​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 24 May 2018

சித்தன் அருள் - 757 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


​​"முகம் மறக்க வேண்டும்" அட! நல்ல வார்த்தைகளாக இருக்கிறதே, இதுவரை  கேள்விப்பட்டதே இல்லையே! அதை சற்று தெளிவு படுத்துங்களேன்" என்றேன்.

தமிழில் அனைத்துமே நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. அவற்றை எப்படி தொடுத்து மாலை ஆக்குகிறோம் என்பதில்தான், மனிதன் தன் கவனத்தை செலுத்தவேண்டும். எளிமையாக, அழகாக வார்த்தைகளை பேசினாலே, இறை சாந்நித்தியம் எங்கும் நிறைந்து நிற்கும். அதை பற்றி பின்னர் உரைக்கிறேன்.

"முகம் மறக்க வேண்டும்" என்பது ஒரு தவம். அதை எத்தனை எளிதாக விளக்க முடியுமோ, அப்படி கூறுகிறேன். முதலில், என் கேள்விக்கு பதில் கூறு. ஒரு மனிதனுக்கு எத்தனை முகம் இருக்கிறது? என்று நிறுத்தினார்.

மனிதனுக்கு ஒரு முகம் தானே இருக்கும், என்றேன்.

முகம் என்பது பௌதீகமாக பார்த்தால், மூக்கு, வாய், கன்னம், கண்கள், இரு செவி, நெற்றி, போன்றவைகள் சேர்ந்து இருக்குமிடம் என்று கூறலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு, நிறைய முகங்கள் இருக்கிறது. அவன் மனது, எண்ணங்கள், அவன் இருக்கும் நிலை, இவைகள் பல முகங்களை கொடுக்கும். இவற்றின் உந்துதலால், எதிரொலிக்கும் விதமாக அவன் தன் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்கிறான். உதாரணமாக, அவன் சேய் "அப்பா" என்றழைத்தால், தகப்பனாக, மனைவி அழைத்தால், கணவனாக, தாய் தந்தை அழைத்தால் மகனாக, சகோதர, சகோதரிகள் அழைத்தால், சகோதரனாக, இன்னும் மாமனாக, சித்தப்பானாக, தாத்தாவாக, இப்படி எத்தனையோ முகங்களை அவன் பல சந்தர்ப்பங்களில் அணிய வேண்டி உள்ளது.

"முகம் மறப்பதென்பது" இந்த முகங்களை மட்டும் மறக்க வேண்டுமென்பதல்ல. அனைத்து வித, அவன் அணிந்து கொள்கிற முகங்களை மறக்க வேண்டும். முகமறியாதவர்கள் முன் கூட ஒரு முகத்தை (பாவத்தை) ஒருவன் அணிகிறான். அதையும் மறக்க வேண்டும். சுருங்கக்கூறின், அனைத்து ஆத்மாக்களையும் ஒரே பாவத்தில் பார்க்க வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். ஒருவனுக்கு உள்ள அனைத்து உணர்வுகளும், அனைத்திற்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதன் கூட, அனைத்தும் இறை தீர்மானத்தால் நடக்கிறது என்று உணர்ந்து, அமைதி காத்து, தேவையான பொழுது, யாரேனும் கேட்டால் நல்வழி காட்டி, நல்லதை செய்து, பலன் எதிர்பார்க்காமல், போய்க்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்காகவும், ஒருவன் வாழவேண்டும். வெற்றி, தோல்வி, லாபம், இழப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல், நடப்பதை அதன் படியே ஏற்றுக்கொண்டு, முன்னேறவேண்டும். இப்படிப் பட்ட அனைத்து சூழ்நிலைகளிலும், தன்னை பரிசோதித்துக் கொண்டு, அதையே ஒரு தவமாக ஏற்று செய்பவனுக்கு, மனம் வசப்படும், சித்தம் கலங்காது, சித்த மார்க்கத்தின் தொடக்க நிலைகள், மிக எளிதாக மாறும். இதை கடந்து செல்பவர்களுக்கு, அடுத்த நிலைகளை, சித்த பெருமக்களே, கூட இருந்து காட்டுவார்கள். இப்போது கூறியதை, தூரத்திலிருந்து  பார்த்து, எங்கு நம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்று, ஒருவன் சரியாக  தீர்மானிக்கிறானோ, அவனுக்கு "முகம் மறப்பதென்பது" மிக எளிதாகும். அந்த ஒருவனுக்குள் ப்ரம்மத்துவம் உருவாகும். அவனே "ப்ராமணனாகிறான்".

