​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 22 February 2018

சித்தன் அருள் - 749 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!


தாமிரபரணி நதியை உருவாக்கிய பொழுது, இறைவன் உத்தரவால், தாமிரபரணி தாயை திருநெல்வேலியும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, புண்ணியம் நிறைந்த அனைத்து கோவில்களின் வழியாகவும் அழைத்துச் சென்று கடைசியில் கடலில் சங்கமிக்கும்படிச் செய்தார், அகத்தியப் பெருமான். நதியை உருவாக்கியது முழுமை பெற்றபின், தொடங்கிய இடத்திலிருந்து, கடலில் சங்கமிக்கும் இடம் வரையில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு சில காலம் தங்கியிருந்து, இறைவன் மூர்த்தங்களுக்கு அபிஷேக பூசை செய்து வரலானார். அப்படி ஒரு முறை சீவலப்பேரி அழகர் கோவிலில் இறைவனுக்கு பூசை செய்திருந்த காலத்தில், தினமும் கடலில் (சங்கமத்தில்) ஸ்நானம் செய்து, சூரியன், பித்ருக்கள் போன்றவர்களுக்கு செய்ய வேண்டிய நித்ய அனுஷ்டானங்களை, அங்கேயே கடலிலிருந்து நீரை எடுத்து, சூரிய உதயத்தின் பொழுது செய்து வந்தார். ஒரு நாள், இருகைகளையும் சேர்த்து வைத்து, கடல் நீரை எடுத்து தாரை வார்த்திட நீரை எடுத்த பொழுது, அவர் கைக்குள், ஒரு சங்கு வந்து அமர்ந்தது.

"அடடா! இது என்ன இறைவனுடைய திருவிளையாடல்? எத்தனையோ கோடி கல்பத்தில் இதுபோல் ஒரு சங்கு உருவாகும் என்று கேட்டிருக்கிறேன். அது, இப்பொழுது, அடியேன் கைக்கு ஏன் வந்து சேர்ந்தது? என்று யோசித்தார்? அகத்தியப் பெருமான்.

இதற்குள், இவர் செல்லும் வழியில் அவரை தொடர்ந்து வந்து அனைத்து இடங்களிலும் ஸ்நானம் செய்து இறைவனுக்கு அகத்திய பெருமான் செய்கிற பூசைக்கு உதவுகிற, அனைத்து சித்தர்களும் ஒன்று கூடிவிட்டனர்.

அகத்திய பெருமானின் கையில் இருந்த சங்கை கண்டு, "அடடா! எத்தனை பாக்கியம் செய்தவர் நீங்கள். எத்தனையோ கோடி கல்பங்களில், இது போல் ஒரு சங்கு உருவாகும். அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்து நாங்கள் அனைவரும் இன்று பார்க்கும் பாக்கியம் பெற்றோம். என்னே, இறைவன் திருவிளையாடல்!" என்றனர்.

அகத்தியப் பெருமானோ "இது ஏன் அடியேன் கைகளில் வந்து அமரவேண்டும் என்று தெரியவில்லையே. இதை நான் வைத்துக் கொள்வது சரியல்லவே. இதற்குப் பின் இறைவனின் திருவிளையாடல் ஏதோ இருக்கும், என்று நினைக்கிறேன்" என்றார்.

"ஆம்! இதற்குப் பின் உள்ள காரணத்தை அறிய, தாங்களே, இறைவனிடம் பிரார்த்தனை செய்து விடுங்கள்" என்று அனைத்து சித்தர்களும் கூறினர்.

இதற்குள், அகத்தியப் பெருமானின் கைகளிலிருந்து அந்த சங்கை வாங்கி ஒவ்வொருவராக, அதை ஸ்பரிசித்து, கண்களில் ஒற்றிக்கொள்ளத் தொடங்கினர்.

அகத்திய பெருமான் இறைவனை தியானித்து தன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, விண்ணிலிருந்து ஒரு அசரீரி வெளிப்பட்டது.

