​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 April 2017

சித்தன் அருள் - 640 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனித சிந்தனைகளும், மனித எண்ணங்களும் காலகாலம் பெரும்பாலும் மனிதன் பட்ட அனுபவத்தைப் பொறுத்தும், சூழலைப் பொறுத்தும், சக உறவுகளைப் பொறுத்தும், உடல் வலிமை, அவனின் சமகால பதவியின் நிலைமை, கையிலுள்ள செல்வத்தின் அளவு -  இவற்றை பொறுத்தே மனித ரீதியாக மனிதனுக்கு மனிதன் அந்த எண்ணங்களும் உரு பெறுகிறது, மாற்றம் பெறுகிறது. ஒரு ஞானியின் பார்வையில் கூறுவதென்றால் மனிதன் எண்ணுகிறான், மதியால் சிந்தித்து, மதியை கூர்மையாக்கி, விசாலமாக்கி, ஆழமாக்கி நன்றாக பயன்படுத்தினால் மனிதன் நன்றாக வாழலாம் என்று. இதை நாங்கள் ஒருபொழுதும் மறுப்பதில்லை. ஆனால் இறைவன் தந்த அந்த மதியை, அறிவை பரிபூரணமாக பயன்படுத்துவதற்கு உண்டான சூழலை அவனுக்கு விதிதான் தரவேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டத்தோடு வாழவேண்டிய நிலைமையும், அறியாமையில் சிக்கி வாழ வேண்டிய சூழலும் ஏற்படும். அங்ஙனமாயின் எத்தனையோ குணக்கேடானவர்கள், பண்பாடற்றவர்கள் புத்தி கூர்மையில் சிறந்து விளங்குகிறார்களே?  அவர்களுக்கு விதி சாதகமாக இருக்கிறதா?. நல்ல குணம் கொண்ட ஒரு மனிதனுக்கு, அறியாமை மதியில் அமர்ந்துவிட அதனால் அவன் எடுக்கும் முடிவுகளெல்லாம் தவறாக முடிந்து அவன் துயரில் ஆழ்வதற்கு வழிவகுக்கிறதே? இதுதான் விதியின் வேலையா? என்றெல்லாம் மனிதனுக்கு ஐயம் எழலாம். இதை மனிதர்கள் மறுத்தாலும், ஏற்றுக்கொண்டாலும் உண்மைதான்.

எல்லாம் விதிதான் என்றால் மதியின் தன்மைதான் என்ன? எதற்காக மனிதனுக்கு மதி தரப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் முயன்றால் தன்னுடைய மதியின் ஆற்றலைக்கொண்டு, கடுமையான சிந்தனையை வளர்த்துக்கொண்டு தன் வாழ்க்கையில் எதிர்படும் துன்பங்களையெல்லாம் விலக்கிக்கொள்ள இயலாதா? என்றால் தாராளமாக. அதை யாரும் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதை வேறு வகையில் கூறப்போனால் இப்பொழுது மனிதர்களுக்கு எந்தளவு மதி இருக்கிறதோ அதே அளவு மதிதானே சில ஆண்டுகளுக்கு முன்பும், பல ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்க வேண்டும்?. இப்பொழுது மனிதன் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்த விஷயங்கள் ஏற்கனவே இந்த நில உலகில் உள்ளதுதான். இறைவன் அருளாலே செப்பு சுருளுக்குள் காந்த சக்தியை பாய்ச்சினால் மின்சாரம் வரும் என்றால் இந்த விதி 1000 ஆண்டுகளுக்கு முன்பும் பொருந்தும், அதற்கு முன்பும் பொருந்தும். ஆனால் அப்பொழுதுள்ள மனித மூளைக்கு இந்த கருத்து ஏன் எட்டவில்லை?. எனவே ஏற்கனவே உள்ள விதிமுறைகள் எல்லாம் இன்னின்ன காலத்தில் இன்னின்ன மனித மூளையின் மூலமாக உலகிற்கு வரவேண்டும் என்று இறைவன் தீர்மானம் கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.  அப்படியானால் நடப்பது நடந்துவிட்டுப் போகட்டும். நான் ஏன் சிந்திக்க வேண்டும்? உழைக்க வேண்டும் ? என்றெல்லாம் இருக்கலாமா?  என்றால் அது குதர்க்கவாதத்தைக் குறிக்கும். அப்படியொருவன் எண்ணினாலும் கூட விதி அவனை இருக்க விடாது என்பது வேறு விஷயம். ஆன்மீகம் என்றால் எப்பொழுதுமே ஒரு மனிதன் அந்த ஆன்மீகத்தை தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அது பொருந்தா நிலையாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீகத்தை ஏற்க மறுக்கிறான். அதைப்போல மெய்ஞானத்தையும் அவன் ஓரளவு கற்ற விஞ்ஞானத்தையும் பொருத்திப் பார்த்து அவனுடைய அறிவிற்கு எட்டாத நிலையில் அவனால் எதையும் ஏற்க முடியவில்லை. நாங்கள் கூறுகின்ற கருத்தாக இருந்தாலும் இன்னும் வேறு மகான்களின் ஞானக்கருத்தாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.