ஆத்மாவுடன், உணர்ந்து, சேர்ந்து இருப்பவனுக்கு, உயர்ந்த நிலையை தவிர வேறு எதுவும் இவ்வுலகில் கிடைப்பதற்கில்லை. உடலோடு சேர்ந்து விழைபவனுக்கு, அத்தனை கர்மாவும், வாசனையும் கடை வரை கூட வரும். அடுத்த ஜென்மத்திலும் தொடரும்.

"நீங்கள் கூறுவது உண்மை! ஆனால், உலக வாழ்க்கையில் சிறைப்பட்டு கிடக்கும் மனிதருக்கு, அதன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறத்தான் வேண்டியுள்ளது! அப்போது, நீங்கள் மேற் கூறிய விஷயம் சாத்தியமா?" என்றேன்.

"ஏன் முடியாது? உலகியல் விஷயங்களை, கடமைகளை செய்ய வேண்டாம் என்று யாரும் கூறவில்லையே. அதற்கான முயற்சிகளும் தவறில்லையே. முயற்சி என்பது தர்மத்துக்கு  உட்பட்டதாயின், பெரியவர்கள் ஆசிர்வாதம் எப்பொழுதுமே கூட நின்று கரை ஏற்றும். அதர்ம வழி கூடாது என்று தான், மனிதர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அதர்மத்தின் வழி சென்றால், வெற்றி நிச்சயம் என்று நினைக்கிற மனித மனதுக்கு, மிகப் பெரிய பாபத்தை சம்பாதித்துக்கொள்கிறோமே! நிறைய ஆத்மாக்களின் மனதை வருத்துகிறோமே, என்ற எண்ணம் கூட வருவதில்லையே. 

இன்றும், தன் கடமையை சரிவர செய்து கொண்டு, நடப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, இறை வழியில், சித்தர் வழியில் நின்று விலகாமல், குடும்ப வாழ்க்கையையும் சுமந்து கொண்டு, வாழ்கிற எத்தனையோ நல்ல ஆத்மாக்கள், இங்குள்ளனர். அவர்கள் விகிதம் மிகக் குறைவு என்பதே உண்மை. அதற்காக இல்லை என்று ஆகிவிடுவதில்லை.

இவைகளிலிருந்து விடுபட, சித்தம் நிலைக்க வேண்டும். சித்தம் நிலைத்தால், எது சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலையுடன் இருந்து, கர்மாவை சேர்த்துக்கொள்ளாமல் இருக்கலாம். முகம் மறக்கலாம்.

சித்தன் அருள்.................. தொடரும்.

Thursday 17 May 2018

சித்தன் அருள் - 756 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

"ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றால், வேலை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இல்லையா. அது போல் இறைவனிடம் வேண்டிக்கொண்டு சூக்ஷ்ம உடல்களை அவனிடமே, தாரை வார்த்துக் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்கிற தீர்மானத்தை இறைவன்தான் எடுப்பார். எப்படி அந்தந்த கர்மாவை மன்னித்து கரைக்க வேண்டும், அல்லது எத்தனை ஜென்மத்தை குறைத்துக் கொடுக்கலாம், எந்தெந்த ஜென்மத்தில் எந்தெந்த கழிக்காத கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் பல நிலைகள் உண்டு. அத்தனை சூக்ஷ்ம உடல்களையும் ஏற்றுக்கொண்டுவிட்டாலும், இந்த ஜென்மத்தில் இருக்கும் மிச்ச கர்மாவை அனுபவிக்க வைத்துவிடுவார். இருப்பினும், கரைக்க முடியாத கெட்ட கர்மாவை, இந்த ஜென்மத்தில் அனுபவித்து விடட்டும் என்று சேர்த்துவிட தீர்மானித்தால், மிகப் பெரிய நோய்களும், பிரச்சினைகளும் வரலாம். ஆகவே, சூக்ஷ்ம உடல்களை ஒப்படைப்பவர், என்ன வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சூக்ஷ்ம உடல்களை ஒப்படைத்துவிட்டு, சறுக்கு மரத்தில் வழுகிச் செல்வது போல் இந்த ஜென்மாவை கடந்து போய்விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு சிறு துளி "கடன்" போலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், மோக்ஷத்திற்கு வாய்ப்பே. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர் யார் என்று நீ தேடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார். புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்கே எட்டாத கடன் என இன்னொன்றும் உண்டு. சுருக்கமாக சொன்னால், ஒரு தூசு அளவுக்கு கூட கர்மா ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனத்தான், மனிதர்கள் விரும்ப வேண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு.