"அகத்தியனே! யாமே, எமக்காக, அதை உருவாக்கினோம், உம் கைகளில் தவழவிட்டோம். எத்தனையோ கோடி கல்பங்களில் இது போல் ஒரு சங்கை எம் எண்ணத்திலிருந்து உருவாக்கி தருவிப்போம். யாம், நாட்டுக்கும், நதிக்கும், அதன் பின்னே உள்ள காட்டுக்கும் நடுவில், நதிக்கரையில் அமர்ந்துள்ளோம். நீ இப்பொழுது பூசை செய்யும் கோவிலில் இதை சமர்ப்பித்துவிடு. எம்மை வழிபட வரும் ஒவ்வொரு ஜீவனையும் காப்பாற்றவே, இதை தருவித்துள்ளோம். "கலி"யுகம் தொடங்கி, அவனின் விளையாட்டு அதிகமாகி வருகிறது. பாவம் மனிதர்கள், அவன் சூழ்ச்சியை அறியாது, பாவங்களை செய்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகப் போகிறார்கள். உடலால், எப்படிப்பட்ட உபாதைகளை அனுபவிப்பவர்களும், எம் ஷேத்திரத்தில் வந்து இந்த சங்கில் துளசி தீர்த்தத்தை வாங்கி அருந்திட, யாம் அனைத்து உபாதைகளும் விலகிட அருளுவோம். நலம் உண்டாகட்டும்!" என்று கூறி மறைந்தார்.

அகத்தியப் பெருமானும் மிக மனம் மகிழ்ந்து, பெருமாளின் உத்தரவுப்படி, தற்போதைய சீவலப்பேரி சௌந்தர்ராஜ பெருமாள் (அழகர்) கோவிலில் அதை சமர்ப்பித்தார்.

அப்படி எத்தனையோ கோடி கல்பங்களில் பெருமாள் உருவாக்குகிற அந்த சங்கு நம் வாழ்நாளில், இங்கு இருக்கிறது என்று அறிந்தவுடன், அதை பார்க்காமல், அதில் தீர்த்தத்தை வாங்கி அருந்தாமல் சும்மா இருக்கலாமா? என்று யோசித்துத்தான், சீவலப்பேரி அழகர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றேன்.

உள்ளேயிருந்து வந்த அர்ச்சகரிடம், வாங்கி சென்ற பழங்களை கொடுத்து, பெருமாள் பெயருக்கே, லோக ஷேமத்துக்காகவும் அர்ச்சனை பண்ணுங்கள் என்றேன்.

மந்திரோக்தரமாக அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டிய பொழுது, கண் கொள்ளாக்காட்ச்சி.  அவருக்கு அணிவித்திருந்த அனைத்து ஆபாரணங்களிலும் உள்ள கற்கள், அந்த தீப ஒளியை உள்வாங்கி வெளியிட்டது. பெருமாள் ஏதோ நட்சத்திர கூட்டத்துக்குள் அமர்ந்திருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.

அடியேன் மனதுள் ஒரு விண்ணப்பம் உருவாகியது. அதை பெருமாளிடம் சமர்ப்பித்தேன்.

"பெருமாளே! நீங்கள் உருவாக்கிய அந்த சங்கு தீர்த்தம் அடியேனுக்கும்  கிடைக்க வேண்டும். அது போதும்!" என்றேன்.

உள்ளிருந்து சங்கில் துளசியை போட்டு, தீர்த்தத்தை கொண்டு வந்து என் முன் நீட்டினார், அர்ச்சகர்.

ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலால் அழுத்திப்பிடித்து, கைகளில் குழியை உருவாக்கி, கை நிறைய அவர் விட்ட தீர்த்தத்தை அருந்தினேன். அப்பா! இப்படி ஒரு தீர்த்தத்தை இதுவரை அடியேன் அருந்தியது இல்லை, என்கிற அளவுக்கு ஒரு அலாதியான உள்ளுணர்வை அது உருவாக்கியது. என்னென்னவோ உடலைவிட்டு போய், உடல் மென்மையாகி போனது போல் உணர்ந்தேன். மனமோ, நனைந்த துணிபோல் மென்மையானது. ஒரு புதுவித சக்தி உடலெங்கும் பரவியது. அதன் முடிவில், புதிதாக பிறந்தது போல் ஒரு உணர்வு தோன்றத் தொடங்கியது.

