "இன்பமும், துன்பமும் இல்லானே, உள்ளானே" என்று கூறப்படுகிறது. மற்ற, பற்றும், பாசமும், ஆசையும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு. இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. எதையெல்லாம் இவன், இன்பம் என்று எண்ணி, அதன் பின்னால் ஓடுகிறானோ, அவற்றால் இவனுக்கு துன்பம் வருகிறது. எதையெல்லாம் துன்பம் என்றெண்ணி பயந்து பின் வாங்குகிறானோ, அவற்றால் இன்பமும் உண்டு. இரண்டுமே வேண்டாம் என்ற நிலையை மனிதன் முடிவெடுத்துவிட்டால், நிம்மதியாக வாழ முடியும். இல்லையென்றால், ஒன்றன் பின் ஒன்றாக இவன் மாறி, மாறி ஓடிக்கொண்டே இருப்பான். மனித வாழ்க்கையில் "கடமையை செய்தோம், பிரார்த்தனை செய்தோம், பிறருக்கு நன்மையை செய்தோம்" என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும், அதி தீவிர பாசமும் வைத்தால், பிறகு அது நம்மை பாடாய்படுத்தும்.

Thursday 8 December 2016

சித்தன் அருள் - 531 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

  1. பூ வாட்டம், பொன் ஆட்டம் மனம் இருக்க, என்றென்றும் கொண்டாட்டம்.
  2. தேன் ஆட்டம்  சொல் இருக்க என்றென்றும் மகிழ்வாட்டம்தான்.
  3. தினை ஆட்டம் உளம் இருக்க என்றென்றும் அது உறுதி ஆட்டம்.
  4. ஆண் ஆட்டம், பெண் ஆட்டம் எல்லாம் அடங்கும் காலம், ஆட்டத்தில் விதி ஆட்டம் முன்னே மாந்தர் வாழ்வு வினை ஆட்டம் போல் இருக்கும்.
  5. மதி ஆட்டம் ஆடி மாந்தன் அவன் தனக்குத்தான் விதி ஆட்டம் போடுகிறான்.
  6. தொடர்ந்து பிறவி ஆட்டம் தொடர, அதற்கு ஒப்ப அவன் ஆடிய மதி ஆட்டம், விதி ஆட்டம் ஆடி, கதி ஆட்டம் போடுதப்பா.
  7. வாழ்வு ஆட்டம் உயர்வு ஆட்டம் ஆட, நலம் ஆட்டம் தொடரும்.
  8. தப்பாட்டம், தவறாட்டம் ஆட, தாழ்வு ஆட்டம் தொடரும்.
  9. பெண் ஆட்டம் கண்டு பெண் நாட்டம் கொண்டால், வாழ்வின் ஆட்டம் தவறு ஆட்டம் ஆகும்.
  10. புலன் ஆட்டம் வழியே மனம் ஆட, முடிவில் திண்டாட்டம் ஆகுமப்பா.
  11. ஆட்டம் ஆட, மெய் ஆட்டம் ஆட, பொய் ஆட்டம் ஆடாது வாழலாம்.
  12. விதி ஆட்டம் ஆடும், அதன் வழியாட்டம் யாவும் தொடர்ந்து சேர்க்கும் வீண் பழியாட்டம்.
  13. நரி ஆட்டம் புத்தி பேதலிக்க, அது சரி ஆட்டம் என்று அத்தருணம் மதி சொல்ல, சரி ஆட்டம் அல்ல.
  14. தப்பாட்டம் என விதி சொல்லும், என்னாட்டம் ஆடினாலும், முடிவில் அந்தம் ஆட்டம் பின்னே, முதல் ஆட்டம் தொடங்கி முடிவு ஆட்டம் வரை யாவும் கர்ம ஆட்டம் என புரியும்.
  15. தர்ம ஆட்டம் ஆடும் மைந்தனுக்கு, கர்ம வாட்டம், வாட்டாது.
  16. பேதமில்லா பிரார்த்தனை ஆட்டம் ஆடும் மைந்தனுக்கு துயர் ஆட்டம் வாட்டாது.
  17. உயர்வாட்டம் தேடும் மாந்தன் உலக ஆட்டத்தில் உயர் ஆட்டம் தேடுகிறான்.
  18. உயர் வாட்டம் என்பது மெய்ஞ்ஞான வழியிலே என்பது புரியாது, தடுமாற்றம் காண்கிறான்.
  19. உள்ளபடி உள்ளம், உயர்வாட்டம் ஆட, பொறுமை கூடத்தான் ஆட்டம் ஆட, எளிமை பின் ஆட்டம் ஆட, கருணை தானும் நல் ஆட்டம் ஆட, சாந்தம், வதனம் ஆட்டத்தில் ஆட, தெளிவு உள்ளத்தில், சதா ஆட்டம் ஆட, ஆடாத நிலையில் ஆடிய ஆட்டம் புரிபடும்.
  20. ஆடுவதும், ஆட்டுவிப்பதும் தில்லையில் ஆடும் அம்பலத்து அரசனாட்டம் என்று தெரிய வரும்.
  21. முடிவாட்டத்தில் தெரியவரும்.
  22. புத்தி முதலாட்டத்திலே தெரிந்தால் அவன் ஞானி.
  23. சதா அம்பலத்திலே ஆடும் பொன்னம்பலம் அடியான் அடியினின் அடியையும், ஆடும் அரசனின் ஆட்டத்தில் அடியையும் மறவாமல் தொழத்தான், தப்பாட்டமாய், தவறாட்டம், பாவாட்டம் ஆடாது, வாழ்வு புனிதமாகும்.
  24. நல் ஆட்டம் வாழ்வில் ஆட, நல் ஆடல் அரசன் அருளட்டும், என ஆசிகள், சுபம்.