ஒரு மனிதனானவன் தினமும், ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டும். அதுதான் அவன் விதி. இந்த கொடுக்கும், வாங்கும் நிகழ்ச்சிதான் அவனுக்கு சேர்கிற கர்மாவில் பெரும் பங்கு வகிக்கிறது. இது போக, அவன் எண்ணம். ஆசை. அவன் பார்வை போன்றவை, பலவித கர்மாக்களை ஒன்று சேர வைக்கிறது. அதையும் மீறி ஒருவன், நான் நேர்மையாகத்தான் வாழ்வேன் என்று தீர்மானித்து, நடந்து சென்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தலை மீது அத்தனை குப்பை கர்மாவையும் கொண்டு கொட்டுவார்கள். கொட்டிவிட்டு போகட்டும், கொட்டப்படுவது, என்னுள் உறையும் இறை மீது என்று நடந்து சென்றால், கொட்டியவர்களே, திட்டி தீர்த்து, அவன் கெட்ட கர்மாவை வாங்கிக் கொள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால்  வெகு எளிதில் சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்பை கொட்டியவர்களாலேயே! என்ன விசித்திரமான தண்டனை என்று பார், என்று நிறுத்தினார்.

"எதையும் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், எதையும் வாங்கும்போது "நாராயணார்ப்பணம்" என்று மனதுள் நினைத்துக்கொள்! எதையும் கொடுக்கும் பொழுது "சிவார்ப்பணம்" என்று கொடுத்துவிடு. எதுவும் உன்னை பற்றாது" என்றார்.

சட்டென்று "அட! மிக எளிதாக இருக்கிறதே, நல்ல வழிதான்!" என்று மனதுள் நினைத்தேன்.

இருப்பினும், "இதன் தாத்பர்யம் என்னவோ?" என்றேன்.

"வாழ்ந்து முடிக்கும் வரை அனைத்தும் நாராயணனுக்கு சொந்தம், அதனால், பெற்றுக்கொள்கிற பொழுது நாராயணார்ப்பணம்! கொடுக்கும் பொழுது பிறர் நன்றாய் வாழ அவர் வாழ்க்கைக்கு கொடுப்பதால், இருக்கும் வரை நல்ல படியாக வாழ்ந்துவிட்டு போகட்டும், பின்னர் சிவனிடம் தானே சென்று சேரப்போகிறது என்று உணர்த்தவே, கொடுக்கும்பொழுது "சிவார்ப்பணம்" என்று கூறி நிறுத்தினார்.

சற்று நேரம் எங்கும் அமைதி. எங்கும் பரவி நின்ற அமைதியை சற்று மென்மையாக கலைத்தபடி, தூரத்திலிருக்கும் கோவிலின் மணியோசை சன்னமாக ஒலித்தது. அமர்ந்திருந்த நால்வரும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து, எழுந்து நின்றனர். ஒருவர் கையால் உயர்த்தி காட்டவே, அடியேனும் எழுந்து நின்றேன்.

ஒரு நொடியில், பக்கத்திலிருந்த புதரிலிருந்து, ஒரு மிகப் பெரிய அரவம் வேகமாக மணியோசை வந்த திசை நோக்கி சென்றது. அதை கண்டு ஒரு நிமிடம். உறைந்து போனேன். முதுகில் ஏதோ தடவியது போல் உணர்வு வர, திரும்பி பார்த்தால், நால்வரில் ஒருவர், அடியேன் தோள்மீது, கைபதித்து மெதுவாக, "அமைதி" என்றார்.