இப்படிப்பட்ட உணர்வில் பெருமாளின் மூலஸ்தானத்திலிருந்து 10 அடி தூரத்தில் இருந்து, பெருமாளின் பாதத்தை கவனித்தபடி நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சிந்தனை உந்த, திரும்பி பார்த்தால், எனக்கு பின்னே நின்று கொண்டிருந்த 25லிருந்து 30 பேருக்கு, அந்த ஒரு சங்கு தீர்த்தத்தை அர்ச்சகர் கொடுத்துக் கொண்டிருந்தார். இது என்ன ஆச்சரியம்? சங்கில் தீர்த்தம் தீர்ந்து போய் விடாமல் அனைவருக்கும் கிடைக்கும்படி உள்ளதே, என்று வியந்தேன்.

அவர் தீர்த்தத்தை தரும் பொழுதே, நன்றாக உற்றுப் பார்த்தபடிதான் அதை வாங்கினேன். அந்த சங்கு வித்யாசமாக இருந்தது. ஒரு சங்குக்குள், ஒரு சங்கு. அந்த இரண்டாவது சங்குக்குள் இன்னொரு சங்கு என மூன்று சங்குகளும் ஒரே சங்காக அமைந்திருந்தது. மூன்றுமே, வலம்புரி சங்குகள். பெருமாள் உருவாக்கி, அகத்தியர் கையில் தவழ்ந்து, சித்தர்கள் கைபட்டு, இப்பொழுது அர்ச்சகரின் கைகளில் உள்ளது.

திரும்ப வந்து அடியேனிடம் சங்கை காட்டிய அர்ச்சகர் "இதன் வித்யாசத்தை பாருங்கள்" என்றார்.

நானும் "நீங்கள் முதலில் தீர்த்தம் தரும் பொழுதே கவனித்துவிட்டேன். எதற்கும், மற்றவர்களுக்கு, தீர்த்தம் கொடுத்துவிட்டு வரட்டும். பிறகு நிறுத்தி நிதானமாக பார்க்கலாம், என்றிருந்தேன்" என பதில் கூறினேன்.

சற்று நேரம் நன்றாக கவனித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு ஆவல். அவரிடமே கேட்டுவிட்டேன்.

"சுவாமி, தப்பா எடுத்துக்காதீங்கோ! சங்கை அடியேன் தொட்டு பார்க்கலாமா?" என்றேன்.

"அதுக்கென்ன! தொட்டு பாருங்க! சங்குக்கு தீட்டு கிடையாது!" என்று கூறியபடி சற்று கையை உயர்த்தி காட்டினார்.

அடியேன் உடனேயே, இரு கைகளையும் உயர்த்தி, சங்கின் இரு பக்கத்திலும் விரல்களால் தாங்கி பிடித்து ஸ்பரிசித்தேன். ஒரு நிமிடத்தில், ஒரு அதிர்வு உடலெங்கும் பரவுவதை உணர முடிந்தது. இவ்வளவுக்கும், அந்த சங்கு மிக மென்மையாகத்தான் இருந்தது. சங்கு அவர் இரு கைகளின் குவிப்புக்குள் சுகமாக அமர்ந்திருந்தது. என் கைகளை அவர் கைகளுக்கு கீழே கொண்டு சென்று, அவர் கையை அப்படியே உயர்த்தி, முக உயரத்துக்கு கொண்டு வந்தபின், அடியேனின் நெற்றியை அந்த சங்கில் பதித்து, பெருமாளுக்கு, அகத்தியருக்கு, அனைத்து சித்தர்களுக்கு, ஆத்ம நமஸ்காரம் செய்தேன். இதை தட்டச்சு செய்யும் பொழுது கூட, அந்த சங்கு நெற்றியில் பதித்த உணர்வு இன்னும் உள்ளதை, உணர்கிறேன்.