ஒரளவு பாவங்கள் அற்ற நிலையில் எம்மை நோக்கி வருகின்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்டி, மெய் எது? மெய்யிலும் மெய் எது?  என்பதை உணர்த்துவதற்காகத்தான் இறைவனின் கட்டளை எம்போன்ற மகான்களை இந்தக் கலியில் இதுபோன்ற நிலையில் வாக்கினை கூற அருளாணையிடுகிறது. ஆயினும் கூட நாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு அதனைக் கூறுகிறோம்?  ஒரு வாக்கை எதற்காக உரைக்கிறோம்? ஒரு வாக்கை எதற்காக மறுக்கிறோம்?  ஏன் மௌனம் காக்கிறோம்?  ஏன் ‘பின்னர் உரைக்கிறோம்‘ என்று கூறுகிறோம்? என்பதை சற்றே கடுகளவாவது இறைவனை எண்ணி சிந்தித்துப் பார்த்தால் இறைவனே அவன் சிந்தனைக்குள் சிலவற்றை உணர்த்துவார். ஆனாலும் கூட அறியாமையின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் நினைத்து பார்ப்பதேயில்லை.

மனித மதியானது விதிவழியாக செல்லும்பொழுது இறைவனும், நாங்களும் வெறும் பார்வையாளராகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது.  அது எங்ஙனம் சாத்தியம்?  அது எங்ஙனம் நியாயம்?  என்றெல்லாம் மனிதன் வினவலாம். ‘படைத்த இறைவனுக்கு பொறுப்பில்லையா? ஞானிகளுக்கு பொறுப்பில்லையா?  மனிதர்கள்தான் அறியாமையால் தவறு செய்தால் அல்லது உழன்றால் அதிலிருந்து அவர்களை கரை சேர்க்க வேண்டாமா? என்ற ஒரு வினா எழலாம். அப்படி கரை சேர்ப்பதற்குதான் விதியை எதிர்த்து ஒரு மனிதன் பயணம் செய்யவேண்டும் என்பதற்குதான் இறைவனின் அருளாணைக்கேற்ப யாம் இந்த ஜீவ அருள் ஒலையிலே சில நுணுக்கமான வாக்குகளையெல்லாம் கூறுகிறோம். ஆனால் ‘நடைமுறையில் இவையெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. நடைமுறையில் இவற்றை பின்பற்ற முடியாது‘ என்று மனிதன் தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டு மீண்டும் விதிவழியாகத்தான் செல்கிறான்.