அனைத்தும் ஒடுங்கிப்போய், சிலையாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மௌனத்தை கலைக்கும் விதமாக, "இறைவனின் பூசையை பார்க்க, அம்மா கிளம்பிட்டா. இனி நாம் நம் கலந்துரையாடலை தொடருவோம்" என அந்த பெரியவர் கூறினார்.

ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு, "நாம் எல்லோருமே, அந்த கோவிலுக்கு சென்று பூசையை கண்டு வரலாமே" என்று கூறினேன்.

"இது இருக்கும் இடத்திலேயே இருந்து உணரவேண்டிய நிமித்தம் . துரத்தி சென்று வேடிக்கை பார்க்க வேண்டிய நேரம் அல்ல. இங்கிருந்தே கண் மூடி தியானித்தால், அந்த பூசையை உள்ளே காணலாம். துரத்தி சென்று பார்க்க முயற்சித்தால், திரும்பி எழுந்து நின்று தடை விதிக்கும் நேரமாக மாறிவிடும். வேண்டுமானால் முயற்சி செய்து பார்" என்றார்.

"அடியேன் அதற்கெல்லாம் இல்லை. உங்கள் விருப்பமே போதும்" என்றேன்.

'சிரித்துக் கொண்டே "பயந்துட்டயா!" என்றார்.

"உண்மை சொல்வதானால், ஆம்!" என்றேன்.

சட்டென்று "கண் மூடி தியானித்தால், உள்ளே பார்க்கலாம் என்றேனே, அதைத்தான் சித்தர்கள் "உள்பூசை" என்பார்கள். உள்ளே த்யானத்தில் பூசை செய்து, கோவில் கட்டி வாழ்ந்தவரை பெருமை படுத்தவே, தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று இறை உணர்த்தவே, ஒரு அரசனுக்கு பாடம் புகட்டவே, அந்த முனிவருக்கு முதல் மரியாதை செய்தார், இறைவன். அந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.

"ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால் அதில் பூடகமாக நாம் அறிந்ததை விட உயர்வான ஏதோ ஒரு செய்தி, இருப்பதாக அடிக்கடி தோன்றும். ஆனால் அது என்ன என்று இதுவரை உணர முடியவில்லை" என்றேன்.

"ஆம் அது உயர்ந்த செய்திதான். அதை பார்க்க வேண்டுமானால், சற்று தள்ளி நின்று அந்த விஷயத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அது புரியும்" என்றார்.

"இதுதான் உண்மையை உணரவேண்டிய காலம் போலும். அதையும், தாங்கள் தெளிவாக உரைக்கலாமே" என்றேன்.

"த்யானத்தில் இருக்கும் ஒருவன், ஒரு நிலையில் தன்னை மறக்கிறான், தான் இருக்கும் சூழலை இழக்கிறான், எதை த்யானிக்கிறானோ, அதிலேயே ஒன்றி, அதுவாக மாறிவிடுகிறான். அவனை சுற்றி நடப்பவை எதுவுமே அவனை பாதிப்பதில்லை. அவன் கவனம் முழுவதும் அந்த ஒரு புள்ளியிலேயே. அந்த நேரத்தில், அவனுக்கு உடல் பற்றிய சிந்தனையே இல்லை. இந்த நிலையைத்தான் ஒரு மனிதன் அடையவேண்டும் என்பதே இறைவன் எண்ணம்.

உடல் பற்றி சிந்தனை இருப்பவனுக்கு, எல்லா அதிர்வுகளும் இருக்கும், அவை அவன் கவனத்தை பாதிக்கும். சற்று முன் அரவத்தை கண்டு நீ இருந்த நிலை. ஒரு நொடியில், உடலை பற்றிய சிந்தனை வந்த பொழுது, எத்தனை பெரிய ஆபத்தின் அருகில் அமர்ந்திருந்தேன் என்று சிந்தனை செய்தாய். மற்றவர்கள் அனைவரும், சகஜ நிலையில் இருந்தார்கள். எதுவுமே ஆபத்தாகவோ, அனுபவமாகவோ தோன்றவில்லை. ஏன்?" என்று கேள்வியை போட்டு நிறுத்தினார்.

"உங்கள் அனுபவம், ஒரே நிலையில் அதிராமல் தொடர்ந்து இருக்கும் மனநிலை காரணமாக இருக்கும்" என்றேன்.