"பெருமாளே! அகத்தியரே! சித்தர்களே! இது போதும். உங்களை கண்டு தரிசித்து, உங்கள் பாதத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மனம் ஒன்றி ஒரு நிமிடம் அப்படியே இருந்தேன். அதன் பின், என் சகஜ நிலைக்கு வரவே வெகு நேரமாகியது. எதுவும் பேச தோன்றவே இல்லை.

அங்கிருந்து நேராக கோடகநல்லூர் சென்று பெருமாளிடம் நன்றி தெரிவித்து, அவர் தந்த பிரசாதத்தை வாங்கி கொண்டு, ஊர் வந்து சேர்ந்தேன்.

இதை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஒரு முறை சீவலப்பேரி சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, சங்கு தீர்த்தத்தை பருகி, விதி இருந்தால், அதை ஸ்பரிசித்து பார்த்து, அந்த உயர்ந்த உணர்வை பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையை அமைத்துத்தந்த, பெருமாள், அகத்தியப் பெருமான், அகத்திய அடியவர் (சங்கு இருக்கிறது என்று தகவல் தந்தவர்) அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளுக்கு, சமர்ப்பணம்!

[இத்துடன் "பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு" தொகுப்பு நிறைவு பெற்றது.]


ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள் 

பெருமாள் எண்ணத்தில் உருவாகி, அகத்தியப் பெருமான் கைகளில் தவழ்ந்து, உலகுக்களித்த வலம்புரி சங்கு.

சித்தன் அருள்................ தொடரும்!






Thursday 15 February 2018

சித்தன் அருள் - 748 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!


அன்று மாலை கோடகநல்லூர் புறப்பட்டு சென்றேன். பேட்டை என்கிற வழிய கடந்து செல்ல வேண்டும். ஆனால் பேட்டைக்கு முன்னரே, ஒரு இடத்தில் சாலை பராமரிப்பு நடந்ததால், வழி திருப்பி விடப்பட்டேன். சரி ஏதேனும் ஒருவழி செல்லலாம் என நினைத்து வண்டியில் சென்றால், சென்ற பாதை போய்க்கொண்டிருந்ததே தவிர எங்கும் திரும்பவில்லை. வழி தவறி வெகுதூரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்துவிட்டோம் என உணர்ந்து செல்போனில் நேரம் பார்க்க மணி 6 என்று காட்டியது.

அடடா! 6 மணிக்கு கோடகநல்லூரில் சுற்று விளக்கு போட்டிருக்க வேண்டுமே. இன்று ஏன் பெருமாளே, என்னை சுற்ற விடுகிறாய்., என நினைத்து, அவ்வழி வந்த ஒருவரிடம் நிறுத்தி வழி கேட்க, அவரும், சற்று தூரம் சென்றால், ஒருவழிப்பாதை வலது பக்கம் வரும். அதில் தொடங்கி நேராக சென்றால், சுத்தமல்லி என்கிற ஊர் வரும். அங்கு கேட்டு மேலும் செல்லுங்கள் என்றார்.

சுத்தமல்லி வந்து, விசாரித்து, கோடகநல்லூர் வந்து சேருவதற்குள் மணி 6.30 ஆகிவிட்டது. வேகவேகமாக உள்ளே சென்று அர்ச்சகரிடம் பூசைக்கான சாமான்களை கொடுத்துவிட்டு, "விளக்கு போட்டுவிட்டு வருகிறேன்" என்று கூறி வெளியே வந்து பார்த்தால், "இன்னிக்கு விளக்கு போடலியா சாமி!" என்று கேள்வி கேட்டபடி ஐந்து சிறு குழந்தைகள் நின்று கொண்டிருந்தனர்.

"வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து வேகமாக விளக்கு போடுவோம்" என்று கூறி ஒவ்வொருவரிடமும் ஒரு பொருளை கொடுத்து தூக்கிவரச்சொன்னேன்.

