​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 14 January 2017

சித்தன் அருள் - 567 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


இந்த பொங்கல் திருநாள் முதல், நீங்கள் அனைவரும் எல்லா அருளும் பெற்று, மனோபீஷ்டங்கள் நிறைவேறி இனிதாக, அமைதியாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

அக்னிலிங்கம்

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அருள் வாக்கைக் கேட்டவுடன் மனிதர்கள் எல்லோரும் புனிதர்கள் ஆகிவிடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் கூட இறைவனிட்ட கட்டளையை செய்துகொண்டுதான் இருக்கிறோம். இஃதொப்ப ஜீவ அருள் ஒலையை சுத்தமாக மறுத்து, நம்பிக்கையில்லாமல், ஒதுங்கி, தன் அறிவை நம்பி வாழ்கின்ற மனிதன் கூட எம்மைப் பொருத்தவரை ஏற்கத்தக்கவன்தான். ஆனால் ‘சில பொழுது நம்புவேன், சில பொழுது நம்பமாட்டேன், சிலவற்றை ஏற்றுக்கொள்வேன். பலவற்றை ஏற்றுக்கொண்டிடமாட்டேன் ‘ என்று இருக்கின்ற மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது? ஆயினும் இவர்களையும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். எம்மைப் பொருத்தவரை விருப்பு, வெறுப்புகளை தாண்டிய நிலை, தர்மசங்கடத்தை உணராத நிலைதான் சித்தத்தன்மை என்றாலும் கூட, விதியின் போக்கு எமக்கும் தெரிந்தாலும், மனிதர்களின் மதியில் அமர்ந்து கொண்டு விதி விளையாடினாலும் கூட, யாமும் மனிதர்களை நோக்கும்பொழுது பல சமயங்களில் தர்மசங்கடத்திற்கு ஆளாவது என்பது உண்டு. அவைகளையெல்லாம் வார்த்தைப்படுத்திக்கூட சொல்ல இயலாத நிலைதான் இருக்கிறது. ஒரு மனிதன் "இஃதொப்ப ஜீவ அருள் ஒலையை நம்புகிறேன். இதிலே கூறுவது சித்தர்கள்தான் என்று ஒத்துக்கொள்கிறேன்" என்று வெளிப்படையாக கூறிவிட்டு அல்லது உள்ளத்தில் அஃதொப்ப கருத்தை வைத்துக்கொண்டு, நடைமுறையில் தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டால் அஃதொப்ப மனிதனை எப்படி சொல்லி திருத்துவது? "ஒரு மனிதனுக்கு விருப்பம் போல் வாழ சுதந்திரம் இல்லையா? அவனுக்கு சுய அறிவும், அறிவாற்றலும் இல்லையா? அந்த அறிவு காட்டுகின்ற பாதையில் செல்லக்கூடாதா?" என்றால், பெரும்பாலான மனிதர்களுக்கு விதி, எது சுகமோ அந்த சுகமான வழியையே காட்டி "இப்படி செல், இதுதான் அமைதியான வழி, சுகமான வழி" என்று சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அப்படி விதி காட்டுகின்ற வழியெல்லாம் சிக்கலைதான் மனிதனுக்கு பெரும்பாலும் தருகிறது. சுருக்கமாகக் கூறப்போனால் ஒரு மனிதன் இயல்பான வாழ்க்கையும் வாழ வேண்டும். அதே சமயம் சித்தத்தன்மையை அடையவும் முயல வேண்டும். ‘ சித்தர்கள் வழியில் வருகிறேன் ‘ என்று தேவையில்லாத குழப்பங்களையெல்லாம் தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் ஏற்படுத்திவிடக்கூடாது. இறைவன் அருளாலே தொடர்ந்து நன்மைகளை செய்வதும், நன்மைகளை செய்கின்றபொழுது அவை நிரந்தர நன்மைகளாக அனைவருக்கும் ஆகும் வண்ணம் செய்வதும், ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும். பெரும்பாலான மனிதர்களுக்கு மனம் உற்சாகமாக இருந்தால் உடல் சற்று முன்பின்னாக இருந்தாலும், இயங்கிவிடும். இக்கால கட்டத்தில் பலருக்கு உடலைவிட உள்ளம் பாதித்து விடுகிறது. உடலே பாதித்தாலும் கூட உள்ளம் அதனை பொருட்படுத்தவில்லையென்றால் உடல் உற்சாகமாகத்தான் இருக்கும். இது காலகாலம் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய விதிதான். ஆனாலும் நடைமுறை என்பது அவ்வாறு இருப்பதில்லை. மனதிற்கு உற்சாகத்தைத் தருகின்ற உறவுகள் மிகக்குறைவு. எனவே அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பாவக்கழிவு என்ற அளவிலே ஏற்றுக்கொண்டு இறைவனை நோக்கி மனதை திசை திருப்புவது ஒன்றுதான், அனைவருக்கும் ஏற்றதொரு நல்வாழ்வை, அமைதி வாழ்வை நல்கும். ஆசிகள்!

3 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. அகத்திய பெருமானின் புகழ் ஓங்குக இப்புவியெங்கும்.
    குரு வாழ்க குருவே துணை.

    ReplyDelete
  3. Om Agatheesaya namaha...

    Please all of you pray for rain.... Because of no rain from small plants to human...All living things are suffering.Ayya kindly request everyone to pray for getting rain.
    It's my humble request.

    ReplyDelete