"ஓரளவுக்கு நீ கூறியது உண்மையாயினும், நிரந்தர உணர்ந்த உண்மை என்பது, "அனைத்தும் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது என்பதனால்". அவன் எண்ணத்தை மீறி ஒரு அணுவும், இங்கு அசைவதில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என்கிற, திட நம்பிக்கை தான் காரணம். அந்த நிலை எய்தவனுக்கு மனம் ஒரே நிலையில் வசப்படும். பின்னர் எல்லாம் இயல்பாகவே தோன்றும்." என்றார்.

"அசையாத திட நம்பிக்கையை, அந்த திட நிலையை அடைய ஒரு சாதாரண மனிதன் எங்கு தொடங்க வேண்டும்! எதை பயிற்சி செய்ய வேண்டும்?" எனக் கேட்டேன்.

"ஏற்கனவே, நீ கேள்விப்பட்டதுதான். சித்த மார்கத்தில் முதல் பாடம் "முகம் மறக்க வேண்டும்" என்று கூறி நிறுத்தினார்.

சித்தன் அருள்...... தொடரும்! 

Thursday 10 May 2018

சித்தன் அருள் - 755 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! உடல் நலம் குன்றிப் போனதால், சென்ற வாரம் தொகுப்பை தர முடியவில்லை. இந்த வாரம் தொடருவோம்].

"இனி சொல்வதை கவனமாக குறித்துக்கொள். எந்த ஒரு விஷயத்தையும் "மனம் உவந்து" பிறருக்கு கொடுத்தால்தான் அது அவர்களை சென்று சேர்ந்தாலும், பலனளிக்கும். ஏனோ, தானோவென்று, கொடுப்பது எதுவும், அது சென்று சேர வேண்டிய நிலையை அடைவதில்லை.  இறைவனிடம் பிரார்த்தனை வைத்தாலும், பல முறை அது நிறைவேறாமல் போகக் காரணமே, "சொல்லிட்டாங்க! அதுனால செய்கிறேன். நிறைவேற்றிக்கொடு" என்கிற மனப்பான்மையுடன் 99% மனிதர்களும் நினைத்துக் கொள்வதுதான். மனிதனை சொல்லிக் குற்றமில்லை. அவனோ கலியின் பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பௌதீக விஷயங்களை பார்த்து, நம்பி, அதன் வழியே நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதையும் செய்வதில்லை. உலக பௌதீக விஷயங்களில் உடன் பலன் கிடைக்கும் என்று உணர்ந்தால், எத்தனை வேகமாக, நம்பிக்கையுடன் செய்கிறானோ, அந்த நம்பிக்கையுடன் இனி கூறுபவற்றை செய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."

"நீ செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தால் என்ன செய்வாய்?"

"கோவில் உள் சென்று இறைவனை, தரிசித்து, பிரார்த்தனை செய்து செல்வேன்" என்றேன் நான்.

"நீ வழியே செல்லும் பொழுது, இறங்கி, உள்சென்று இறைவனை தரிசிக்க நேரமில்லை, என வைத்துக்கொள். அப்பொழுது, உன் பிரார்த்தனை சூழ்நிலை எப்படி இருக்கும்? என்றார்.

இவர் எது வழியோ வந்து என்னை கவ்வ வருகிறார், என புரிந்தது.

"அப்படிப்பட்ட நிலையில், கோவிலின் வெளியே நின்று, மனதால் இறைவன் பாதத்தை, உருவத்தை தியானித்து "எல்லா ஜீவன்களையும் காப்பாற்றி, அருள் புரியுங்கள் இறைவனே" என வேண்டிக்கொள்வேன்" என்றேன்.

"பரவாயில்லை! நல்ல வேண்டுதல்தான். இருப்பினும், அப்பொழுது, அங்கு நீ பிரார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா? இல்லை, கவனித்ததுண்டா?" என்றார்.

"ஒரு சிலவேளை, அப்படி பிரார்த்திக்கும் பொழுது, என்னைப் போல் ஒரு மனித உருவம், இறைவன் காலடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில், இது என் மனம் உள்ளுக்குள்ளே அப்படி ஒரு உருவத்தை தோற்றுவிக்கிறது. உண்மையாகவே அப்படியெல்லாம் கிடையாது" என எண்ணிக்கொண்டு சென்றுவிடுவேன்.