குழந்தைகள் அனைவரும் மிக திறமையாக உதவி புரிந்ததில் 20 நிமிடத்தில் அனைத்து சுற்று விளக்கும் போட்டுவிட்டு, பெருமாள் சன்னதிக்கு வந்து பார்த்தால், பூசை முடிந்துவிட்டிருந்தது. பெருமாளின் பள்ளியறை பூசைக்காக திரை போட்டிருந்தனர்.

பள்ளியறை பூசையின் முடிவில், தீபாராதனை காட்டுவார்கள். சரி அப்பொழுது என் விண்ணப்பத்தை கொடுத்துவிடலாம் என்று தீர்மானித்தேன்.

தீபாராதனைக்காக திரை விலக்கியதும், பெருமாளின், தாயாரின் மனதை கவரும் உருவம் வெளிப்பட, விண்ணப்பத்திற்கு பதில், மந்திரம் தான் வந்தது. அருமையான தரிசனம். மந்திரம் முடியவும், திரை போட்டு மூடவும் நேரம் சரியாக இருந்தது. பெருமாள், அடியேனின் விண்ணப்பத்தை கொடுக்க விடவில்லை.

"எல்லோரும் சேர்ந்து என்னவோ விளையாடறீங்க. சரி! ஏற்றுக்கொள்கிறேன். அடியேன் மனநிலை உங்களுக்கு தெரியும். நாளை காலை அந்த ஷேத்ரத்தில், உங்கள் தரிசனம், அருள், தீர்த்தம் இவை அடியேனுக்கு கிடைக்க வேண்டும். அடியேன் கேள்விப்பட்ட செய்தி உண்மையாயின், நாளையே தரிசனம் கிடைக்க வேண்டும். அதற்கு அருளுங்கள்," என மனதுள் கூறி சமர்ப்பித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

மறுநாள் காலை, ஏழு மணிக்கே சீவலப்பேரி பெருமாள் கோவிலை தேடி சென்றேன்.

சீவலப்பேரியில், மூன்று தெய்வங்களின் கோவில்கள் உள்ளது. ஒன்று துர்கை அம்மன் கோவில். இரண்டு காசி விஸ்வநாதர் கோவில். மூன்றாவதாக சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோவில். இந்த பெருமாள் கோவில் துர்கை அம்மன் கோவிலுக்கு நேர் எதிரில், நதிக்கரையில் அமர்ந்துள்ளது. இதில் அருமை என்னவென்றால், பெருமாள் கோவிலுக்குப்பின் முக்கூடல் சங்கமம் என்கிற நிலையில் மூன்று நதிகள் ஒன்று சேருகிறது.

இந்த மூன்று கோவில்களிலும், அகத்தியப் பெருமான் பல ஆண்டுகள் தங்கியிருந்து, நித்தய பூசை செய்துள்ளார். மூன்று கோவில்களிலும், மிக மிக சக்தி வாய்ந்த "திருவருள்" நிறைந்துள்ளது.

கோவிலை தேடி சென்ற பொழுது, முக்கூடல் சங்கமம் என்கிற பெயரை மட்டும் வாசித்துவிட்டு, சற்று தூரம் சென்றுவிட்டேன். பின்னர் வழியில் சென்ற ஒருவரிடம் விசாரிக்க, அவர் முக்கூடல் சங்கமம் என்கிற பெயர் பலகை உள்ள இடத்தில் நின்று பார்த்தால், உள்ளே சற்று தள்ளி பெருமாள் கோவில் தெரியும் என்றார்.

சென்ற வழியிலேயே திரும்பி வந்து பார்த்தால், கோவில் சற்று உள்வாங்கி இருந்தது. சென்ற நேரத்தில் மிகுந்த அமைதி எங்கும் நிறைந்திருந்தது. கோவில் வெளி கதவு மூடி இருந்ததால், கோவிலுக்கு பின்னே அப்படி என்ன இருக்கிறது! இத்தனை இருட்டாக இருக்கிறதே என்று எட்டிப்பார்த்தால், மிகுந்த அடர்த்தியான வனம். ஆஹா! நம் ருசிக்கு ஏற்ற இடம்தான் போல என்று சற்று தூரம் நடந்த பொழுது, வனம் இப்போது தேவை இல்லை என்ற நினைப்பு வந்தது. பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று தீர்மானித்து வாசலுக்கு வந்து, அங்கு வந்திருந்த ஒருவரிடம், "அர்ச்சகர் இப்போது வருவாரா?" என்று வினவிட.