Wednesday 7 December 2016

சித்தன் அருள் - 530 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன் கண்களுக்கு, ஒன்று அசைந்தால் அதற்கு உயிர் இருக்கிறது. இல்லையென்றால், உயிரற்ற ஜடம் என்று எண்ணுகிறான். அசையாமல் அசைகின்ற எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், சாளக்கிராமம். அதிலே உயிரோட்டம் மட்டுமல்ல, இறையாற்றல், மின்னாற்றலும், காந்த ஆற்றலும், பிரபஞ்ச ஆற்றலும் உள்ளது. அந்த ஆற்றல்களை, முறைப்படுத்தித்தான் மனிதர்கள் பெற முடியும். சாளக்கிராமத்தை, தூய்மையான சந்தானம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு.

Tuesday 6 December 2016

சித்தன் அருள் - 529 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன், இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்த காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ, பூச்சிகள், உயிரினங்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் கண்ணுக்குத் தெரியாமல் அவை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோல, இந்த அண்டசராசரங்களை எல்லாம் பார்க்கும்போது, எத்தனையோ  கிரகங்கள், உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியிலே, அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே, துன்பம் என்பது ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால், எல்லாம் "மாயை" என்பது புரிய வரும்.

Monday 5 December 2016

சித்தன் அருள் - 528 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தன்னாலும் முடியும் என்றால் தன்னம்பிக்கை. தன்னால் மட்டும்தான் முடியும் என்றால் அது ஆணவம்.

Sunday 4 December 2016

சித்தன் அருள் - 527 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் உழவாரப்பணி செய்யும் பொழுது, செடி, கொடிகளை அகற்றினால் பாவம் தான். என்றாலும், இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள், மீண்டும் துளிர்கின்ற தன்மையைப் பெறுவதால் (அந்த செயல் அந்தச் செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை). ஒரு ஆட்டையோ, மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும் பொழுது, அது பரிபூரணமாக மரித்துவிடுகிறது. ஆனால் செடி/கொடிகளை அகற்றும் போது, அதன் அடிவேரோ, மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால், அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால், இதனால் வரக்கூடிய தோஷம், மன்னிக்கப்படக்கூடிய தோஷமாகிவிடுகிறது. என்றாலும் கூட, இதிலும் பாவம் சேர்வதால் தான், பிறவியற்ற தன்மை வேண்டுமென்று கூறுகிறோம். ஏனென்றால், ஒரு மனிதனால், இந்த பூமியிலே, சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளை   பொருத்தவரை, வீட்டை சுற்றிலும் "சிறியா நங்கை'" போன்ற மூலிகைகளை வளர்த்தால், பூச்சிகள் வராது. வேறு வழி இன்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால், ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக, அந்த தோஷமானது, மன்னிக்கப்படும்.