சற்று நேரம் என் கண்களையே உற்று நோக்கிய படி இருந்தார், அந்த பெரியவர்.

பின்னர், அந்த உற்று நோக்கலை கலைத்துவிட்டு, மற்ற பெரியவர்களை பார்த்தபின், சிரித்தபடியே "நீ பார்த்தாயே அந்த உருவம்தான் எத்தனையோ சூக்ஷ்ம உடல்களில் ஒரு உடல். இங்கு மனதுள் நினைப்பதை அங்கே பதிவு செய்து கொள்ள காத்திருக்கும் உடல். நீ எங்கு சென்றாலும், உன்னை தொடரும் உடல்.

அங்கே  பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.

சற்று நேர இடைவெளிக்கு பின் "ஒரு கோவிலில், இறைவன் பாதத்தில் விழுந்து சூக்ஷும உடல் சரணடைவதை பார்க்கும் பொழுது, "நீங்கள் எவ்வுரு கொண்டு, எங்கெல்லாம் கோவில்களில் அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கெல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இதே நேரத்தில் உங்களை வணங்குகிறது. அதன்  வழி அடியேனின் நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன். அத்தனை உடல்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுங்கள். மறுபிறப்பு வேண்டாம்" என வேண்டி பல உடல்களை இறைவனிடம் திருப்பி ஒப்படைத்து விடலாமே! இல்லையா?" என்றார்.

"அட! ஆமாம்! மிக எளிய யோசனை ஆயிற்றே! இது மட்டும் உண்மையாயின், மனிதனுக்கு வாழ்க்கை பயணத்தை கடப்பது மிக எளிதாயிற்றே. இத்தனை சண்டை, சச்சரவு, வாழ்வதற்கு போட்டி என, நிறைவேறாத ஆசைகளை, வாசனைகளாக சேர்த்து வைத்து துன்பப்பட வேண்டாமே!" என்றேன்.

"மனிதனுடைய சந்தேக எண்ணம்,  நம்பிக்கையின்மை, இதெல்லாம் சாத்தியமா! என்கிற அவநம்பிக்கை, வெளியுலக விஷயங்களில் உள்ள ஆர்வம், ஆசை  போன்றவைதான் அவனுக்கு தடையாக உள்ளது. இந்த மாதிரி எளிய விஷயங்களை கூட தனிப்பட்ட முறையில் நடை முறைப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிலை தான் காரணம்".

"சரி! யாரோ ஒருவர் இதை நம்பி நடை முறைப்படுத்தித்தான் பார்த்து விடுவோமே என்று இறங்கினால், அவரை அந்த இறையே சோதிக்க நினைக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.

"இறை சோதனை மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து செல்ல வழியையும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி பயமுறுத்துகிறீர்களே! அப்புறம் எப்படி ஒரு சாதாரண மனிதன் இந்த வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்லை என்று எப்படி நீங்கள் குறை கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் கேள்வியை எழுப்பினேன்.

"எல்லாம், எளிதாக, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் நினைக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிலையை அடைந்தவர்கள், எப்படிப்பட்ட சோதனைகளை கடந்து வந்தவர்கள் என உனக்கு புரியாது. அவர்கள் அனைவரையும், இறைவன் சோதித்து, திசை திருப்பி, புடம்போட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.

"நீரில் மூழ்கினும், நஞ்சு என்னை தீண்டினும், நாமம் உரைப்பது "நமச்சிவாயமே" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம் கொடுத்துள்ளான் இறைவன். அந்த சோதனையில் ஒரு மிகச் சிறு அளவு சோதனை வைத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த தேர்வை எழுத மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், கேள்வி கேட்பதற்கே அருகதையற்றவர்கள்", என மிக நிதானமாக, தெளிவாக கூறினார்.

அமைதியாக இருந்த என் மனதில் "சரிதான்! போச்சுடா! தவறாக ஏதாவது பேசிவிட்டோமோ?" என்று தோன்றியது.

இதை அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வரலாம்! தவறில்லை! முறை தவறி விடக்கூடாது, உரையாடலை தொடருவோம்" என சூழ்நிலையை சுமுகப்படுத்தி, மேலும் "அந்த இறை சோதனை ஆபத்தையும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.

சித்தன் அருள்................... தொடரும்!