"கோவிலுக்கு முன் இருக்கும் இந்த வீடுதான் அவர் இடம். போய் கூப்பிடுங்கள், அவர் வருவார்" என்றார்.

அவர் வீட்டின் முன் நின்று "சுவாமி! கோவிலுக்கு வாருங்களேன், பெருமாளை தரிசனம் பண்ணனும்" என்றேன்.

உள்ளிருந்து ஒரு கனமான குரல் "சற்று பொறுங்கள், இதோ வருகிறேன்" என்று விட்டு 10 நிமிடத்தில் வந்தார்.

வெளியே வந்தவரை பார்த்த பொழுது, "வணக்கம் சுவாமி! தரிசனத்துக்காக வந்திருக்கிறேன்!" என்று மேலோட்டமாக கூறிவிட்டு உன்னிப்பாக கவனித்தேன்.

"மிகப் பெரிய கண்கள். தீர்க்கமான பார்வை. மிகுந்த அமைதி, நம் அனைவர் மனதில் இருக்கும், அகத்தியர் போன்ற குள்ளமான உயரம். பேச்சு என்பது மிகக்குறைவு! நெற்றியில் பெரிய திருமண்!

வந்து கோவில் கதவை திறந்தவர் "வாருங்கள் உள்ளே போகலாம்" என்று மட்டும் கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார். மெதுவாக அவர் பின்னாடி நடந்து சென்று உள் பிரகாரத்து கம்பி வேலி அருகே நின்ற என்னை, "வாங்கோ! நீங்க அந்த சன்னதியின் வாசல் அருகில் வரை வந்து நிற்கலாம்" என்று கூறிவிட்டு, கையை பிடித்து அழைத்து செல்லாத குறையாக வார்த்தைகளால் இழுத்து சென்றார்.

எனக்கோ எல்லாம் மலைப்பாக இருந்தது. சன்னதி வாசல் அருகில் சென்றவுடன் தான் புரிந்தது, அடியேனுக்கும் மூலவருக்கும் இடையில் ஒரு பத்து அடிதான் இருந்தது. அப்படியே கைகூப்பி, மனத்தால் நமஸ்காரம் செய்தேன்.

என்னடா! இது! இப்படி நடக்கிறதே. நேற்று எங்கெல்லாமோ சுற்றவிட்டார்! இன்னிக்கு அவர் பாதத்துக்கு பக்கத்தில் நிற்கவைத்துவிட்டாரே! என்று யோசித்தபடியே, உற்சவ மூர்த்தியின் பாதத்தை பார்த்து பின், அவர் முகத்தை பார்க்க, அருமையான தரிசனம்.

மனமும் கண்களும் எதையோ தேடி துழாவ, அடியேன் பார்க்க விரும்பிய, பெருமாளும், அகத்தியரும் சேர்ந்து இந்த உலக மனிதர்களுக்காக கொடுத்த பரிசு, சுந்தரராஜ பெருமாள் பாதத்துக்கு அருகில் அமர்ந்திருந்தது!

சித்தன் அருள்.................. தொடரும்!  

Thursday 8 February 2018

சித்தன் அருள் - 747 - கனிவு என்றால் சித்தர்களில் போகர் பெருமான்தான்!


"இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல்", என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்.

போகரின் வேட்கை அதிகரித்தது. 

"போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது", என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார்.  தமிழகம் இவரது முன்னோரின்  பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந்தனர்.

அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத்தில் தான் பிறந்தார் என்றும், இவரது பெற்றோர்  இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், "சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன்" என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.

இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.

அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர  மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி. இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.

உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.

போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும்,  சுவாமி! என் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன்.  முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார். போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.

போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச்  சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.

சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்? இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க  முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன்  வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால்மு ருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார். முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி பெற ஏற்பாடு செய்தார்.  கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழநியில் தங்கிய போகசித்தர், அங்கேயே சமாதி அடைந்தார்.

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday 1 February 2018

சித்தன் அருள் - 746 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நாடி வாசிப்பவர்கள் அனைவரும் கூறுகிற ஒரே வாக்கியம் இதுதான்!

"சித்தர்களில் அகத்தியப் பெருமானின் அருள், அருகாமை இருந்தால், அவனை அலையவிட்டு, ஆன்மீக பைத்தியமாக்கி, உடலை வருத்தி, கர்மாவை போக்கி, இறையருளை கூட்டி, ஒன்று முடிந்ததும் "அப்பாடா! சற்று இளைப்பாறலாம்!" என்று தீர்மானிக்கும் பொழுது அடுத்த நிகழ்ச்சி அல்லது அடுத்த புண்ணிய தலத்துக்கு இழுத்து சென்று உண்மையை உணர்த்துவார்! அந்த உண்மை மிக மிக உயர்ந்த விஷயமாக இருக்கும். எங்கிருந்துதான் நம் உடலுக்கு சக்தி வரும் என்று தெரியாது! அந்த பாதையில் செல்லும் பொழுது, உலகியல் விஷயங்களை நிறையவே இழந்துவிடுவோம். அது ஒரு சோதனை என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களை பற்றி நமக்கு தெரிவிக்க வேண்டுமென ஒரு சித்தன் நினைத்துவிட்டால், நம் மனதுக்கு பிடித்தமான எந்த விஷயமாயினும், அதன் வழி புகுந்து, செய்தியை தெரிவித்து விடுவார்கள்!. செய்தியை உணர்ந்தபின், அதை சென்று சேரும் வரை, நம் பாடு திண்டாட்டமாகவே இருக்கும். ஆயினும், கடை வரை உதவியும் கிடைக்கும்."

மேற்சொன்ன வாக்கியத்தை அடிப்படையாக வாழ்க்கையில் நிலை நிறுத்தியதால், அடியேன், மனதை இறை பாதத்தில் வைத்துவிட்டேன். அதனால், மிருதங்கத்துக்கு ரெண்டு பக்கத்திலிருந்தும் அடி என்பதை போல, ஒருத்தர் (இறைவன்) இழுத்து முடித்த நொடியில் அடுத்தவர் (பெரியவர்கள்) இழுப்பார்! கடலில் எப்பொழுது அலை ஓய்வது நான் என்னிஷ்டப்படி நிதானமாக குளிப்பது! ஆகவே, "என்னிஷ்டம்" என்பதை அடியேன் மறந்தே போனேன் என்பது தான் உண்மை.

சமீப காலமாக, அகத்தியரின் பாதையில், அவருடன் வாழ்க்கையை இணைத்து கொண்டு செல்பவர்கள் பலரிடமும் தொடர்பு கொள்ள முடிந்தது. எல்லாவற்றிலிருந்தும், விலகிநின்று, கிடைக்கிற உத்தரவை நிறைவேற்றுவதில் மட்டும் இருந்து வந்த அடியேன் மனோ நிலையை ஓரளவுக்கு அகத்தியப் பெருமான் மாற்றினார் என்பதே உண்மை.   ஒரு அகத்தியர் அடியவரிடம் உரையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட பெருமாள் கோவிலை சுட்டிக்காட்டி, அங்கு சென்று அருள் பெற்று வாருங்களேன் என்றார். எதோ அகத்தியர் செய்தி சொன்னதுபோல்தான் உணர்ந்தேன்.