சுருக்கமாகக் கூறினால் இறைவனின் அருளாணையின்படி ஒரு மனிதனின் அறியாமை நீங்க வேண்டுமென்றால் அவன் இதுவரை எடுத்த கோடானுகோடி பிறவிகளின் பாவம் ( பாவம் என்று கூறுவதை விட பாவங்கள் என்று பன்மையில் கூற வேண்டும் ) நீங்க வேண்டும். பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் அவனுடைய மனம் ஒவ்வொரு நிகழ்வாலும் வேதனைப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் வெட்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் அவன் அனலில் இட்ட புழு போல் துடிக்க வேண்டும். அந்த எண்ணங்கள்தான், அப்படியொரு மனப்பாங்குதான் அவனுடைய பாவத்தை நீக்கும். எப்படி கயப்பு மருந்து நோயை நீக்குகிறதோ அதைப்போல கடினமான அனுபவங்கள் ஒரு மனிதன் சேர்த்த பாவங்களை நீக்குகிறது. ஆனால் எல்லோராலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் துன்பங்களை நுகர இயலாது. நேரடியாக ‘ உனக்கு இவையெல்லாம் நடக்கும். தாங்கிக்கொள் ‘ என்றால் எத்தனை மனிதர்களால் தாங்கிக்கொள்ள இயலும் ? எனவேதான் இறைவன் கருணைகொண்டு மனிதனுக்கு பல்வேறுவிதமான பிறவிகளைத் தந்து ஒவ்வொரு பிறவியிலும் பல அனுபவங்களைத் தந்து அந்த அனுபவங்களின் வாயிலாக அந்த ஆத்மாவின் பாவங்களைக் குறைக்கிறார். அஃதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக, அவன் பாடுபட்டு தேடிய தனத்தையெல்லாம் வியமாக்கி அதன் மூலம் பாவத்தைக் குறைக்க வைக்கிறார். பிறரை மனம் நோக செய்து, பிறர் மனதையெல்லாம் வதைத்து பிறவியெடுத்த பிறவிகளுக்கு மீண்டும் பிறரால் மனம் வேதனை அடையும் வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்தி அதன் மூலம் பாவத்தைக் குறைக்கிறார். ஒட்டுமொத்தமாக இப்படி வியாதியாக, வழக்காக, தொழிலில் ஏற்படும் மன உளைச்சலாக, உறவு சிக்கலாக, நட்பு சிக்கலாக, நம்பிக்கை துரோகமாக – இப்படி ஒவ்வொரு நாளும் நிகழும்  நிகழ்வில் மனித பாவங்கள் குறைகின்றன. இதைப் புரிந்துகொள்வது கடினம். இதை புரிந்து கொள்வதற்கே ஒரு மனிதன் கோடானுகோடி பிறவி எடுத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் இறைவனின் அருளாணைக்கேற்ப எமை நாடும் மாந்தர்களுக்கு ‘நீ குடம், குடமாக பாலை கொட்ட வேண்டாமப்பா. நீ பாடுபட்டு நேர்மையாக ஈட்டும் தனத்தையெல்லாம் உனக்கும், உன் குடும்பத்தேவைக்கும் போக அள்ளி, அள்ளி வழங்கு. யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ வழங்கு. கள்வன் உன்னிடமிருந்து மறைமுகமாக கவர்ந்து கொள்வதற்கு முன்பாக நீயாகவே கொடுத்துவிடு. கொடு, கொடு, கொடு, கொடு, கொடு, கொடு, கொடுத்துக்கொண்டேயிரு என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இதையெல்லாம் கேட்கின்ற மனிதனுக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏளனமாக இருக்கிறது. இது குறித்து பலவிதமான விமர்சனங்களெல்லாம் தமக்குத்தாமே தன்னை சேர்ந்த மனிதர்களோடு அவன் உரையாடிக்கொண்டு ‘ இவையெல்லாம் சாத்தியமா ? இப்படியெல்லாம் செய்ய இயலுமா ? இவையெல்லாம் முட்டாள்தனம் ‘ என்று அவன் பேசவில்லை. அவன் விதி பேசவைக்கிறது. பிறகு நாங்கள் எப்படியப்பா அல்லும், பகலும், 60 நாழிகையும் எமை நாடும் மனிதர்களுக்கு வழிகாட்ட இயலும்?

எனவே இஃதொப்ப ஜீவ அருள் ஒலையை நாட வேண்டுமென்றால், பின்பற்ற வேண்டுமென்றால் இஃதொப்ப ஜீவ அருள் ஓலையை நம்பி, இந்த ஜீவ அருள் ஓலையை வாசிக்கும், இதழ் வாசிப்பவனையும் நம்பி இதன் மூலம் வாக்கை உரைப்பது மகான்கள்தான், என்று நம்பி வருகின்ற ஆத்மாக்களுக்கு, அப்படி நம்பும் வண்ணம் எவனுக்கு கிரகநிலை அமைகிறதோ அல்லது அப்படி அமைக்கவேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொள்கிறாரோ அஃதொப்ப ஆத்மாக்களுக்கு நாங்கள் இறைவனருளால் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். எனவே யாரும் விசனம் கொண்டிட வேண்டாம்.

3 comments:

  1. நீண்ட நாட்களக்கு பின் அகத்தியர் மடை திறந்த வெள்ளம் போல் பேசயுள்ளார் . அனைத்தும் ஆணித்தரமான கருத்துகள் . மெயிலும் மெய் ..

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. Exactly this is my life events. Thank you.

    ReplyDelete