Saturday 3 December 2016

சித்தன் அருள் - 526 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளை எல்லாம் அறிந்தும், அறியாமலும், இறைவன் மன்னித்துவிடுகிறார். ஆனால், மனிதர்களை தாண்டி, உயர்வான பிறகும், சிறிய தவறுகள் கூட வரக்கூடாது. வந்தால், அவர்கள் எந்த விதமான சாபத்திற்கும் ஆளாகலாம். இப்படி ஒரு மனிதனுக்கு, மனிதப்பிறவி சாபமாக கிடைக்கிறது என்று வைத்துக்  கொள்வோம்.பல்லாண்டு காலம், தேவனாக வாழ்ந்த அவன், ஒரு புண்ணிய ஆத்மா தானே. அதனால், மிக உயர்ந்த செல்வ செழிப்பிலே, புகழின் உச்சியிலே, தேக ஆரோக்கியத்திலே, தோற்றப்பொலிவிலே சிறந்தவனாகத்தான் பூமியிலே இறைவன் அனுப்பி வைப்பான். ஆனால் அவ்வாறு கொடுத்த பிறகு, அவன் என்ன செய்வான்? ஊழ்வினையாலும்,மாயையால்  எல்லாம் மறந்து போய், சராசரியாக தனக்கு கிடைத்த ஐஸ்வர்யங்களை வைத்து பாவங்களை செய்யத் துவங்குகிறான். எனவே, எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு பாவங்களை செய்யாமல் இருந்தால், மீண்டும், மீண்டும் இந்த மனிதப்பிறவி சுழற்சியில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடாது.

Friday 2 December 2016

சித்தன் அருள் - 525 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பசு, கன்று குட்டியை ஈன்றவுடன், மனிதனுக்கு பால் தருவதில்லை. கன்றுக்குத்தான் பால் தருகிறது. பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான். முதலில் கன்று திருப்தியாக. திகட்ட, திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தைத்தான் மனிதன் எடுக்கவேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஆனால், இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா? என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான். எனவேதான், பசுக்கள் காப்பகங்களுக்கு சென்று உதவி செய்வது, குறிப்பாக, பரசுராம தேசத்திற்கு (கேரளா) எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது. மிகப்பெரிய புண்ணியமப்பா. கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும், ஹிமாச்சலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள், பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும். அதிலும், பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை, அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை, எவன் ஒருவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ, அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம். வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம். அதை வளர்ப்பதே  போதும். அது அவனை இறைவனிடம் அழைத்துச் செல்லும்.

Thursday 1 December 2016

சித்தன் அருள் - 524 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விருக்ஷங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு. விருக்ஷங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள். நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும், பூஜிக்க வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால், மரங்கள், தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும். அது மட்டுமல்லாது, மரங்கள் காதல் செய்கிறது. இதை மனிதர்கள் யாராவது நம்புவார்களா? மரங்களை ஓரறிவு என்று கூறினாலும் கூட, தேவர்கள், முனிவர்கள், தவம் செய்வதற்காக, மரங்களாக அவதாரம் எடுப்பார்கள். மரத்தின் மீது, "கூரானை" செலுத்துவது மகா பாவம். அது மட்டுமல்லாது, ஒரு மரமானது, எத்தனையோ உயிர்களுக்கு நிழலை, காயை, கனியை, உறைவிடத்தை தருகிறது. இப்படி பலவற்றை மரம் தருவதால், அதற்கு "தரு" என்ற ஒரு பெயர் உண்டு. "கற்பக விருக்ஷம்" என்று ஒவ்வொரு மரத்தையும் கூறலாம். அது மட்டுமல்லாது, ஒவ்வொரு மரமும், மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது. அவை பாவம் செய்வது கிடையாது. எனவே, மரங்கள் அனைத்துமே போற்றப்படவேண்டியவை என்பதால் தான், வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "ஸ்தல விருக்ஷம்" என்று வைத்து, ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப் படுகிறது. அந்த விருக்ஷம் அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.