அவர் சொன்ன கோவில், திருநெல்வேலிக்கு அருகில் சீவலப்பேரி என்கிற கிராமத்தில் உள்ளது. அடியேனோ, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், தாமிரபரணித்தாய் சுற்றி சுற்றி சென்று இறைவனை வழிபட்டு செல்கிற கோவில்களை பார்ப்பதில் விருப்பம் உள்ளவன். அகத்தியரால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதியானது, காரணமின்றி,  சுற்றி செல்வதில்லை. எங்கெல்லாம் அந்தத்தாய் செல்கிறாளோ, அதற்கும் ஒரு காரணம் இருக்கும், என்று நம்புகிறவன் நான். தான் சென்ற வழிகளில், ஒவ்வொரு இறை சன்னதியிலும், மனித குலத்துக்கு என வேண்டிக்கொண்டு ஒரு வரத்தை பெற்று தந்துள்ளாள். அந்த இடத்தின் வரமென்ன? அதை ஏன் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பார்க்கக்கூடாது? என்கிற எண்ணம் அடியேனுள்ளே உண்டு. அடியேன் உணர்ந்ததை, உடனேயே, அடுத்தவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்; யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து மனிதருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படை எண்ணம்தான், காரணம். உதாரணமாக, பாபநாசம், கோடகநல்லூர், என நிறைய இடங்களை சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவித்ததை செல்லலாம்.

சனிக்கிழமை விடுமுறையாக இருந்ததால், அன்று காலை சீவலப்பேரி கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று, மாலை கோடகநல்லூர் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்மானித்தேன். அன்று கிளம்பி கோவிலுக்கு போனபொழுது, பெருமாள் விளையாடிவிட்டார்.

சீவலப்பேரி ஊர் எல்லையில் ஒரு கோவில் இருக்கவே, அதுதான் அந்த கோவில் என்று நினைத்து, அருகில் சென்று பார்த்தால், பூட்டி இருந்தது. அவ்வழியே சென்ற ஒரு பெண்மணியிடம் "இதுதான் பெருமாள் கோவிலா, வேறு கோவில் உண்டா?" என்று வினவ, அவளும் "இது பெருமாள் கோவில்" என்று கூறிச் சென்று விட்டாள்.

"சரி! நமக்கு பாக்கியம் இல்லை போலும்! பிறகு பார்க்கலாம்! நாளை காலை சீக்கிரமாகவே வந்துவிடுகிறேன். உம்மை விடுவதாக இல்லை" என்று மனதுள் நினைத்து, திரும்பினேன்.

திரும்பி வரும் வழியில் "செய்தி வந்த கோவில் இதுவல்ல. நீ தான் தப்பாக புரிந்து கொண்டுவிட்டாய்" என்று உத்தரவு வந்தது.

உடனேயே, செய்தி சொன்ன அகத்தியர் அடியவரை தொடர்பு கொண்ட பொழுது, கோவில் இருப்பிடம் பற்றிய விவரங்களை கூறிய பொழுது, "அது தானே கோவில்" என்றார்.

"சரி! நான் எடுத்த கோவிலின் புகைப்படத்தை அனுப்புகிறேன்! பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்று அனுப்பி வைத்தேன்.

"அடியேன் சொன்ன கோவில் இதுவல்ல! இதுவும் பெருமாள் கோவில்! இங்கிருந்து மேலும் 2 கிலோ மீட்டர் சென்றால் இடதுபக்கத்தில் ஒரு கோவில் விளம்பர பலகையில் "முக்கூடல் சங்கமம்" என்று இருக்கும். வலது புறத்தில் நேர் எதிரே துர்கை அம்மன் கோவில் இருக்கும். இடது புறத்தில்தான் பெருமாள் கோவில் உள்ளது. நாளை செல்லுங்கள். அர்ச்சகரிடம் அடியேன் செய்தியை கூறிவிடுகிறேன்" என்றார்.

எங்கேயோ தவறு செய்துவிட்டோமே! சரி! மாலை கோடகநல்லூர் சென்று பெருமாளிடம் கேட்டுவிடுவோம். அது வரை மௌனம் காப்போம், என்று தீர்மானித்து மாலை வருவதற்காக காத்திருந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்!